!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Friday, June 24, 2011

காங்கிரசுக்கு ஓய்வு கொடுப்போம்


அரசியலில் தற்போது மிகவும் முட்டாள்தனமான செயல் எதுவென்றால் காங்கிரசுக்கு ஆதரவாக வாதாடுவதுதான். அதுவும் தமிழகத்தில்... கேட்கவே வேண்டாம். எனவே மன்மோகன் சிங் மற்றும் காங்கிரசின்  மேல்மட்ட தலைவர்களுக்கு ஆதரவாக ஒரு பதிவைப் (காங்கிரசின் ஊழல் ஆதரவும்... )  போட ஆரம்பத்தில் எனக்கு தயக்கம் இருந்தது. இந்த பதிவில் சொன்ன கருத்தில் எனக்கு முழு நம்பிக்கை இருந்தாலும், அதை வெளிப்படையாக சொல்லி எதற்கு வாங்கி கட்டிகொள்வானேன் என்று நினைத்தேன். இருந்தாலும் பி ஜே பி யை பிடிக்காதவர்கள் கூட வாஜ்பாய் மீது மரியாதை வைத்திருந்ததை போல், மன்மோகன் சிங் மீது எனக்கிருந்த மரியாதை அப்படி ஒரு பதிவைப் போட தூண்டியது.

ஆனால் மீண்டும் மீண்டும் ஊழல் செய்திகளை படிக்கும்போது ஒரு விதமான சலிப்பு வருகிறது. கூடவே காங்கிரஸ் தலைவர்கள் பற்றிய என்னுடைய கணிப்பு தவறோ என்றும் நினைக்க தோன்றுகிறது. சமீபத்திய ரிலையன்ஸ் நிறுவனம் சம்பந்தப்பட்ட பெட்ரோலிய ஊழல் காங்கிரசுக்கு அடுத்த தலைவலி. இது காங்கிரஸ் அமைச்சர்கள் சம்பந்தப்பட்டது. எனவே கூட்டணி நிர்பந்தம் என்று சாக்கு சொல்லமுடியாது.

இருந்தாலும் இங்கேயும் பல லாஜிக் இடிக்கிறது. இந்தியாவில் எப்படி ஊழல்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறதோ, அதேபோல் பத்திரிகை சுதந்திரமும், அரசின் ஊழலை அம்பலபடுத்த நினைக்கும் தனிமனிதர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. மாநில அளவில் எப்படியோ, ஆனால் தேசிய அளவில் இது கொஞ்சம் அதிகமாக, ஆரோக்கியமாகவே இருக்கிறது. எனவே இப்படி பலர் கண்கொத்தி பாம்பாக அரசியலை கவனித்துக் கொண்டிருக்கையில், புது அரசியல்வாதிகளான ராஜா,கனிமொழி போன்றவர்கள் வேண்டுமானால் அசட்டுத்தனமாகவோ அல்லது துணிச்சலாகவோ ஊழல் செய்யலாம். ஆனால் அரசியலில் பழம் தின்னு கொட்டை காங்கிரஸ் தலைவர்கள் இது போன்ற மெகா ஊழலில் இறங்குவார்களா? சந்தேகம்தான். இனி இந்த ஊழல் குறித்து இரு தரப்பும் மோதிக்கொள்ளும் போது வரும் வாதங்களை வைத்துதான் உண்மையை கண்டுபிடிக்க முடியும்.

உண்மை எதுவாக இருந்தாலும் அடுத்த தேர்தலில் மக்கள் காங்கிரசுக்கு ஓய்வு கொடுப்பதுதான் நல்லது. இடையிலேயே ஆட்சி கவிழ்ந்தால் இன்னும் நல்லது. அடுத்த ஆட்சி காங்கிரஸ் அல்லாத ஒன்றாக இருந்து, அது கூட்டணி நிர்பந்தம் என்று சாக்கு போக்கு சொல்லாமல் ஒரு நல்ல, திறமையான நிர்வாகத்தை கொடுக்க முடிந்தால் அப்போது காங்கிரசின் சாயம் வெளுத்துவிடும். அல்லது அந்த ஆட்சியும்  இதே போன்ற குற்றச்சாட்டுகளில் சிக்கிதவித்தால், அப்போது காங்கிரசின் இன்றைய நிர்பந்தம் மக்களால் புரிந்துகொள்ளப்படும். எனவே அடுத்த அரசு காங்கிரஸ் அல்லாத ஒன்றாக இருப்பது நாட்டுக்கும் நல்லது, காங்கிரசுக்கும் நல்லது.

ஆனால் அப்படி ஒரு நிலையை வரவழைக்கும் அளவுக்கு பி ஜே பியும் பலமாக இல்லை, வேறு அணியும் கண்ணுக்கு தெரியவில்லை. ஒருவேளை தமிழ்நாட்டில் திமுக அதிமுகவிற்கு உதவி செய்ததைப் போல் காங்கிரஸ் பிஜேபிக்கு உதவலாம்.

இந்த ஊழல் செய்திகளால் ஒரே ஒரு விஷயம் மட்டும் விநோதமாக தெரிகிறது. இந்தியாவில் ஊழல்கள் பெருத்துவிட்டது என்று வருத்தப்படுவதா அல்லது அவற்றையெல்லாம் துணிச்சலாக வெளிப்படுத்தி இந்த ஊழல்வாதிகளின்  முகத்திரையை கிழிக்கும் அளவுக்கு பத்திரிக்கைகளும், தனி மனிதர்களும், CAG போன்ற அரசு அமைப்பும் நம் நாட்டில் இருப்பதை நினைத்து பெருமைப்படுவதா?

எது எப்படியோ.. இந்த பிரமாண்ட ஊழல்களும், ஊழலுக்கு எதிரான சிலரின் போராட்டமும் அரசுக்கு கடுமையான நிர்பந்தத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. அடுத்த தேர்தலை சந்திக்கும் முன் காங்கிரஸ் நிச்சயம் (கடுமையான அல்லது மிதமான ஷரத்துக்களைக் கொண்ட)  லோக்பாலை கொண்டுவந்திருக்கும். இல்லையென்றால் தேர்தலில் எதிர்கட்சிகளுக்கு  அது ஒரு வரப்பிரசாதமாக மாறிவிடும். எனவே இந்தியாவின் ஊழல் இன்டெக்ஸ் அதன் உச்சத்தை தொட்டுவிட்டது என்றே நினைப்போம். இனி அதற்கு இறங்குமுகம்தான். அதற்காகவாவது சந்தோஷப்படுவோம். 


சமீபத்திய பரபரப்பு செய்திகளில் ஓன்று, ப. சிதம்பரத்தின் தேர்தல் வெற்றி பற்றியது. ஒரு சிலர் பேசும்போது அவருடைய பாடி லாங்குவேஜை வைத்து அவர் சொல்வது உண்மையா, பொய்யா என்று கணிப்பார்கள். அதேபோல் கடந்த பாராளுமன்ற தேர்தலில் இருந்து பத்திரிக்கைகளில் வந்த செய்திகளின் அடிப்படையில் கணித்தால், சிதம்பரம் ஜெயிக்க வைக்கப்பட்டிருக்கிறார் என்றே தெரிகிறது.

ஆனால், இவராக இந்த வெற்றியை விரும்பினாரா அல்லது தமிழக மேலிடம் அவருக்காக இந்த உதவியை செய்ததா அல்லது மத்தியில் காங்கிரஸ் ஆட்சிதான் என்று தெரிந்த பிறகு காங்கிரஸ் மேலிடம் `சிதம்பரம் டெல்லிக்கு தேவை` என்பதை உணர்த்திய பிறகு இவர்களாக இந்த மோசடியில் இறங்கினார்களா?  இந்த கேள்விகெல்லாம் விடை வராது. ப.சிதம்பரம் கேட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு வந்த போது மறுக்கவில்லை. 

இங்கே எனக்கு ஒரு சிறை அனுபவம் ஞாபகத்துக்கு வருகிறது. சிறையில் ஐந்து வருடத்துக்கும் மேலாக இருப்பவர் ஒருவருடன் லைப்ரரிக்கு போய்கொண்டிருந்தேன். அப்போது எதிரே ஒரு சிறைக்காவலர் வர... கூட வந்தவர் அவருக்கு வணக்கம் வைத்தார். பின்னர் இருவரும் சில நிமிடங்கள் பேசிவிட்டு பிரிய.... என்னுடன் வந்த நண்பர் சொன்னார்: `இவர் ரொம்ப நல்லவர்ன்னே!`

சிறையைபற்றி தெரிந்துகொள்ளும் மூடில் நானும் இருந்ததால் மேற்கொண்டு விசாரித்தேன்.

``இவர் லஞ்சமே வாங்க மாட்டாரா?``

``இல்லன்னே. அவரா கேட்கமாட்டார். நாம விருப்பட்டு கொடுத்தா வாங்கிக்குவார்.`` 

இதுதான் சிறையில் நல்ல காவலருக்கு அடையாளம். மேலும் அவரிடம் பேசியதில் சிறைக் காவலர்களில் வெகு சிலரே கை நீட்டாதவர்கள் என்பதும் தெரிய வந்தது.

மேலே சொன்ன தியரியின்படி ப. சிதம்பரம் நல்ல அரசியல்வாதியாக இருக்கலாம். ஆனால் இது மோசடித்தனம் என்ற வியாதி ஒரு மனிதனை தொற்றினால் காட்டும் ஆரம்பக்கட்ட அறிகுறி.

ப. சிதம்பரத்தின் இந்த செயல் அவருடைய அரசியல் வாழ்க்கையில் ஒரு களங்கமாகவே இருக்கும். அவருடைய இந்த செயல் மோசமான ஒன்றாக இருந்தாலும்,இவரைப் போன்ற முக்கியமான அமைச்சர்களின்  பிரச்சினையையும் பார்ப்போம்.

நல்ல தலைவர்களின் அடையாளம் அவர்களின் குடும்பம் வறுமையில் வாடுவது. இது யதார்த்தம். அதாவது நாட்டைப்பற்றி, நாட்டு மக்களின் நலன்களைபற்றியே  உண்மையான தலைவர்கள் அதிகம் கவலைப்படுவதால், அவர்களால் தங்களின் குடும்பத்தை கவனிக்க முடிவதில்லை.

அதேபோல், ஒருவர் எம் எல் ஏ, எம் பியாக இருக்கும் போது தங்கள் தொகுதியை நன்கு கவனித்தால் பாராட்டலாம். ஆனால் அவர்கள் அமைச்சரான பிறகு, அதுவும் முக்கியமான துறை என்றால், அவர்கள் நாட்டின் ஒட்டுமொத்த நலனைப்  பற்றித்தான் சிந்திப்பார்கள். எனவே தொகுதியின் மீதான அவர்களின் கவனம் குறைந்து விடும்.

படித்த மக்களை பொறுத்தவரையில் இதை புரிந்து கொள்வார்கள். ஆனால் சாதாரண மக்களிடம் இந்த புரிதலை எதிர்பார்க்க முடியுமா? அவர்கள் ஒருவரை தலைவராக ஏற்றுக்கொண்டால் அவரிடம் எல்லா தகுதியையும் எதிர்பார்ப்பார்கள். பின்னர் ஏமாந்து போவார்கள்.எதற்கெடுத்தாலும் அரசியல்வாதிகளை குறை சொல்லும் மக்கள், அவர்களுக்கு இருக்கும் நிர்பந்தங்களை மட்டும் புரிந்து கொள்வதில்லை.     

எனவே அமைச்சர்கள் தேர்தலில் தோல்வியை தழுவும் போது, வாக்கு வித்தியாசம் அதிகமாக இருந்தால் அவர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டியதுதான். ஆனால் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோற்றிருந்து, அவர்கள் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லாமலிருந்து, ஆனால் அவர்கள் சார்ந்த கட்சி வெற்றி பெற்று இவர்களை அமைச்சராக்க விரும்பினால், மேல்சபை மூலம் அவர்களை பயன்படுத்திக் கொள்ளட்டும். ஜனநாயகத்தை கேலிகூத்தாக்குவதை விட இது எவ்வளவோ பரவாயில்லை. 


0 comments:

Post a Comment