!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Friday, November 21, 2025

பீகாரில் தோற்கும் வாரிசு அரசியல் தமிழ்நாட்டில் ஜெயிப்பது எப்படி?



சில காரணங்களை சொல்லலாம். முதல் காரணம், ஸ்டாலின் அரியர்ஸ் வைத்தாவது அரசியல் பரிட்சையில் பாஸாகிவிட்டார் என்பதுதான்.

அதாவது முதல் தலைமுறை அரசியல் தலைவர்கள் அவர்களுடைய 40-50 வயதிலேயே அரசியலின் உச்ச பதவியையே அடைந்துவிடுகிறார்கள். ஆனால் வாரிசுகளுக்கு இது சிரமம். அப்பாக்கள் இடத்தை காலி பண்ணும் வரை இவர்களுக்கு வாய்ப்பும் வராது, அரசியலும் புரியாது, தலைகளே முடிவுகளை எடுக்துக்கொண்டிருப்பார்கள், பாடங்களையும் அவர்களே கற்றுக் கொண்டிருப்பார்கள்.

எனவே கலைஞரின் கடைசி 10 ஆண்டுகள் மட்டும் கட்சி இவருடைய கட்டுப்பாட்டில் வந்திருக்கலாம். அது இவருக்கு அபரண்டிஸ். அதன்பின் நிஜமான தலைவராகி சில ஆண்டுகள் சில முடிவுகள் அதில் பல பாடங்கள் என தடுமாறி கொஞ்சம் கொஞ்சமாக பாஸாகியிருக்கிறார்.

இதன் அர்த்தம் என்னவென்றால் வாரிசுகளும் அரசியலில் ஜெயிக்கலாம், கொஞ்சம் லேட்டாகும் என்பதுதான். அந்த அடிப்படையில் ராகுல் காந்தியும், தேஜேஸ்வர் யாதவும் இன்னும் 20-30 ஆண்டுகளில் ஒருவழியாக வெற்றியை பெறலாம். அதுவரை அவர்கள் கனவு காணட்டும்.

இரண்டாவது காரணம்.

இதை புரிந்துகொள்ள கிரிக்கெட்டைதான் துணைக்கு அழைக்கவேண்டும். இங்கே உலகக்போப்பை வேறு ஆசிய கோப்பை வேறு. உலககோப்பையையில் ஜெயிப்பதற்கு நிச்சயம் திறமை வேண்டும். அங்கே ஆஸ்திரேலியா, சவுத் ஆப்ரிக்கா மற்றும் அந்த நேரத்து திறமையான அணிகள் என பலர் போட்டியில் இருப்பார்கள். ஆசிய கோப்பையில் அந்த தலைவலி இல்லை. இங்கே ஏதோ ஒரு அணிதான் கடுமையாக இருக்கும். எனவே இந்தியாவுக்கு இங்கே வெற்றி சுலபம்.

ஸ்டாலினுக்கு தமிழக அரசியல் ஆசிய கோப்பை மாதிரி. இந்திய அரசியலில் தமிழகம் எப்போதும் எல்லாவிதத்திலும் வித்தியாசமாக இருப்பதால் பிஜேபியின் அரசியல் இங்கே பலிப்பதில்லை. அவர்களும் தமிழ்நாட்டு மக்களிடம் பிளட், யூரின், சுகர் டெஸ்ட் என எல்லாம் எடுத்து பார்த்துவிட்டார்கள். இன்னமும் அவர்களுக்கு எதுவும் புரியவில்லை. அடுத்து டி என் எ டெஸ்ட் எடுப்பார்கள் போலிருக்கிறது. கடைசிவரை அவர்கள் பார்த்துக்கொண்டே இருப்பார்கள். வரும் தேர்தலிலாவது அவர்களுக்கு ஏதாவது பலன் கிடைக்கிறதா என பார்க்கவேண்டும்.

ஆக பிஜேபி இங்கே களத்திலேயே இல்லை. ராகுல் -தேஜேஸ்வர் போன்ற `அனுபவமுள்ள` தலைவர்கள் நாமினேஷன் முடியும்வரை கூட்டணி உண்டா இல்லையா என்று அங்கே பீகாரில் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். தமிழ்நாட்டிலும் எல்லோருக்கும் முதல்வர் கனவு இருக்கிறது. எனவே அதே நிலைதான் இங்கேயும். ஒருவேளை கடைசிகட்ட கூட்டணி இவர்களுக்கு ஏற்பட்டால் அது கை கொடுக்குமா அல்லது காலை வாருமா என்பது இனிமேல்தான் தெரியும். எனவே இந்த சண்டை திமுகவிற்கு சாதகமாக போகலாம்.

கடைசி காரணம்.

தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் தொடர்ந்து ஜெயிப்பதற்கு முக்கியமான காரணம் என நான் கருதுவது இதுதான். இங்கே இவர்கள் அரசியலில் MLM முறையை கடைபிடிக்கிறார்கள். அதுமட்டுமின்றி இன்றைய வியாபாரம் வாடிக்கையாளர் திருப்தி என்ற நிலையிலிருந்து விற்பனையாளர் சந்தோசம் என்று வந்துவிட்டது. இதை திராவிட வியாபாரிகள் விரைவாக உணர்ந்து, அதை அரசியலுக்கும் கொண்டுவந்துவிட்டார்கள்.

MLM என்றால் பலருக்கு தெரியும். புரியாதவர்களுக்கு இதன் விரிவாக்கம், மல்டி லெவல் மொள்ளமாரித்தனம் என்பதுதான். அதாவது இங்கே அரசியல் தலைவர் தனக்கு கீழே 10-20 அமைச்சர்கள் என ஒரு லெக் போட்டுவிடுவார். இவர்கள் தலைவருக்கு கப்பம் கட்டவேண்டும்.

அந்த அமைச்சர் தனக்கு கீழே 5-10 எம் எல் ஏக்களை போட்டுக்கொள்வார். நீ முடிந்ததை சுருட்டு என் அவருக்கு அனுமதி அளிப்பார். அல்லது அவர் தன்னுடைய ஆதரவாளராக இருந்தால்தான் தனக்கு மந்திரி பதவி என்பதால் அவருக்கும் இவர் சுருட்டுவதில் பங்கு கொடுப்பார். இது மாவட்ட செயலாளர் மற்றும் பிற தலைவர்கள் என போகும்.

அவர்களும் அவர்களுக்கு கீழே வட்ட செயலாளர் வண்டு முருகன் என பல மட்டங்களில் லெக் போடுவார்கள். ஆக மொத்தத்தில் ஊழலில் ஒரு பிரமிட் சிஸ்டத்தை கொண்டுவந்து எல்லாமட்டத்திலும் ஊழல் என மாற்றிவிட்டார்கள்.

எனவே கடைநிலை கட்சிக்காரர்கள் வரை இங்கே சம்பாதிக்கிறார்கள். சம்பாதிக்க வேண்டும் என்ற நிர்பந்தம், இவை ஊழல் என்பதால் வழக்கை சந்திக்க வேண்டும் என்ற பயம், இந்த நிலையை தவிர்ப்பதற்கு அவர்கள் சார்ந்த கட்சி அதிகாரத்தில் இருந்தாகவேண்டும் என்ற நிர்பந்தம் காரணமாக அவர்கள் ஓடுகிறார்கள். தலைவர் தலைவராக இருக்கிறாரா அல்லது தத்தியாக இருக்கிறாரா என்பதுபற்றி அவர்களுக்கு கவலை இல்லை. ஓடிக்கொண்டே இருக்கவேண்டும் என்ற அடிப்படையில் ஓடுகிறாரார்கள்.

சுருக்கமாக சொன்னால் திருப்பதியில் பெருமாளை தரிசிப்பது போலத்தான் இது. அங்கே நீங்கள் வரிசையில் நின்றால் போதும், பின்னால் இருப்பவன் அவனுக்கு பின்னால் இருப்பவன் என எல்லோரும் நம்மை தள்ளியே பெருமாளிடம் கொண்டுபோய் சேர்த்துவிடுவார்கள்.

அதுபோல் அமைச்சர்கள், எம் எல் ஏக்கள், கட்சிக்காரர்கள் என எல்லோரையும் இந்த திராவிட கட்சிகள் பணக்காரர்களாக மாற்றிவிட்டதால், அவர்கள் தேவைக்காக ஓடுகிறார்கள், தள்ளுகிறார்கள். அந்த இயற்கையின் நியதியில் இங்கே திராவிட தலைவர்கள் ஜெயிக்கிறார்கள். அதை அவர்கள் தங்கள் திறமையின் அடையாளமாக காட்டிக் கொள்கிறார்கள். மொத்தத்தில் தங்களுக்கு வசதியான ஒரு அயோக்கியத்தனமான நடைமுறையை இந்த தலைவர்கள் உருவாக்கிவிட்டார்கள் என்பதுதான் உண்மை.

இதைத்தான் இன்றைய வியாபார முறை செய்கிறது. ஒருகாலத்தில் ஒரு பொருளை விற்க நுகர்வோரை திருப்திப்படுத்தவேண்டியிருந்தது. இப்போது வியாபாரிகளுக்கு அதிக கமிஷன் கொடுத்தால் போதும் அவர்கள் `இதுபோன்ற சரக்கு உங்களுக்கு எங்கேயும் கிடைக்காது` என்று சொல்லி அந்த பொருளை வெற்றிகரமாக சந்தைப்படுத்திவிடுவார்கள்.

இப்போதெல்லாம் மருந்து பொருட்களில் எம் ஆர் பி க்கும் விற்கும் விலைக்கு சம்பந்தமே இருக்காது. இது அந்த மார்க்கெட் உத்தியின் வெளிப்பாடுதான்.

இந்த அயோக்கியத்தனத்தை முதலில் கலைஞர்தான் ஆரம்பித்து வைத்தார். இவரை தூக்கிப்பிடித்த வியாபாரிகளை, அதாவது அமைச்சர்களை நிறைய சம்பாதிக்க (வருவாய் பகிர்வு முறையில்தான்) அனுமதித்தார். அடடா இவர் நமக்கு நிறைய சம்பாதிக்க வாய்ப்பு தர்றாரே என அவர்கள் இவரை போல் ஒரு தலைவர் உண்டா என புகழ்பாட ஆரமபித்தார்கள். அந்த நடைமுறையை அதன்பின் வந்த எல்லா திராவிட தலைவர்களும் தொடர்கிறார்கள்.

ஆனால் இயற்கை பல வியாதிகளை அவ்வப்போது கொடுக்கும், அதேநேரம் கூடவே விரைவில் அதற்கான மருந்தையும் கொடுக்கும். காத்திருப்போம்.

0 comments:

Post a Comment