!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Thursday, January 10, 2013

போலீசின் `எல்லை`


எனக்கு மொபைலில் ஒரு மெசேஜ் வந்துது. வழியில் எங்கேயாவது பறவைகள் அடிபட்டு கிடந்தால், உடனே எங்களுக்கு போன் பண்ணுங்க என்று. இங்கே குஜராத்தில் இந்த மாதம் காத்தாடி திருவிழா என்பதால் பறவைகள் அடிபடும் வாய்ப்பு அதிகம். எனவே இந்த கவலை.

ஆனால் எனக்கு டெல்லியில் நடந்த கற்பழிப்பு சம்பவம்தான் ஞாபகத்துக்கு வந்தது. அங்கே அந்த பெண்ணும், அவர் நண்பரும் ரோட்டில் விழுந்து கிடந்த போது, பலர் வேடிக்கை பார்த்துக் கொண்டு போனார்களாம். உடனடியாக முதலுதவி கொடுக்க வேண்டும் என்றோ அல்லது குறைந்த பட்சம் அவர்களுக்கு உடை கொடுக்க வேண்டும் என்றோ யாருக்கும் தோன்றவில்லை.

முல்லைக்கு தேர் கொடுத்த நாடு, இன்னமும் பறவைகளுக்காக துடிக்கும் நாடு மனித நேயத்தை மட்டும் தொலைத்துவிட்டது. இந்திய சட்ட நடைமுறைகள் மக்களை அந்த அளவுக்கு வெறுப்பேத்தி இருக்கிறதா,அல்லது பிச்சைக்காரர்கள், குடிகாரர்கள் என பலரை தெருவில் உறங்கி பார்த்துவிட்டதால் மக்களுக்கு இதுவும் சலித்துப் போய்விட்டதா? பதில்தான் தெரியவில்லை.     

இங்கே எனக்கொரு ஆசை. வெறி என்று கூட சொல்லலாம். தமிழ்நாட்டில் ஒரு ஸ்டிங் ஆபரேஷன் செய்ய வேண்டும். இதேபோல் தெரு ஓரத்தில் சிலரை பாதிக்கப்பட்டவர்களாக படுக்க (நடிக்க) வைத்து, அங்கே ரோட்டில் போகும் மனிதர்களின் ரியாக்ஷன் என்ன என்று பார்க்க வேண்டும்.

உடனடியாக முதலுதவியில் இறங்காமல் வேடிக்கை பார்த்துவிட்டு கிளம்பும் மக்களை பிடித்து நாயை அடிப்பது போல் அடிக்கவேண்டும். அப்போது அவர்கள் உதவி உதவி என கத்துவார்கள். மற்றவர்கள் வேடிக்கை பார்க்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு உதவியின் மகத்துவம் தெரியும்.

இது அதைவிட மோசம்.

அங்கே வந்த போலீசார் இது எந்த போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் வருகிறது என்ற ஆராய்ச்சியில் நேரங்களை வீனடித்தார்களாம்.

இப்போது ஒரு கதை ஞாபகத்துக்கு வருகிறது. ஒரு கொடூரமான மன்னனுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுக்க, அந்த ராஜாவின் மகன் மேலும் கொடுமையாக நடந்துகொண்டானாம். இப்போது மக்கள் அப்பாவை பாராட்டுவார்கள் இல்லையா? 

மக்களின்  அலட்சியத்தையும், போலீசாரின் `எல்லை` ஆராய்ச்சியையும் படித்தபிறகு குற்றவாளிகளின் மீதான கோபம் குறைந்துவிட்டது. சராசரி மனிதர்களிடம் மனிதத்தன்மை இல்லை, சட்டத்தை காப்பவர்களிடமும் இல்லை. இந்த லட்சணத்தில் குற்றவாளிகளிடம் என்ன எதிர்பார்க்க முடியும்?

போலீசின் `எல்லை` 

சிறை அனுபவத்தில் போலீசாரைபற்றி பற்றி நிறையவே தெரிந்து கொள்ள முடிந்தது. குற்றவாளிகளை பிடிப்பதில், சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தைவிட, அதில் நமக்கு என்ன கிடைக்கும் என்ற ஆர்வம்தான் போலீசாரிடம் அதிகமாக இருக்கும்.

போலீசார் பற்றிய என்னுடைய அனுபவம், பழவந்தாங்கல் காவல் நிலையத்திலேயே ஆரம்பித்துவிட்டது. போலீஸ் காரில் ஏறி உட்கார்ந்த நேரம் முதல், புழல் சிறைக்கு என்னை அனுப்பும்வரை, அந்த 24 மணி நேரத்தில், நான் கேட்ட சில செய்திகளை குறிப்பிடலாம். (நான் ஒரு வருங்கால பதிவர்ன்னு தெரியாம சாதரணமாக அவர்கள் பேசியதிலிருந்தே சில விஷயங்களை சொல்லலாம்.)

ஆனால் இந்த கர்ணன் தியரி என்று ஓன்று இருக்கிறதல்லவா, அது என்னை தடுக்கிறது. என்ன இருந்தாலும் அவர்களால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எனவே நானும் ஸ்டேஷன் எல்லையை விட்டு விடுகிறேன்.

சிறையில் கைதிகளிடம் பேச ஆரம்பித்தாலே போதும், பல கதைகள் வந்து விழும். போலீசார் செயல்படும் விதமும் புரியும்.

போலீசாருக்கு திருட்டு வழக்குகள்தான் பிடிக்கும். அது  வருமானம் தரக்கூடியவை. குற்றவாளியிடம் மீட்கும் பொருட்களை /நகைகளை  கணக்கில் காட்டாமல் கொஞ்சம் சுடலாம்.

திருட்டு பொருட்களை யாரவது ஒரு வியாபாரி வாங்கி இருப்பார். அவரிடம் போய் திருட்டு பொருளையும் மீட்டுவிடலாம். மேலும் அவருக்கு பிரச்சினை வராமல் இருக்க அவரும் கவனிப்பார். அதுவும் வருமானம்.

ஒருவேளை பிடிபட்ட திருடன்  வேறு எல்லையாக இருந்தாலும் பிரச்சினை இல்லை. இடம் மாறினாலும் அந்த குற்றவாளியை பிடித்ததற்கான சன்மானம் இவர்களுக்கு கிடைக்கும். அதாவது அந்த ஸ்டேஷனிலிருந்து வருவாய் பகிர்வு இவர்களுக்கு வரக்கூடும்.

ஒரு கைதி கோர்ட்டுக்கு போனபோது போலீசாரிடமே பணம் கேட்டிருக்கிறார். அதை அவர் என்னிடம் பேச்சு வாக்கில் சொல்ல, `அவங்க எதுக்கு உனக்கு பணம் தரனும்?` என்று நான் ஆச்சர்யமாய் கேட்டேன்.

பதிலுக்கு அவர் என்னை ஆச்சர்யமாய் பார்த்து, `என்னன்னே இப்படி கேக்கறீங்க? என்னால அவங்களுக்கு எவ்வளவு லாபம். குடுத்தால் என்ன?` என்றார். எனக்குதான் பல விஷயங்கள் தெரியாது போலிருக்கிறது.

இது செல்போன் திருட்டு கேஸ். திருடிய செல்போன்களை விற்ற கடையை காட்டிவிட்டார். விசாரனைக்கு போன போலீசார், அந்த செல்போன்களை மீட்டது மட்டுமின்றி, ஆளுக்கு ஒரு செல்போனை அதுவும் காஸ்ட்லியாக எடுத்துக் கொண்டார்கள். இது திருடப்பட்டது அல்ல. அந்த வியாபாரி வழக்கில் சிக்காமல் இருக்க அந்த கடையில் இருந்து கூடுதலாக எடுத்தவை. 

இப்ப என்னால போலீஸ்காரங்களுக்கு .....லாபம். எனக்கு 2000 ரூபாய் கொடுத்தா என்ன? இதுதான் அந்த கைதியின் (நியாயமான )கேள்வி. அதே போல் அவர் பணம் வாங்கினார். (அல்லது பணத்தை அந்த கைதியின் மனைவி வாங்கினார்.சரியாக நினைவில்லை)

இங்கே எனக்கு ஒரு சந்தேகம். செய்நன்றி என்பது போலீசாருக்கும் உண்டல்லவா? ஒரு கைதியால் லாபம் அடைந்த பிறகு போலீசார் அவர்களை தண்டிப்பர்களா? சந்தேகம்தான். கடந்த பத்தாண்டுகளில் பதிவான வழக்குகளின் புள்ளிவிவரத்தை ஆராயவேண்டும். அனேகமாக திருட்டு வழக்குகளில் தண்டனை அடைந்தவர்களின் சதவிகிதம் குறைவாகவே இருக்க கூடும். அதுதான் தற்போது திருட்டு குற்றங்கள் அதிகரிக்க காரணமாகவும் இருக்கவேண்டும்.      

இந்த லட்சணத்தில்தான் போலீஸ் இருக்கிறது. திருட்டு வழக்கென்றால் அர்த்த ஜாமத்திலும் ஓடுவார்கள். கொலை, கற்பழிப்பு என்றால் ஸ்கேல், இன்ச் டேப் என எல்லாவிதத்திலும் அளந்துவிட்டு வேண்டா வெறுப்பாகத்தான் எடுப்பார்கள்.

இதுதான் தமிழ்நாடு போலீஸ். டெல்லி போலீசும் அப்படித்தான் போலிருக்கிறது. 

மைனர் 

டெல்லி வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவர் மைனர் என்பதால் அவர் தண்டனையிலிருந்து தப்பிவிடுவாராம். எனவே சட்டத்தை திருத்தும் முயற்சி நடைபெறுகிறது. அது 16 வயதாக மாறக்கூடும். அல்லது குற்றங்களின் தன்மையை பொறுத்து மைனராக இருந்தாலும் கடும் தண்டனை என்று வரக்கூடும்.

இப்படி அபத்தமான சட்டங்கள் அடிக்கடி நம் கவனத்துக்கு வரும். கடந்த வருடம் இணையம் தொடர்பான ஒரு சட்டம் அபத்தமாக தெரிந்தது. இப்போது இது. இதை ஒவ்வொரு முறையும் திருத்திக் கொண்டா இருக்கமுடியும்? அப்படியே திருத்தினாலும் அது முன் நடந்த குற்றத்துக்கு பொருந்தாது. குழப்பம்தான்.

ஏற்கனவே பதிவுகளில் சொல்லி இருக்கிறேன். மீண்டும் வலியுறுத்துகிறேன். நீதிபதிகளுக்கு சுதந்திரம் தேவை. அதுதான் தீர்வு. தற்போது நீதிபதிகள், சட்டத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை நமக்கு சொல்லும் மொழி பெயர்ப்பாலர்களாகதான் இருக்கிறார்கள். அதாவது அவர்கள் சட்டத்தை அமல்படுத்துகிறார்கள். ஆனால் பல சமயங்களில் அதில் நீதி இருப்பதில்லை.

ஒரு பதிவில் படித்தேன். சட்டம் முரண்பாடாக இருந்தால் அதை வேறு பெஞ்சுக்கு நீதிபதிகள் பரிந்துரைக்கலாமாம்.

நிஜத்தில் அப்படி நடப்பதில்லை. சட்டம் என்ன சொல்கிறது என்பது சாமானியனுக்கு தெரியாது. செய்திகளில் சொல்லப்படுவதுதான் தெரியும். அந்த அடிப்படையில் இதுவரை நீதிபதிகள் தங்கள் சுதந்திரத்தை பயன்படுத்தி எதார்த்தமாக தீர்ப்பு வழங்கியதாக தெரியவில்லை.

சுப்ரீம் கோர்டிலேயே, `சட்டம் இதைதான் சொல்கிறது. நாங்கள் எங்கள் அறிவை பயன்படுத்த முடியாது` என்று சொல்லி ஒரு அபத்தமான தீர்ப்பை கொடுத்தார்கள். அந்த பதிவு: http://anindianviews.blogspot.in/2011/12/blog-post_26.html

அவர்களே அபத்தமாக தீர்ப்பு வழங்கும்போது, கீழ்மட்ட நீதிபதிகளுக்கு எங்கே துணிச்சல் வரப்போகிறது. 

எனவே வழக்கின் தன்மையை பொறுத்து முடிவெடுக்கும் சுதந்திரத்தை நீதிபதிகளுக்கு கொடுப்பதுதான் சிறந்தது. அது தவறாக பயன்படாத அளவுக்கு சில பாதுகாப்புகள் இருந்தால் போதும்.

2 comments:

Aathiga Tamilan said...

Interesting perspective.
Keep writing.

Unknown said...

தங்களின் கூரிய சிந்தனை தெளிவாக புரிகிறது.ஆதங்கம் படுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும் நம்மால் !

Post a Comment