!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Monday, June 6, 2011

இந்தியாவில் ஊழலை குறைக்க ஒரு வழி.


கடந்த பதிவில் அரசியல் (தனி) நீதிமன்றங்கள் அமைத்து அரசியல்வாதிகள் மீதான வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்கினால், அது அரசியலில் ஊழலை பெருமளவு கட்டுப்படுத்தப்படும் என்று கூறியிருந்தேன். ஆனால் அது வருகிறதோ இல்லையோ, லோக்பால் மத்திய அளவில் வருவதற்கான வாய்ப்பு தெரிகிறது. எனவே இது வந்தாலும் பரவாயில்லை என்று திருப்திபட வேண்டியதுதான். இருந்தாலும் ஆபத்தான அரசியல்வாதிகளை கீழ்மட்டத்திலேயே கண்டுபிடித்து (தனி நீதிமன்றங்கள் மூலம்) களை எடுப்பதை விட்டு விட்டு அவர்களை மேல்மட்ட தலைவர்களாக வளர விட்டு அதன் பிறகு அவர்கள் மீதான புகார்களை லோக்பால் மூலம் விசாரிப்பது என்பது தும்பை விட்டு விட்டு வாலை பிடிப்பதை போன்றதுதான்.

இன்னொருபக்கம்,தற்போதைய பரபரப்பான ஊழல்கள் ஒரு பக்கம் வருத்தத்தை அளித்தாலும் இன்னொரு பக்கம் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. `கறை நல்லது` என்ற வசனத்தை போல் நம் நாட்டை பொறுத்தவரையில் குறையும் நல்லதுதான். ஏனென்றால் ஏதேனும் குறையை கண்ட பிறகுதான் நாம் விழித்துக் கொண்டு போராடுகிறோம்.

சீனாவிடம் அடி வாங்கிய பிறகுதான் ஒரு நாடு வளமாய் இருக்க வேண்டியது எப்படி முக்கியமோ அதேபோல் பலமாகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தோம். பொருளாதாரம் நசிந்து தங்கத்தை வெளிநாட்டில் அடகு வைக்க வேண்டிய சூழ்நிலை வந்த பிறகுதான், பொருளாதாரம் என்ற வண்டி வேகமாக ஓட தனியார்துறையின் அவசியத்தையும் உணர்ந்தோம். அதேபோல், தற்போதைய ஊழல்கள், இந்தியாவில் ஊழல் தடுப்பு சட்டங்கள் பலவீனமாக இருகின்றன என்பதை அரசியல்வாதிகளுக்கு நேரிடையாகவோ அல்லது அண்ணா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்றவர்களின் போரரட்டம் மூலமாகவோ உணர்த்தினால் அது போதும் நமக்கு.

(இவர்கள் இதை விளம்பரத்துக்காக செய்தாலும், இவர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வது சாத்தியமில்லை என்றாலும், ஒரு பரபரப்பும், மக்களின் கவனம் ஊழலுக்காக எதிராக திரும்பியிருப்பதும் ஒரு நன்மைதான்.)    

அதேசமயம் அரசியல்வாதிகள் என்றாலே அவர்கள் ஊழல்வாதிகள்தான் என்ற எண்ணம் மக்களிடையே உருவாகி இருப்பதும் வருத்தமளிக்கிறது. நான் அப்படி நினைக்கவில்லை. நாட்டின் முக்கிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பி ஜே பி யில் மேல்மட்டத் தலைவர்கள் ஊழலில் ஈடுபடுபவர்களோ அல்லது அதை ஆதரிப்பவர்களோ இல்லை என்பதுதான் என் கருத்து. அதற்கு அடுத்து வரும் கம்யுனிஸ்ட் கட்சிகளில் கீழ் மட்ட தலைவர்களையும் இந்த லிஸ்டில் சேர்க்கலாம்.

இங்கே நாம் கவனிக்க வேண்டிய பிரச்சினை நமது ஜனநாயக அமைப்பில் இருக்கிறது. இந்திய ஜனநாயகம் இன்னமும் சரி செய்யப்பட வேண்டிய பல குறைபாடுகளை கொண்டிருக்கிறது. மக்களும் இன்னும் கல்வி அறிவில் அல்லது பொது அறிவில் பின் தங்கியிருக்கிறார்கள். இதற்கு யார் காரணம் என்ற ஆராய்ச்சியில் நான் இறங்கப் போவதில்லை. இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சிதான் நடக்கிறது. அரசியல்வாதிகளை குறை சொன்னால் அவர்களை தேர்ந்தெடுத்த மக்களையும் சேர்த்துதான் குறை சொல்ல வேண்டியிருக்கும். எனவே வியாதி என்ன, அதற்கு மருந்து என்ன என்பதை மட்டும் பார்ப்போம்.

தற்போதைய சூழ்நிலையில் நல்ல அரசியல்வாதிகள் எந்த வித `அனுசரித்தலுக்கும்` உடன்படாமல் நாகரீக அரசியல் செய்தால் இவர்களால் தேர்தலில் தாக்குபிடிக்க முடியாது. அது நாட்டை மோசடி அரசியல்வாதிகளிடம் தாரை வார்ப்பதற்கு சமம். எனவே ஆடுகிற மாட்டை ஆடிக் கறக்கணும், பாடுகிற மாட்டை பாடிக் கறக்கணும் என்ற தியரியின் அடிப்படையில் நேர்மையான அரசியல்வாதிகளும் சில விஷயங்களில் அனுசரித்து செயல்பட வேண்டி இருக்கும். இது விமர்சகர்களின் பார்வையில் ஊழலாக, அல்லது ஊழல்வாதிகளை ஆதரிப்பதாக தெரியலாம்.

இந்திய அரசியல் கடந்து வந்த பாதையை பாருங்கள், அரசியலில் ஊழல் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிய கதை புரியும். ஒரு காலத்தில் வியாபாரத்தில் பொருட்களின் மீதான லாபம் 20 சதவிகிதத்தை தாண்டியதில்லை. ஆனால் தொழிலில் போட்டி அதிகரித்ததும், விளம்பரம் மூலமே எந்த ஒரு பொருளையும் விற்க முடியும் என்ற சூழ்நிலையும் உருவான பிறகு சில பொருட்களில் லாபம் கிட்டத்தட்ட 80 சதவிகீதமாகி விட்டது. அரசியலும் இந்த தியரிக்கு உட்பட்டதுதான். வியாபாரிகள் தங்களின் அனைத்து செலவினங்களையும் தாங்கள் விற்கும் பொருட்களின் மீது ஏற்றிவிடலாம். ஆனால் அரசியல்வாதிகள் தேர்தல் செலவினங்களை எப்படி சமாளிப்பார்கள்?

கடந்த தேர்தலில் கலைஞர் இலவச கலர் டிவி என்ற அஸ்திரத்தை எடுத்து அதன் மூலம் ஓரளவு வாக்குகளை பெற்று ஆட்சியை பிடித்தார். இந்த முறையும் பல இலவசங்களை வழங்கபோவதாக வாக்குறுதி அளித்தார். இதை பார்த்த ஜெயலலிதாவும் வேறு வழியில்லாமல் அதை பின் தொடர வேண்டியதாயிற்று. தேர்தலில் செலவு வைக்கும் அதிகப்படியான விளம்பரங்களும், தேவையற்ற பலம் காட்டும் பேரணிகளும், பொதுக்கூட்டங்களும் கூடவே இலவச வாக்குறுதிகளும் இப்படித்தான் யாரோ சில அரசியல்வாதிகள் ஆரம்பித்து வைக்க, மற்ற அரசியல்வாதிகளும் வேறு வழி இல்லாமல் இதை பின் தொடர வேண்டியதாயிற்று.

கடந்த காலங்களில் தேர்தல் செலவுக்காக மக்களிடம் நிதி வசூலிப்பதுதான் ஒரே வழியாக இருந்தது. ஆனால் ஏழை நாடுகளில் மக்களிடம் அதிக நிதி உதவியை எதிர்பார்க்க முடியுமா? அதுவும் ஊருக்கு ஒரு கோயில் என்றால் ஓரளவாவது நிதி கிடைக்கும். தெருவுக்கு ஒரு கோவில் என்றால்...? அதே நிலைமைதான் அரசியல்கட்சிகளுக்கும். கட்சிகள் காளான்களாக முளைத்த பிறகு இங்கேயும் நிதி வருவது குறைந்து விட்டது.

இரண்டாவது வழி தொழில் அதிபர்களிடம் நிதி கேட்பது. இங்கேயும் அதே பிரச்சினைதான். இருந்தாலும் இவர்கள் தாங்கள் விரும்பும் கட்சிகளுக்கு நிதி உதவி செய்ய தயாராய் இருப்பார்கள். இங்கே பிரச்சினை என்னவென்றால், ஒரு கட்சிக்கு நிதி உதவி செய்து அது மற்ற கட்சிகளுக்கு தெரியவந்தால் மற்ற முக்கிய கட்சிகளுக்கும் மொய் எழுத வேண்டியிருக்கும். இவர்கள் ஒரு கட்சிக்கு நிதி உதவி செய்ய, வேறு கட்சி ஆட்சிக்கு வந்தால் இவர்கள் கதி? எனவே இவர்கள் கணக்கில் வராமல் கருப்பு பணமாகத்தான் உதவி செய்ய முன் வருவார்கள். ஆக, ஊழலுக்கான முதல் அஸ்திவாரம் இங்கே போடப்படுகிறது.

தொழில் அதிபர்களிடம் நிதி உதவி பெறுவதில் மேலும் இரண்டு தலைவலிகள் அரசியல்வாதிகளுக்கு இருக்கிறது. ஓன்று, பணம் கொடுத்த தொழில் அதிபர்கள் அதற்கு பிரதிபலனாக அரசிடம் சில சலுகைகளை எதிர்பார்ப்பது. இதுவே ஊழல்தான். இரண்டாவது, `அந்த அரசியல்வாதியை நான்தான் ஆதரித்து வளர்த்துவிட்டேன்` என இவர்கள் தம்பட்டம் அடிப்பது. பல சினிமாக்களில் பார்த்திருப்பீர்களே, அரசியல்வாதிக்கு பணம் கொடுத்த வில்லன் அவரை நாயை விட மிகக் கேவலமாக நடத்துவதை. இவையெல்லாம் மிகைபடுத்தப்பட்டவை என்றாலும், தொழில் அதிபர்களிடம் நிதி உதவி பெறுவதால் அரசியல்வாதிகளின் சுதந்திரமும், தன்மானமும் பறி போகிறது என்பது மட்டும் உண்மை.

இந்த பிரச்சினைக்கு அரசியல்வாதிகளிடம் தற்போது இருக்கும் ஒரே தீர்வு, நியாயமான ஊழல்தான். அதாவது, தேர்தல் நிதி தரும் நபர்களுக்கு சலுகைகள் செய்வதே ஒரு முறைகேடுதான் எனும்போது, அதை ஏன் நாம் நேரடியாகவே செய்யக்கூடாது என்ற எண்ணம் அரசியல்வாதிகளுக்கு வந்திருக்கலாம். திட்டங்களுக்கு குறிப்பிட்ட அளவு கமிஷன் என்று போனால் நமக்கும் நிதி கிடைக்கும், அதேசமயம் நிதி உதவி கேட்டு இந்த பணக்காரர்களை அணுகி, அவர்களுக்கு சலுகையும் செய்து, அவமானப்படவேண்டிய அவசியமும் ஏற்படாது. இதுதான் அரசியல்வாதிகளுக்கு தற்போது வசதியாக இருக்கிறது.

அதேசமயம் ஓரளவு நற்பெயர் உள்ள தலைவர்கள் இப்படியெல்லாம் அனுசரித்து போவார்களா? அது மிகப் பெரிய ஆபத்தில் போய் முடியும். எனவே  கீழ்மட்ட தலைவர்கள் இந்த `தேவைக்காக` கை நீட்டலாம். மேல்மட்ட தலைவர்கள் கட்சிக்காக கை நீட்டும் தலைவர்களை ஜீரணித்துக் கொள்ளலாம்.


காரணங்கள் நியாயமானதாகவே இருந்தாலும், ஒரு பொய் சொல்ல ஆரம்பித்தால் அது பல பொய்களில் போய் முடியும் என்பதுதான் நிஜம். அரசியலிலும் அப்படித்தான் ஆகிவிட்டது. இந்த நியாயமான ஊழலை ஒருவரை பார்த்து மற்றவர்கள் தொடர, இடையில் சிலர் ருசி கண்ட பூனையாகி இதை சாக்காக வைத்து சொத்து குவிக்க ஆரம்பிக்க, தேர்தல் செலவுக்காக சிறிய அளவில் கமிஷன் என்று ஆரம்பித்த ஊழல்  கடைசியில் பிரம்மாண்டமான  2 ஜி ஊழலில் போய் முடிந்திருகிறது.

இங்கே உண்மையான ஊழல்வாதி மீது நடவடிக்கை எடுத்தால், அவர் இவருடைய முறைகேடுகளை பட்டியலிடுவார். சந்தி சிரிக்கும்.  `நான் தேர்தல் செலவுக்காகதான் இதை செய்தேன்` என்று நீதிபதியிடம் வாதாடவா முடியும். அல்லது மக்கள்தான் இதை நம்புவார்களா? எனவே இவருடைய எதிர்காலமும் பாதிக்கப்படும் என்பதால், இவர்களும் அந்த தப்பான அரசியல்வாதியை காப்பாற்றவேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகிறார்கள்.

இதுதான் இந்தியாவில் ஊழல் வளர்ந்த கதை. அதாவது நான் புரிந்து கொண்டது.

இன்று தரம்தாழ்ந்து விட்ட அரசியலில் நல்ல அரசியல்வாதிகளின் பங்கு என்ன?

தேர்தலில் அதிகம் செலவு செய்யமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தால் இவர்கள் ஜெயிப்பது சிரமம்தான். அல்லது `நான் `அனுசரித்து` போகமாட்டேன். எனக்கு என்னுடைய இமேஜ் தான் முக்கியம். எனவே நான் அரசியலிலிருந்து விலகுகிறேன்` என்று விலகினால், இவர்கள் நல்ல அரசியல்வாதிகளாக இருப்பார்கள். ஆனால் அதேசமயம் வடிகட்டிய முட்டாள்களாகவும் இருப்பார்கள். தன்னுடைய இமேஜை காப்பாற்றிக் கொள்ள, நாட்டை மோசமான மனிதர்களிடம் ஒப்படைத்து விட்டு ஓடும் இந்த நல்லவர்களை(?) பற்றி வேறு என்ன சொல்வது?

நல்ல,  புத்திசாலியான அரசியல்வாதிகள் இப்படி சுயநலமாக புறமுதுகு காட்டி ஓடமாட்டார்கள். எப்படியோ அரசியல் சாக்கடையாகி விட்டது. காரணம் எதுவாக இருந்தாலும், நாடு மிக மோசமான அரசியல்வாதிகளின் கையில் போய்விடாமல் தடுக்க நாமும் இந்த சாக்கடையில் இருந்துதான் போராடவேண்டும் என்பதை உணர்ந்திருப்பார்கள்.

தமிழ்நாட்டில் இரண்டு கம்யுனிஸ்ட் கட்சிகளின் நிலைபாட்டை பாருங்கள், யதார்த்த அரசியல் உங்களுக்கு புரியும். `இரண்டு கழகங்களும் ஊழலில் திளைப்பவை. எனவே நாங்கள் தனித்து நிற்கிறோம்` என்று இவர்கள் ஒதுங்கியிருந்தால் `இவர்கள் நல்ல அரசியல்வாதிகள்` என்ற பட்டம் அவர்களுக்கு கிடைத்திருக்கும். ஆனால் நாடு ஒரு குடும்பத்தின் சொத்தாக மாறியிருக்கும். நம்முடைய நற்பெயரை விட நாட்டின் எதிர்காலம்தான் முக்கியம் என்று நினைப்பவர்கள் விமர்சனங்களை பொருட்படுத்தாமல் இப்படித்தான் முடிவெடுப்பார்கள்.

அதேசமயம் நாட்டை யாரிடமிருந்து காப்பாற்றவேண்டும் என்ற நிலை அவ்வப்போது மாறுபடும். அது அந்தந்த காலகட்டத்தை பார்த்து எடுக்க வேண்டிய முடிவு. ஒரு காலத்தில் ஜெயலலிதாவிடமிருந்து நாட்டை காப்பாற்ற வேண்டியிருந்தது . இப்போது கலைஞரிடமிருந்து நாட்டை காப்பாற்றி இருக்கிறோம்.

வியாதியை கண்டுபிடித்தாகிவிட்டது. இதற்கு மருந்து?


அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் செலவுகளுக்காக பணம் தேவைப்படுவதை அனைவரும் உணர்ந்திருக்கிறார்கள். இந்த செலவுகளை ஓரளவு குறைக்கலாமே தவிர தவிர்க்க முடியாது. இவர்களின் இந்த நியாயமான தேவையை மக்களாலும் பூர்த்தி செய்ய முடியாது. தொழில் அதிபர்களிடம் பணம் வாங்குவதும் ஆபத்தில் போய் முடியும் என்ற நிலையில், இதற்கு ஒரே வழி அரசே கட்சிகளுக்கு நிதி உதவி செய்வதுதான். அரசு அந்த கடமையை செய்யாததால்தான் இவர்களில் பலர் கமிஷன் (மற்றவர்கள் பார்வையில் ஊழல்) வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இவர்களே இப்படி தவறு செய்யும் போது, உண்மையிலேயே ஊழலில் ஈடுபடுபவர்களை இவர்களால் தட்டிக் கேட்கவும் முடிவதில்லை.

தற்போது தொழில் அதிபர்களிடம் இருந்து பணம் பெற்று ஒரு நிதியம் உருவாக்கி அதில் சேரும் பணத்தை கட்சிகளுக்கு பிரித்து தரும் நடைமுறையும் இருக்கிறது. இது ஓரளவு பரவாயில்லை என்றாலும், எதற்கு தலையை சுற்றி மூக்கை தொடுவானேன். அவர்கள் என்ன சொந்த பணத்தையா கொடுக்கப் போகிறார்கள். அரசிடம் வரிச்சலுகை பெறுவார்கள் அல்லது இந்த செலவை தங்களின் பொருட்களின் மீது ஏற்றுவார்கள். எப்படியும் இது மக்களின் பணம்தான். அதை அரசே நேரிடையாக கொடுத்துவிடலாமே?

இப்படி நிதி ஒதுக்குவதன் மூலம் நம் நாட்டில் ஊழல் நிச்சயம் நின்றுவிடப் போவதில்லை. ஆனால் பெருமளவு கட்டுப்படுத்தப்படும். அரசியல் கட்சிகளுக்கும் தொழில் அதிபர்களுக்கும் இருக்கும் உறவு முறிக்கப்படும். நேர்மையான அரசியல்வாதிகள் தேர்தல் செலவு என்ற நிர்பந்தத்திலிருந்து விடுபடுவார்கள். நேர்மையான அரசியல்வாதிகளின் பிரச்சினை தீர்ந்தால், நாட்டின் பிரச்சினைகள் தீர்ந்த மாதிரிதான். 

(நமது அரசியல்வாதிகள் ஊழல்வாதிகளா என்ற கேள்விக்கான பதிவுதான் இது. ஆனால் இவர்களின் பொருளாதார கொள்கைகள், வெளியுறவு கொள்கைகள் போன்ற விஷயத்தில் நான் நுழையவில்லை. அது குறித்து பலருக்கு பலவிதமான பார்வைகள் இருக்கும்.


இவ்வளவு ஊழல்கள் வெளிப்பட்டப் பிறகு காங்கிரசின் மேல்மட்டத் தலைவர்கள் ஊழலை ஆதரிப்பவர்கள் இல்லை என்று சொன்னால் உங்களுக்கு சிரிப்புதான் வரும். ஆனால் நான் பெரும்பாலும் லாஜிக் பார்ப்பவன். அந்த வகையில் பார்த்தால் காங்கிரசின் மேல்மட்டத் தலைவர்கள் குறித்த என் கருத்து சரிதான். அது எப்படி என்பதை வேறு ஒரு பதிவில் பார்ப்போம்.)        

0 comments:

Post a Comment