!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Tuesday, June 23, 2026

பேசுபவன்தான் அறிவாளி?

தேர்தல் தோல்விக்கு பின் திமுக மற்றும் ஊடகவியலாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. அரசியலில் விமர்சனம் தேவைதான். ஆனால், அதை எங்கே செய்ய வேண்டும் என்ற ஒரு அடிப்படை அறிவு வேண்டாமா? இப்போதைக்கு அவர்களிடம் அதை எதிர்பார்க்க முடியாது; எப்போது வரும் என்றும் தெரியாது.

முதல்வர் விஜய் பேசமாட்டேன் என்று அடம் பிடிக்கிறாராம்! அவருக்கு எதுவுமே தெரியவில்லையாம்! ஆனால், அவருக்கு ஜெயிக்கத் தெரிந்திருக்கிறது—சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி. அவர் ஒரு வெற்றியாளர்; அது போதாதா?

தற்போது பேசுபவன்தான் அறிவாளி என்ற பிம்பம் மிக ஆழமாக மக்களிடம் பதிந்துவிட்டது. ஒரு காலத்தில் அவசியமாக இருக்கும் ஒரு தொழில்நுட்பம் கால ஓட்டத்தில் காணாமல் போய்விடும் என்ற உண்மை தெரியாமல் பலர் இந்த பேக்கேஜை இன்னமும் சுமந்துகொண்டிருக்கிறார்கள். இதற்கு வரலாறுதான் காரணம்.
அது ஒரு காலம். மின்சாரம் இல்லாத, ஒலிபெருக்கிகள் இல்லாத, மக்களுக்குப் படிப்பறிவும் இல்லாத, அச்சு ஊடகங்களும் இல்லாத காலம். அங்கே ஒரு தலைவன் தேவைப்படுகிறான். மக்களுக்கு நல்ல விஷயங்களைச் சொல்ல, அவர்களுக்கு அறிவைப் புகட்ட சத்தம் போட்டும், சுவாரசியமாகவும் பேச வேண்டிய அவசியம். எனவே, அப்படிப் பேசியவர்கள் ஜெயித்தார்கள். அதாவது, பழைய பெரியார், அண்ணா காலத்தில்.

இப்போது காலம் மாறிவிட்டது. தொலைக்காட்சி, திரைப்படம், கைபேசி என யுகமே மாறிவிட்டது. மூச்சு விட்டாலே கேட்கும் அளவுக்கு சட்டையில் மாட்டும் மைக் வந்துவிட்டது. முக்கியமாகக் கல்வியறிவும் மக்களுக்குக் கிடைத்து, இணையமும் தகவலை வீட்டுக்குள்ளேயே கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டது. எனவே, இப்போது அறிவாளிகள் மேடையில் இல்லை; அவர்கள் மேடைக்குக் கீழே அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் தேடும் தகவலை வீட்டிலிருந்தே அவர்களால் பெற முடியும். இருந்தும் பலர் மேடைப் பேச்சைக் கேட்க வருவதன் காரணம், அவர்களுக்குப் பொழுதுபோகவில்லை என்பதுதான். அதுமட்டுமின்றி, அவர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஒரு ‘அவுட்டிங்’, ‘கெட் டு கெதர்’ என ஜாலியாக எடுத்துக்கொள்கிறார்கள்.

மேடையில் பேசுபவர்களின் பேச்சை ரசித்துப் பொழுதுபோக்கிவிட்டு, வாக்குகளைத் தங்களுக்குப் பிடித்தமானவர்களுக்குப் போட்டுவிடுகிறார்கள். இந்த உண்மையை அறியாத மனிதர்கள்தான் இப்போது தங்களைத் தலைவர்கள் என நினைத்துக்கொண்டு இன்னமும் முட்டாளாகவே இருக்கிறார்கள். இதில் முதலிடத்தில் இருப்பவர் நம்ம சின்ராசு சீமான்.

அதே சமயம், பேசுபவன் ஜெயித்தவனாக இருந்தால்தான் அது வெற்றிக்கான வழியாக மாறும். ஆனால், இன்றைய அரசியலில் பேசுபவர்கள் தோற்கிறார்கள்; அதுவும் அதிகம் பேசுபவர்கள் டெபாசிட் இழக்கிறார்கள் என்னும்போது, இனி ‘பேசுங்கள் CM சார்’ கோஷமெல்லாம் எடுபடாது.

கிரிக்கெட்டில், முதலில் தோற்ற அணியின் கேப்டனைத்தான் பேட்டி எடுப்பார்கள். அங்கே வெற்றியாளனின் வார்த்தைகள்தான் இறுதியில் வரும். அங்கே பேச வேண்டிய அவசியமில்லை, கப்பைத் தூக்கிக் காட்டினால் போதும். "நாங்கள் பேசமாட்டோம்; ஆனால் ஜெயிப்போம்" என்று பேசாமல் சொல்கிறார்கள் என்று அர்த்தம்.

காலம் மாறியும் அது தெரியாத மனிதர்களாகச் சிலர் இருக்கிறார்கள். கால மாற்றத்தை விரைவாகப் புரிந்துகொண்டவர்கள் சாதிக்கிறார்கள். இதுதான் நிதர்சனம்.

இது பொதுவான நீதி. இருந்தாலும் முதல்வர் கொஞ்சமாவது பேசவேண்டும். எழுதி வைத்தும் படிக்கலாம் தப்பில்லை. ஆனால் புஷ்பா சைகையெல்லாம் சட்டசபைக்கு வேண்டாம். ஸ்டாலின் அதை வெளியில் செய்தார். அதற்கான தண்டனை அவருக்கு கிடைத்துவிட்டது. நீங்களும் அதேபாதையில் போனால் காலம் உங்களுக்கும் அதே முடிவைதான் கொடுக்கும். அகங்காரம் எல்லோருக்கும் ஆபத்து... ஜாக்கிரதை.

0 comments:

Post a Comment