!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Tuesday, May 13, 2025

இந்தியா பாகிஸ்தான் போர் - யார் ஜெயித்தது?


இந்த கேள்விக்கு பதில் சொல்வது சிரமம்தான். ஏனென்றால் இங்கே முதல் பலி உண்மை. பல உண்மைகள் சில ஆண்டுகளுக்கு பின்தான் வெளிவரும். நம்முடைய வேலை செய்திகளை படித்து, கவனித்து, உணர்ந்து குத்துமதிப்பாக கணிப்பதுதான். அதுதான் இங்கே.

எனக்கு முதல் குழப்பம் ஏற்பட்டது வெள்ளிக்கிழமை அன்று பாகிஸ்தானின் கராச்சி பங்கு சந்தை 3 சதவிகிதம் உயர்ந்ததுதான். அப்போது இரண்டு தரப்பிலும் சண்டை இருந்தது. இங்கே பாகிஸ்தான் பலவீனமாக இருந்தால் ஷேர் மார்க்கெட் ஏன் உயரப்போகிறது? இது புரியவில்லை. இந்தியாவில் இது இறங்குமுகமாக இருந்தாலும், அது எனக்கு போலியாகத்தான் தெரிந்தது.

அப்போது பாகிஸ்தானுக்கு IMF 1 பில்லியன் கடன் வழங்க ஒப்புக்கொண்டது என்ற செய்தி வந்ததால் அது ஒரு காரணமாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் இப்போதுதான் தெரிகிறது. வெள்ளிக்கிழமையே போர் நிறுத்தம் குறித்த பேச்சு வார்த்தை அமெரிக்கா ஆரம்பித்துவிட்டது, எனவே போர் நிறுத்தம் வரப்போகிறது என்ற செய்தி காரணமாக அங்கே கராச்சி ஷேர் மார்க்கெட் ஏற ஆரம்பித்திருக்கிறது.

இங்கே முக்கியமான கேள்வி, 'இட்ஸ் நன் ஆப் அவர் பிசினஸ்' என்று சொன்ன அமெரிக்கா, திடிரென்று இப்படி மத்தியஸ்தம் செய்யவேண்டிய காரணம் என்ன?

முக்கியமாக கவனிக்கவேண்டியது, அமெரிக்காவும் இஸ்லாமிய தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நாடு. காஸா போருக்கு பிறகு அமெரிக்காவும், முக்கியமாக டிரம்ப், இஸ்லாமிய எதிர்ப்புணர்வில் இருப்பதால் அவர்களால் பாகிஸ்தானை ஆதரிக்க முடியாது.

நியாயம் இந்தியா பக்கம் இருந்தாலும், உக்ரைன் விஷயத்தில் இந்தியாவின் நடுநிலைமை, மோடி ஜோ பிடன் பக்கம் சாய்ந்தது போன்ற காரணங்களால், டிரம்ப் இந்தியா மீதும் அதிருப்தியில் இருந்தார். எனவே இங்கேயும் இந்தியாவை ஆதரிக்காமல், 'நீங்களே பாத்ததுக்குங்க' என்ற முடிவில் அவர் ஒதுங்கி இருந்தார்.

எந்த ஒரு நாட்டின் தலைவர்களும் இப்படித்தான் பட்டும்படாமலும் இருப்பார்கள். ஆனால் இங்கே அமெரிக்காவின் நடுநிலைமை மற்றும் இஸ்ரேலின் இந்திய ஆதரவு போன்றவை அமெரிக்கா இந்தியாவின் பக்கம் மறைமுகமாக இருக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

ஆனால் ஏதோ ஒரு இடத்தில இந்த சண்டை அணுஆயுத ஆபத்தில் கொண்டுபோய் விடும் என்ற அபாயம் தெரிந்ததால், அமெரிக்கா களத்தில் இறங்கி மத்தியஸ்தம் செய்ய வேண்டியதாயிற்று. இங்கேதான் ஒரு உண்மை நமக்கு தெரிகிறது. இந்தியா அணு ஆயுத மிரட்டலை விட்டதுபோல் தெரியவில்லை.

ஆனால் பாகிஸ்தான் அணுஆயுத பயன்பாட்டின் அதிகாரமிக்க தலைவர்களின் கூட்டத்தை கூட்டப்போவதாக ஒரு செய்தி வந்து, பின்னர் அது மறுக்கப்பட்டபோது, பாகிஸ்தானுக்கு எங்கேயோ வலிக்க ஆரம்பித்திருக்கிறது என்பது மட்டும் புரிந்தது. ஓன்று, இந்திய தாக்குதலில் அவர்களின் அணு ஆயுத கிடங்குகளில் ஏதாவது லீக் ஏற்பட்டிருக்கலாம் அல்லது அவர்களுக்கு வலி எல்லை மீறி போய் அணு ஆயுதத்தை கையில் எடுப்பேன் என மிரட்டுவதற்காக இருக்கலாம். இல்லையென்றால் அவர்கள் ஏன் அப்படி ஒரு முடிவுக்கு வரவேண்டும். இந்த செய்திதான் அமெரிக்காவை உள்ளே இழுத்துவிட்டது. 

இப்போது வேறு ஒரு விஷயத்தை கவனிப்போம். நீங்கள் ரோட்டில் போகும்போது யாராவது குடித்துவிட்டு வண்டி ஒட்டி உங்கள் மீது இடித்து உங்களுக்கு காயம் ஏற்பட்டால், நீங்கள் அவனை அடிப்பீர்கள். இப்போது அதை யாரும் தடுக்க மாட்டார்கள். ஆனால் அடி எல்லை மீறி போனால், இப்போது வேடிக்கை பார்பவனே நம்மை கண்டிக்க ஆரம்பிப்பான். இதுக்கு மேல அடிச்சா அவன் தாங்கமாட்டான், அவன் குடிகாரன் வேற என்னவேனாலும் செய்வான் விட்டுடு என அட்வைஸ் செய்வார்கள். பாகிஸ்தானின் இந்த மோசமான மனநிலைதான் அமெரிக்காவை கவலைப்பட வைத்தது.

சிறையில் எனக்கும் ஒரு சம்பவம் நடந்தது. ஏதோ ஒரு நேரத்தில் ஒருவரிடம் நான் கோபமாக பேசிவிட, அவர், 'நீ 307 தானே, என்ன 302 மாதிரி பேசற' என்றார். அதாவது 307 என்பது கொலை முயற்சி, தண்டனை தன்மையை பொறுத்தது. பெரிய ஆபத்து இல்லை. ஆனால் 302 என்பது கொலை குற்றம். சிறையில் இந்த 302 கேசில் உள்ளே இருப்பவர்கள் விரக்தியில் இருப்பார்கள். அதிலும் சிலர் நான் 4 மட்டை (கொலை) போட்டிருக்கேன் என பெருமையாக சொல்வார்கள்.

இவர்களுக்கு எதிர்காலம் இல்லை, எனவே இவர்களிடம் சிறை காவலர்களே அதிகம் வம்புக்கு போகமாட்டார்கள். யாராவது எதிர்த்தால் 'உன்னை போட்டாலும் எனக்கு ஒரே தண்டனைதான்' என்ற பதில் வரும்.

பாகிஸ்தானும் அப்படித்தான். எதிர்காலம் எந்த திசையில் இருக்கிறது என்றே அவர்களுக்கு தெரியவில்லை. இந்த பக்கம் இந்தியா என்றால் அந்த பக்கம் ஆப்கானிஸ்தான். அதோடு சொந்த மாநிலமான பலுசிஸ்தானே எப்ப தனியா போகும் என்று தெரியவில்லை.

இப்படி ஒரு மனநிலையில் இருக்கும் பாகிஸ்தான் என்ன செய்யும் என்று யாருக்கும் தெரியாது. நான் மட்டும் அழியமாட்டேன், உங்களையும் சேர்த்து சேதாரமாக்கிடுவேன் என்று முடிவெடுத்தால் என்ன செய்யமுடியும்? எனவே பாகிஸ்தானுக்கு 'புரியவைத்துவிட்டு' திரும்புவதுதான் புத்திசாலித்தனம். அதைத்தான் இந்தியா செய்திருக்கிறது. அந்த வகையில் இந்தியா தன்னுடைய இலக்கை அடைந்துவிட்டது என்றுதான் நான் நினைக்கிறன்.

இங்கே இன்னொரு உதாரணத்தையும் சொல்லலாம். கடந்த பாராளுமன்ற தேர்தலில் பிஜேபியினர் 400 தாண்டுவோம் என ஓவராக பில்டப் கொடுத்து, எப்படியோ ஒரு கூட்டணி ஆட்சியை தக்கவைத்தார்கள் இல்லையா, அதே கதைதான் இங்கேயும். மோடி மீடியாவும், பிஜேபியும் ஓவரா சீன் போட்டுவிட்டார்கள். எனவே இந்தியா இந்த போரில் தனது இலக்கை அடைந்துவிட்டாலும், இந்த ஓவர் கான்பிடன்சால் நாம் பின்வாங்கி விட்டோம் என்ற பிம்பத்தையும்  அவர்களே உருவாக்கிவிட்டார்கள்.

0 comments:

Post a Comment