!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Saturday, December 17, 2011

முல்லைப் பெரியாறும், நாட்டை நாசமாக்கும் எழவு (தியரி)அரசியலும்.


எப்படியும் வாரம் ஒரு பதிவு போட்டு கொஞ்சம் ப்ரொபெஷனலாக மாறுவோம் என்று முயற்சித்தால் அது முடியவில்லை. இந்த வாரம் பிராட்பேண்ட் தலைவலி கொடுத்துவிட்டது. எனவே தகவலுக்காக தமிழக செய்திகளையே நம்ப வேண்டி இருந்தது. தேசிய சேனல்களுக்கோ இது பல முக்கிய செய்திகளில் ஓன்று.   

இங்கே முல்லைப் பெரியாறு அணை குறித்த விவாதங்களையும், செய்திகளையும் கவனித்ததில் எனக்கு ஜெப்ரி ஆரச்சரின் ஒரு சிறுகதைதான்  ஞாபகத்துக்கு வந்தது. ஒரு வழக்கில் ஒரு வக்கீல் தனது சார்பாக ஒரு சாட்சியை நீதிமன்றத்தில் நிறுத்தி அவருடைய அருமை பெருமைகளை சொல்லி, `இப்படிப்பட்ட ஒரு நபரின் கருத்தை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்` என்பார். ஆனால் அதே சாட்சி வேறு ஒரு வழக்கில் எதிர் தரப்புக்காக ஆஜராகும்போது, பல வாதங்களின் மூலம் `இப்படிப்பட்டவரின் கருத்தையா நீதிமன்றம் மதிக்கவேண்டும்` என்று எதிர் கேள்வி கேட்பார். இன்றைய அரசியல் அப்படித்தான் இருக்கிறது.

சமீபகாலமாக இங்கே தமிழர்கள் செய்த அரசியலையும், தற்போது கேரளா செய்யும் அரசியலையும் கவனியுங்கள், தலை சுத்தும். இன்று கேரளாவை நாம் எந்த விஷயங்களுக்காக குறை சொல்கிறோமோ, அத்தனையும் நாமும் இங்கே செய்திருக்கிறோம்.

தற்போது இந்த விஷயத்தில் நீதிமன்றம் தனது கருத்தை தெரிவித்து இருப்பதால் கேரள அரசியல்வாதிகளின் பிரச்சாரம் ஆதாரமற்றது என்பது தெரிந்துவிட்டது. ஆனால் நாளை இதே சுப்ரீம் கோர்ட் தமிழகத்திற்கு எதிராக கருத்தோ, தீர்ப்போ வழங்கினால் அதையும் ஏற்கும் மனப்பக்குவம் வரவேண்டும்.

தமிழ்நாட்டின் நியாயம்

தமிழகத்தை பொறுத்தவரை அணைகள் விவகாரத்தில் அதன் கவலைகள் நியாயமானவை. கேரளா, `நாங்கள் அதே அளவு தண்ணீர் தருகிறோம்` என்று உத்தரவாதம் தரலாம். ஆனால் உத்தரவாதங்களை நம்பி யாரும் இன்று முடிவெடுப்பதில்லை. `நம்பிக்கைதான் வாழ்க்கை` என்ற தத்துவம் புத்தகம் எழுதவும், பிரசங்கம் செய்யவும்தான் பயன்படுகிறதே தவிர, நடைமுறை வாழ்க்கையில் யாரும் அதை பொருட்படுத்துவதில்லை.

இந்தியாஅணுகுண்டு வெடித்தது, ஈரானிலிருந்து பாகிஸ்தான் வழியாக எரிவாயு கொண்டுவரும் திட்டத்தில் இந்தியா ஆர்வம் காட்டாதது போன்றவை எல்லாம் இந்தியா முன்னெச்சரிகையாக இருக்க விரும்புவதையே காட்டுகிறது. இன்று நல்லெண்ணத்தின் அடிப்படையில் கொடுக்கப்படும் உத்தரவாதங்கள் நாளை சூழ்நிலைகள் மாறும் போது காற்றில் பறக்கலாம். அப்போது விஷயம் கையை மீறிப் போன நிலையில் ஒன்றும் செய்ய முடியாது. எனவே அதேபோன்ற ஜாக்கிரதை உணர்வு தமிழகத்துக்கும் இருப்பதில் தவறில்லை.

அதிலும் மாநிலங்களுகிடையான பிரச்சினைகளில் சட்டமும், நீதிமன்றமும் செல்லாக்காசாக இருப்பதால் அது தமிழகத்தின் அவநம்பிக்கையை மேலும் அதிகப்படுத்துகிறது. தடம் மாறும் மாநிலங்களை வழிக்கு கொண்டு வர உறுதியான சட்டங்கள் இருந்தால் மற்ற மாநிலங்களுக்கு ஓரளவு நம்பிக்கை ஏற்படும். அப்படி ஒரு நிலைமை வரும்வரை இந்த தலைவலிகள் தொடரும்.

இதற்கு இரண்டே தீர்வுகள்தான் இருக்கிறது. 1 )நதிகளை தேசியமயமாக்கி அவற்றை மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது. 2 ) உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்து அடுத்த 5 ஆண்டுக்கு அங்கு கவர்னர் ஆட்சிதான் என்று சட்டம் கொண்டுவருவது. இது ஜனநாயகமா என்ற கேள்வி எழலாம். ஆனால் சட்டவிரோதமான செயலில் ஒருவர் ஈடுபட்டால் அவரை சிறையில் அடைத்து அவருடைய சுதந்திரத்தை பறிப்பதைப் போல், மாநிலங்கள் விஷயத்திலும் செய்ய வேண்டியதுதான்.  ஒரு கூட்டாட்சி அமைப்பில் மாநிலங்கள் சட்டத்தை மதிக்காமல் தேசிய ஒருமைபாட்டுக்கு எதிராகப் செயல்பட்டால் வேறு என்னதான் செய்வது? மீண்டும் அங்கே தேர்தல் சாத்தியமில்லை. 

கேரளாவின் நியாயம்

இந்த பிரச்சினையை எல்லோரும் அதன் ஆரம்ப வரலாற்றிலிருந்து பார்கிறார்கள். ஆனால் வரலாற்றை அப்படியே  பின் தொடர முடியுமா? அங்கே தொடர வேண்டிய நல்ல விஷயங்களும் இருக்கும், புறக்கணிக்க வேண்டிய அபத்தங்களும் இருக்கும். அதுவும் இன்று நாம் மன்னராட்சியை தாண்டி ஜனநாயகத்துக்கு வந்துவிட்டோம். ஜனநாயகத்தில் 5 ஆணடுகளுக்கு ஒரு முறை தேர்தல் வைப்பதன் நோக்கமே, சூழ்நிலைகளும் மனிதர்களும் மாறக்கூடியவை, எனவே அந்த மாற்றங்களை கவனத்தில் கொண்டு மக்கள் தங்கள் முடிவை மறு பரீசீலனை செய்யத்தான். எனவே இன்றைய மாறிய சூழ்நிலைகளின் அடிபடையில்தான் நாம் முடிவெடுக்க வேண்டும். (கச்சத் தீவு விஷயத்தில் நம் அரசியல்வாதிகளின் பேச்சைக் கேளுங்கள், மறுபடியும் தலை சுற்றும்.)

தற்போதைய கேரளாவின் நிலைப்பாடு வருத்தத்திற்குரியதுதான். அதற்கு நீதிமன்றம் குட்டும் வைத்துவிட்டது. எனவே அதை விட்டுவிடுவோம். இருந்தாலும் நான் கேட்க விரும்புவது இதுதான். வருவது தண்ணீராக இருந்தாலும் அது பக்கத்து வீட்டு கிணற்றிலிருந்தோ அல்லது அவர்கள் வீட்டு வழியாகவோ வரும்போது அவர்களுடன் நல்லுறவு கொள்ளவேண்டும் என்ற அடிப்படை நாகரீகத்தை ஏன் இங்கே யாரும் பொருட்படுத்துவதில்லை?

கேரளாவை பொறுத்தவரையில் நம்முடைய இடத்தில் நம் அதிகாரம் செல்லுபடி ஆகவில்லை என்ற ஆதங்கம் அவர்களுக்கு. கேரள இணையங்களை படித்த வரையில் இந்த கோவம் அவர்களை ஆட்டிப்படைப்பது நன்றாகவே தெரிகிறது. நம் அரசியல்வாதிகளின் பேச்சோ எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் அளவுக்கு இருக்க, இப்படி பேசுபவர்களுக்கு நாம் ஏன் உதவ வேண்டும் என்றும் கோவம். 

ஒரு பொருள் நமக்கு பயன்படாத நிலையில் அதை மற்றவர்களுக்கு கொடுப்பதில் நாம் தாராளமாக இருப்போம். ஆனால் அது நமக்கு பயன்படும் என்ற சூழ்நிலை வரும்போது நாம் விட்டு கொடுப்போமா? இதுதான் கேரளாவின் இன்றைய நிலைப்பாடு. எல்லோரும் புத்தராக இருக்க முடியாத சூழ்நிலையில் இதற்காக கேரளாவை குறை சொல்வதில் அர்த்தமில்லை.

நாகரீகமான அரசியல் மட்டும் இன்று நடைமுறையில் இருந்தால், ஒரு கட்டிபிடி வைத்தியமோ அல்லது ஒரு நிதானமான பேச்சுவார்த்தையோ, பரஸ்பர தேவைகளை புரிந்துகொண்டு சில விட்டுகொடுத்தலுடன், இந்த பிரச்சினையை சுமூகமாக தீர்த்திருக்கும். ஆனால் இன்று இந்தியாவில் இருப்பது எழவு அரசியல்.

அது என்ன எழவு அரசியல்?

ஒரு படிக்காத ஏழை வீட்டில் மரணம் நிகழ்ந்தால் அங்கேயும், அதேபோல் ஒரு பணக்கார வீட்டிலும் போய் பாருங்கள். இந்த எழவு தியரி உங்களுக்கு புரியும். ஏழை வீட்டில் அழுகை சத்தம் காதை பிளக்கும். இங்கே சத்தம் போட்டு ஒப்பாரி வைத்தால்தான் உங்களுக்கு இறந்தவரின் மீதான பாசத்தின் அளவு மற்றவர்களால் புரிந்து கொள்ளப்படும். எனவே இதில் நீயா, நானா என்ற போட்டியில் சத்தம் ஏறும். ஆனால் படித்தவர்கள் இப்படி வெளி வேஷம் போடுவதில்லை. அங்கே சோகம் கண்ணீராகவும் மவுனமாகவும் வெளிப்படும்.

அரசியலும் அப்படித்தான் ஆகிவிட்டது. வெறித்தனமாய் பேசவேண்டும், தெருவில் இறங்கி போராட வேண்டும், தேவை ஏற்பட்டால் தடி எடுத்து கொண்டு தன் இனத்துக்காக நீதி கேட்டு கிளம்ப வேண்டும். இப்படியெல்லாம் செய்தால்தான் தமிழர்கள் மீது நமக்கு பற்று இருப்பதை நாம் மற்றவர்களுக்கு நிரூபிக்க முடியும் என்று அரசியல்வாதிகள் நினைகிறார்கள். இதிலும் போட்டி வேறு. அப்புறமென்ன... இனி தமிழர்கள் தமிழக சானல்களையும் மலையாளிகள் மலையாள சானலையும் பாருங்கள். அந்த தியரி கீழ்மட்ட மக்களை எப்படி ஆட்டிப் படைக்கிறது என்பது தெரியும்.

ஆனால் நான் கவலைப்படுவது தமிழனின் இமேஜைபற்றி. இன்று ஒரு வெளிப்படையான உலகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருகிறோம். நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் மற்றவர்களால் கவனிக்கப்படுகிறது. அதனடிப்படையில் நம்மைப்பற்றிய அபிப்ராயமும் அவர்களுக்கு உருவாகிறது.

உங்களை ஒருவன் ஏமாற்றி, உங்கள் வாழ்கையை நாசம் செய்து அதன் காரணமாக கோவம் கொண்டு நீங்கள் அந்த நபரை அடித்தாலும், வேடிக்கை பார்பவனுக்கு உங்கள் பக்கம் இருக்கும் நியாயம் தெரியாமல், நீங்கள் முரடனாகவும் அடி வாங்குபவன் அப்பாவியாகவும்தான் தெரியும். எனவே நியாயம் நம் பக்கம் இருந்தாலும் அதை அடையும் வழிமுறைகளும், நம் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதை மற்றவர்களுக்கு உணர்த்துவதும் மிக அவசியம்.

நீதி தாமதமானாலும் கிடைக்கும். ஆனால் மரியாதையை இழந்தால் அதை மீட்பது சிரமம். இதை தமிழர்கள் புரிந்து கொண்டால் சரி.

இந்த வார சந்தேகம்

பத்திரிக்கைகளில் வந்த செய்தி `நீதிமன்றம் கேரளாவுக்கு குட்டு` என்பதுதான். ஆனால் சமீபத்தில் இந்த அணை பற்றிய செய்திகளையே அதிகம் படித்ததால் வேறு சில சந்தேகங்கள் வருகிறது. அதாவது 2006 ல் உச்ச நீதிமன்றம் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த அனுமதித்தது. அந்த உத்தரவை புறக்கணிக்கும் வகையில் 136 அடிக்கு மேல் உயர்த்தக் கூடாது என்று கேரளா சட்டம் கொண்டுவந்தது.

அதாவது நேற்று வரை கேரளாவின் நிலைப்பாடு நீதிமன்ற அவமதிப்பு என்ற வகையில் இருந்தது. ஆனால் தற்போது 136 அடிக்கு மேல் தண்ணீரை உயர்த்தக் கூடாது என்று கோர்ட் சொன்னதன் மூலம் கேரளா அமைதியாக தனது சட்டத்துக்கு சட்ட அங்கீகாரம் பெற்றுவிட்டது. இதுதான் செய்திக்குள் அடங்கி இருக்கும் செய்தி. இதுதான் அரசியல். இங்கே ஜெயித்தது யார் தோற்றது யார் என்பதை அவரவர் பார்வையில் புரிந்து கொள்ள வேண்டியதுதான்.

கடைசியாக

நீதிமன்றங்களின் மூலம் நமக்கு நீதி கிடைக்கலாம். அதற்கு கேரளாவும் கட்டுப்படலாம். ஆனால் நமக்கு விருப்பமில்லாத ஒரு தீர்வு (வாழ்கை) நம் மீது திணிக்கப்பட்டால் அதிலிருந்து எப்படியாவது தப்பிக்கத்தான் பார்ப்போம் (நான் ஏடாகூடமாக சிந்தித்து ஜெயிலுக்கு போனதைப் போல). எனவே கேரளா வேறு வழிகளில் ஏமாற்றலாம். தற்போதைய தேவை மனப்பூர்வமான உடன்பாடுதான். கேரளா தனது வழக்கு பலவீனமாக இருப்பதை உணர்ந்து பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறது. இதை தமிழக அரசு பயன்படுத்திக்கொண்டு சுமூக தீர்வு காண வேண்டும்.  

           

5 comments:

mundagakkannan said...

mudhirchchiyana padhivu ungalukku irukkum indhdha mudhirchi arasiyalvaadhigalidam illai ivargalum thirundhamaattargal naadum uruppadadhu
nandri

Anonymous said...

being part of india,wat goes to kerala frm TN...wat comes frm kerala to TN.TAMIL NADU needs water fr agriculture..kerala needs water fr electricity....NEYVELI provides electricity already.future koodangulam promised electricity to kerala too.wat tamilians shud do....to start journey as refugee elsewhere?

aasd said...

நல்ல ஒரு அலசல்....
www.noornpm.blogspot.com

சிவானந்தம் said...

@mundagakkannan

வாங்க கண்ணன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@ anonymous

வாங்க அனானிமஸ்.

இந்தியா இன்று சந்திக்கும் பிரச்சினைகள் அனைவருக்கும் பொதுவானவை. எனவே அந்த வகையில்தான் பிரச்சினைகளை அணுகவேண்டும். . தமிழ் நாட்டுக்கு மட்டும்தான் தலைவலி என்று புலம்புவதில் அர்த்தமில்லை. வீட்டுக்கு வீடு வாசப்படி என்பதுதான் உண்மை. எனது `இந்தியாவில் தமிழனுக்கு மரியாதை இல்லையா` என்ற பதிவை படியுங்கள்.

http://anindianviews.blogspot.com/2011/07/blog-post_12.html

அப்படியே நியூயார்க் டைம்ஸில் இந்த கட்டுரையையும் படியுங்கள்.

http://www.nytimes.com/2011/11/24/world/asia/24iht-letter24.html?scp=2&sq=%20Manu%20Joseph%20&st=cse

சிவானந்தம் said...

aasd said...

//நல்ல ஒரு அலசல்....//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

Post a Comment