தலைவலியில் மிகப் பெரிய தலைவலி அரசியல்வாதியாக இருப்பதுதான். மற்ற துறைகளில் அதை தொடர்ச்சியாக கவனிப்பதன் மூலம் அந்த துறை குறித்து ஆழ்ந்த அறிவை பெறமுடியும். ஆனால் அரசியலுக்கு அப்படி சொல்ல முடியாது. இது பல துறைகளை கட்டி ஆளும் துறை என்பதால் எதிலும் உங்களால் பாண்டித்தியம் பெற முடியாது. சில துறைகளில் ஆர்வம் காரணமாக கூடுதலாக கவனிக்கலாம். அவ்வளவுதான்.
இங்கே வாரம் ஒரு பிரச்சினை எழும்பும், உடனே அது குறித்த ஆராய்ச்சியில் மூழ்குவோம். அதில் ஓரளவு புரிதல் வருவதற்குள் இன்னொரு பிரச்சினை நம் கவனத்தை ஈர்க்கும். இப்படி அங்கே இங்கே மேய்வதுதான் அரசியல்வாதிகளின் வேலை. இதே தலைவலிதான் அரசியல் குறித்து எழுதுபவர்களுக்கும்.



