!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Tuesday, March 26, 2013

இலங்கை: இங்கேயும், அங்கேயும்


தமிழில் பதிவுகள் எழுத ஆரம்பித்த பிறகு ஆங்கில இணையதளத்தில் கருத்து சொல்வதை நிறுத்திக் கொண்டேன்.  நமக்கு சரிவராத ஒரு மொழியில் எதற்கு  கஷ்டப்பட்டு கருத்து சொல்லணும் என்பதால் அதில் ஆர்வம் குறைந்தது. ஆனால் இலங்கை பிரச்சினை குறித்த கருத்துக்களை வட இந்திய ஊடகங்களில் படித்தபோது அப்படி இருக்க முடியவில்லை.

பல  வட இந்தியர்கள், `தமிழர்களுக்கு அங்கே மரியாதை இல்லையென்றால் விசாவை முடித்துக் கொண்டு திரும்ப வேண்டியதுதானே` என்று கேட்கிறார்கள். அந்த அளவுக்கு தமிழர்களின் பிரச்சினைகளை அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

நம் அரசியல்வாதிகள்  தமிழ்நாட்டில்  வீராவேசமாக முழக்கமிடுவதொடு சரி. இந்தியாவின் ஆதரவு வேண்டுமென்றால் பிற மாநில அரசியல்வாதிகளும், மக்களும் ஈழப் பிரச்சினையை புரிந்து கொண்டு ஆதரவு கொடுத்தால்தான் சாத்தியப்படும் என்பதை உணர்ந்து, அவர்களுக்கு இதை புரியவைத்து, அவர்களின் ஆதரவை பெற முயற்சிக்கவில்லை.

இங்கே இன்னொரு முரண்பாடும் இருக்கிறது. ஒரு விவாதத்தில் விடுதலை சிறுத்தைகளின் ரவிகுமார் சொன்னார். மணிப்பூரின் ஐரோம் ஷர்மிளாவின்  போராட்டமாக இருக்கட்டும் அல்லது பக்கத்தில் நடக்கும் தெலுங்கானா போராட்டமாக இருக்கட்டும், நாம் அதில் ஈடுபாடு காட்டுவதில்லை. ஆனால் நமக்கு ஒரு பிரச்சினை என்றால் எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும் என நினைக்கிறோம். இந்த சிந்தனையிலிருந்தும் நாம் விடுபட வேண்டும்.         

இதைவிட கொடுமை வேறு  சில வாதங்கள். படு அபத்தமானவை அவை. சாராசரி அறிவு உள்ளவனுக்கே இதில் உள்ள வேறுபாடுகள் புரியும். இந்த முட்டாள்த்தனமான குற்றச்சாட்டுக்கு  அங்கே நான் பதிலளித்தாலும், அதில் சில இங்கே...

இங்கே தமிழகத்தில் (ஒரு கண்ணில் வெண்ணெய் ...)

கேரள மீனவர்களுக்காக இந்திய அரசு துடிக்கிறதாம்.அந்த உணர்வு தமிழகம் விஷயத்தில் ஏன் இல்லை என்று புலம்பல்.

தமிழில் ஒரு வசனம் உண்டு. ஒரு பிச்சைக்காரன் சொன்னானாம். `எப்பவும் போடாத மகராசி இன்னிக்கு பிச்சை போட்டா, எப்பவும் போடற தே.......... இன்னிக்கி போடல` என்று. 

அபூர்வமாக சில விஷயங்கள் நடக்கும் போது அதற்கு மரியாதை கிடைக்கும். அதுதான் கேரள மீனவர்கள் விஷயத்தில் நடந்திருகிறது.

அங்கே வட இந்தியாவில் (ஒரு கண்ணில் வெண்ணெய்...)

காஷ்மீரில் பண்டிட்கள் உள் நாட்டிலேயே அகதியாக்கப்பட்டார்கள்; பாகிஸ்தானில் இந்துக்கள் சதவிகிதம் காணாமல் போய்விட்டது; வங்காள தேசத்தில் அந்த அளவு இல்லை என்றாலும் அங்கும் தலைவலிதான்; தீவிரவாதத்தினால் ஆயிரக்கணக்கில் மக்கள் பலியாகி இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்காக யாரும் குரல் கொடுக்கவில்லை. பாகிஸ்தானுடன் போருக்கு போகவில்லை. - இது வட இந்தியர்களின் புலம்பல். 

(உண்மையில் இந்தியாவில் எந்த மாநில மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.)

நிஜத்தில் மதம் மட்டுமே மனிதர்களை இணைப்பதில்லை. அப்படி இருந்தால் கிறித்துவ நாடுகளான அமெரிக்கா-ரஷ்யா, இஸ்லாமிய நாடான ஈரான் - ஈராக், புத்த நாடான ஜப்பான் - சீனா போன்றவை எதிரிகளாக இருந்திருக்காது.

ஆனால் மொழி அப்படி ஒரு இணைப்பை உருவாக்குகிறது. எனவே இலங்கையில் இருப்பவர்கள் இந்துக்கள் என்பதைவிட தமிழ் எனும் மொழியால் ஓன்றுபட்டவர்கள் எனும்போது, அவர்களுக்காக தமிழகம் துடிக்கிறது.

அதுபோன்ற ஒரு மொழிரீதியான உணர்வு இல்லாததால், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாடுகளில் மைனாரிட்டிகள் தாக்கப்பட்டபோது அது நமக்கு வராமல் போயிருக்கலாம். அப்படியே வந்தாலும் அது அந்த எல்லையில் இருப்பவர்களுக்குதானே வரவேண்டும்? 

இங்கே (தனித் தமிழ்நாடு )

தமிழ்நாடு தனியா போவணுமாம். ஒரு சில தமிழர்களுக்கு அப்படி ஒரு ஆசை. 

சமீபத்தில் துப்பாக்கி படம் பார்த்தேன். அந்த படம் ஒரு கேள்வியை எழுப்பிவிட்டது இந்தியாவை பாகிஸ்தானிடமிருந்தும், தீவிரவாதிகளிடமிருந்தும் காப்பாற்றும் காண்டிராக்ட்டை தமிழ் ஹீரோக்கள்தான் எடுத்திருக்கிறார்களா? கிட்டத்தட்ட எல்லா ஹீரோக்களும் அப்படி ஒரு படத்தில் நடிப்பதை லட்சியமாக வைத்திருக்கிறார்களே? 

இத்தனைக்கும் பாகிஸ்தானாலோ அல்லது தீவிரவாதத்தாலோ தமிழகம் அதிகம் பாதிக்கப்படவில்லை. இருந்தாலும் இங்கே தேசிய உணர்வு அந்த அளவுக்கு இருப்பதால், இப்படிப்பட்ட படங்கள் வருகின்றன, வெற்றி பெறுகின்றன. எனவே இந்த கோரிக்கையும் எதார்த்தத்தை பிரிதிபலிக்காத ஓன்று.

அங்கே ( பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக தீர்மானம் போட்டால் விமர்சிக்கிறோம். அப்படி இருக்கையில் இலங்கைக்கு எதிராக நாம் ஏன்...? )

ஜனநாயகம் என்றால் என்ன என்றே தெரியாத நாடு இந்தியாவை விமர்சிப்பதை கேள்வி கேட்கலாம். அனால் இந்தியா ஜனநாயக நாடு. அது இன்னொரு நாட்டை விமர்சிப்பது நியாயமான ஒன்றே.

பொதுவாக மனித உரிமை மீறல் புகார்கள்  எல்லா நாடுகளின் மீதும் உண்டு. அதன் தீவிரம் இரண்டு விதத்தில்தான்  ஊர்ஜிதமாகும். ஓன்று, மக்கள் அகதிகளாக வெளியேறுவார்கள். இரண்டு, மக்கள் தொகையில் அவர்களின் சதவிகிதம் குறையும்.

இந்தியாவில் அப்படி எதுவும் நடக்கவில்லை. எனவே இந்தியாவில் இருக்கும் மனித உரிமை மீறல்கள் `குறைகள்` வகையை சேர்ந்தது. இலங்கையில் நடந்தது படுகொலைகள். இதை கண்டிப்பது இந்தியாவின் கடமை.

இது எப்படி? 

இந்தியாவில் பல மாநிலங்கள் மத்திய அமைப்பின் மீது கோபமாக இருப்பது போல் தெரிகிறது. இருந்தாலும் இந்தியா ஏன் இன்னும் பிளவுபடவில்லை? ஒரு வெளிநாட்டவர் ஆச்சர்யமாக கேட்கிறார்.

இதற்கு இரண்டு காரணத்தை சொல்லலாம். ஓன்று,  மக்கள் அன்றைய ஆட்சியாளர்களை தோற்கடித்து தங்கள் கோபத்தை தனித்துக் கொள்கிறார்கள். இது ஜனநாயகத்தின் சிறப்பம்சம்.

இரண்டாவது, திருமணஞ்சேரி தியரி. ஒரு அம்மாவுக்கு தன் பெண்ணுக்கு கல்யாணம் ஆகவில்லையே என்ற கவலை. இந்த கோடானு கோடி மக்களில் கடவுள் இவரை மட்டுமே தேர்தெடுத்து கஷ்டபடுத்துவதாக அவருக்கு நினைப்பு. இவர் தன் பெண்ணுடன் திருமணஞ்சேரி போனார். அங்கே  கூட்டத்தை பார்த்தவுடன்  இவருக்கு கவலை போய்விட்டது.

அங்கே போய் வந்தவர் மன பாரம் குறைந்தவராக கலகலப்பாக பேசினார். நம்மைப் போலவே பலரும் கஷ்டபட்டால் அதில் ஒரு மன ஆறுதல் வரும். இந்தியாவின் நிலைமை அப்படித்தான் இருக்கிறது. எல்லா மாநிலங்களும் ஏதாவது ஒரு பிரச்சினையில் சிக்கித் தவிப்பதால், நமக்கு மத்திய அமைப்பின் மீது வெறுப்பு வரவில்லை. இதுதான் கெட்ட செய்தியிலும் ஒரு நல்ல செய்தி.

முஸ்லிம் அடுத்து தமிழன் 

காவிரி, முல்லை பெரியாறு, கூடங்குளம் போன்ற பிரச்சினைகளுக்காகவும் அதை தொடர்ந்து தற்போது இலங்கைக்கு எதிராகவும் தமிழன் தெருவில் இறங்கி போராடுகிறான். இந்த நிகழ்வுகளை தொடர்ச்சியாக பார்த்துவிட்டு, `இந்த உலகத்தில் முஸ்லிம்களும், தமிழர்களும்தான் தாங்கள் வஞ்சிக்கப்டுவதாக எப்போதும் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்` என்று ஒரு வட இந்தியர் சொல்கிறார். காட்சிகளை மேம்போக்காக பார்க்கும் சராசரி மனிதன் இதை நம்பக் கூடும்.

இப்படி கருத்து வந்த ஒரு பதிவில் அந்த நபரின் தவறான புரிதலை மறுத்து நான் பின்னோட்டம் இட்டேன். 

All Indian neighbors are against India. Does that mean India is arrogant to its neighbors. Just like, Tamil took to the street doesn't mean they take India for granted. i.e. what look likes may not be true.

I agree with you that some politician goes beyond their limit for political gains, though Tamil nadu has justifiable case in these issue.

But i completely disagree with you that Tamils are anti nationals. in fact if you watch tamil film, almost all tamil actor act as a super hero to save india from pakistan. not to mention that films turns out super duper hit. so be assured we are as much indian as you are.

இனி அவ்வப்போது அங்கேயும் கொஞ்சம் PRO வேலை பார்ப்பதாக உத்தேசம்.

4 comments:

வவ்வால் said...

சிவானந்தம்,

ஆங்கில தளங்களிலும் கருத்து கந்தசாமியாகிட்டிங்களா :-))

தமிழை விட ஆங்கிலத்தில் ரொம்ப மேம்போக்காக பேசுறாங்க,சீக்கிரம் எரிச்சல் ஆகிடும்.

தமிழிலும் யாருக்கும் பொறுமையாக உரைய்டாவே,கேட்கவோ விருப்பமில்லை,ஒருவர் சொன்னதுக்கு மறுப்பு சொல்லிவிட்டால் விரோதியாகிவிடுவோம் :-))

// அப்படியே வந்தாலும் அது அந்த எல்லையில் இருப்பவர்களுக்குதானே வரவேண்டும்? //

இதே நிலையில் தான் தமிழர்ப்பிரச்சினையை வட இந்தியர்கள் பார்க்கிரார்கள்.

இருப்பதிலே மகா தத்தியான எம்.பிக்கள் தமிழக எம்பிக்கள் தான்.

வட இந்திய அரசியல்வாதிகள் கூட தமிழக பிரச்சினை சார்ந்து நாடாளுமன்றத்தில் பேசுவதுண்டு,ஆனால் தமிழக எம்பிக்கள் பிற மாநில பிரச்சினை குறித்து பேசுவதேயில்லை, அப்புறம் எப்படி நமக்காக அவங்க பேசுவாங்க.

நம்ம எம்.பிக்கள் நம்ம ஊரு பிரச்சினையே பேச மாட்டாங்க,எங்கே அடுத்த ஊரு பிரச்சினையைப்பேச :-))

சும்மா தகவலுக்கா,

கூடங்குளம் பிரச்சினைப்பற்றி நாடாளுமன்றத்தில் அதிகம் கேள்விக்கேட்டது யாருனு பார்லிமெண்ட் தளத்தில் தேடினேன்,

பிஜேபி,கம்யூனிஸ்ட், சமாஜ்வாடிப்பார்ட்டிலாம் கேள்விக்கேட்டிருக்கு, தமிழ்நாட்டில் இருந்து போன எந்த மூதேவியும் வாயே திறக்கலை :-))

ஜோதிஜி said...

சிவானந்தம்

அசாத்தியமான பொறுமைசாலிங்றது மட்டும் எனக்கு நன்றாக புரிகின்றது.

இருப்பதிலே மகா தத்தியான எம்.பிக்கள் தமிழக எம்பிக்கள் தான்.


தப்பு வவ்வு.

தரமான தகுதியான, தனக்கு என்ன தேவை என்பதை உணர்ந்த முடிந்த வரைக்கும் குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் தன் சொந்த விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள என்கிற வகையில் நம்ம எம்பி கள் இருப்பதால் மற்றவர்கள் போல விவாதங்களில் எம்பி எம்பி குதிப்பதில்லை.

சிவானந்தம் said...

வாங்க வவ்வால்,

//ஆங்கில தளங்களிலும் கருத்து கந்தசாமியாகிட்டிங்களா //

அப்படித்தான் முதலில் ஆரம்பித்தது.தற்போது மீண்டும் அங்கே பயணம்.

//தமிழை விட ஆங்கிலத்தில் ரொம்ப மேம்போக்காக பேசுறாங்க,சீக்கிரம் எரிச்சல் ஆகிடும்.//

நிஜம். அதிலும் வார்த்தைகளும் ரொம்ப மோசம். ஆங்கிலம் தெரிந்தால் மட்டும் ஒருவன் புத்திசாலியாகவோ, நாகரீகமானவனாகவோ மாறிவிடமாட்டான் என்பதை இணையதளங்களில் வாசகர் கருத்துக்களை படித்தால் புரிந்து கொள்ளலாம்.

//வட இந்திய அரசியல்வாதிகள் கூட தமிழக பிரச்சினை சார்ந்து நாடாளுமன்றத்தில் பேசுவதுண்டு, ஆனால் தமிழக எம்பிக்கள் பிற மாநில பிரச்சினை குறித்து பேசுவதேயில்லை, அப்புறம் எப்படி நமக்காக அவங்க பேசுவாங்க.//

நம் ஆட்களுக்கு ஆங்கிலமும் சரியாக வருவதில்லை, இந்தியும் தெரியாது. இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். இருந்தாலும் இனியாவது புரிந்து கொண்டு மற்றவர்களுக்க்காகவும் குரல் கொடுக்க வேண்டும்.

வாங்க ஜோதிஜி,

//அசாத்தியமான பொறுமைசாலிங்றது மட்டும் எனக்கு நன்றாக புரிகின்றது.//

இனி இழப்பதற்கு எதுவும் இல்லையென்றால் அந்த பொறுமை தானாக வந்துவிடும்.

//தரமான தகுதியான, தனக்கு என்ன தேவை என்பதை உணர்ந்த முடிந்த வரைக்கும் குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் தன் சொந்த விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள என்கிற வகையில் நம்ம எம்பி கள் இருப்பதால் மற்றவர்கள் போல விவாதங்களில் எம்பி எம்பி குதிப்பதில்லை.//

அப்படியே வழிமொழிகிறேன்.

அதே சமயம், எந்த ஒரு துறையிலும் ஆரம்பத்தில் மோசடிப் பேர்வழிகள் ஜெயிக்க பின்னர் அது சுத்திகரிக்கப்பட்டு நேர்மையாளர்கள் வெற்றி பெறுவார்கள். இது எதார்த்தம். அரசியலில் அந்த நிலைமை வர நாம் இன்னும் பல காலம் காத்திருக்க வேண்டும் போலிருக்கிறது.

வவ்வால் said...

ஜோதிஜி,

என்னோட பொறுமையா பேசுவதை வைத்து தானே சிவானந்தம் மகா பொறுமைசாலினு கண்டுப்பிடிச்சீங்க ;-))

//தனக்கு என்ன தேவை என்பதை உணர்ந்த முடிந்த வரைக்கும் குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் தன் சொந்த விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள என்கிற வகையில் நம்ம எம்பி கள் இருப்பதால் //

தனக்கு,சொந்த விருப்பங்கள் என சொல்வதெல்லாம் பொது சேவையா?

நான் தத்திகள் என சொன்னது பொதுமக்கள்/பொது சேவை சார்ந்து செயல்படாத்தன்மையை வைத்தே,மற்றபடி தீயா வேலைசெஞ்சு சொந்த வேலையை முடிச்சுப்பாங்க :-))
--------

சிவானந்தம் ,

ஆங்கில தளங்களிலும் கலக்குங்க, எங்கேயாவது பஞ்சாயத்து ஆச்சுனா சொல்லுங்க ,நானும் வந்து கும்மிட்டு போறேன் :-))


//நம் ஆட்களுக்கு ஆங்கிலமும் சரியாக வருவதில்லை, இந்தியும் தெரியாது. இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். இருந்தாலும் இனியாவது புரிந்து கொண்டு மற்றவர்களுக்க்காகவும் குரல் கொடுக்க வேண்டும்.
//

நீங்க சொல்றாப்போல மொழிப்பிரச்சினை இருக்கத்தான் செய்யுது,அதுக்குனு ஜீவாதாரமான பிரச்சினைகளை கூட பேசாமல் போண்டா சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்களே :-))

இருப்பதிலேயே மிக மலிவாக,தரமான உணவு கிடைப்பது பார்லிமெண்ட் கேண்டீனில் தானாம், நம்ம ஆளுங்க பெரும்பாலும் அங்கே தான் வாசம் செய்கிறார்கலாம் :-))

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் அனைத்து அறைகளும் வருடம் 365 நாளும் புக்கிங்க்லேயே இருக்கும், யாரு போய் தங்குறாங்க, எல்லாம் எம்பிக்கள், உயர் அதிகாரிகள் பெயரில் பதிவு செய்து ,தனியா வாடகைக்கு விடுறாங்க :-))

அரசு வாடகை வெறும் 500 ரூபா, டபுள் பெட் ஏசி ரூமுக்கு. அந்த வாடகையில் டெல்லியில் தங்க சாதா ரூமே கிடைக்காது.ஆளைப்பொறுத்து 2000-3000 வாங்கிட்டு பிளாக்கில் கேட்பவர்களுக்கு கொடுக்கிறார்கள்.

அப்போ வெறும் 30 ரூவாக்கு ஃபுல் மீல்ஸ் வேற கிடைக்கும்,முன்னாடியே புக் செய்திடனும்.

ஊழல்னா எது எதுல செய்யணும்னு விவஸ்தையே இல்லாம போயிடுச்சு.

ஆனால் மற்ற மாநில இல்லங்களிலும் பொது மக்கள் கேட்டால் எம்பி பரிந்துரையின் படி அறை கொடுப்பார்கள்,ஆனால் கள்ள மார்க்கெட்டில் இல்லை.

Post a Comment