!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Monday, October 31, 2011

கூடங்குளம்: இங்கேயும் சில அன்னா ஹசாரேக்கள்


இதை தினமலருக்காக (இது உங்கள் இடம்) கொஞ்சம் சுருக்கி எழுதினேன். இங்கே இன்னும் கொஞ்சம் விளக்கமாக...


சில வாரங்களுக்கு முன் அணுசக்தி குறித்த தகவல்களில் முழ்கி இருந்தேன். ஆனால் முதலில் என் கதையை போட்டுவிடுவோம் என்று முடிவெடுத்ததால் அதை பற்றி பதிவு எழுதவில்லை. கூடங்குளம் பிரச்சினை இன்னமும் கொதிக்கும் நிலையில் அது குறித்தும் ஒரு பதிவு.

அணுசக்தி விஷயமாக பல செய்திகளை படித்ததில் ஒரு விஷயம் தெளிவாகிவிட்டது. ஒரு செய்தியை சொல்ல வேண்டும் என்பதை விட அதை எப்படி சொல்ல வேண்டும் என்பதில்தான் உங்கள் திறமை அடங்கியிருக்கிறது. ராமாயணத்தில் `கண்டேன் சீதையை` என்ற சொன்னதிலிருந்து, மகாபாரத்தில் `(யானை) அசுவத்தாமா மரணம்` என்று சொன்னது வரை அந்த வார்த்தைகளுக்கு பின் பல நோக்கங்கள் அடங்கி இருக்கிறது. சொல்வது உண்மை என்றாலும் அதை சொல்லும் விதத்தில் நாம் நமது விருப்பத்தை திணிக்கலாம். இந்த தியரி இந்த பதிவுக்கும் பொருந்தும். இருந்தாலும் பலதரப்பட்ட வாதங்களை நீங்கள் கவனிக்க ஆரம்பித்தால் உங்களால் உண்மையை கண்டுபிடித்துவிட முடியும். 

அணுமின் நிலையங்கள் ஆபத்தானவை. மற்ற விபத்துக்கள் உங்களை மட்டுமே அழிக்கும் ஆனால் அணுமின் நிலையங்களில் விபத்து ஏற்பட்டால் அது உங்களின் சில தலைமுறைகளையும் சேர்த்து அழிக்கும். அதேபோல் விபத்து ஏற்படாது என்று அரசு சொல்வது இதுவரை கிடைத்த புள்ளிவிவரத்தின் அடிப்படையில்தானே தவிர அது உத்தரவாதமில்லை. மேலே சொன்ன வாதங்கள் அனைத்தும் உண்மைதான். இருந்தாலும் இதையெல்லாம் தாண்டி நாம் அணுமின் நிலையங்களை ஜீரணிக்கவும் சில காரணங்கள் இருக்கின்றன.

இன்று யதார்த்தம் என்ன? நிலம், நீர், காற்றுக்கு இணையாக எரிசக்தி நம் வாழ்க்கையில் ஊறி போய்விட்டது. ஆனால் அதற்கான ஆதாரங்கள் குறைந்து வருகிறது. அத்துடன் அதை தயாரிக்கும் முறையோ பூமியை மேலும் வெப்பமாக்கிக் கொண்டிருக்கிறது.

அதேபோல், பற்றாகுறை எந்த ஒரு பொருளின் விலையையும் கடுமையாக ஏற்றிவிடும் என்பதும் நிதர்சனம். தங்கத்தின் விலை இந்த அளவுக்கு உயரும் என்று யாராவது எதிர்பார்த்தீர்களா? நாளை இதே நிலை கச்சா எண்ணெய்க்கும் வரப்போகிறது. தங்கத்தை வாங்காமல் விட்டுவிடலாம். ஆனால் எரிபொருள்? தனிநபர் பயன்பாடு குறைந்தாலும் ஒட்டு மொத்த பொருளாதாரத்திற்கு இது அவசியமாயிற்றே?

நிலைமை இப்படி இருக்க, நாம் அணுமின் நிலையங்களை ஜீரணிக்க வேண்டிய காரணங்களை மறைத்துவிட்டு அதில் உள்ள ஆபத்துக்களை மட்டுமே சுட்டிக்காட்டி மக்களை சிலர் தூண்டி விடுகிறார்கள். இவர்கள் இந்தியாவின் எதிரிகளாக இருந்தால் நானும் கொஞ்சம் கடுமையாகவே கிழிப்பேன். ஆனால் இவர்களின் தேசபக்தியிலோ அல்லது நேர்மையிலோ எனக்கு சந்தேகம் இல்லை. இவர்களும் அண்ணா ஹசாறேக்கள்தான் என்பதுதான் பிரச்சினை. அவர் ஜன லோக்பால் சட்டமாகிவிட்டால் நாட்டில் ஊழல் ஒழிந்துவிடும் என்று நம்பிகொண்டிருகிறார். இவர்களோ மரபுசாரா எரிசக்தியை கொஞ்சம் தீவிரமாக கவனித்தால் நமது எரிபொருள் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நினைக்கிறார்கள். இரண்டுமே தற்போதைக்கு பகல் கனவுதான்.

அதேசமயம் நான் இரண்டையுமே நான் ஆதரிக்கிறேன். லோக்பால் வரட்டும். அதன் மூலம் சில அரசியல்வாதிகள் தண்டிக்கப்பட்டாலும் அது லாபம்தான். அதேபோல் மரபு சாரா எரிசக்தியையும் இன்னும் தீவிரமாக கவனிப்போம். ஆனாலும் அது தற்போதைய 10 சதவிகிதத்தை 25 வரை கொண்டுபோகுமே தவிர அதற்கு மேல் போக உடனடி சாத்தியமில்லை. எனவே மீதி 75 சதவிகீததிற்கு நாம் ஒரு வழி கண்டு பிடித்தாக வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையை அப்படியே தொடர்வதும் ஆபத்து. அதே சமயம் அணு உலைகளும் ஆபத்து. என்னதான் செய்வது?  ஆனால் நாடு எரிபொருள் நெருக்கடியை சந்திக்கப்போவது Reality . அணு உலை விபத்தோ ஒரு Probability  (நன்றி. மாலன்)

தற்போது அணுமின் எதிர்ப்பாளர்கள் பலம் பெற்றிருப்பதன் முக்கியமான காரணம், அவர்கள் இதை மட்டுமே இலக்காக வைத்து 24 மணிநேரமும் அந்த பகுதி மக்களுடன் பழகி `நான் உங்களின் நண்பன்` என்ற பெயரை எடுத்துவிட்டதுதான். எனவே அவர்களின் வார்த்தைகளுக்கு அங்கே மதிப்பிருக்கிறது. ஆனால் இதை ஆதரிக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கோ, அதிகாரத்தில் இருப்பதால், பல பிரச்சினைகள். தினசரி பேப்பரை படித்தால் ஏதாவது ஒரு பிரச்சினை அவர்கள் சிந்தனையை ஆக்கிரமித்திருப்பது தெரியவரும். எனவே அவர்களுக்கு நேரம் இல்லை. தலைக்கு மேல் போன பிறகுதான் என்ன பிரச்சினை என்று கவனிப்பார்கள். இதை ஆதரிக்கும் எதிர்கட்சிகள் ஆளும் கட்சிக்கு தலைவலி என்றால் உதவுவார்களா? அது ஜனநாயக விரோதமாயிற்றே. எனவே அவர்களும் வேடிக்கை பார்க்கிறார்கள்.

எனவே கூடங்குளம் மக்கள் சில யதார்த்தங்களை உணர வேண்டும். சாதாரண நிலையில் நான் சுத்தமான தண்ணீரைத்தான் குடிப்பேன் என்று அடம் பிடிக்கலாம். ஆனால் ஒரு பாலைவனத்தில் மாட்டிகொண்டு தாகத்தில் தவிக்கும் போது நான் மினரல் வாட்டர்தான் குடிப்பேன் என்று வசனம் பேச முடியாது. குடிக்க மறுத்தால் மரணம் நிச்சயம். குடித்தாலோ உங்கள் உடல்நலம் கெடும் வாய்ப்புதான்.

பிரச்சினை என்னவென்றால், அணுமின்சாரத்தை எதிர்ப்போர் மரபுசாரா எரிசக்தியை அளவுக்கு அதிகமாக நம்புகிறார்கள். எல்லோருக்கும் அந்த ஆசை இருக்கிறது. சூரிய சக்தியும் காற்றும் பஞ்சமே இல்லாமல் இருப்பது உண்மைதான். ஆனால் அதை சாத்தியமான முறையில் எரிசக்தியாக மாற்ற வேண்டுமே? உலகம் முழுக்க அது சலுகைகளாலும், மானியத்தாலும்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் இவர்களோ, `ஒரு பையை எடுத்துகொண்டு கடைக்கு போனால் உடனே வாங்கிக் கொண்டு வரலாம்` என்ற அளவுக்கு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். நாம் இன்னும் கொஞ்சம் கவனமாக செயல்பட்டால் நமது மரபு சாரா எரிசக்தியின் சதவிகிதத்தை அதிகரிக்கலாம் என்பதுதான் உண்மையே தவிர, அதை நம்பி இதை கைவிடும் சூழ்நிலை இன்னும் வரவில்லை.

இதையே வேறு மாதிரியும் சொல்லலாம். கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேன் விளையாடவில்லை என்றால் `கட்டை போடறான்` என்று சொல்வோம். ஆனால் எந்த பேட்ஸ்மேனாலும் விளையாட முடியவில்லை என்றால்? பிட்ச் சரி இல்லை என்றுதானே அர்த்தம். அதே லாஜிக்தான் மரபு சாரா எரிசக்தியிலும். உலகில் பல நாடுகள் மரபு சார எரிசக்தியில் தலை போகும் அவசரத்தில் ஆராய்ச்சியில் மூழ்கி இருகிறார்கள். பணக்கார நாடுகளான அவர்களாலே அதில் பெரிதாக சாதிக்க முடியவில்லை. எனவே அணு மின்சாரத்தை கைவிட மறுக்கிறார்கள். நிலைமை இப்படி இருக்கையில் நாம் என்ன அவ்வளவு பலமாகவா இருக்கிறோம், அது போன்ற முடிவை எடுப்பதற்கு?

ஜெர்மனி மட்டும்தான் அப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறது. ஆனால் அவர்களின் சூழ்நிலை வேறு. அவர்களின் தனிநபர் பயன்பாடும், பொருளாதாரமும் உச்சத்தை எட்டிவிட்டது. எனவே அவர்களுக்கு திட்டமிடுவது சுலபம். அதே சமயம் மரபு சாரா எரிசக்தியை மட்டும் நம்பி இந்த முடிவை அவர்கள் எடுக்கவில்லை. மற்ற நாடுகளிலிருந்து நிலக்கரியையும், கேஸையும் வாங்கப் போகிறார்கள். (தலைவலியே அதுதானே). அதோடு பிரான்சிடமிருந்து மின்சாரத்தையும் வாங்கப் போகிறார்களாம். (இந்த காமெடியை என்னன்னு சொல்றது?) அவர்களே அதிக அளவில் அணு உலைகளை வைத்திருகிறார்கள்.

ஜெர்மனியாவது பரவாயில்லை. அண்டை நாடுகள் எல்லாம் நட்புநாடுகள். வளர்ச்சி அடைந்தவை. எனவே பிரச்சினை ஏற்பட்டால் பக்கத்து நாட்டில் வாங்கி சமாளித்துக் கொள்ளலாம். ஆனால் நம்மை சுற்றி இருப்பவை எல்லாமே நம்மை போல் பஞ்சத்தில் இருப்பவை. அதுவும் எதிரிகள். அவர்கள் நம்மிடம் மின்சாரம் கேட்காமல் இருந்தாலே நாம் அதிஷ்டசாலிதான். எனவே நாம் ரிஸ்க் எடுப்பதற்கான வாய்ப்பு அறவே இல்லை.

இன்று நாம் ஏற்றுமதியை அதிகரிக்க கடுமையான முயற்சிகளை செய்து கொண்டிருக்கும் நிலையில், சில ஓட்டல்கள் சொல்வது போல், நாங்கள் சுத்தமான எண்ணையில் (மின்சாரத்தில்) தயாரிக்கிறோம். எனவே எங்களிடம் விலை சற்று கூடுதலாக இருக்கும் என்றெல்லாம் வசனம் பேச முடியாது. காணாமல் போய்விடுவோம். ஏற்கனவே சீனா தனது தனது நாணய மதிப்பை குறைக்காமல் ஏற்றுமதியில் வாரி குவிக்கும் நிலையில் இது வேறயா? எனவே நடைமுறை சாத்தியம் என்று வரும் வரையில் நாம் பலவித ஆதாரங்களை சார்ந்திருக்க வேண்டும். அதில் அணு மின்சாரமும் ஓன்று.

இங்கே ஒரு ஜெர்மன் விஞ்ஞானி சொன்னதையும் படியுங்கள். நம் நாட்டை பற்றி ஒரு வெளிநாட்டு விஞ்ஞானி புரிந்து கொண்ட அளவுக்கு நம் நாட்டு மக்கள் புரிந்து கொள்ளவில்லை.


Viëtor is energy expert at the German Council on Foreign Relations. He explains how the German transition can be managed as an opportunity rather than a risk, and how the rest of the world will be watching in anticipation.


...That is extremely important for emerging economies like China and India who simply wouldn't think of doing it in a way that harms their growth....


படித்தீர்களா. இந்தியாவும் சீனாவும் அணுமின் நிலையங்களை கைவிடுவதை பற்றி நினைத்து கூட பாக்க முடியாதுன்னு ஒரு ஜெர்மன் விஞ்சானி சொல்கிறார். ஆனால் இங்கே இந்தியாவிலோ அணுமின் நிலையங்களை இழுத்து மூட வேண்டும் என்று கோரிக்கை. கொடுமை.




11 comments:

Anonymous said...

தனக்கு வராத வரையில் தலை வலியும் பல் வலியும் வேடிக்கயகத்தான் தெரியும்

Sivamjothi said...

இன்று யதார்த்தம் என்ன? நிலம், நீர், காற்றுக்கு இணையாக எரிசக்தி நம் வாழ்க்கையில் ஊறி போய்விட்டது. ஆனால் அதற்கான ஆதாரங்கள் குறைந்து வருகிறது. --> Plant more trees to get more rain.. no one think about global warming.

If your home is near to koodankulam, you wont favor this.



இவர்களும் அண்ணா ஹசாறேக்கள்தான் என்பதுதான் பிரச்சினை. அவர் ஜன லோக்பால் சட்டமாகிவிட்டால் நாட்டில் ஊழல் ஒழிந்துவிடும் என்று நம்பிகொண்டிருகிறார். --> If ANNA Hazare creates awareness about corruption. He came with bill.. Otherwise there will no change at all..

Madhavan Srinivasagopalan said...

// ஒரு பாலைவனத்தில் மாட்டிகொண்டு தாகத்தில் தவிக்கும் போது நான் மினரல் வாட்டர்தான் குடிப்பேன் என்று வசனம் பேச முடியாது. குடிக்க மறுத்தால் மரணம் நிச்சயம். குடித்தாலோ உங்கள் உடல்நலம் கெடும் வாய்ப்புதான். //

Well Said. நல்ல உதாரணம்..
நாமெல்லாம் கவரி மான்களா, மயிர் நீப்பின் உயிரை விட
இல்லை புலிகளா, பசித்தாலும் புல்லைத் தின்னாமல் இருப்பதற்கு.

சிவானந்தம் said...

```தனக்கு வராத வரையில் தலை வலியும் பல் வலியும் வேடிக்கயகத்தான் தெரியும்```

வேடிக்கை இல்லை நண்பரே, இது நிஜம். சில வீடுகளில் வறுமை தாண்டவமாடும் போது, குடும்பத்தை காப்பாற்ற ஒரு குழந்தையை வேலைக்கு அனுப்புவார்கள். அதற்காக அந்த குழந்தை மீது பெற்றவர்களுக்கு பாசம் இல்லை என்று அர்த்தம் ஆகிவிடாது. சில நேரங்களில் வறுமை இப்படி எல்லாம் முடிவெடுக்க வைக்கும். அதே போன்றதுதான் இதுவும்.

சிவானந்தம் said...

Plant more trees to get more rain.. no one think about global warming.///

பாலு நீங்கள் சொல்ல வருவது எனக்கு சரியாக புரியவில்லை. மரம் நடுவது பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை. அப்படியே மரம் நிறைய நட்டாலும் அது உடனடியாக நமக்கு எரிபொருளைத் தராது.

///If your home is near to koodankulam, you wont favor this.///

கூடங்குளத்தில் நான் வசித்தால் என்ற கேள்விக்கு என் பதில் இதுதான்: ஒரு அசாதாரணமான சூழ்நிலையில் அசுத்தமான தண்ணீரை குடிக்க நேரிட்டால் அதை நான் முதலில் குடித்துவிட்டுத்தான் மற்றவர்களுக்கு கொடுப்பேன்.

///If ANNA Hazare creates awareness about corruption. He came with bill.. Otherwise there will no change at all..///

உண்மைதான். நிர்பந்தங்கள் மட்டுமே மனிதர்களை தீவிரமாக செயல்பட வைக்கும். அதேபோல் அண்ணாவின் போராட்டம் (சில சமயம் காமெடியாக இருந்தாலும்) அரசியல்வாதிகளுக்கு ஒரு நிர்பந்தத்தை உருவாக்கி இருக்கிறது. இருந்தாலும் லோக்பால் மட்டுமே ஊழலை ஒழிக்கப் போவதில்லை அதே போல் மரபு சாரா எரி சக்தியும் நம்முடைய பிரச்சினையை தீர்க்க போவதில்லை. இவை இரண்டுமே வந்தவரை லாபம் என்ற வகையில் ஆதரிக்கலாம். எனவே முறையான தீர்வுகள் இல்லாமல் நாம் அணு மின்சாரத்தை கைவிட முடியாது.

சிவானந்தம் said...

///Well Said. நல்ல உதாரணம்..
நாமெல்லாம் கவரி மான்களா, மயிர் நீப்பின் உயிரை விட இல்லை புலிகளா, பசித்தாலும் புல்லைத் தின்னாமல் இருப்பதற்கு.///

வாங்க மாதவன். உங்கள் கருத்துக்கு நன்றி.

நான் இங்கே சொன்னது ஒரு உதாரணம்தான். இருந்தாலும் நாம் ஒன்றும் சாக்கடையை குடிக்கப் போவதில்லை. நமக்கு முன் பல நாடுகள், அதுவும் படித்த மக்களை கொண்ட நாடுகள் இந்த தண்ணீரை குடிக்கும் போது... நாமெல்லாம்.... இதையெல்லாம் இவர்களுக்கு எப்படி புரிய வைப்பது.

Anonymous said...

மிக அழகான தெளிவான கட்டுரை . மக்களுக்கு உண்மை விளங்கி கொண்டுதான் இருக்கிறது . தங்கள் பதிவு போன்ற பதிவுகள் இன்னும் வரவேண்டும் . நன்றி

சிவானந்தம் said...

///தங்கள் பதிவு போன்ற பதிவுகள் இன்னும் வரவேண்டும் . நன்றி///

வாங்க மிஸ்டர் அனானிமஸ், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். அவசியமான பதிவு. எல்லோரும் படிக்க வேண்டும்.
வாழ்த்துக்கள்.

சிவானந்தம் said...

வணக்கம் ரத்னவேல் சார்.

உங்களின் கருத்துக்கும், பகிர்வுக்கும் நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

ராமாயணத்தில் `கண்டேன் சீதையை` என்ற சொன்னதிலிருந்து, மகாபாரத்தில் `(யானை) அசுவத்தாமா மரணம்` என்று சொன்னது வரை அந்த வார்த்தைகளுக்கு பின் பல நோக்கங்கள் அடங்கி இருக்கிறது. சொல்வது உண்மை என்றாலும் அதை சொல்லும் விதத்தில் நாம் நமது விருப்பத்தை திணிக்கலாம்./

நிதர்சன பகிர்வு!

Post a Comment