கடலூருக்கு வந்த சோதனை கொடுமைதான். சுனாமி தாக்கிய அன்று, காலை 9 மணிக்கு கூத்தப்பாக்கத்திலிருந்து வண்டியில் கடைக்கு வந்து கொண்டிருந்தேன். சினிமாவில் பார்ப்பதைப் போல் மக்கள் கூட்டமாக எதிர் திசையில் ஓடிக் கொண்டிருந்தார்கள். அந்த காட்சியை கண்ட எல்லோருக்கும் திரும்பி ஓட வேண்டும் என்றுதான் தோன்றும். எனவே நானும் திரும்பி விட்டேன். இரண்டாவது முறை கடைக்கு அருகில் வரை வந்துவிட்டேன். அப்போது பல தெரிந்த முகங்களும் `திரும்பி போங்க` என்று கத்தி கொண்டே ஓட, இந்த முறையும் ஓட்டம்.
அவர்கள் ஓடிய வேகத்தை பார்த்தால் கிட்டத்தட்ட கடலூர் பஸ் ஸ்டாண்டை அலை தொட்டுவிட்டதை போன்ற தோற்றம். அந்த நேரம் பார்த்து கடலூர் புதுப்பாளையத்துக்கு போன்கள் வேலை செய்யாததால், சந்தேகம் மேலும் வலுத்தது. சந்தேகமும் வதந்திகளும் மக்களை எப்படியெல்லாம் பயமுறுத்தும் என்பதை நேரடியாக கண்ட சம்பவம் அது. இந்த முறை `தானே` புயல் கடலூரின் அடிப்படை கட்டமைப்பை பெருமளவு சீரழித்திருகிறது.
