!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Wednesday, January 26, 2022

நாவடக்கம் தேவை

சமீபத்தில் ஒரு சட்டக்கல்லூரி மாணவர் காவலர்களால் தாக்கப்பட்டார். வழக்கம்போல் இங்கே தாக்கப்பட்டவர் அப்பாவி தாக்கியவர்கள் குற்றவாளி என்ற பொதுமனப்பான்மை வெளிப்படுகிறது. ஆனால் நான் எப்போதும் வித்தியாசமானவன். தொடர்ந்து செய்திகளை கவனித்துவருவதால் பல விஷயங்களில் எனக்கு மாற்று பார்வை உண்டு. டேட்டா அனலைஸ்ட் என்று சொல்வார்களே அதுபோல் நான் நியூஸ் அனலைஸ்ட் ஆகிவிட்டேன் என எனக்கு ஒரு நம்பிக்கை.

தற்போது வரும் செய்திகளை மேம்போக்காக பார்த்தால் போலீசார் குற்றவாளி என முடிவு செய்துவிடலாம். ஆனால் நாம்  கொஞ்சம் எதார்த்தமாக பார்ப்போம். 

இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு செய்தி பொதுவாக போலீசாரின் மரியாதை பெருமளவு குறைந்திருக்கிறது. அதிலும் வழக்கறிஞ்சர்கள் போலீசாரை சுத்தமாக மதிப்பதில்லை என்பதுதான்.

அந்த இளைஞனின் பேட்டியையும் பார்த்தேன். வருத்தமாக இருந்தது. அதேசமயம் அங்கங்கே சுருதி இல்லாததும் தெரிந்தது. அதேசமயம் இவ்வளவு அப்பாவியான, பலவீனமானவர்களை போலீசார் இப்படி தாக்கமாட்டார்கள். இங்கே உண்மை இப்படியும் அப்படியுமாக இருக்கிறது.

இவர் பாதி உண்மையை சொல்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் மொபைல் கேமராவை ஆண் செய்தபோதே இந்த பையன் கொஞ்சம் விவரமானவன் என தெரிகிறது. ஆனால் நான் ரொம்ப அப்பாவி என முகத்தையும் நம்பும் அளவுக்கு வைத்துக்கொண்டு பேட்டி கொடுத்திருக்கிறான். இங்கே யாரை நம்புவது?         

கடந்த வருடம் ஒரு சம்பவம். ஒரு இளம் பெண் காரில் முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தார். போலீசார் தடுத்து  அபராதம் விதிக்க, அவர் தனது அம்மாவுக்கு போன் செய்து வரவழைத்தார்.

அவர் ஹைகோர்ட்டில் பெரிய்ய  வக்கீலாம். வந்தவர் போலீசாரை தாறுமாறாக கெட்ட வார்த்தைகளில் திட்டினார். `எப்படி ஒரு வழக்கறிஞ்சரின் காரை தடுக்கலாம்? எல்லோரையும் ஏன் பிடிக்கவில்லை?` என அவர் எகிறியது இன்னும் உங்களுக்கு நினைவிருக்கலாம்.

நாட்டின் எல்லை பகுதிகளில் தடுப்புகள் அமைத்து அனைவரையும் சோதிப்பது அவசியம். ஆனால் உள்நாட்டில் சோதனைகள் இப்படி குத்துமதிப்பாகத்தான் இருக்கும். சில இடங்களில் பணக்காரர் தப்பித்துவிடுவார், சில இடங்களில் ஏழைகள். ஆனால் `அவனை ஏன் பிடிக்கல, இவனை ஏன் கேள்வி கேக்கல?` என்று வாதம் செய்யும் அற்பமான அறிவாளிகளை என்ன செய்வது? அதுவும் வழக்கறிஞர்கள் என்றால் யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்ற இறுமாப்பு இவர்களுக்கு நிறையவே வந்துவிட்டது.

நாம் கவனித்தது இந்த சம்பவத்தை மட்டும். போலீசாரிடம் கேட்டால் இன்னும் பல கதைகள் கிடைக்கும். அதுவும் சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்னும் மோசம்.

இங்கே போலீசார் சரியில்லை என்றே வைத்துக்கொள்வோம். இருந்தாலும் அவர்களின் தவறுகளை அம்பலப்படுத்துவது என்பது வேறு, பொதுவெளியில் அவர்களை அவமானப்படுத்துவது என்பது வேறு. முன்னது நிச்சயம் செய்யவேண்டிய ஓன்று. இரண்டாவது தவிர்க்கப் படவேண்டிய ஓன்று.

ஒரு அனுபவம். ஒரு வீட்டுக்கு போயிருந்தேன். பல விஷயங்களை பேசும்போது முன்னேறிய மனிதர்கள் பற்றிய விவாதம் வந்தது. அந்த வீட்டு பெண்ணின் ஒரு உறவினர் முன்னேறிவிட்டார். `திறமைசாலிகள் எப்படியும் முன்னே வந்துவிடுகிறார்கள். பலர் வெறும் வேலை செய்வதிலேயே வாழ்க்கையை தொலைத்துவிடுகிறாரகள்` என பேசினார்.

இப்படி பேசிக்கொண்டிருக்கும்போது அந்த வீட்டில் முதன்மையானவர் சட்டென்று கிளம்பி வெளியே சென்றுவிட்டார். அவர் இன்னும் சில படிகள் கூட மேலே ஏறவில்லை. எனவே அவருக்கு கோவம். விருந்தினர் மத்தியில் தன்னை குறை சொல்கிறாள் என அவருக்கு வருத்தம். இது வருத்தமாக இருக்கும் வரையில் பிரச்சினை இல்லை. கோபமாக மாறினால் என்னவாக ஆகும் என்பது உங்களுக்கே தெரியும்.

இதுதான் எதார்த்தம். என்னதான் குறை இருந்தாலும் அதை சுட்டிக்காட்டும் விதம் நாகரிகமாக இருக்கவேண்டும். அதுவும் பொதுவெளியில் போலீசாரை அவமானப்படுத்தினால் அது இப்படித்தான் போய் முடியும்.

நிகழ்கால வழக்கறிஞர்கள் செய்யும் அடாவடித்தனத்தை பார்த்து, எதிர்கால வழக்கறிஞர்களும் துணிந்துவிட்டார்கள். அதிகாரவர்க்கம் அத்துமீறும் போது அதை துணிச்சலுடன் எதிர்க்க வழக்கறிஞர்களுக்கு துணிச்சலும் ஆவேசமும் தேவைதான். ஆனால் அது அகங்காரம் ஆணவம் என்ற அளவுக்கு இவர்களுக்கு போய்விட்டதாக எனக்கு தெரிகிறது.

போலீசார் வழக்கு பதிவு செய்யலாமே என பலர் உபதேசம் செய்வதை நான் கவனிக்கிறேன். இங்கே நம்மைவிட போலீசாருக்கு நன்றாகவே தெரியும், இந்திய நீதிமன்றங்கள் எதற்கும் லாயக்கில்லாத ஓன்று. எனவே  இங்கே வழக்கு போடுவதால் எந்த பயனும் இல்லை.

இங்கே துரதிருஷ்டம் என்னவென்றால், போலீசார் தங்கள் வீரத்தை பலமானவர்கள் மீது காட்டியிருக்க வேண்டும். அதாவது அந்த வழக்கறிஞர் பெண்மணியின் பேச்சில் ஆணவம் தெரிந்தது, அங்கே தூக்கிப்போட்டு மிதித்திருக்க வேண்டும். ஆனால் ஒரு அதிகப்பிரசங்கி அப்பாவி இளைஞனிடம் காட்டியிருப்பதுதான் கண்டிக்கப்பட வேண்டிய ஓன்று. 

Wednesday, January 19, 2022

கிரிப்டோ கரன்சி


ஏதாவது சில விஷயங்கள் தீடீரென்று நம் ஆர்வத்தை தூண்டிவிடும். அதுகுறித்த செய்திகளை அதிகம் படிப்போம். இந்த வாரம் அப்படி கவனித்தது QR கோட் மற்றும் கிரிப்டோ கரன்சி குறித்த தகவல்களைத்தான். 

ஜப்பானில் சரக்குகளை தரம் பிரிக்க/கையாள இந்த QR முறையை ஒரு நிறுவனம் பின்பற்ற, பின்னர் அது  இப்படி  விரிவடைத்திருக்கிறது. QR கோட், பணப்பரிமாற்றம் மற்றும் பல விஷயங்களை மிக சுலபமாக முடித்துவிடுவதால் அது தற்போது தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறிவிட்டது. 

இதில் கிரிப்டோ வேறு வகை. இங்கே அகமதாபாத்தில் சிறு வயதில் பால் வாங்க போகும்போது, அப்போது சில்லறை தட்டுப்பாடு நிறைய இருந்ததால், சில்லறைக்கு பதில் அவர்கள் கடை பெயர் அச்சடித்த டோக்கன் தருவார்கள். 50 காசு 25 காசு என அதில் அச்சடிக்கப்பட்டிருக்கும். அது அவர்களிடம் மட்டும் செல்லுபடியாகும். 

இப்படி  உள்ளூர் பிரச்சினைகளில் நம் வசதிக்காக சில நடைமுறைகளை மனிதர்கள் உருவாக்குவார்கள். அப்படி வந்த சில விஷயங்கள் அற்புதமான கண்டுபிடிப்பாக மாறும். இதில் QR கோட் வரவேற்கத்தக்க ஓன்று. ஆனால் கிரிப்டோ? 

கிரிப்டோ குறித்து படிக்கும்போது எனக்கு பல சொந்த அனுபவங்கள் நினைவுக்கு வருகிறது. அதில் பல டேஜாவு வகை. அந்த அனுபவங்களுடன் இதை பொருத்தி பார்த்தால் இதுவும் அதே அடிப்படையில் போகக்கூடும்.

கரன்சிக்கு ஒரு சிறந்த மாற்றாம்; திருடு போகும் வாய்ப்பு இல்லையாம்; சுலபமானது என்று பல காரணங்கள் அது கண்டுபிடிக்கப்பட்ட காலத்திற்கு பொருத்தமாக இருந்திருக்கும்.

ஆனால் தற்போது இன்டர்நெட்டின் வளர்ச்சி, ஸ்மார்ட்போன் வருகை, UPI  என பல விஷயங்கள் வந்துவிட்ட நிலையில், கிரிப்டோ அவசியமே இல்லாத ஓன்று. இருந்தும் மக்கள் அதன் மீது மோகம் கொண்டு அலைவதின் காரணம் புதிர்தான்.

இங்கே நாம் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். அவ்வப்போது சில புது வரவுகள் வரும் பின்னர் அது காணாமல் போகும். உதாரணம் எவ்வளவோ சொல்லலாம். பேஜர் போய் ஆண்ட்ராய்டு வந்து பின்னர் அதை ஸ்மார்ட்போன் ஒழித்தது.

தற்போது இன்னொன்றையும் நான் கவனிக்கிறேன். வங்கிகளுக்கு போய் பணம் எடுப்பது என்பது சிரமமாக இருந்தநிலையில் ஏடிஎம்கள் ஒரு வரப்பிரசாதமாக வந்தது. தெருவுக்கு நாலு ஏடிஎம்கள்கள் என உருவானது. அதே பல ஏடிஎம்கள்கள்  தற்போது காற்று வாங்கிக்கொண்டிருக்கின்றன.

PAYTM/GPAY போன்ற UPI வரவுகள் பணபரிமாற்றத்தை மேலும் சுலபமாக்கிவிட்டதால் ஏடிஎம்கள் பயன்பாடு பெருமளவு குறைந்துவிட்டது. ஏடிஎம்கள்கள் இருக்கும். ஆனால்  வரும் காலங்களில் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் மூடுவிழா கண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இதேதான் கிரிப்டோவிலும் நடக்கக்கூடும்.

இனி சில அனுபவங்களை பார்ப்போம். 90களில் புதிய பொருளாதார கொள்கைகள் வந்தபோது இப்படித்தான் பல ஷேர்களை தாறுமாறாக ஏற்றினார்கள். 10 ரூ ஷேர் 5000 போன கதையெல்லாம் நடந்தது. என் கெட்டநேரம் நான் அப்போதுதான் ஷேர்மார்கெட்டில் நுழைகிறேன். 

பொதுவாக ஷேர்களுக்குத்தான் PE/Ratio வைப்பார்கள். அந்த நேரத்தில் படுபாவிகள் அப்போதிருந்த மியூட்சுவல் பண்ட்களுக்கு கூட PE/Ratio வைத்து அதையும் விலை ஏற்றி ஏமாந்தவன் தலையில் கட்டினார்கள். ஏகப்பட்ட பென்னி ஸ்டாக் தாறுமாறாக ஏறி ஆப்ரேட்டர்களுக்கு பணமழையையும் ஏமாந்த சோணகிரிகளுக்கு அல்வாவையும் கொடுத்தது. 

அந்த நேரத்தில் இன்னொரு மோசடியும் நடந்தது. புற்றீசல்போல்  நிறைய புது வெளியீடுகள் வந்தன. வாரம் 10 பொது வெளியீடு வரும். தற்போது அதன் பேர் IPO. தெருக்களில்/பங்கு தரகர் அலுவலகத்தில் இதற்காகவே நிறைய விண்ணப்பங்கள் இருக்கும். அதில் நிறைய எடுத்துவந்து ஆராய்ச்சி செய்வேன்.

கம்பெனி 2 வது வருடமே லாபத்துக்கு வந்துவிடுமாம். வெளிநாட்டு நிறுவனம் முதலீடு செய்திருக்குதாம். உற்பத்தியான உடனே அவர்கள் வாங்கி கொள்வார்களாம். இப்படி நிறைய கதை விட்ட வெளியீடுகள் வந்து பின்னர் காணாமல் போனது. தற்போது நிறைய கிரிப்டோ வருவதை பார்த்தால் அதே நிலைமைதான் வரும் என நினைக்கிறன்.

அடுத்து ரியல் எஸ்டேட் பூம் வந்தது.  எல்லா பூமிலும் ஆரம்பகட்டத்தில் முதலீடு செய்பவர்கள் லாபம் பார்த்துவிடுவார்கள். இது தியரி. ஆனால் இவர்களை பார்த்து ஆட்டுமந்தைகளை போல் பலர் வந்து விழுவார்கள். அவர்களில் 10-20 தப்பித்தால் அதிர்ஷ்டம். மற்றவர்கள் இப்போதும் நிலங்களை வைத்திருக்கிறார்கள். நல்ல விலை வந்தால் கொடுத்துடுவேன் என்பார்கள். அதுவே அவர்களுக்கு பெருத்த நஷ்டமாக இருக்கும்.

அப்போதைய விலை ஏற்றம் இயற்கையான ஓன்று. அரசு தாராளமயமாக்களை கொண்டுவந்ததால், நிறைய உள்நாட்டு/வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில்களை தொடங்கின. கூடவே மக்கள் தொகை பெருக்கமும் கொரோனவை போல் வேகமாக இருந்தது. தொழில் தொடங்க இடம், மக்களுக்கு வீடு என்ற தேவை எல்லாம் சேர்ந்து விலை தாறுமாறாக ஏறியது. தற்போது அதுவும் கொரோனவைபோல் சமநிலைக்கு வந்துவிட்டது.

மேலே குறிப்பிட்ட இரண்டு விஷயங்களிலும் நிறைய மோசடிகள், கணக்கில் வராத  கருப்பு பணம் என விளையாட ஆரம்பித்ததால், அரசு பல வகைகளில் கடிவாளம் போட ஆரம்பிக்க, அங்கேயும் மந்தநிலை  வந்தது.

கிட்டத்தட்ட அதேதான் கிரிப்டோவிலும் நடக்கும். தற்போது சில நாடுகள் கடிவாளம் போட ஆரம்பித்துவிட்டன. இந்தியாவும் விரைவில் அந்த வேலையை ஆரம்பிக்கும். எந்த ஆட்டுமந்தை மனப்பான்மை இந்த விலையேற்றத்திற்கு காரணமாக இருந்ததோ, அதே ரிவர்ஸ் மனப்பான்மை இங்கே விலை வீழ்ச்சிக்கும் வழி வகுக்கும்.

இங்கே இன்னொரு தியரி சொல்வார்கள். ஒரு பொருள் நிறையவே விலை குறைந்தால் வாங்குவது நல்லது என மூளை சலவை செய்வார்கள். இந்த விஷயத்தில் நிபுணர்கள் மட்டுமே இதை சரியாக கணிக்கமுடியும். ஷேர் மார்க்கெட்டில் கொசுவை பூனை, புலி அளவுக்கு அல்ல, யானை அளவுக்கு ஏற்றிவைப்பார்கள். அது புலி அளவுக்கு வந்தாலே விலை வீழ்ச்சி என சாதாரண மனிதன் தலையில் கட்டுவார்கள். எனவே கவனம் தேவை.

ஷேர் மார்கெட்டிலாவது கொசுவை யானையாக்குவார்கள். ஆனால் பிட்காயின் தற்போதைய விலையை எதனுடன் ஒப்பிடுவது. 1டாலருக்கும் கீழே இருந்தது தற்போது அதிகபட்சம் 47 லட்சம் போயிருக்கிறது. இது என்ன லாஜிக்கோ.   இதற்கு சப்போர்ட் பிரைஸ் என எப்படி நிர்ணயிப்பது?

இன்னும் சில காலங்களில் `என்கிட்டே கிரிப்டோ இருக்கு, நல்ல விலை வந்தா சொல்லுங்க` என புலம்பும் மனிதர்களை நாம் காணக்கூடும்.

Friday, January 7, 2022

இங்கே முதலீடு தேவை




சீமானை பற்றி பதிவு எழுதியதால் அவர் குறித்த செய்திகளை இந்த வாரம் அதிகமாக கவனித்தேன். சிந்தனை இப்படியும் அப்படியுமாக ஓடியது. அதில் ஒரு எதார்த்தம் அப்பட்டமாக தெரிந்தது. அது கொஞ்சம் கவலைப்படவேண்டிய விஷயம்.

தற்போது அவருக்கு சொத்தோ அல்லது வேறு நிரந்தர வருமானமோ இருப்பதாக தெரியவில்லை. அதேசமயம் அவர் ஒரு கட்சியின் தலைவர். இடைவிடாது பிரச்சாரம் அல்லது கட்சி வேலை என ஏதாவது செய்துகொண்டிருக்கிறார்; செய்தாக வேண்டும். இதற்கான செலவை கட்சி நிதியிலிருந்து செலவழிக்கலாம். ஆனால் குடும்பம், குழந்தைகள் என இருக்கிறதே, அதற்கான செலவுகள் இருக்குமே, அதற்கு என்ன செய்வது?

மனைவிக்கு மல்லிகை பூவோ, குழந்தைக்கு பிஸ்கட்டோ வாங்க வேண்டும் என்றால் அதற்கு கட்சி நிதியிலிருந்தே செலவு செய்தால் விமர்ச்சனம் வரும். அல்லது `உனக்கு பூ வாங்க வேண்டும், அதற்கு பணம் கொடு` என்று மனைவியிடம் கேட்கதான் முடியுமா?

ஆக நிச்சயம் அவர் தற்போது ஒரு  உளவியல் சிக்கலில் இருப்பதுபோல் தோன்றுகிறது. `நாட்டை அடைய துடிக்கும் எனக்கு,  ஒரு வீடு இல்லை என்பது எப்பேர்ப்பட்ட வரலாற்று பிழை` என்று கொஞ்சம் அதிகப்படியாக பேசியிருக்கலாம். அதேசமயம் இந்த வார்த்தைகளை அவர் பேசியபோது அவருடைய முகபாவனையை நீங்கள் கவனித்திருந்தால் அதில் ஒரு இயலாமை இருந்ததை கவனித்திருக்கலாம்.

பல வீடுகளில் இது நடக்கும். கணவனையோ, மாமியாரையோ திட்டமுடியாத பெண்கள் வீட்டில்  சாமானை கழுவும்போது சத்தம் அபாரமாக இருக்கும். பிள்ளைகளை அற்ப காரணங்களுக்காக  அடிப்பார்கள். இவையெல்லாம் இயலாமையின் வெளிப்பாடு. மனஅழுத்தத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகளை கவனித்தால்  இப்படி எதாவது ஒரு வகையில் இருக்கும். சீமான் பொது மேடையில் செருப்பை தூக்கி காட்டியபோது இவருக்கும் அப்படி எதாவது மனஉளைச்சல் வந்துவிட்டதா என ஒரு சந்தேகம். 

உடம்பில் பலம் இருக்கும் மனிதனை விட பாக்கெட்டில் பணம் இருக்கும் மனிதன் கொஞ்சம் அதிக தெம்போடு இருப்பான். பணம் உள்ளவனைத்தான் இந்த உலகமும் மதிக்கும். இதுதான் எதார்த்தம். சீமானின் வாழ்க்கை முறையை கவனிக்கும்போது அவரிடம் பணம் இல்லை. அந்த இயலாமை காரணமான கோபம் அவருடைய வார்த்தைகளில் செயலில் தெரிகிறது.

இங்கே மீடியாவில் காட்டப்படும் சொத்துக்கள் அவருடைய மனைவி மற்றும் மாமியாருடையது. இதற்கான நிதியை இவர் கொடுத்திருந்தால் இவர் மீது பழிபோடுவதில் அர்த்தம் இருக்கும். அப்படி ஒரு தகவலும் தெரியவில்லை. 

தனக்கு வீடு இல்லை என்பவர் மனைவியின் சொத்தை விற்று வாங்கலாமே என்பதுதான் கேள்வி. ஆனால் அது தன்மானத்துக்கு இழுக்கு அல்லவா. நம் சொத்து என்பது வேறு மனைவியின் சொத்து என்பது வேறு. இது எதார்த்தம் புரியாதவர்களின் வாதம்.

இங்கே நாம் ஒரு எதார்த்தத்தை கவனிக்க வேண்டும். சேவை எப்போதும் இலவசமாக கிடைக்காது.  நாட்டுக்கு ராணுவத்தினர்/ஆசிரியர்கள் சேவை செய்கிறரர்கள். அதாவது அவர்கள் அப்படி சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் இவர்களுக்கெல்லாம் சம்பளம் கிடைக்கிறது. அவ்வளவு ஏன், என்ஜிஓ என பலர் சமூக சேவை செய்கிறார்கள். 10 பேருக்கு நல்லது செய்கிறேன் என்று 12 பேரிடம் வசூலிப்பார்கள். அந்த 2, நிர்வாக செலவு என சம்பளமாக /கிம்பளமாக போய்விடும்.

எங்கே நாம் செய்த வேலைக்கு (சற்று கூடுதலாகவே) கூலி வாங்கிக்கொள்கிறோமோ அங்கே அதை சேவை என சொல்லக்கூடாது. ஆனால் அப்படி சொல்லிக்கொள்வதில் இவர்களுக்கு பெருமை. ப்ரீபெய்ட் சர்வீஸ் என்று சொல்வார்களே அதுபோல் இவர்களுடையது வெல் பெய்டு சர்விஸ் என்று சொல்லலாம். அரசியல்வாதிகளுக்கு அப்படி எதுவும் கிடைப்பதில்லை.
 
இங்கே பதிவுலகில் ஒரு பதிவர் சத்தமே இல்லாமல் ஒரு அறக்கட்டளை ஆரம்பித்து பொது சேவை செய்தார்; பலரின் பாராட்டுகளையும் பெற்றார். இப்போது என்னவாயிற்று? இதுதான் நிஜம். சேவை செய்ய பணம் கொடுப்பது மட்டுமில்லை, அதற்காக நாம் நேரம் ஒதுக்குகிறோமே, அதற்கும் ஒரு விலை உண்டு. அதுவும் குடும்பம், கடமை என உள்ளவர்களுக்கு இது மேலும் கடினம். அது கிடைக்காதபட்சத்தில் இப்படித்தான் போய் முடியும்.

அரசியல்வாதிகளுக்கோ இது இன்னும் ஒரு படி மேல். நீங்கள் மக்களுக்கு சேவை செய்கிறீர்கள் என்றால் ஏழைகள்தான் உதவிக்கு  உங்களை நாடி வருவார்கள். பணக்காரர்கள் அவர்களாகவே பார்த்துக்கொள்வார்கள். இப்படி வரும் ஏழைகளிடம் பணமும் இருக்காது. அவர்களுக்கு காபியே நீங்கள்தான் வாங்கி கொடுக்க வேண்டும்.

கொடுக்காவிட்டால், `ஏழைகளுக்கு பத்து காசு செலவு செய்யமாட்டான், இவனுக்கு நான் ஒட்டு போடணுமா?` என கேட்பார்கள். ஆக உங்களுக்கே பால் வாங்க காசில்லை என்ற நிலையில், இது அவர்களுக்கு கூடுதல் தலைவலி. இங்கே ஊழல் செய்து, அந்த பணத்தில் மக்களுக்கு 100 ரூபாயை கொடுப்பவன் நல்லவனாகிவிடுவான். அது இதைவிட பெரிய கொடுமை.

தற்போது சீமானுக்கு கூட்டம் கூடுகிறது, ஆனால் அது ஓட்டாக மாறுவதில்லை.  நாம் எந்த செயலில் ஈடுபட்டாலும் அங்கே பலனும் வேண்டும் கூடவே பணமும் வேண்டும். ஒன்றில்லாமல் மற்றொன்று சுவைக்காது. 

இங்கே இன்னொரு விஷயத்தையும் கவனிக்கவேண்டும். திருமணமானவர்களுக்கு 6 மாதம் ஹனிமூன். தொழில் செய்பவர்களுக்கு, 2 ஆண்டுகளுக்கு லாபம் வராது அதன் பின் வரும் என்பதும் ஒரு நிலை. அதேபோல் அரசியல் தலைவர்களுக்கு 10 ஆண்டுகள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள காலஅவகாசம் இருக்கும். இவர் இந்த வாசற்படியையும் தாண்டிவிட்டார். இனி அவர் தனித்து நிற்பதும் சிரமம், கூட்டணி அமைப்பதும், ஒரு கூட்டணியில் சரணடைவதும் சிரமம். இதன்காரணமாக நிதி கொடுப்பவர்களும் களைத்து போயிருப்பார்கள். எனவே அங்கேயும் ஏதாவது `குறை` வந்திருக்கலாம். 
   
சரி,  இப்போது தன்னுடைய தனிப்பட்ட செலவுகளுக்கு என்ன செய்கிறார்? நிதி எந்த வகையில் வந்தாலும் அதை தன்னுடைய தனிப்பட்ட/ குடும்ப செலவுக்காக அவர் பயன்படுத்த முடியுமா? அந்த தவறை ஓரளவு செய்தாலும், இது எவ்வளவு நாள் தாங்கும்? வாழ்க்கை முழுக்க இப்படி தொணடர்களை நம்பியோ அல்லது குற்றஉணர்ச்சியோடு ஒரு மனிதன் வாழமுடியுமா? 

ஆக மொத்தத்தில் இங்கே அரசியல்வாதிகள் ஜாப் செக்யூரிட்டி என்ற நிலை இல்லாமல் வாழ்கிறார்கள். இதுதான் நிஜம். ஆரம்பத்தில் அட்டகாசமாக கனவுகளோடும், வாய்சவடாலோடும் ஆரம்பிக்கும் இந்த பயணம், பின்னர் களைத்துப்போய்  தடுமாறும்போது ஊழல் அரசியல்வாதிகள்/தொழிலதிபர்கள் கை கொடுக்க, கடைசியில் இவர்களும் அந்த ஜோதியில் ஐக்கியமாகிவிடுகிறார்கள். அரசியல்வாதிகளின் இந்த அடிப்படை பிரச்சினையை தீர்க்காதவரையில் இந்தியாவில் ஊழல் ஒழியப்போவதில்லை.
 
இங்கே என்ன செய்யவேண்டும்.

தற்போது அரசு பல்வேறு இடங்களில் எதிர்கால நோக்கில் முதலீடு செய்கிறது. நன்கு படிக்கும் மாணவனுக்கு உதவித்தொகை வழங்குகிறது. அந்த மாணவன் படித்து பட்டம் பெற்று நாட்டுக்கு நன்மை செய்வான் என நம்பிக்கை. ஆனால் அதில் பெரும்பாலோனோர் வெளிநாட்டில் வேலை தேடுவார்கள் அல்லது ஓட்டு போடுவதால் என்ன பயன் என வியாக்கினம் பேசுவார்கள். ஆனாலும் அரசு நிச்சயம் மாணவர்கள் மீது முதலீடு செய்யும். அது கடமை. 

இதேதான் விளையாட்டு துறையிலும் நடக்கிறது. தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பலவேறு வகைகளில் உதவி செய்கிறது. அவர்கள் விளையாட்டில் நாட்டுக்கு பெருமை சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கை. ஆனால் ஜெயிப்பவர்களுக்கு மட்டுமே உதவி செய்யமுடியுமா? இங்கே 10 பேருக்கு கொடுப்போம் அதில் ஒருவன் சாதித்தாலே அது நல்ல அறுவடைதான்.

அரசியலிலும் அதேபாணியை கடைபிடிக்க வேண்டியதுதான். ஒட்டு சதவிகிதத்தின் அடிப்படையில் முதல் 5-7 அரசியல்கட்சிகளின் தலைவர்களுக்கு அரசே கவரவமான மாத சம்பளம்  கொடுக்கலாம். தற்போது எதிர்க்கட்சி தலைவரை மட்டும் அரசு அங்கீகரிக்கறது. ஆனால்  இப்படி மேலும் 5 கட்சிகளை ஓரளவாவது ஆதரிக்க வேண்டும். இது ஒரு நல்ல முதலீடாக மாறலாம்.

`அரசியல்வாதிகள் நிறைய சொத்து சேர்த்துவைத்திருக்கிறார்கள் எனவே அவர்களுக்கு எதற்கு பணம்` என கேள்வி எழுப்பும் அறிவுஜீவிகள் நிறைய இருக்கிறார்கள். ஆனால் நேர்மையான அரசியல்வாதிகளுக்கும் பணம் தேவைப்படுகிறது. ஒரு கட்டத்தில் நமக்கான தேவைக்காக மட்டும் கை நீட்டுவோம் என சிம்பிளாக ஆரம்பிக்கும் இந்த தவறுதான் கடைசியில் அவர்களை மெல்ல மெல்ல ஊழல் பெருச்சாலிகளாக மாற்றிவிடுகிறது. எனவே அவர்களின் அடிப்படை தேவையை ஓரளவு அரசு கொடுக்குமேயானால் இது ஓரளவுக்காவது நேர்மையான அரசியல்வாதிகளை தடுமாறவிடாமல் தடுக்கும்.

அதேசமயம் சீமான்  சிறந்த நிர்வாகியாகவோ உருப்படியான தலைவராகவோ எனக்கு தோன்றவில்லை. இவர் வைகோ நம்பர் 2. தானாகவே காணாமல் போய்விடுவார்.

நமக்கு பிடிக்குதோ இல்லையோ, மக்கள் தேர்ந்தெடுத்த ஒருவரை முதல்வர் என மரியாதை தருகிறோம். அதேபோல் ஓரளவு வாக்கு வாங்கும் அரசியல்கட்சிகளுக்கும் பொருளாதார உதவிகளை அளித்து  அரசு அங்கீகரிக்க வேண்டும். அரசியல்கட்சிகள் ஏன் தடம் மாறுகின்றன என யோசித்தபோது வந்த யோசனை இது.

அரசியல்வாதிகள் தங்கள் எதிர்காலம் குறித்து கவலைப்பட ஆரம்பித்தால் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். எனவே இது போன்ற முதலீடுகளும் நாட்டுக்கு தேவை.