!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Showing posts with label transport. Show all posts
Showing posts with label transport. Show all posts

Monday, May 9, 2022

புல்லட் டிரைன் - 3

அந்த காலத்தில் ஒரு அந்தணர் இருந்தார். அவருக்கு சிவனுக்கு கோவில் கட்டவேண்டும் என ஆசை. ஆனால் கையில் பணமில்லை. இதுபோன்ற நபர்கள் கற்பனையிலேயே தங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்வார்கள். எனவே அவர் மனசுக்குள் கோவில் கட்டினாராம்.

அதேநேரம் ஒரு மன்னர் ஆடம்பரமாக சிவனுக்கு கோவில் கட்ட, இரண்டுக்கும் கும்பாபிஷேகம் ஒரே நாளில் வந்தது. சிவன், பணத்தைவிட பக்திதான் பெரிது என மன்னனை புறக்கணித்து இந்த மனக்கோவிலுக்கு வந்ததாக ஒரு கதை.

இனி இந்த கதை நமக்கு தேவையில்லை. நானும் அந்த அந்தணரை போல கற்பனையில் நிழல் ரயில்வே அமைச்சராக மாறி எந்த ஆணியை பிடுங்காலம், எங்கே புதிதாக ஆணி அடிக்கலாம் என யோசித்தேன்.

ரயில்வேவை எப்படி தனியாருக்கு விடுவது என சிந்தித்தபோது நிறைய தலைவலிகள்தான் வந்தது. பஸ் ஓட்டுவதைபோல் இது அவ்வளவு எளிதாக  இல்லை. அங்கே பர்மிஷன் கொடுத்துவிட்டு ஒதுங்கிவிடலாம். இங்கே ஏகப்பட்ட சிக்கல்.

இந்த பதிவை எழுத ஆரம்பித்த பிறகுதான் இது குறித்து நிறைய செய்திகளை படித்தேன். பிள்ளையார் சுழி போட்டுவிட்டார்கள் என தெரிகிறது. அதாவது புள்ளி வைத்துவிட்டார்கள், ஆனால் எப்படி கோலம் போடுவது என்பதுதான் ரயில்வே அமைச்சருக்கு தெரியவில்லை. இவர்கள் போடும் கண்டிஷன் முறையால் தனியார் யாரும் திரும்பிக்கூட பார்க்கவில்லையாம்.   

ஒரு ரயிலில் குறைந்தது 16 பெட்டி இருக்கவேண்டும்; ரயில்வேயிடம்தான் பெட்டியை லீசுக்கு எடுக்க வேண்டும்; எடுத்தால் 5 வருடம் மொத்தமாகத்தான் எடுக்க வேண்டும் என நிபந்தனை நீள்கிறது.

சரவணபவன் ஓட்டல்களை போல் 2 இட்லி 22 சட்னி என அவசியமில்லாத சட்னி வைத்து ஐம்பது ரூபாய்க்கு பில் போடுவதைபோல் இருக்கிறது இந்த நிபந்தனைகள். அதிக பெட்டிகள் இருந்தால் லாபம் அதிகம் என்றாலும், கண்டிஷன் என்றால் எவனும் வரமாட்டான்.

இங்கே ரயில் பெட்டியை சில வருடங்கள் ரயில்வே கொடுக்கலாம். அதன்பிறகு பெட்டி டாடா நானோ மாதிரி வேணுமா அல்லது ரோல்ஸ் ராய் மாதிரியா என கேட்டு செஞ்சு கொடுக்கலாம், அல்லது நீங்களே செய்துக் கொள்ளுங்கள் என விட்டுவிடலாம்.

வருவாய் பகிர்வு மற்றும் இதற்கு அதற்கு என பல கட்டணங்கள் என செய்திகள் சொல்கிறது. இதில் வருவாய் பகிர்வு என்பது மிகவும் அபத்தமான முறை. டிக்கெட் கட்டணத்தில் 30 -50 சதவிகிதம் வருவாய் பகிர்வு என்றால், தனியார் துறையினர் இங்கே அரசின் தலையில் மிக ஈசியாய் மிளகாய் அரைத்துவிடுவார்கள்.

அதாவது டிக்கட் விலை 500 ரூபாய் என்றால் அரசுக்கு நிறைய கொடுக்க வேண்டும் என்பதால், டிக்கட் விலை 100, இதர சர்விஸ் சார்ஜ் 400 என மாற்றிவிடுவார்கள். அரசுக்கு இந்த 100 ல் தான் வருவாய் பகிர்வு கிடைக்கும். எனவே ஒரு பெட்டிக்கு மாசம் இவ்வளவு துட்டு என்பதுதான் சரியாக இருக்கும். 

அதேசமயம் என்னதான் அம்பானியாக / அதானியாக இருந்தாலும், இது புது துறை என்பதால் இங்கே தொழிலை புரிந்து கொண்டு விரிவுபடுத்த காலம் தேவை. அதிலும் இந்த தனியார் ரயில்வே பல வகைகளில் அரசின் உதவியை சார்ந்திருக்கும்.

நாளை புதிய அரசு வந்து, அவர்களுக்கு பிடிக்காத நபர்களுக்கு, `நைட் 12 மணிக்கு பிரைம் டைம்ல உங்களுக்கு நேரம் ஒதுக்கியிருக்கிறேன்` என குண்டை தூக்கிப்போடலாம். உங்களுக்கு தேவையான முக்கியமான சேவைகளை மிகவும் தாமதமாக வழங்கலாம். எனவே 5 வருட ஒப்பந்தம் என்றால் எந்த நாயும் உள்ளே வராது.

ஆரம்பகட்டத்தில் 6 மாதம் - 1 வருடம் சோதனை ஓட்டம் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். சரிப்பட்டால் ஓட்டுவார்கள் இல்லையென்றால் கிளம்புவார்கள். இங்கே இன்னொரு சிக்கல் என்னவென்றால் டிராவல் பஸ் போல் ஏகப்பட்டபேரை களத்தில் இறக்குவதும் பலனளிக்காது.

இங்கே எந்த தனியார் களத்தில் இருந்தாலும் அவர்கள் ஒரு பிராண்ட்  உருவாக்க நினைப்பார்கள். இதற்கு ஒரு உதாரணம் சொல்லலாம். பொதுவாக ஊருக்குள் இருக்கும் ஓட்டல்களில் உணவு ஓரளவு தரமாக இருக்கும். காரணம் அவர்கள் தரத்தை உறுதிப்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைப்பார்கள். ஆனால் பஸ் நிலையங்களில் இருக்கும் கடைகளை கவனியுங்கள். அங்கே தரமும் இருக்காது விலையும் தாறுமாறாக இருக்கும். இங்கே பஸ் நிலையங்களில் சாப்பிடுபவர்கள் வெளியூர்காரர்கள். அவர்களை மதிக்க வேண்டிய அவசியம் இவர்களுக்கு இருக்காது.

அப்படி ஒரு நிலைமை தேவை எனும்போது, இங்கே 5-10 தனியார் ரயில்வே மட்டுமே அனுமதி என இருக்கவேண்டும். அப்போதுதான் அவர்கள் தரமான சேவையின் மூலம் பிராண்ட் உருவாக்கி மக்களை கவரமுடியும்.

தனியார் துறை குதிரையைப்போலத்தான், வேகம் இருக்கும், அதற்காக கடிவாளம் இல்லாத  குதிரை மீது சவாரி செய்யமுடியுமா? எனவே இங்கேயும் ஒரு கடிவாளம் தேவை. அதற்கு என்ன செய்யலாம்? பிக் பாஸ் பார்முலாவை இங்கே அறிமுகப்படுத்தலாம்.

ஒரு வருடம் கழித்து மக்களிடையே (ஓட்டெடுப்பு) கருத்து கேட்டு விலையிலும் சேவையிலும் யார்  மோசமாக இருக்கிறார்களோ அவர்களை எலிமினேட் செய்யலாம். அல்லது அவர்களுக்கு மேலும் ரயில்தடம் வழங்கப்படாது எனவும், அவர்கள் குறைகளை சரி செய்யாவிட்டால் அடுத்த முறை எலிமினேஷன்தான் என கழுத்தில் கத்தியை வைக்கலாம்.

இப்படி வருடம் ஒருவர் எலிமினேட் என்றால் 5 ஆண்டுகளில் 5 பேர் காலி. இனி மீதி இருப்பவர்கள் தரமானவராக இருப்பார்கள் என நம்பலாம். அதோடு நிற்காமல் வருடா வருடம் ஒரு வைல்ட்கார்டாக யாரையாவது போட்டு, இந்த வருடமும் எலிமினேஷன் உண்டு என குண்டை தூக்கி போடலாம். இது அவர்களுக்கு ஒரு பயத்தை உண்டாக்கும்.

இங்கே நமக்கு இன்னொரு அனுபவமும் இருக்கிறது. தொழிலில் குறைந்த லாபத்தில் வியாபாரம் செய்து வாடிக்கையாளரை தக்க வைப்பது நல்ல வியாபாரமுறை. ஆனால் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு நிறைய சலுகைகளை கொடுத்து அதனால் ஏற்பட்ட நஷ்டத்தை தாங்கிக்கொண்டு போட்டியாளர்களை ஒழித்தது.

அதுபோல் நடக்காமல் இருக்க, ஒரு நிறுவனம் நஷ்டத்தை காட்டினால் அவர்களுக்கு மேலும் வழித்தடம் கிடையாது, அதுமட்டுமின்றி இந்த நிலைமை தொடர்ந்தால் கொடுக்கப்பட்ட வழிகளும் லாபகரமாக ஓட்டும் நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் என கண்டிஷன் வைக்கலாம்.  இது மொள்ளமாரிகளுக்கு ஆப்பு வைத்துவிடும். அப்படியும் அவர்கள் ஏதாவது செய்வார்கள். அதற்கும் ஒரு வழி நாம்  கண்டுபிடிப்போம்.     

தற்போதைய சூழ்நிலையில் ரயில்வே சினிமா தியேட்டர் போல் இருக்கிறது. இங்கே 300 ரூபாயில் ஒரு குடும்பம், ஒரு படம்தான் பார்க்கலாம். தனியார் உள்ளே வந்தால் அது மக்களுக்கு டிவி போல் ஆகிவிடும். 300 ரூபாயில் 30 படம் பார்க்கலாம்.

நான் இங்கே சொல்லவருவது 30 படம் பார்ப்பதை அல்ல. ஒரு டிரைனில் 1000 பேர் என்பது அவர்களுக்கு மிகப்பெரிய சந்தை. இதை முறையான மார்க்கெட்டிங் உத்தியாக பயன்படுத்தி விளம்பரங்கள் மற்றும் பிற சேவைகள் மூலம் சம்பாதிப்பார்கள். அவர்கள் அப்படி சம்பாதிக்க வேண்டுமென்றால் மக்கள் இவர்கள் ரயிலில் வரவேண்டும். அதனால் மக்களுக்கு கட்டணத்தில் கணிசமாக குறையும் வாய்ப்பிருக்கிறது.

மேலே சொன்னது சில உதாரணங்கள். இன்னும் நிறைய நடக்கலாம். சாத்தியங்கள் தெரிகிறது.

மேலும் வரும்..   

Monday, May 2, 2022

புல்லட் டிரைன் - 2

இந்தியாவில் போக்குவரத்தை நெரிசலை குறைக்க மற்ற வழிகளை பார்ப்போம்.

இந்தியாவில் வான்வழி போக்குவரத்து என்பது மிகவும் குறைவாக இருக்கிறது. தற்போது அதிகரித்திருப்பது போல் தெரிந்தாலும், இந்த பதிவுக்காக சில தகவல்களை தேடியபோது புள்ளிவிவரம் அதிர்ச்சியாக இருந்தது. 

இந்தியாவில் தினம் 2300 விமானம் கிளம்புகிறதாம். இதுவே அமெரிக்காவில் 42000. எவ்வளவு வித்தியாசம்?

எனவே உள்நாட்டு வான்வழி போக்குவரத்தை அதிகரிப்பதற்காக 10 ஆண்டுகளுக்கு அரசுக்கு எந்த வரியும் தேவையில்லை என திறந்துவிட்டால் இந்த துறை கணிசமாக வளரும்.

இங்கே  ஒரு விஷயத்தை நாம் கவனிக்கவேண்டும். அரசுக்கு தற்போது அதிக லாபம் இருந்து அதை பணக்காரர்களுக்காக விட்டுக்கொடுத்தால் அது தவறு. இங்கே லாபமே இல்லை, எனவே இதுபோன்ற இடங்களில் ஒரு குறிப்பிட்ட துறை வளர்வதற்காக சலுகைகள் தருவது தப்பில்லை.

இந்த உள்நாட்டு டவுன் பஸ்களை ஏற்கனவே இருக்கும் விமான நிலையங்களில் விட்டால் தாலி அறுந்துரும். இதற்கும் டவுன் பஸ்டாண்ட் என தனியாரையே BOT முறையில் கட்டி, இயக்க அனுமதி கொடுத்துவிடலாம். ஏற்கனவே சில சீர்திருத்தங்கள் ஆமை வேகத்தில் நடக்கின்றன.

ஆனால் மக்கள், அரசியல்வியாதிகள், சமூகப்போராளிகள் விடமாட்டார்கள். பணக்காரனுக்கு சலுகையா என கோஷம் எழுப்புவார்கள். ஆனால் நிஜத்தில் இது போன்ற சலுகைகள் ஏதாவது ஒரு வகையில் நாட்டுக்கு லாபத்தை கொடுக்கத்தான் போகிறது.

வீட்டு தோட்டத்தில் இருக்கும் மரத்துக்கு தண்ணீர் ஊற்றினால் அது பழம் தரும். இது கண்ணுக்கு தெரியும். அதற்காக காட்டில் மரத்துக்கு தண்ணீர் ஊற்றினால் அது விரயம் என்று சொல்லமுடியுமா? அதுவும் மறைமுகமாக இயற்கையை பாதுகாத்து நமக்கு நன்மையை ஏதோ ஒரு வகையில் கொடுத்துக் கொண்டுதான் இருக்கும். அதுபோலத்தான் இதுவும்.      

மொத்தத்தில் இங்கே முக்கியமான இன்னொரு நீதி என்னவென்றால், வாழைமரமாக இருக்கட்டும், தென்னைமரமாக இருக்கட்டும், முதலில் வளரவிட வேண்டும், அதன்பின்தான் அறுவடை செய்யவேண்டும்.

ரயில்வே

அடுத்து ரயில்வே துறையை பார்ப்போம். போக்குவரத்தில் ஒரு புரட்சியை கொண்டுவந்தது இந்த ரயில்வே துறைதான். அதன்பின் உலகம் மாற மாற ரயில்வே துறையும் கொஞ்சம் வளர்ந்தது. மீட்டர்கேஜ் -ஸ்டாண்டர்ட் கேஜ் -பிராட் கேஜ் என உருமாறிய இந்த துறை சில அதற்கு மேல் உருமாறவில்லை.

முதல் காரணம், இதை உருவாக்கிய மேலை நாடுகளில் மக்கள் தொகை வளர்ச்சி கட்டுக்குள் வர, அவர்களுக்கு போக்குவரத்துக்கு பெரும் தலைவலியாக மாறவில்லை.

அதேசமயம் விமானங்களின் எண்ணிக்கையும் பெருகி,  இரு சக்கர மற்றும் கனரக வாகனங்களும் கணிசமாக பெருக, நீண்ட பிரயாணத்துக்கு விமானம், மற்றவற்றுக்கு கார்கள் என மக்களின் விருப்பம் மாறிவிட ரயில்வே வளரவில்லை. 

இருந்தாலும் உலகம் முழுக்க ரயில்வே தற்போதும் மிகப்பெரிய துறைதான். ஆனால் இங்கே நான் சொல்லவருவது, அதன் உருவம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் பெரிய அளவில் மாற்றம் வரவில்லை  என்பதுதான்.

இது மேலை நாடுகளுக்கு சரி. ஆனால் நமது தேவை என்பது வேறு அல்லவா. பக்கத்துக்கு வீட்டுக்காரன் ரெண்டு இட்லி சாப்பிட்டுவிட்டு டயட்டில் இருந்தால் அது அந்த ஆளுக்கு பொருந்தும். பலவீனமாக இருப்பவன் கிடைத்ததை எல்லாம் சாப்பிட வேண்டியதுதான்.

தற்போது பல்வேறு துறைகளின் வளர்ச்சிகளை கவனியுங்கள். மொபைல் துறை 1g என ஆரம்பித்து 5g என போய்க்கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் மாடிவீடு என்றுதான் இருந்தது. அது தற்போது வானத்தை தொடும் அளவுக்கு பல மாடிகளாக மாறிவருகிறது.

எனவே இந்தியாவின் தேவையையும் வளர்ச்சியையும் கருத்தில்  கொண்டு ரயில்வேயில் பிராட்கேஜ் டிராக்கை மேலும் அகலப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து நாம் ஆராய்ச்சிகள் செய்திருக்க வேண்டும். அல்லது பக்கவாட்டில் 10 சதவிகிதம் மேல்வாக்கில் 10 சதவிகிதம் என ரயில் பெட்டிகள் வளர்வதற்கு வாய்ப்பிருக்கிறதா என அப்படியாவது முயற்சித்திருக்கலாம். அப்படி எந்த ஆராய்ச்சியும் நடந்ததுபோல் தெரியவில்லை.

சில தனியார் பஸ்களை கவனியுங்கள். கீழ் குடோனில் கார்கோ சர்விசும், அதன் மேல் இரண்டு அடுக்குகள் கட்டி அங்கே பிரயாணிகள் என மூன்றடுக்கு சேவை நடக்கிறது. இது அவர்கள் பணம் என்பதால் ரூம் போடாமலேயே அவர்களுக்கு மூளை வேலை செய்கிறது.

இங்கே அப்பட்டமான எதார்த்தம் என்னவென்றால், நாளை சூரியன் மேற்கில் உதிக்கும் என்று சொன்னால் கூட நான்  நம்புவேன், ஆனால் அரசு துறைகள் திறமையாக செயல்படும் என்று சொன்னால் நான் நம்பமாட்டேன். அதற்கான வாய்ப்பே இல்லை.

ஏதோ ஒரு மூலையில் ஒரு துறை சிறப்பாக இருக்கலாம். 50 பேர் படிக்கும் பள்ளியில் ஒரு சில மாணவர்கள் பாஸாகிவிட்டால் அது நல்ல பள்ளி என சொன்னால் எப்படி இருக்கும், அப்படித்தான் இந்தியாவில் பொதுத்துறையை தூக்கிபிடித்துக் கொண்டு நாட்டை நாசமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அதேசமயம் ரயில்வே போன்ற பிரமாண்டமான துறையை தனியாருக்கு தாரைவார்ப்பது சாத்தியமில்லாத, சிக்கலான ஓன்று. 

எனவே என்ன செய்யலாம்?

இங்கே நாம் ஒரு தனியார் துறையின் செயல்பாட்டை கவனிப்போம்.

மொபைல் துறை வந்த பிறகு அதற்கு பல இடங்களில் டவர் வைக்கவேண்டிய அவசியம் வந்தது. முதலில் அவர்கள் காலி இடத்தை வாங்கி/ வாடகைக்கு எடுத்து டவர் வைத்தார்கள்.

தனியார்துறை அல்லவா, போட்ட முதலீடு அவர்களுடையது, எனவே அவர்களுக்கு மூளை வேகமாக செயல்பட ஆரம்பித்தது. மொட்டை மாடியில் யாராவது அப்பளம் காயவைப்பதை பார்த்திருப்பார்கள். அட...மொட்டைமாடி பல வகைகளில் பயன்படும் போலிருக்கிறதே என யோசித்தவர்கள், அதற்கு வாடகை கொடுத்து டவர் வைத்துவிட்டார்கள். கீழே வைத்தால் அதற்கு செக்கூரிட்டி வேறு வைக்கவேண்டும். அந்த செலவும் மிச்சம். ஆக அவர்களுடைய செலவினங்கள் குறைந்தது.

அடுத்த சில வருடங்களில் மறுபடியும் மூளை கேள்வி கேட்டது. நம்ம டவர் கிழக்கு பக்கம் பார்க்கிறது, மற்ற திசைகள் சும்மாதானே இருக்கிறது என யோசித்தார்கள். கடைசியில் டவர் நிர்வாகம் என தனியாக துறை ஓன்று பிரிந்தது. அவர்கள்  ஒரே கல்லில், ஸாரி, ஒரே டவரில் நாலு கம்பெனி என வாடகைக்கு விட்டு மேலும் செலவை குறைத்தார்கள்.

அவர்களுக்கு மறுபடியும் மூளை வேலை செய்ய ஆரம்பித்தது. நம்ம டவர்ல சிக்னல் கெபாசிட்டி 1 லட்சம் என்றால் அதில் முழு பயன்பாடு இல்லையே, எனவே சில (மொபைல் துறையில் ஆரம்பத்தில் பல சிறு நிறுவனங்கள் இருந்தபோது) சின்ன கம்பெனிகளை, `உங்களுக்கு எதுக்கு டவர், வாங்க நம்ம வண்டியிலேயே ஏறிக்குங்க, கொடுக்கறதை கொடுங்கன்னு` அங்கேயும் காசு பார்த்தார்கள்.

மேலே சொன்ன சம்பவங்கள் தனியாரில் மட்டுமே சாத்தியம். இப்படியெல்லாம் அரசுத்துறையில் விரைவாக யோசித்து முடிவெடுத்து செலவை குறைப்பார்களா அல்லது கூடுதல் வ்ருமானத்துக்கான வழியைத்தான் தேடுவார்களா?

கிட்டத்தட்ட மொபைல் துறை செய்த அதே முறையை அரசும் ரயில்வே துறையில் கடைபிடிக்கலாம். கட்டமைப்பு என்னுடையது, வண்டி மற்றும் நிர்வாகம் தனியாருடையது என கொடுத்துவிட்டால் ரயில்வே நிர்வாகம் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு விரைவாக இருக்கும்.

இங்கே ரயில்வே அவ்வப்போது அதை செய்கிறோம் இதை செய்கிறோம் என ஆக்டிவாக காட்டிக்கொள்ளும். இதற்கும் என்னிடம் ஒரு அனுபவம் இருக்கிறது.

ஒரு வீட்டில் விருந்து. அவ்வளவாக அறிமுகமில்லாதவர் வீடுதான். இருந்தாலும் இதுபோன்ற அனுபவங்களுக்காக நானும் அதில் மாட்டிக் கொண்டேன்.

விருந்தினர்கள் சாப்பிடும்போது அந்த வீட்டின் கணவர்  ஜாலி மூடில் இருந்தார். அந்த மூடில், `ஏதோ உங்க புண்ணியத்துல நானும் இன்னிக்கி ருசியா சாப்பிடுறேன்` என்று ஜாலியாக மனைவியை கிணடலடித்துவிட்டார்.

விருந்தாளிகளுக்கு முன் அவமானமா... அவர் மனைவிக்கு வந்ததே கோபம், `அன்னைக்கி உங்களுக்கு நான் அதை (ஏதோ ஓன்று) செஞ்சி தரல?` என கோபமாக கேட்க...

`அது நடந்து 6 மாசம் இருக்குமே` என அவர் மறுபடியும் உண்மையை போட்டு உடைக்க, இப்போது அந்த பெண்மணிக்கு இதை எப்படி சமாளிப்பது என  தெரியவில்லை. விருந்து முடியும்வரை உம்மென்று இருந்தார். அங்கே மதுரை ஆட்சி போலிருக்கிறது.

சில வருடங்களுக்கு பின் ஒரு முறை அவரை பார்த்தேன். மனிதருக்கு பெரிதாக ஆபத்து ஒன்றும் இல்லை. நார்மலாகத்தான் இருந்தார். ஒருவேளை வடிவேலு வகையறாவாக இருக்கவேண்டும். `நாங்க வாங்காத அடியா` என  பழகிப்போயிருக்கும்.

இந்தியன் ரயில்வே இந்த லட்சணத்தில்தான் செயல்படுகிறது. அவ்வப்போது மினிஸ்டர்கள் மாறும்போது நாங்களும் அதை அறிமுகப்படுத்தினோம், இதை செய்தொம் என பில்டப் வகையறத்தானே தவிர, ரயில்வேயின் முதலீடுக்கும் அதன் பிரம்மாண்டத்தையும் ஒப்பிடும்போது புருஷனுக்கு 6 மாசத்துக்கு ஒரு முறை பிடித்ததை செஞ்சி கெடுத்த கதைதான் ரயில்வேயிலும் நடக்கிறது.

மேலும் வரும்.

Tuesday, March 2, 2021

வெள்ளை யானை



என்னடா இது ஆளில்லாத ஊர்ல இந்த ஆள் வந்து திடீர்ன்னு டீக்கடை போடறார்ன்னு நினைக்கறீங்களா? பதிவுலகில் இருக்கும் டிராஃபிக்கை பார்க்கும்போது பதிவு எழுதும் எண்ணமே யாருக்கும் வராது. பல ஜாம்பவான்கள் குட்பை சொல்லிவிட்டார்கள். சிலர் விடாக்கண்டன் கொடாக்கண்டனாக இருக்கிறார்கள்.

நான் இப்படி அவ்வப்போது வருவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஓன்று, `என்னை மன்னார்குடியில கேட்டாக, மாயவரத்துல கேட்டாக...` என்று ஒரு வசனம் வருமே, அதுபோல் என் பதிவுகளை அமெரிக்காவுலேந்து படிக்கிறாக, ஆஸ்திரேலியாவிலிருந்து படிக்கிறாக என்று சொல்லலாம் போலிருக்கிறது. அந்த அளவுக்கு எனக்கு எல்லா கண்டங்களிலும் வாசகர்கள் உண்டு.

இப்படி பல நாடுகளிலிருந்து படிக்கும் வாசகர்கள் ஒரு பதிவை படித்தால் மேலும் 10 பதிவுகளையும் மேய்ந்துவிட்டுதான் போகிறார்கள். அதாவது எனக்கு வாசகர் வட்டம் உண்டு ஆனால் வருமானம்தான் இல்லை. ஆனானப்பட்ட சாரு நிவேதிதாவே `என் அக்கவுண்ட்ல பணம் போடுங்கனு` அவருடைய வலைதளத்தில் சொல்கிறார். நல்ல எழுத்தாளர் என பெயர் வாங்கிய ஞாநி கடைசி காலத்தில் வறுமையில்தான் இறந்திருக்கிறார் போலிருக்கிறது.

பேனாவை எடுத்தவன் உலகை ஆளலாம்னு எவனோ ஒருத்தவன் எங்கேயோ கிறுக்கி வைச்சிருக்கான். சனீஸ்வரன் நம்மை பிடித்தால் இப்படித்தான், பார்க்க கூடாத விஷயங்களை பார்ப்போம், கேட்க கூடாத விஷயங்களை கேட்போம், படிக்க கூடாத விஷ்யங்களையெல்லாம் படிச்சி அதையும் நம்பி வீணாபோய் விடுவோம்.

பிராக்டிகலாக இன்னொரு காரணம் இருக்கிறது. தனிமையை போக்குவதற்கு வேறு வழி இல்லாததுதான். இப்படி உண்மையை பட்டுனு போட்டு உடைக்க வேண்டியதுதானேன்னு நீங்க கேட்கலாம். ஆனால் எழுத்தாளன் இல்லையா, இப்படிதான் ஒரு வரில சொல்ல வேண்டிய விஷயத்தை ஒன்பது வரிகளாக இழுக்க வேண்டும். இது தொழில் தர்மம்.

அதுமட்டுமின்றி, அவ்வப்போது இப்படி நாம் போடும் பதிவுகளை எதிர்காலத்தில் நாமே படிக்கும்போது நாமும் எவ்வளவு மாறியிருக்கிறோம் என்பதை அது நமக்கு காட்டும். அந்த வகையில் இந்த கிறுக்கல்கள் அவ்வப்போது வரும். மூடை பொறுத்தது.

டீக்கடைக்காரர்

முதல் செய்தியே என்னை போல் இங்கே, அதாவது டெல்லியில், இருக்கும் ஒருவரை பற்றியது. இவருக்கும் ஆளில்லாத ஊரில் டீக்கடை போட ஆசை. உண்மையில் அவர் டீக்கடைக்காரரின் மகன்தான். இவர் பேரை சொன்னால் டெல்லியே அதிரும். என்ன செய்வது?  எதிரே இருப்பவர் டம்மி பீஸாக இருப்பதால் இவர் காட்டில் மழை. மிஸ்டர் மோடியை பற்றிய செய்திதான் இது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் போது இங்கே அகமதாபாத்தில் மெட்ரோ டிரைன் மிக விரைவாக, பந்தாவாக, விடப்பட்டது. காரணம் தேர்தல்தான். வெள்ளை யானைக்கு சிமெண்ட் கலர் அடித்து, நாங்கள் உங்களுக்காக என்னென்னெ திட்டங்கள் கொண்டு வந்திருக்கிறோம் பாருங்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டார் மிஸ்டர் மோடி. கடைசியில் அது ஒரு வெள்ளை யானை என்பது, அதாவது இது ஒரு உருப்படாத திட்டம் அல்லது மக்களுக்கு தேவை என ஓன்று இருக்க, அதற்காக இவர்கள் போட்ட திட்டம் தோல்வியில் முடிந்திருக்கிறது என தெரிகிறது.

நான் அடிக்கடி வாக்கிங் போகும் வழியில்தான் இந்த பாதை வருகிறது. ஒரே ஒரு முறைதான் என் கண்ணில் பட்டது. விசாரித்ததில் ஒரு நாளைக்கு நாலே சர்விஸ்தானாம். அதுவும் அந்த பயணமும் 5-10 நிமிட தூரம்தான். போட்ட பணத்துக்கு லாபம் வரவில்லை என்பதைவிட தற்போது நிர்வாக செலவுக்கே எதுவும் தேறாது போலிருக்கிறது. எனவே திட்டம் மேற்கொண்டு விரிவாக்கம் ஆகாமல் ஆமை வேகத்தில் நடக்கிறது. போக்குவரத்து வசதி முக்கியமான ஓன்று. ஆனால் அதை யார் தரவேண்டும், எப்படி தரவேண்டும் என்பதில்தான் மத்திய மாநில அரசுகள் மொக்கையாக சிந்திக்கின்றன.

பல இடங்களில் அவசியமான திட்டங்களுக்கு பணம் இல்லாமல் முடங்கி கிடக்க, இப்படி மொக்கையான திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கடைசியில் பணமும் முடங்கி மக்களுக்கும் அது எந்த ஒரு பலனையும் தரவில்லை. பொதுத்துறை என்பது இப்படித்தான். அதில் 10-ல் 8 வெள்ளை யானைதான்.

பொதுத்துறை என்பது ஒரு காலத்தில் அவசியமாக இருந்தது. சுதந்திரம் அடைந்த போது இந்தியாவில் நிறைய தலைவர்கள் உதை வாங்க/சிறைக்கு போக என போராட்ட தலைவர்கள் இருந்தார்கள்.

வெள்ளையர்கள் நம்மை தொழில்ரீதியாக வளர விடாததால் தொழில் முனைவோர் அப்போது இல்லை. வங்கிகள் மற்றும் வேறு பல கட்டமைப்புகளும் இல்லை. இருந்தாலும் தொழில்வளர்ச்சி அவசியமாக இருக்க, அதை செய்யக்கூடிய நபர்கள் அதிகமாக  இல்லாத நிலையில் அரசே பொதுத்துறை மூலம் அவற்றை செய்யவேண்டிய நிர்பந்தம். எனவே ஆரம்பகட்டத்தில் அரசு பொதுத்துறைகளை ஆரம்பித்தது அந்த கால சூழ்நிலைக்கு சரி. தற்போது நாடு ஓரளவு வளர்ந்துவிட்டது.இனி தொழில்களை தனியார் துறையினர் பார்த்துக் கொள்வார்கள். அரசாங்கம் வழிகாட்டுதலோடு மிக மிக அவசியமான இடங்களில் மட்டும் முதலீடு செய்தால் போதும்.

அரசு துறைகள் லாப நோக்கில் செயல்படாது என்பது உண்மைதான். ஆனால் அங்கே நிர்வாகம் என்பது ரொம்ப சிக்கலான ஓன்று. அங்கே நிர்வாகிகளால் முடிவெடுக்க முடியவில்லை. ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு நாம் என்ன தொழில் செய்கிறோம், இங்கே மேலும் என்ன செய்யலாம் என புரிந்து அவர் செயல்பட ஆரம்பிக்கும்போது அவரை வேறு இடத்துக்கு மாற்றி விடுகிறார்கள். அடுத்த அதிகாரி மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்கிறார்கள்.

இன்னொருபக்கம் அரசியல்வாதிகளுக்கு இது ஊழலின் இன்னொரு கதவு. அவசியமோ இல்லையோ வேண்டியவர்களுக்கு பணம் வாங்கிக்கொண்டு அல்லது கட்சிக்காரர்களுக்கு அவர்களுடைய விசுவாசத்துக்கு பரிசு என தேவையில்லாத வேலையை உருவாக்கி அந்த நிறுவனத்தை நாசமாக்கிவிடுகிறார்கள். இன்னும் பல சொல்லலாம். ஆனால் மக்களுக்கு இதை புரிய வைப்பது சிரமம். அதற்கு நமக்கு அபாரமான அறிவு வேண்டும். என்னிடம் அது இல்லாததால் அடுத்த செய்திக்கு தாவுவோம்.

இது அதைவிட மோசம்

சமீபத்திய கோரோனோவின் மிகப்பெரிய பாதிப்பு போக்குவரத்துதான். கொரானாவுக்கு முன் ஷேர் ஆட்டோவில் குறைந்த கட்டணம் இங்கே 5 ரூபாயாக இருந்தது. சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என இரண்டு பேருக்கு மேல் ஆட்டோவில் ஏற்றக்கூடாது என கட்டுப்பாடுகள் வர, அது 10 ரூபாயாக மாறியது. அதன்பின் நிலைமை சீரானாலும் மரத்தில் ஏறிய வேதாளம் இறங்க மறுக்கிறது. இனி இறங்கவும் மாட்டார்கள்.

ஒரு பயணத்தில் ஒரு பயணி சொல்லிக்கொண்டிருந்தார். அவர் வேலைக்கு போக மூன்று ஆட்டோ ஏற வேண்டுமாம். அந்த வகையில் அவருக்கு போக - வர மாதம் 1500 செலவு. அவருடைய சம்பளத்தில் இது 10 சதவிகிதம். விரைவில் டு வீலர் வாங்க போகிறாராம். (போக்குவரத்தை பொறுத்த வரையில் தமிழ்நாடு பரவாயில்லை. ஓரளவு தனியார் பங்களிப்பு இருக்கிறது.)

இப்படி பிச்சைக்காரர்கள் முதற்கொண்டு வண்டி வாங்கும் அளவுக்கு சூழ்நிலைகளை உருவாக்கிவிட்டு, அதன்காரணமாக டிராஃபிக் சிக்கல், சுற்று சூழல் மாசுபடுதல் என பல தலைவலிகள் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் இதன் காரணமாக பெட்ரோல் உபயோகம் அதிகரிக்க அது அரசுக்கும் தலைவலி, பெட்ரோல் விலை உயர்வால் மக்களுக்கும் தலைவலி. அதற்கு தீர்வு என்று அரசாங்கம் இப்படி உருப்படாத திட்டங்கள் போட்டு அதுவும் தலைவலி. கஷ்டம்டா சாமி.

அற்புதமான புத்திசாலிகள்

இந்தியர்கள் அற்புதமான புத்திசாலிகள். பல வருடங்களுக்கு முன் ஒரு முறை தியேட்டரில் டிக்கெட் வாங்க வரிசையில் நின்றிருந்தேன். பலர் குறுக்கே புகுந்து டிக்கெட் வாங்கி கொண்டிருந்தனர். வரிசையில் நின்றிருந்த பலருக்கு கோவம் வர சண்டை ஆரம்பித்தது. டிக்கெட் கவுண்டரில் புகார் செய்தால், அவர் கவுண்டர் கதவை மூடிவிட்டு `எல்லோரும் வரிசையில் வாங்க, அப்பத்தான் டிக்கெட் கொடுப்பேன்` என்று நீதியை நிலைநாட்டி விட்டார்.

குறுக்கே புகுந்த அவர்களை கண்டித்து விட்டு வரிசையில் வருபவர்களுக்கு டிக்கெட் கொடுப்பார்  என்று பார்த்தால், அவர்களுக்கும் டிக்கெட் இல்லையாம், வரிசையில் இருந்த எங்களுக்கும் டிக்கெட் இல்லையாம். இந்தியாவில் இப்படித்தான் கிறுக்குத்தனமாக முடிவெடுப்பார்கள். அதன்பின் பலர் என்ன முடிவெடுத்திருப்பார்கள்?  ஊரோடு ஒத்து போயிருப்பார்கள். அதுதான் நடந்திருக்கும்/ நடந்துகொண்டிருக்கிறது. அதாவது தவறான பாதைதான் இனி சரியான பாதை நமக்கு அவர்கள் சொல்லித்தருகிறார்கள். நாமும் அதை பின் தொடர்கிறோம். இப்படிப்பட்ட முட்டாள்தனமான நிர்வாகிகளால் இந்தியா மெல்ல மெல்ல சீரழிந்துகொண்டிருக்கிறது.

அதே காட்சி 

இங்கே அகமதாபாத்திலும் இப்படி ஒரு சம்பவம். இந்த குஜராத்தியர்கள் பெற்ற தாயை கூட எட்டி உதைப்பார்கள் ஆனால்  கோமாதாவுக்கு இவர்கள் கொடுக்கும் இருக்கும் மரியாதையே தனி. இங்கே தெருவில் மாடுகளுக்கு இருக்கும் சுதந்திரம் மனிதர்களுக்கு கூட கிடையாது. இப்படி உலாவும் மாடுகளில் பட்டா போட்டவை, போடாதவை  என இரண்டு விதம் உண்டு.

இங்கே ரபாரிகள் அதாவது இடையர்கள் செய்யும் கொடுமை வேறுவிதம். மாடுகளிடம் பாலை கறந்துவிட்டு அவற்றை வெளியே அனுப்பிவிடுவார்கள். அவை வெளியே தெருவெல்லாம் மேய்ந்து வயிற்றை நிரப்பிக்கொள்ள வேண்டும். பாலை மட்டும் இவர்களுக்கு கொடுத்துவிட வேண்டும். இது என்னவிதமான புண்ணியமோ? எனக்கு ஒன்றும் புரியவில்லை. பால் கறக்கும் நேரம் மற்றும் இரவு நேரங்களில் மட்டும் அட்டகாசமாக டூ வீலரில் வந்து மாடுகளை அழைத்து செல்வார்கள். அவைகளுக்கு இரவுநேர லாட்ஜிங் வசதி மட்டும் உண்டு போலிருக்கிறது.

இங்கே இந்த ரபாரிகளின் வீடுகளும் பிரமாண்டமாக இருக்கும். ஆண்களும் சரி பெண்களும் சரி எல்லாம் வாளிப்பாக இருப்பார்கள். நான் இந்த பதிவுக்காகத்தான் ரபாரி பெண்களை உற்று பார்த்தேன். வேறு எந்த காரணமும் இல்லை. மாடுகளால் இவர்களுக்கு வருமானம் ஆனால் செலவுகள் இல்லை. அதுதான் இந்த செழிப்புக்கு காரணம்.

சரி இனி விஷயத்துக்கு வருவோம். இப்படி மாடுகள் தெருக்களில் சுற்றுவதால் ஒரு பிரச்சினை. இங்கே அரசு, `ஸ்வச்ச பாரத்` என சுத்தத்துக்கு முன்னுரிமை கொடுத்து பல இடங்களில் சின்னதும் பெரியதுமாக குப்பை தொட்டிகளை வைத்தது. அதில் மக்கும் குப்பை இதில் போடவும், மக்காத குப்பைகளை மற்றதில் போடவும் என வசனம் வேறு எழுதி வைத்தார்கள்.

ஆனால் மாடுகளுக்கு இதெல்லாம் தெரியுமா? அவற்றுக்கு யார் மீது கோபமோ, குப்பை தொட்டி ஒரு பக்கம், குப்பைகள் வேறு பக்கம் என எல்லாவற்றையும் கதகளி ஆடிவிடும். விளைவு ரோடு நாசமாக காட்சி அளிக்கும். நம் நாட்டின் அற்புதமான நிர்வாகிகள் இதற்கும் ஒரு அற்புதமான வழி கண்டுபிடித்தார்கள். இப்படி குப்பை தொட்டிகள் இருப்பதால்தானே மாடுகள் இப்படி செய்கின்றன இனி குப்பை தொட்டியே வைக்க கூடாது என எடுத்துவிட்டார்கள்.

என்னிடம் ஒரு முறை குப்பை சேர்ந்துவிட நான் தெருவை அசுத்தப்படுத்த கூடாது என குப்பை தொட்டியை தேடி தேடி களைத்துப்போய் அப்படியே தூக்கி வீசினேன். எதிரே ஸ்வச்ச பாரத் என வசனம் எழுதி, ஒருவேளை படிக்காதவனுக்கு எப்படி புரியும் என ஒரு குப்பைத்தொட்டி படம் வரைந்து அதில் குப்பையை எப்படி போட வேண்டும் என படம் போட்டு விளக்கியிருந்தார்கள். அதாவது படத்தில் குப்பை தொட்டி இருக்கிறது ஆனால் தெருக்களில் இல்லை.

இந்தியா விளங்கிடும். கிறுக்கு பயல்கள் நிறைந்த நாட்டில் நாமும் கிறுக்காகவே நடந்து கொள்ளவேண்டும்.