!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Monday, December 27, 2010

சிறை அனுபவம்: இலங்கை தமிழர்களும், போதைப்பொருள் கடத்தலும்...

சிறையில் பல விஷயங்களை கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் இது கொஞ்சம் ஓவர் ரகம். அரசியலில் 2G ஸ்பெக்ட்ரம் ஊழலின் அளவு  எப்படி உங்களை அதிர்ச்சி அடைய வைக்கிறதோ, அதே போல் இதுவும் உங்களை திகைக்க வைக்கும் ரகம் .

இந்த விஷயத்தை நான் கேள்விப்பட்டது சிறையிலிருந்து விடுதலை ஆவதற்கு சில நாட்கள் முன்தான். தாம்பரம் கோர்ட் வாசலில் மதிய
உணவு முடிந்து நீதிபதி வருவதற்காக நாங்கள் (கைதிகள்) காத்திருந்தோம். அந்த இடைவேளையில் எங்களுடன் வந்திருந்த ஒருவரிடம் பேசிகொண்டிருந்தேன். அந்த நபருக்கும், சிறையில் இன்னொரு நபருக்கும் அடித்துக்கொள்ளும் அளவுக்கு  சண்டை என்று கேள்விப்பட்டிருந்தேன். அது என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் நான் யதார்த்தமாக அவரிடம் விளக்கம் கேட்க, அதற்கு அவர் பதார்த்தமாக சொன்ன பதிலை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அவர் சொன்ன பதிலை கேட்டு முதலில் நம்பாமல் திகைத்துப்போன நான், சிறைக்கு திரும்பிய உடன் இது சம்பந்தமாக பலரிடம் விசாரித்து,  அவர் சொன்னது உண்மைதான் என ஊர்ஜிதம் செய்து கொண்டேன்.

சிறையில் போதைபொருள் கடத்தல் வழக்கில் இரண்டு பிரிவினர் இருகின்றனர் (பெரும்பாலும் இலங்கை தமிழர்கள்). ஒரு பிரிவினர் நாம் என்ன செய்கிறோம் என்று தெரிந்தே செய்தவர்கள். இதில் முதலீடு செய்து பணம் சம்பாதித்தவர்கள். முதலாளிகள்.  இன்னொரு பிரிவினர் `கேரியர்` எனப்படும் ஏழைகள்.  வறுமை அல்லது அறியாமை காரணமாக வந்து மாட்டிக்கொண்டவர்கள். என் கதையை கேட்டு பலர் என் மீது பரிதாபப்பட, சிறையில் நான் மிகவும் பரிதாபப்பட்டது இவர்களுக்காகதான்.

இலங்கை தமிழர்கள் பலர் இந்தியாவில் அகதிகளாக இருப்பது உங்களுக்கு தெரியும். ஏழை நாடான இந்தியா இவர்களுக்கு பெரிதாக என்ன பொருளாதார  உதவி செய்திட முடியும். அத்துடன் புலிகள் மீதான அச்சம் காரணமாக அரசு, இலங்கை தமிழர்களுக்கு பல தடைகளை உருவாக்கியிருக்க, இந்தியாவில் ஏழையாக வாழ்வது கூட அவர்களுக்கு சிரமம்தான். மேலைநாடுகளில் அகதி என்ற அங்கீகாரத்தை பெற்றுவிட்டால், அவர்கள் கொடுக்கும் உதவித் தொகையே  இவர்களுக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கையை தரும் என்பதால், அங்கே போய் செட்டிலாகவே  விரும்புகின்றனர். எனவே, இந்தியாவில் இருந்து கள்ளத்தனமாக வெளிநாடுகளுக்கு போக ஆகும் செலவை ஈடுகட்ட வந்து மாட்டிக்கொண்டவர்கள் சிலர்.

சொந்த நாட்டிலும் நிம்மதி இல்லாமல், வந்து சேர்ந்த நாட்டிலும் அங்கீகாரம் இல்லாமல் ஒருவிதமான மன உளைச்சலில், எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்ற மனநிலையில் (கிட்டத்தட்ட என் பிரச்சினைதான்) இருந்த இவர்களை, இந்த வழக்கில் கைதானால் பெயிலே கிடையாது என்பதும் தெரியாத இவர்களை, பணம் படைத்த முதலாளிகள் பயன்படுத்தி கொண்ட கொடுமை இது. சிலர் முதல்முறையாக இந்த வேலையில்  இறங்கும்போதே மாட்டிகொண்டு 5, 6, 8  என்று வருடங்களை சிறையில் கழித்துக் கொண்டிருகின்றனர்.

ஒருவர் `அண்ணே, 20000 பணத்துக்கு ஆசைப்பட்டு நான் இதுல வந்து மாட்டிகினேன்னே ` என்று சொன்னார். இந்த கேரியர்களில் மாநிலத்திற்குள், மாநிலம் தாண்டி என்று சில வகை உண்டு. இவர் மாநிலத்திற்குள் கைமாற்றுபவராக இருக்கலாம்.

சிறையில் ஆரம்பத்தில் நான் தப்பே செய்யவில்லை என்று எல்லோரும்  சாதிப்பார்கள். கொஞ்சம் பழக ஆரம்பித்தபிறகு தான் உண்மை வெளியே வரும். எனவே,  இவர் சொன்னதையும் நான் ஆரம்பத்தில் நம்பவில்லை. போலீசார், குற்றவாளிகளிடம் ஒரே கேள்வியை பலவிதமாக மாத்தி மாத்தி கேட்பார்களே, அதே போல் நானும் பலவிதமாக, பல இடங்களில், பல மாதம் கழித்தும் கேட்டுவிட்டேன். அதே பதில் தான். எனவே அவர் சொன்னது உண்மையாகத்தான் இருக்கவேண்டும்.

``நானாவது பரவாயில்லன்னே! என்ன செய்றோம்ன்னு தெரிஞ்சுதான் இந்த வேலையில இறங்குனேன். ஆனா   இன்னொருத்தர், இது போதைபொருள்ன்னே தெரியாம, இதை கடத்திய உறவினருக்கு, விவரம் புரியாமல் உதவி செய்யப் போய், 10 வருஷம் தண்டனையை அனுபவிச்சுக்கிட்டு இருக்கார்``.- இந்த செய்தி அவருக்கு ஆறுதல். அதாவது நம்மைவிட பாவப்பட்டவர்களை பார்க்கும்போது நமக்கு ஒருவிதமான மனதிருப்தி ஏற்படும், கடவுள் நம்மை மட்டும் சோதிக்கவில்லை என்று!

இது போல் பல கேரியர்களின், அப்பாவிகளின் கதை நிறைய இருக்கிறது. மற்ற வழக்குகளில் முதல் முறையாகவும், அதே சமயம் வறுமை அல்லது அறியாமை காரணாமாக இவர்கள் இந்த தவறை செய்துவிட்டார்கள்  என்பதை  நீதிபதி புரிந்து கொண்டால், தண்டனையில் கருணை காட்டுவார். சிறையிலும்  நன்னடத்தையை காரணம் காட்டி கொடுக்கப்பட்ட தண்டனையில் 30 சதவிகிதம் வரை குறைய வாய்ப்பிருப்பதால், நீங்கள் குறைந்த தண்டனையில் தப்பிவிடலாம். போதை பொருள் வழக்குகளை பொறுத்த வரையில் கருணைக்கே இடம் கிடையாது. 10 வருடம் தண்டனை என்றால் அதை முழுமையாக அனுபவித்தாக வேண்டும். இப்படி 10 வருடம் தண்டனை அனுபவிப்பவர்களில் பாதிக்குமேல் இந்த கேரியர்கள்தான். சிறையில் இருக்கும் இந்த கடத்தல் கைதிகளை முதலாளி, தொழிலாளி என்று பிரித்தால் 20-80 என்றுதான் தேறும்.  

கூடவே அவர் ஒரு கோரிக்கையையும் வைத்தார். `` நாங்க  ஏதோ ஒரு வகையில பாவம் செஞ்சிருக்கோம், அதுக்கான தண்டனைதான் இதுன்னு நினைச்சிக்கிறோம்ன்னே. ஆனா இந்த போதைபொருள் வழக்குல வந்தா பெயிலே கிடையாதுன்னு அரசாங்கம் மக்களுக்கு தெரியப்படுதனும்னே. நீங்களும் பத்திரிக்கைக்கு எழுதி போடுங்கண்ணே, அப்பத்தான் எங்கள மாதிரி வேற யாரும் வந்து இந்த புதைக்குழில சிக்கமாடாங்க.``                          

உண்மைதான். நாம் எந்த துறையில் முதலீடு செய்தாலும் அதில் உள்ள ஆபத்துகளை கவனித்து தான் முடிவெடுக்கிறோம். ஆனால் இந்த வழக்கில் பெயில் கிடையாது என்ற உண்மை இந்த கேரியர்களிடம் மறைக்கப்படுகிறது. `மாட்டினால் நஷ்டம் எங்களுக்கு; நீங்கள் பெயிலில் வந்துவிடலாம்` என்று சொல்லப்படுவதால், பலர் இந்த அபாயகரமான காரியத்தில் இறங்கி மாட்டிகொண்டனர்.

சமூகவிரோதிகளை பிடிக்க வேண்டியதும் அவசியம், இல்லையேல், அவர்களுக்கு ஆயுதங்கள் கிடைப்பதையாவது  தடுக்க முடிந்தால் அதுவே பாதி குற்றங்களை தடுத்துவிடும். அதேபோல், இந்த வழக்கில் மாட்டினால் `பெயில் இல்லை. 10 வருடம் நிச்சயம்` என்பதை இந்த கேரியர்களுக்கு தெரியப்படுத்தினால், அவர்களும் காப்பாற்றப்படுவார்கள், அதே சமயம் சமூக அழிவுக்கான ஒரு கருவி இந்த முதலாளிகளுக்கு கிடைப்பதையும்  தடுக்கமுடியும்.

இந்த முதலாளிகளை பொறுத்த வரையில், `பல கோடி மதிப்புள்ள சரக்கு பிடிபட்டது ` என்று பேப்பரில் செய்தி வந்தாலும், அவர்களுக்கு அதன்  உள்ளூர் மதிப்பென்னவோ லட்சங்களில்தான். தொடர்ந்து இந்த கடத்தலில் ஈடுபடும்போது, சில முறை மாட்டினாலும் நஷ்டம் லட்சங்களில்தான். மாட்டிகொண்டு சிறைத்தண்டனையை அனுபவிக்கப் போவதும் ஏமாந்த அப்பாவி ஏழைகள்தான். மிக அபூர்வமாகத்தான் இந்த முதலாளிகள் மாட்டுவார்கள்.

ஆனால் நீதிமன்றங்களும், NCB யும் (போதை பொருள் தடுப்பு பிரிவு) , இதையெல்லாம் கணக்கில் எடுத்துகொள்வதில்லை. தெரிந்தே செய்த, கோடிகளில் சம்பாதித்தவனுக்கும்  10  வருடம்தான், விவரம் புரியாமல் சில ஆயிரங்களுக்கு ஆசைப்பட்டு பையை  தூக்கிக்கொண்டு போனவர்களுக்கும் அதே தண்டனைதான்.

மற்ற எந்த போதைப்பொருளை காட்டிலும் ஹெராயின், பிரவுன் சுகர்  போன்றவை  சமுதாயத்தையே மிக மோசமாக சீரழிக்க கூடியது என்பதால் கடுமையான சட்டங்களும், தண்டனையும் தேவைதான். 10 வருடம் கூட குறைந்த தண்டனைதான். உலகம் முழுக்க போதைப்பொருள் கடத்தலுக்கு மரண தண்டனை அல்லது 30, 40 வருட தண்டனை உண்டு. இந்தியாவில், 2 ,3 செக்க்ஷனுக்கு 10 வருடம் தண்டனை என்று தனித்தனியாக கொடுத்தாலும், கன்கரன்டி என்ற பெயரில் அதை ஒன்றாக்கி 10 வருடத்தில் முடித்து விடுவார்கள்.

இதில் இன்னொரு கிளைக்கதை இருக்கிறது. இந்த வழக்குகளை  ஆதாரபூர்வாக நிரூபித்து விரைவாக தண்டனை வாங்கிக் கொடுத்தால், பணம் படைத்தவர்கள் ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் `கரெக்ட்` பண்ணி வெளியே வந்துவிடுகிறார்கள். ஆக இந்த மேல் கோர்ட் நீதிபதிகளே  விலை போகிறார்கள்  என்பதால், NCB கீழ் கோர்ட்டில்  வழக்கை விரைவாக நடத்துவதில்லை. ஏழு அல்லது எட்டு வருடம் வழக்கை சாட்சிகளை ஏற்றாமல் இழுத்தடித்து, அதன் பிறகுதான் தண்டனை வாங்கி கொடுக்கின்றனர். சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி தப்பிக்கும் குற்றவாளிகளை என்கவுண்டர் மூலம் போட்டு தள்ளுவதை எப்படி நாம் ஆதரிக்கிறோமோ, அதேபோல் இந்த இழுத்தடிப்பும்  ஒரு வகையில் நியாப்படுத்த கூடியதே.

 NCB யை பொறுத்த வரையில் ஒரு விஷயம் தெளிவாக தெரிகிறது. இவர்கள் போலீசாரை போல் பொய் கேஸ் போடுவதில்லை. ஏழைகளோ, அப்பாவிகளோ, ஏதோ ஒரு வகையில்  இதில் ஈடுபட்டவர்களை தான் இவர்கள் கைது செய்திருக்கிறார்கள். ஆனால், பசிக்கு திருடுபவனையும், பணக்கார திருடனையும் ஒரே தராசில் வைத்தா எடை போடுவது? இந்த கேரியர்களுக்கு  தண்டனையில் கருணை காட்டலாம். அல்லது 5 வருட தண்டனை அளித்து இவர்கள் இருந்த நாட்கள் போக மீதி இருக்கும் வருடங்களை நிறுத்தி வைக்கப்பட்ட தண்டனையாக அறிவிக்கலாம். அதாவது இவர்கள் விடுதலை ஆன பிறகு மீண்டும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டால், அந்த தண்டனையும் சேர்ந்து அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்து விடுதலை செய்யலாம். நீதிமன்றங்களும், NCB யும் இந்த கேரியர்களின் மீது கொஞ்சம் கருணை காட்ட வேண்டும்.  
             
சரி, இனி அதிர்ச்சி அளிக்கும் அந்த கிளைமாக்சுக்கு வருவோம்...

NCBயும், நீதிமன்றங்களும் போதைப் பொருள் கடத்தலை கடுமையான குற்றமாக கருதி, இந்த அளவுக்கு கடுமையான நடவடிக்கைகள் எடுத்துகொண்டிருக்க, உனக்கும் பெப்பே, உங்கப்பனுக்கும் பெப்பே என்ற கதையாய், சிலர் சிறைக்குள்ளிருந்தே இந்த கடத்தல் வேலையை இன்னமும் செல்போன் மூலம் தொடர்ந்து  செய்து கொண்டிருக்கிறார்கள்.இப்படி கைமாறும் சரக்கு தரமானவையா என்று எப்படி தெரிந்து கொள்வது? அதற்காகத்தான் இவர்கள் சாம்பிளை சிறைக்கு உள்ளேயே வரவழைத்து, அதை சில கேரியர்க்ளிடம் கொடுத்து `அடிக்க` சொல்லி அதன் தரத்தை தெரிந்து கொள்கிறார்கள். அதை பங்கு போடும்போதுதான் இவர்கள் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். (இது மூன்று மாதத்திற்கு முந்தைய செய்தி)  

சிறை தண்டனை என்பதே ஒரு மனிதன் தான் செய்த தவறை உனர்ந்து திருந்த வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் சிறைக்குள்ளிருந்து கொண்டே இவர்கள் இதை துணிச்சலாக செய்கிறார்கள் என்றால், இவர்கள் வெளியே வந்தால் திருந்துவார்களா என்ற கேள்வி ஒரு பக்கம் எழுந்தாலும், சிறை பற்றிய பயம் வெளியே இருப்பவர்களுக்கு மட்டுமின்றி உள்ளே இருப்பவர்களுக்கும் போய்விட்டது என்றுதான் தெரிகிறது.

நான் கேள்விப்பட்டதை, அது உண்மைதான் என்றும் ஊர்ஜிதப்படுத்திகொண்டு,   சொல்லிவிட்டேன். இனி சிறைத்துறையும், NCBயும் தான் இதை தடுக்கவேண்டும்.

1 comments:

அருண் பிரசாத் said...

பணி சுமை காரண்மாக உங்கள் பக்கம் சில நாள் வர முடிய வில்லை... இன்று அனைத்தையும் படித்துவிடுகிறேன்....


போதை கடத்தலில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறது என்பது மலைக்கவைக்கிறது

Post a Comment