!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Friday, December 21, 2012

மன்னிக்க அல்ல, தண்டிக்க கற்றுக் கொள்ளுங்கள்


டெல்லியில் நடந்த கற்பழிப்பு சம்பவம், இந்த சமுதாயம் எந்த அளவுக்கு மோசமாக மாறிவிட்டது என்பதை காட்டுகிறது. வழக்கம்போல் கூச்சல்களும் மெழுகுவர்த்தி ஊர்வலங்களும் நடக்கும்.

அடுத்து குஜராத் தேர்தல் முடிவுகள் பரபரப்பாக அலசப்படும் போது, இந்த விஷயம் மறக்கடிக்கப்படும். எந்த ஒரு விஷயத்திலும் அந்த நேரம் உணர்சிகளை கொட்டிவிட்டு பின்னர் அதை மறந்துவிடுவது இந்தியர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது.

எனக்கு தெரிந்து இந்த பிரச்சினைகளுக்கு இரண்டே காரணங்கள்தான். ஓன்று மக்களின் மனநிலை, மற்றது இந்திய நீதித்துறையின் உருப்படாத கொள்கை.

மக்களின் மனநிலை என்றால் நான் இங்கே சொல்லவருவது எதையும் மன்னிக்கும் மனப்பான்மையை.

பெரிய மனிதன் 

இந்தியாவில் இப்போது எல்லோருக்கும் எல்லோரையும் மன்னிக்கும் வியாதி பீடித்திருக்கிறது. மன்னிக்கிறவன்  பெரிய மனிதனாம். யாரோ ஒரு புண்ணியவான் சொல்லி இருக்கிறார். அதனால் இப்போது எல்லோரும் அந்த ஆசையில் அலைகிறார்கள்.

பொதுவாக நம் நாட்டில் பெரிய மனிதனாக இரண்டு வழிகள்தான் இருக்கிறது.

காந்தி, காமராசர் போல் மக்களுக்கு சேவை செய்து பெரிய மனிதர்கள் ஆவது. இங்கே பட்டம் உடனே கிடைக்காது, பல வருடங்கள் ஆகும். அதிலும் பல தியாகங்களை செய்யவேண்டி இருக்கும். 

இன்னொரு வழியும்  இருக்கிறது. நீங்கள் கல்யாணம் செய்து, உங்கள் பிள்ளைகளுக்கும் கல்யாணம் செய்து, பேரப்பிள்ளைகளை பார்த்துவிட்டால், இப்போது அந்த பட்டம் உங்களுக்கு வந்துவிடும். இதற்கு நீங்கள் எதையும் தியாகம் செய்ய வேண்டாம். ஆனால் இந்த முறையிலும் அந்த பட்டத்தை வாங்க பல வருடம் ஆகும்.  

(ஒரு கல்யாணத்தில், `பெரிய மனுஷங்கள கூப்பிட்டு சபைல உக்கார வைங்கன்னு` ஒரு குரல். அதன் பிறகு சிலர் சபையில் அமர்ந்தார்கள். இவங்களுக்கு எப்படி இந்த பட்டம் கிடைத்ததுன்னு நான் ஆராய்ந்ததில், மேலே சொன்ன காரணம்தான் தெரிந்து.) 

இப்போது புதிதாக ஒரு டிரெண்ட் வந்திருக்கிறது. அந்த டிரெண்டின்படி, யாரவது தவறு செய்துவிட்டு உங்களிடம்  மன்னிப்பு கேட்டு, நீங்களும் மன்னித்துவிட்டால், இப்போது உடனடியாக உங்களுக்கு பெரிய மனிதர் பட்டம் கிடைத்துவிடும். இது ரொம்ப ஈசியாக இருப்பதால் எல்லோரும் இதில்தான் போட்டி போடுகிறார்கள்.

அடிக்கக் கூடாதாம்  

குழந்தைகளை பெற்றோர்களும், ஆசிரியர்களும் அடிக்கக் கூடாதாம். இது அடுத்த தலைவலி. அடிப்பது என்றால் கொடூரமாக அடிப்பதை யாரும் ஆதரிக்கப் போவதில்லை. ஆனால் குழந்தைகள் தவறு செய்தால் அது தவறு என்பதை உணரும் அளவுக்காவது தண்டனை தேவைதானே?

மிக முக்கியமாக தண்டனை என்பது அந்த நபர் திருந்துவதற்காக மட்டுமல்லை. மற்றவர்களுக்கும்  அது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். இந்த மன்னிக்கும் தியரியில் அந்த லாஜிக் அடிபட்டு விடுகிறது.  

இப்படி எல்லோரும் மன்னிக்க ஆரம்பித்து பெரிய மனிதனாக முயற்சிப்பதால், மற்றவர்களும் வேறு வழி இல்லாமல் இதை ஆதரிக்க வேண்டியதாகி விடுகிறது.

அன்னா ஹசாரேவை ஆதரிக்காவிட்டால் தேசதுரோக பட்டம் எப்படி ரெடியாக கிடைக்குமோ அதேப்போல் இங்கேயும் மனித நேயம் இல்லாதவன் என முத்திரை கிடைக்கும்.

இப்படி போட்டி போட்டுக் கொண்டு  தவறுகளை/குற்றங்களை ஆரம்பத்திலேயே கண்டித்து அடக்காததால், அது கொடுக்கும் துணிச்சலில் இவர்கள் பெரிய குற்றங்களை செய்ய ஆரம்பிக்கிறார்கள்.

சமீபகால பரபரப்பு செய்திகளை கவனியுங்கள். தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆல்வின் சுதன் கொல்லப்பட்டதாகட்டும், பஞ்சாபில் ஈவ் டீசிங்கை தடுத்த தந்தையை, அவர் போலீஸ்காரர் என்றும் பாராமல் கொன்றதாகட்டும், எல்லாவற்றிற்கும் ஒரே பதில்தான்.

அவர்கள் சிறிய அளவில் தவறுகள் /குற்றங்கள்  செய்தபோது, பெற்றோரோ/போலீசாரோ அவர்களை தண்டிக்கவில்லை என்பதுதான்..

நீதித்துறை 

இந்திய நீதித்துறையின் கொள்கைகள் இருக்கே அது இதைவிட பெரிய அபத்தம். 10 குற்றவாளிகள் தப்பலாமாம். ஒரு நிரபராதி தண்டிக்கப் படக்கூடாதாம். இது நமது நீதித் துறையின் கொள்கை. வழக்கம் போல் சித்தாந்தங்கள் நன்றாகத்தான் இருக்கும். நடைமுறைக்குதான் சரிவராது.

சேதாரம் அல்லது இழப்பு என்றில்லாமல் எந்த ஒரு காரியத்தையாவது நம்மால் செய்யமுடியுமா? அது சாத்தியமே இல்லை. எனவே  சில இழப்புகளை எதார்த்தம் என விட்டு விட வேண்டியதுதான். 

அரசின் இந்த `அப்பாவி` கொள்கையால் சில அபாயங்கள்தான் உருவாக்கி இருக்கிறது. அப்பாவிகளை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் சட்டம் அநியாயத்துக்கு ஆதாரத்தை எதிர்பார்ப்பதால், குற்றவாளிகள் மிக ஈசியாக தப்பிவிடுகிறார்கள்.

இந்த ஓட்டைகளால் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாட, இதனால் எத்தனை உயிர்கள் போகின்றன, எத்தனை குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன என்று யாரவது யோசித்தார்களா? நிச்சயம் இது அதைவிட அதிகமாக இருக்கும். ஒரு அப்பாவியை காப்பாற்றும் முயற்சியில்  நாம் பல உயிர்களை இந்த குற்றவாளிகளால் இழக்கிறோம் என்பதுதான் உண்மை.

இங்கேதான் சட்டத்தில் கொஞ்சம் கடுமை தேவை. அறியாமையில் ஒரு அப்பாவி தண்டிக்கப்படும் வாய்ப்பு இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் குற்றவாளிகள் தப்பக் கூடாது என்ற வகையில் சட்டம் இருக்க வேண்டும்.

குற்றம் சிறியதாக இருந்தாலும் சரி, அல்லது செய்பவர்கள் சிறியவர்களாக இருந்தாலும் சரி, இது தவறு என்பதை அவர்கள் உணர்ந்து வருந்தும் அளவுக்கு தண்டனை தேவை.

தவறு செய்யும் ஒரு  குழந்தைக்கு கொடுக்கப்படும் அறை, ஒரு பெண்ணை எதிர்காலத்தில் கற்பழிப்பிலிருந்து மட்டும் காப்பாற்றாது, அந்த குழந்தை எதிர்காலத்தில் தூக்கில் போடப்படுவதிலிருந்தும் காப்பாற்றும்.    

எனவே இனி மன்னிக்க அல்ல, தண்டிக்க கற்றுக் கொள்ளுங்கள். அதுதான் குற்றங்களை கட்டுபடுத்தும். இல்லையென்றால் அது தும்பை விட்டுவிட்டு வாலை பிடித்த கதைதான்.


4 comments:

Easy (EZ) Editorial Calendar said...

நம் நாட்டிற்க்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Unknown said...

சரியா சொன்னீங்க சார்.இது பெற்றொர்களின் பங்களிப்பும் அதிகம் தேவை படுகிறது.அதிகம் பேர் ஒரு செயலை செய்ய ஆர்வம் காட்டினால் அது தவறாக இருக்கும் பச்சத்தில் நாகரீகம் கருதி பெருமையாக எடுத்து கொள்ளும் மன பான்மையை வளர்த்து கொள்ளுகிறார்கள்.

அழகிய நாட்கள் said...

//ஆனால் குழந்தைகள் தவறு செய்தால் அது தவறு என்பதை உணரும் அளவுக்காவது தண்டனை தேவைதானே?//
குழந்தைகளை அடித்ததால்தான் நார்வே நாட்டில் ஒரு ஹைதராபாத் இஞ்சினியர் சந்திரசேகரன்(TCS) 18 மாத தண்டனை அனுபவித்துக்கொண்டிருக்கிறார். குழந்தைகளை, நம்மை விட பலம் குறைந்தவர்களை வல்லாண்மை செய்வது மனித குல விரோதம். நமது நாட்டில் தலைமுறைகளாக ஊட்டப்பட்டதன் மிச்ச சொச்சம்தான் குழந்தைகளை அடிப்பது. நான் என் குழந்தைகளை அடித்ததே இல்லை.ஐ ஏ எஸ் முயன்று கொண்டிருக்கிறார் எனது மகன். காம்பஸ் தேர்வாகி இருக்கிறார் எனது மகள்.ஒரு பாவமும் அறியாத படிப்பறிவே இல்லாத ஒடுக்கப்பட்ட மக்கள் பலர் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்படுகிறார்கள் இன்றைக்கும். மீடியாக்கள் போலீஸ் கண்டு கொள்வதே இல்லை. ஆடைகள்தான் வன் கொடுமையி ஈடுபத்தூண்டுகிறது என்றால் ஆறு வயதுக்குழந்தையை பாலியல் வன் கொடுமை க்கு ஆளாக்குவதை என்ன சொல்லுவது....

சிவானந்தம் said...

வாங்க ஆரிப்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

@Arjunan Narayanan

///குழந்தைகளை அடித்ததால்தான் நார்வே நாட்டில் ஒரு ஹைதராபாத் இஞ்சினியர் சந்திரசேகரன்(TCS) 18 மாத தண்டனை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்.//

இந்த செய்தியை நானும் கவனித்தேன். 100 ல் ஒரு பெற்றோர் இப்படி சைக்கொத்தனமாகா அடிக்கலாம். ஆனால் எல்லோரும் அப்படி அல்ல. நசுக்க மட்டுமில்லை பிள்ளைகளை செதுக்கவும் தட்ட வேண்டும்.

//நான் என் குழந்தைகளை அடித்ததே இல்லை.ஐ ஏ எஸ் முயன்று கொண்டிருக்கிறார் எனது மகன். காம்பஸ் தேர்வாகி இருக்கிறார் எனது மகள்.//

நீங்கள் உங்கள் பிள்ளையை அப்படி வளர்த்திருந்தால் சந்தோசம். ஆனால் எதார்த்தம் அப்படி அல்ல.

வசதியான குடும்பத்தில் கல்வி முழுமையாக கிடைக்கும். சுற்றி இருப்பவர்களும் கற்றவர்களாக இருப்பார்கள். எனவே சிறு வயதில் கிடைக்கும் செல்லத்தையும் தாண்டி இவர்கள் மற்றவர்களால் பக்குவப்பட்டு விடுகிறார்கள். இங்கே இளம் குற்றவாளிகளின் சதவிகிதம் குறைவாக இருக்கலாம்.

ஏழை குழந்தைகளுக்கு அந்த வாய்ப்பும் இல்லை. இளம் குற்றவாளிகளின் வாழ்கை முறையை ஆராய்ந்தால் உண்மை தெரியவரும்.

//ஆறு வயதுக்குழந்தையை பாலியல் வன் கொடுமை க்கு ஆளாக்குவதை என்ன சொல்லுவது.//

இதற்கு இந்த பதிவுகளில் தீர்வை சொல்லி இருக்கிறேன். 2வது 3 வது குற்றம் என்றாலே பெயிலில் கடுமை வேண்டும். அதற்கும் மேல் போனால் பெயிலே கிடையாது என்ற நிலை வேண்டும். இப்போது உங்கள் மீது 50 வழக்குகள் இருந்தாலும் பெயில் கிடைக்கும் என்ற நிலைதான் இவர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கிறது.

Post a Comment