!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Friday, March 26, 2021

`சின்னப்புள்ள` சீமான்


எப்போதாவது சீமானின் பேச்சை கேட்பதுண்டு. அப்படி ஒரு முறை கேட்டபோது `எதற்கய்யா 8 வழி சாலை.. வீட்டுக்கு சீக்கிரம் போய் என்ன பண்ணப்போற?` என கோபமாக கர்ஜித்தபோது, நான் அதிர்ச்சியானேன்.

பொருளாதாரத்தை தொடர்ந்து கவனிப்பவர்களுக்கு இது புரியும், உள்கட்டமைப்பு சரியாக இருந்தால்தான் எந்த ஒரு நாடும் வளம் பெறமுடியும் என்பதை. இந்த உள்கட்டமைப்பில் பல வழி சாலைகளும் ஓன்று. அப்போதே எனக்கு கோவம் வந்து ஒரு பதிவை எழுதவேண்டும் என நினைத்தேன். வழக்கம்போல் டிஃபரஷன் வந்து நின்றுவிட்டது.

சமீபத்தில் தேர்தல் பரப்புரையில் தொலைக்காட்சி நெறியாளர்களுக்கு ஒரு அறிவுரை சொன்னார். `எடப்பாடி, ஸ்டாலின், கமல் மற்றும் என்னை கூப்பிட்டு விவாதம் வையுங்கள், யார் ஜெயிக்கிறார் என பாப்போம்` என சவால் விட்டார். இவர் நன்கு வாயை வளர்த்து வைத்திருக்கிறார். அந்த நம்பிக்கை இவரை இப்படி வாயாட வைத்திருக்கிறது.

ஆனால் இவரின் வாய் சவடாலை கேட்டபோது எனக்கு கோபமும் வந்தது கூடவே இந்த நாட்டின் எதிர்காலம் குறித்து அவநம்பிக்கையும் வந்தது. இப்போதைக்கு இந்தியாவில் இரண்டுவிதமான தலைவர்கள்தான் கண்ணுக்கு தெரிகிறார்கள். ஊழல்வாதிகள் மற்றும் சீமானை போன்ற அரைவேக்காடுகள்.

இதில் துரதிர்ஷ்டம் என்னவென்றால் இவரை போன்ற நபர்கள் வார்த்தை ஜாலங்களில் அற்புதமாக, வசீகரமாக இருக்கிறார்கள். ஒருவகையில் நேர்மையான அரசியல்வாதி என்ற தோற்றமும் தெரிகிறது. அது ஒருவகையில் உண்மையாகவே இருக்கக்கூடும்.

ஆனால் எதார்த்தம் புரியாத, புத்திசாலித்தனம் இல்லாத நேர்மை யாருக்கும் பயன்படாது. மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு என்றோரு நேர்மையான மனிதர் இருந்தார். 23 வருடங்கள் தொடர்ந்து ஆட்சி புரிந்தார். அவருக்கு பிறகு வந்த புத்ததேவ் பட்டாச்சார்யா மற்றும் மம்தா பானர்ஜியும் நேர்மையான, எளிமையான மனிதர்களே. அவர்களின் ஆட்சியையும் 20 ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால் என்ன பயன்?

சமீபத்திய கொரோன லாக் டவுனில் ஒரு கவனிக்கத்தக்க செய்தி. இந்த லாக் டவுன் காரணமாக புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் கணிசமானவர்கள் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள். இந்த பரிதாபத்தை என்னவென்று சொல்வது? 40 ஆண்டுகால நேர்மையான தலைவர்களின் ஆட்சி இவர்களை எந்த நிலைமையில் வைத்திருக்கிறது.

இன்னொரு நேர்மையான தலைவரான ஒடிசாவின் நவீன் பட்நாயக் கதையும் அப்படிதான் இருக்கிறது. புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் கணிசமானவர்கள் ஒடிஷாவை சேர்ந்தவர்களும் அடக்கம்.

இங்கே நேர்மையான தலைவர்கள் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவில்லை. ஆனால் தமிழகம் கழங்களின் ஊழலில் சிக்கி தவித்தாலும், வளர்ச்சியில் தமிழகம் மற்ற மாநிலங்களை விட முன்னணியில்தான் இருக்கிறது.

இது ஒரு வினோதமான சூழ்நிலை. ஊழல்வாதிகள் வளர்ச்சியை கொடுக்கிறார்கள். நேர்மையானவர்கள் மக்களை வறுமையில் வைத்திருக்கிறார்கள். இதை எப்படி புரிந்து கொள்வது? அல்லது ஓரளவு புரிந்தாலும் இதை மற்றவர்களுக்கு புரியவைப்பது அதைவிட சிரமம்.

இங்கே ஒரே செய்திதான். ஊழல்வாதிகள் ஆபத்தானவர்கள்தான், ஆனால் அதைவிட ஆபத்து இப்படி நேர்மையை மட்டும் தகுதி என நினைத்துக்கொள்ளும் முட்டாள் தலைவர்கள்.

இதற்கு ஒரு கதை இருக்கிறது. கணவனை இழந்த ஒரு அம்மா தன் இரு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தார். வேலைக்கு போய் குடும்பத்தை நடத்தினார். ஓரளவு பொருளும் இருந்தது. இவரும் சம்பாதித்து சேமித்தார்.

காலத்தின் கொடுமை இவரின் ஒரு பிள்ளையை ஊதாரியாக மாற்றியது. இன்னொரு பிள்ளை உலகம் புரியாத அப்பாவியாக இருந்தது. பெரிய பிள்ளை அவ்வப்போது வீட்டிலேயே திருட ஆரம்பித்தான். அக்கம் பக்கத்தில் இதை சொல்லி அந்த அம்மா புலம்புவது வழக்கம். சின்னப்புள்ள அப்பாவியாக இருந்தாலும் அந்த பிள்ளை மீது அந்த அம்மாவிற்கு நம்பிக்கை.

ஒருநாள் அந்த அம்மா தன்னுடைய சின்னபுள்ளையை செமத்தியாக அடித்து கொண்டிருந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சி. தன்னுடைய திருட்டு புள்ளையை கூட இவர் இப்படி அடித்ததில்லையே என ஆச்சர்யம். `பெரியவனாவது 100-200 திருடுவான். இவன் என்னை நடுத்தெருவுல கொண்டுவந்து நிறுத்திட்டானே` என கத்திக்கொண்டிருந்தார்.

நடந்தது இதுதான். வீட்டில் இந்த சின்னப்புள்ள தனியாக இருந்தபோது கணவன் மனைவி போல் இருவர் வந்திருக்கின்றனர். திருடர்கள். இவர்களை பற்றிய விவரம் தெரிந்து வைத்திருக்கிறார்கள். `உங்கப்பா போன பிறகு உங்கம்மா ரொம்ப கஷ்டப்படறாங்க என வார்த்தைகளை அள்ளி வீசியிருக்கிறார்கள். கடைசியில், `வரும்போது உனக்காக பிஸ்கட் வாங்க மறந்துட்டோம். நீயே போய் உனக்கு பிடித்ததை வாங்கிக்கொள்` என சொல்ல, அந்த சின்னப்புள்ள காசை வாங்கிக்கொண்டு சிட்டாய் பறந்தான். இவர்களும் வீட்டில் கிடைத்தை வாரிக்கொண்டு கிளம்பிவிட்டார்கள்.

இப்படித்தான் உலகம் வித்தியாசமாய் இருக்கும். இங்கே அயோக்கியர்களை விட முட்டாள்கள் மிக ஆபத்தானவர்கள் என்பதையும் மக்கள் உணர வேண்டும்.

இங்கே இரண்டு கழகங்களின் அழிவை ஆவலுடன் எதிர்பார்க்கும் எனக்கு, அதற்கு மாற்று என வரும் இந்த சின்னப்புள்ள கமல்,சீமான் போன்றவர்களின் அரசியலை பார்த்தால் அதுவும் பயமாக இருக்கிறது.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை நேர்மையான அதே சமயம் திறமையான தலைவர்கள் தெரியவில்லை. இப்போதைக்கு எனக்கு ஒரே சந்தோசம், தமிழ்நாட்டில் எனக்கு ஓட்டு இல்லை.

Tuesday, March 16, 2021

வாலை ஆட்டும் மனிதர்கள்


சமீபத்தில் இரண்டு விஷயங்களை கவனிக்க நேர்ந்தது. ஓன்று, பதிவர் ஜோதிஜி அரசு ஊழியருக்கு (ஆசிரியர்) ஆதரவு தரும் தொனியில் ஒரு பதிவு எழுதினார். மற்றொன்று விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் கோபிநாத் இதே போன்று அவர்களுக்கு தரும் சம்பளத்தை நியாயப்படுத்தும் விதத்தில் பேசினார்.

இவர்களின் இந்த கருத்தில் எனக்கு உடன்பாடில்லை என்பது ஒருபக்கம் இருந்தாலும் இவர்கள் ஏன் இப்படி பேசுகிறார்கள் என்று ஆராய்ந்தால் அனேகமாக ஒரே பதில்தான் வரும். அதாவது இவர்களின் பெற்றோர்கள் அரசு ஊழியராக இருந்திருக்கக்கூடும். எனவே இவர்கள் கர்ணனாக இருக்கிறார்கள்.

ஜெயலலிதாவுக்கு அதிமுகவினரும் கலைஞருக்கு திமுகவினருக்கு கோவில் கட்டுவார்கள், காரணம் மக்களுக்கு அவர்கள் சேவை செய்தார்கள் என்பதால் அல்ல, ஏதோ அவர்களால் நாங்கள் வளம் பெற்றோம் என்பதுதான் காரணம். இது ஒரு உளவியல் சிக்கல்.

ஆனால் நிஜம் என்ன? அவர்களுக்கு அளவுக்கு மீறிய சம்பளம் கொடுக்கப்படுகிறது என்பதுதான் உண்மை. இது ஏன் நடந்தது, எப்படி நடந்தது?

இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. அந்த சிக்கலை புரிந்துகொள்ள வாங்க இனி சில எதார்த்தமான சம்பவங்களை பார்ப்போம்.

தனிக்குடித்தனம்

கடலூரில் நான் கடை வைத்திருந்த இடம் பாடலீஸ்வரர் கோவில் தெருவில். இங்கே எனக்கு நான்கு விதமான சிக்கல்கள் இருந்தன. முதல் தலைவலி பிச்சைக்காரர்கள். 15 நிமிடங்களுக்கு ஒரு முறை இவர்கள் வந்துகொண்டே இருப்பார்கள். ஆரம்பத்தில் புண்ணியம் தேடுவோம் என ஆரம்பித்தாலும் போக போக சலிப்பு தட்டிவிடும். இந்த தலைவலி எனக்கும் வந்தது. எனவே மூடுக்கு தகுந்தபடி போடுவேன், பல சமயம் துரத்திவிடுவேன்.

இரண்டாவது, ஆடிமாச தலைவலி அல்லது இந்த போலி பக்திமான்களின் தலைவலி. ஆடிமாசம் வந்துவிட்டால் கையில் ஒரு நோட்டீஸோடு வந்துவிடுவார்கள். ஒவ்வொரு தெருவுக்கு ஒரு கோவில்  என கடவுளையே தனிக்குடித்தனம் வைத்துவிடுவார்கள். இங்கே பாடலீஸ்வரர் இருக்கிறார், இது புராதனமான பெரிய கோவில், இங்கே போய் வந்தால் நிஜமான கோவிலுக்கு போன உணர்வு வரும்.

ஆனால் இவர்களுக்கு தனியாக கோவில் தேவை. ஒருவேளை கடவுளை இவர்கள் வேறு பெயர் கொண்டு கூப்பிட விரும்பலாம். சரி இது அவர்கள் உரிமை என்றே வைத்துக்கொள்வோம், அதற்கு அவர்கள் தெருவிலேயே வசூலை வைத்துக்கொள்ள வேண்டியதுதானே? வெளிஊருக்கெல்லாம் போய் வசூல் செய்வார்கள். காரணம் அடுத்தவர்கள் பணத்தில் நான் அதை செய்தேன் இதை செய்தேன் என பெருமை கிடைக்கும்.

இப்படி தெருவுக்கு ஒரு கோவில் என எத்தனை தெருக்கள் ஒரு நகரில் இருக்கும். எல்லோருக்கும் பணம் கொடுக்கவா முடியும்? மறுத்தால் `கோவிலுக்கு இல்லைன்னு சொல்லாதீங்க அதுல புண்ணியம் கிடைக்கும்` என்று இப்படி இந்த வசூலில் போனால் நமக்கு டீ கிடைக்கும் என கூட வரும் சில அல்லக்கைகள் வசனம் பேசும்.

அப்போதே நான் நினைத்தேன். மனிதர்களுக்கு குடும்ப கட்டுப்பாடைபோல் கடவுளுக்கும் வைக்கவேண்டும் என்று. அதாவது ஒரு ஊருக்கு ஒரு போலீஸ் ஸ்டேஷன் என்பதுபோல், குறிப்பிட்ட ஏரியாவிற்கு ஓன்று அல்லது  சில கோவில்கள்தான் இருக்கவேண்டும் என சட்டம் கொண்டு வரவேண்டும் என்று.

இந்த தலைவலி இந்த பதிவின் கிளை செய்திதான். இனி முக்கியமான செய்திக்கு வருவோம். இங்கே இன்னும் இரண்டு தலைவலிகள் இருந்தன. ஓன்று அரசியல் கட்சிகள், இன்னொன்று ஆதரவற்றோருக்கு சேவை செய்யும் தொண்டு நிறுவனங்கள்.

பெரிய அரசியல் அக்கட்சிகள் நம்மிடம் (சிறுவியாபாரிகள்) வரமாட்டார்கள். ஆனாலும் அதற்கு  அடுத்த நிலையில் இருப்பவர்கள் வருவார்கள். கிட்டத்தட்ட ரவுடிகள்தான். 10 பேர் ஒன்றாக வருவார்கள் `மக்களுக்காகவே போராடுகிறோம், அதற்காகவே நன்றாக சாப்பிட்டு உடம்பை வளர்த்து வைத்திருக்கிறோம் என `காட்டிக்`கொள்வார்கள். `இல்லை` என சொல்ல முடியாது. நாளை ஏதாவது பிரச்சினை என்றால் என்ன பண்ணுவார்கள் என தெரியாது. எனவே 100-200 என் அப்போதைய சூழ்நிலைக்கு வேண்டாவெறுப்பாக தருவோம்.

சிலசமயம் அனாதை ஆசிரமம் நடத்துகிறோம் என சிலர் வருவார்கள். இவர்களிலும் மோசடி பேர்வழிகள் இருக்கலாம். ஆனால் தோற்றம், பேச்சு நம்பும்படியாகவும், தன்மையாகவும் இருக்கும். ஆனால் மேலே சொன்ன பல தலைவலிகளை பார்த்து சலித்துப்போய் இருப்போம். இவர்கள் பலவீனமானவர்கள் என்பதால் 10-20 கொடுத்து அனுப்புவோம்.

கவனிக்கவும் பலம் பொருந்தியவர்களுக்கு, மிரட்ட கூடியவர்களுக்கு அதிகம். கொடுப்பதை வாங்கிக்கொள்ளும் எளியவர்களுக்கு குறைவு. ஆனால் தேவை எல்லோருக்கும்தான். இதுதான் எதார்த்தம்.

அரசு வேலைக்கு `விலை`

அரசு ஊழியர்கள் விஷயத்திலும் இதுதான் நடந்திருக்கிறது. இந்தியாவில் ஏழ்மையும் தேவையும் எல்லா இடத்திலும் இருக்கிறது. ஆனால் இங்கே அரசு ஊழியர்கள் பலமாக இருக்கிறார்கள், ஸ்ட்ரைக் செய்து அரசை மிரட்டும் அளவுக்கு சங்கமும், பலமும் இருக்கிறது. எனவே அவர்கள் வருடா வருடம்  அதை சாதித்துக்கொண்டு அவர்களுடைய சம்பளத்தை இந்த அளவுக்கு கொண்டுவந்து நிறுத்திவிட்டார்கள். பலமில்லாதவர்கள் கிடப்பதை வைத்துக் கொண்டு வறுமையில் வாடுகிறார்கள். இதுதான் தமிழ்நாட்டின் இன்றைய நிலை.

இங்கே இன்னொரு காரணமும் இருக்கிறது. பொதுவாக ஒருவன் திருடப்போனால் நகை பணம் மட்டும்தான் திருடுவானா, மொபைல் போனோ அல்லது வேறு விலை உயர்ந்த பொருள் இருந்தால் அதையும்தானே திருடுவான்? அந்த எதார்த்தம்தான் அரசு நிர்வாகத்திலும் நடக்கிறது.

அமைச்சர்கள் திட்டங்களில் கமிஷன் அடிப்பார்கள். மேலும் பல ல ல  ல  இடங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் அரசு வேலைக்கு `விலை` நிர்ணயம் செய்வது. அரசு சம்பளம் என்பது சந்தையின் டிமாண்ட் அன்ட் சப்ளை என்ற அடிப்படையில் இருந்தால் அவர்களுக்கு ஒன்றும் தேறாது. அது valuable ஆக இருந்தால்தான் அதற்கு premium அதிகமாக கிடைக்கும்.

அதாவது 20000 சம்பளம் என்றால் வேலை உத்திரவாதம் என்ற அடிப்படையில் பலர் விரும்பினாலும், அதற்கு அதிக விலை நிர்ணயம் செய்ய முடியாது. என்னிடம் ஒருவர் (15 வருடம் முன்பு) பேசினார். அரசு வேலைக்கு 3-5 லட்சம் கேட்கிறார்கள். ஒரு வருஷம் சம்பளம் நமக்கில்லைன்னு நினைச்சுக்க வேண்டியதுதான். அதற்குபின் நாம் நிம்மதியாய் இருக்கலாம் என்பது அவருடைய பிளான்.

இதற்கத்தான் இவர்கள் சம்பளத்தை உயர்த்தி இருக்கிறர்கள் என்று சொல்லமுடியாது. ஆனால் நிர்வாக கோளாறில் இப்படி தனியார் துறைக்கும் அரசு துறைக்கும் சம்பளம் வித்தியாசமாக இருக்கிறது என்பதையும், வறுமையில் மக்கள் இருக்க, அரசு நிதி இப்படி அநியாயமாக போகிறது என்பதை கவனித்து அவர்கள் அதை சரி செய்யவேண்டும். ஆனால் செய்யமாட்டார்கள். இது அவர்களின் வருமானத்தை குறைத்துவிடும்.

தற்போது பல கட்டுப்பாடுகள் வந்துகொண்டிருக்கலாம். ஆனால் இன்னமும் அரசு வேலை என்பது மக்களின் கனவாக இருக்கிறது என்றால் அது ஒரு அமுதசுரபியாக இருக்கிறது என்பதுதான் உண்மை.

சந்தைக்கு போகலாமா

அப்படியே நாம் இன்னொரு லாஜிக்கையும் பார்த்துவிடுவோம். உங்களில் பலர் சந்தைக்கு காய்கறி வாங்க அடிக்கடி போவீர்கள். அதே காய்கறியை உங்கள் தெருவிலேயே ஒரு மளிகை கடைக்காரர் விற்பார். அவசரத்துக்கு நாம் அங்கே சிலவற்றை வாங்கலாம். ஆனால் பெரும்பாலோனோர் என்ன செய்வார்கள்? சந்தைக்குத்தான் போவார்கள். அங்கே காய்கறிகள் சற்றே விலைகுறைவாக கிடைக்கும்.

அங்கே விலை குறைவாக இருக்கிறது என்பதால் அவற்றின் தரம் குறைவாக இருக்கும் என நினைக்கமுடியாது. இரண்டு வியாபாரிகளுமே தமிழர்தான். அங்கே விற்பவர் நஷ்டத்துக்கு விற்கவில்லை. அவரும் நன்றாக சம்பாதித்துக்கொண்டுதான் இருக்கிறார். இந்த எதார்த்தம் அரசு ஊழியர்கள் விஷயத்தில் ஏன் பிரதிபலிப்பதில்லை?

இன்று அரசு ஊழியருக்கு கொடுக்கும் சம்பளத்தை கணிசமாக குறைத்து கொடுத்தாலும் வேலை செய்ய ஊழியர்கள் இருக்கிறார்கள். அவர்களும் தமிழர்கள்தான். வேலையும் தரமாகத்தான்  இருக்கும்.

ஒருபக்கம் தங்கள் பலத்தை காட்டி மிரட்டி சாதிக்கும் அரசு சங்கங்கள் ஒருபக்கம், இப்படி நல்ல சம்பளம் இருந்தால்தான் நாம் இதை நல்ல விலைக்கு `விற்க` முடியும் என கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசியல்வாதிகள் இந்த பக்கம் என இருப்பதால்தான் இந்த நிலைமை.

இது காலத்தின் கொடுமை. வேறு என்ன சொல்வது?

Saturday, March 6, 2021

எதை நம்புவது?



சசிகலா அரசியலுக்கு வரவில்லையாம். உறுதியாக சொல்லிவிட்டார். சிலமாதங்களாக நான் இதைத்தான் கணித்தேன். ஆனால் பத்திரிக்கை செய்திகள் நம்மை அநியாயத்துக்கு குழப்பிவிட்டன.

சினிமாவையும் மிஞ்சிய திரைக்கதைகளை பத்திரிக்கைகள் எழுதின. சசிகலா விடுதலையாகி தற்போது பிரம்மனை நோக்கி ஒரு வார கடுந்தவம் இருக்கிறார். இந்த ஒரு வார தவத்துக்கு மிரண்டு பிரம்மன் அவருக்கு ஏதாவது வரம் கொடுப்பார், அதை வாங்கிக்கொண்டு சசிகலா அதிரடியாக களம் இறங்குவார் என ஒரு பக்கம். (நாமும் இப்படி ஏதாவது கொளுத்தி போடுவோம்)

இன்னொரு பக்கம் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பதில் பிஜேபி உறுதியாக இருக்கிறது. சமீபத்தில் சென்னை வந்த அமித்ஷா ஒரு ஓட்டலுக்கு எடப்பாடியை வரவழைத்து, சசிகலாவை உங்கள் கட்சியில் சேர்த்தால்தான் நான் இங்கே சாப்பாட்டில் கைவைப்பேன் இல்லையென்றால் ஒரு மணிநேர உண்ணாவிரதம் இருப்பேன் என அவர் எடப்பாடியை மிரட்டினாராம். இந்த மிரட்டலால் அதிர்ந்துபோன எடப்பாடி, வேண்டுமென்றால் பிஜேபிக்கு சீட் அதிகமாக தருகிறோம் அதில் அ ம மு க விற்கு உள் ஒதுக்கீடாக நீங்கள் ஒதுக்குங்கள் என கெஞ்சினாராம். எப்படியெல்லாம் செய்திகள்!

இந்த செய்திகளையெல்லாம் படித்துவிட்டு மறுநாள் பத்திரிகைகளை பார்த்தால் சசிகலாவின் இந்த அறிக்கை. தலைவலிதான் வருகிறது. இனி பத்திரிக்கை செய்திகளை pinch of salt என்ற அடிப்பையில்தான் படிக்கவேண்டும் போலிருக்கிறது.

சரி, என்னதான் நடந்திருக்கும்? இனி நமக்கிருக்கும் சுமாரான அறிவின் அடிப்படையில் நாமே ஓரளவு கணிக்க வேண்டியதுதான்.

தமிழ்நாட்டில் கழகங்கள் ஊழலில் ஊறிப்போய் மூழ்கிப்போன கட்சிகள். ஆனால் மத்திய அளவில் பிஜேபியோ, காங்கிரஸோ இவர்கள் அளவுக்கு மோசம் இல்லை என்பதுதான் என் கருத்து. அவர்கள் (காங்கிரஸ், பிஜேபி ) ஊழலை ஆதரிக்கவில்லை. இந்திய அரசியல் நிர்பந்தம் அவர்களை இந்த விஷயத்தில் அனுசரித்து போகவைக்கிறது. இதை பற்றி எழுத ஆரம்பித்தால் அது வேறு ஒரு நீண்ட பதிவில் போய் நிற்கும்.

இந்த பதிவை எழுதும் போதே சற்று ரிலாக்ஸ்டாக உலக செய்திகளை பார்ப்போம் என பார்த்தால் ஒரு செய்தி என் கவனத்தை ஈர்த்தது. தலைப்பே வித்தியாசம். Why clean hands turn corrupt in Indonesia https://asiatimes.com/2021/03/why-clean-hands-turn-corrupt-in-indonesia/ என்று தலைப்பு. உலகம் முழுக்க இதுதான் நிலைமை. எனவே ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன என்ற காரணத்துக்காக மத்திய தலைவர்களை தவறாக நினைக்க வேண்டாம். அவர்களுக்கு பல தலைவலிகள். எனவே இதை விட்டுவிட்டு இந்த சசிகலா விஷயத்தை மட்டும் பார்ப்போம்.

இங்கே பிஜேபியை பொறுத்தவரையில் தனது கை சுத்தமாக இருப்பதாகத்தான் காட்டிக் கொள்ளும், அல்லது அப்படி நடிக்கும். அப்படி இருக்கையில் ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்று வந்தவரை ஆதரிப்பதாக காட்டிக்கொள்ளுமா? அது வேறு ஒரு கட்சியின் தலைவலியாக இருந்தாலும், அவர்களுடன் கூட்டணி இருக்கையில் அப்படி ஒரு பிம்பத்தை உருவாக்க ஒருபோதும் விரும்பாது.

இது எதிர்கட்சிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துவிடும். தேர்தல் பிரச்சாரங்களில் இது அதிமுகவிற்கு,பிஜேபிக்கு பெரும் தலைவலியாக உருவாகியிருக்கும். தண்டனை பெற்றவர் 5 ஆண்டுகளில் மக்களால் மன்னிக்கப்பட்டு அல்லது மறக்கப்பட்ட நபராக இருந்தாலும் பரவாயில்லை. இப்படி சுடச்சுடவா அவரை முன்னிலைப்படுத்தும். அதற்கான வாய்ப்பே இல்லை. ஆனால் பிஜேபி அப்படி செய்வதாக ஒரு பிம்பத்தை பத்திரிகையாளர்கள் உருவாக்கியிருந்தார்கள். அல்லது ஏதோ ஒரு காரணத்துக்காக பிஜேபி இப்படி ஒரு செய்திகளை உலவ விட்டிருக்க வேண்டும். அதை இவர்களும் நம்பி மக்களையும் முட்டாளாக்கியிருக்கிறார்கள்.

இங்கே எடப்பாடியார் சொன்ன ஒரு விஷயம் உண்மையாக இருக்கக்கூடும். `டோன்ட் இன்குளுட் தட் லேடி இன் யுவர் பார்ட்டி` என பிரதமர் சொன்னதாக எடப்பாடி சொல்லியிருந்தார். அதுதான் உண்மை.

அப்படியென்றால் அவர் சிறையில் இருக்கும்போதே அவரை மிரட்டி அமைதியாக வெளியே அனுப்பியிருக்கலாமே? பிஜேபிக்கு பல மாநில தலைவலிகள். அமித்ஷாவிற்கு கிடைப்பதெல்லாம் இவர் சொன்ன தகவல்கள் அவர் சொன்ன தகவல்கள் என `சொல்லப்படும்` தகவல்கள் மற்றும் உளவுத்துறைகள் கொடுப்பவை போன்றவை. இவற்றை முழுவதும் நம்பமுடியாது.

சசிகலாவின் பலம் என்ன என்பதை தெரிந்து கொள்ள பிஜேபி காத்திருந்திருக்கலாம். எத்தனை எம் எல் ஏக்கள்/ மந்திரிகள் அவர் பக்கம் திரும்புகிறார்கள் என்பதை உறுதியாக தெரிந்து கொள்ள இந்த காலஅவகாசம் அவர்களுக்கு தேவைப்பட்டிருக்கும்.

இந்தியாவில் ஒரு அதிகாரமையம் உருவாகிவிட்டால், எல்லோரும் அதைத்தான் சுற்றுவார்கள் என்பது எடப்பாடி விஷயத்தில் உறுதியாகிவிட்டது. எனவே இனி சசிகலா தனியாக களம் கண்டால் அது ஓட்டுக்களை பிரித்து அதிமுகவின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்பதால், அடிக்கவேண்டிய ஆணியை அடித்து பிஜேபி சசிகலாவை அமைதியாக்கிவிட்டது. இதுதான் நடந்திருக்க்கூடும்.

இங்கே இன்னொரு காமெடியும் நடந்தது. ஒரு பத்திரிகை சசிகலாவின் துறவறத்தை பற்றி நாங்கள் முன்கூட்டியே சொன்னோம் என்று சொல்லியது. எனக்கு இங்கே ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. நான் லாட்டரி வியாபாரம் செய்தபோது ஒரு வாடிக்கையாளர் வருவார். பாதி நாட்கள் லாட்டரி கடைகளில்தான் இருப்பார். அவர் கொஞ்சம் டிக்கட் வாங்குவார். மற்றவர்களிடமும் `இந்த நம்பர் வாங்குங்க` பரிசு விழும்` என்று சொல்வார். தினம் 10 பேருக்கு இப்படி ஜோசியம் சொல்வார்.

நீங்கள் ஏதாவது ஒரு மரத்தின் கீழ் நின்றுகொண்டு 10 கல்களை விட்டெறியுங்கள் ஏதாவது ஒன்றில் மாங்காய் விழுந்துவிடும். இது திறமையல்ல, தியரி. அதுபோல்தான் இந்த நபரின் ஆலோசனையும். இவர் வாங்குங்கள் என்று சொன்ன 10 நபர்களில் யாரவது ஒருவருக்கு மறுநாள் பரிசு விழுந்துவிடும். அவர் ஆச்சர்யப்படுவார். `அவர் கரெக்ட்டா சொன்னாருங்க` என சொல்லி அவருக்கு ஒரு டீயும் ஒரு செட் டிக்கெட்டும் வாங்கி கொடுத்துவிடுவார். இந்த வகையிலும் அவர் தினம் நாட்களை ஒட்டிக்கொண்டிருந்தார்.

பத்திரிகைகளும் அப்படிதான் இருக்கின்றன. இந்த வாரம் இந்த செய்தியை போடுவார்கள். அடுத்த வாரம் செய்தியை வேறுமாதிரியாக போடுவார்கள் இப்படி 10 வாரங்களில் பலவிதமான செய்திகளை வெளியிட்டால் அதில் ஏதாவது ஓன்று பலிக்கத்தான் போகிறது. உடனே நாங்கள் அன்றே சொன்னோம் என்று ஒரு பில்டப். எப்படியோ எல்லோரும் வாழ்க்கை ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.

Tuesday, March 2, 2021

வெள்ளை யானை



என்னடா இது ஆளில்லாத ஊர்ல இந்த ஆள் வந்து திடீர்ன்னு டீக்கடை போடறார்ன்னு நினைக்கறீங்களா? பதிவுலகில் இருக்கும் டிராஃபிக்கை பார்க்கும்போது பதிவு எழுதும் எண்ணமே யாருக்கும் வராது. பல ஜாம்பவான்கள் குட்பை சொல்லிவிட்டார்கள். சிலர் விடாக்கண்டன் கொடாக்கண்டனாக இருக்கிறார்கள்.

நான் இப்படி அவ்வப்போது வருவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஓன்று, `என்னை மன்னார்குடியில கேட்டாக, மாயவரத்துல கேட்டாக...` என்று ஒரு வசனம் வருமே, அதுபோல் என் பதிவுகளை அமெரிக்காவுலேந்து படிக்கிறாக, ஆஸ்திரேலியாவிலிருந்து படிக்கிறாக என்று சொல்லலாம் போலிருக்கிறது. அந்த அளவுக்கு எனக்கு எல்லா கண்டங்களிலும் வாசகர்கள் உண்டு.

இப்படி பல நாடுகளிலிருந்து படிக்கும் வாசகர்கள் ஒரு பதிவை படித்தால் மேலும் 10 பதிவுகளையும் மேய்ந்துவிட்டுதான் போகிறார்கள். அதாவது எனக்கு வாசகர் வட்டம் உண்டு ஆனால் வருமானம்தான் இல்லை. ஆனானப்பட்ட சாரு நிவேதிதாவே `என் அக்கவுண்ட்ல பணம் போடுங்கனு` அவருடைய வலைதளத்தில் சொல்கிறார். நல்ல எழுத்தாளர் என பெயர் வாங்கிய ஞாநி கடைசி காலத்தில் வறுமையில்தான் இறந்திருக்கிறார் போலிருக்கிறது.

பேனாவை எடுத்தவன் உலகை ஆளலாம்னு எவனோ ஒருத்தவன் எங்கேயோ கிறுக்கி வைச்சிருக்கான். சனீஸ்வரன் நம்மை பிடித்தால் இப்படித்தான், பார்க்க கூடாத விஷயங்களை பார்ப்போம், கேட்க கூடாத விஷயங்களை கேட்போம், படிக்க கூடாத விஷ்யங்களையெல்லாம் படிச்சி அதையும் நம்பி வீணாபோய் விடுவோம்.

பிராக்டிகலாக இன்னொரு காரணம் இருக்கிறது. தனிமையை போக்குவதற்கு வேறு வழி இல்லாததுதான். இப்படி உண்மையை பட்டுனு போட்டு உடைக்க வேண்டியதுதானேன்னு நீங்க கேட்கலாம். ஆனால் எழுத்தாளன் இல்லையா, இப்படிதான் ஒரு வரில சொல்ல வேண்டிய விஷயத்தை ஒன்பது வரிகளாக இழுக்க வேண்டும். இது தொழில் தர்மம்.

அதுமட்டுமின்றி, அவ்வப்போது இப்படி நாம் போடும் பதிவுகளை எதிர்காலத்தில் நாமே படிக்கும்போது நாமும் எவ்வளவு மாறியிருக்கிறோம் என்பதை அது நமக்கு காட்டும். அந்த வகையில் இந்த கிறுக்கல்கள் அவ்வப்போது வரும். மூடை பொறுத்தது.

டீக்கடைக்காரர்

முதல் செய்தியே என்னை போல் இங்கே, அதாவது டெல்லியில், இருக்கும் ஒருவரை பற்றியது. இவருக்கும் ஆளில்லாத ஊரில் டீக்கடை போட ஆசை. உண்மையில் அவர் டீக்கடைக்காரரின் மகன்தான். இவர் பேரை சொன்னால் டெல்லியே அதிரும். என்ன செய்வது?  எதிரே இருப்பவர் டம்மி பீஸாக இருப்பதால் இவர் காட்டில் மழை. மிஸ்டர் மோடியை பற்றிய செய்திதான் இது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் போது இங்கே அகமதாபாத்தில் மெட்ரோ டிரைன் மிக விரைவாக, பந்தாவாக, விடப்பட்டது. காரணம் தேர்தல்தான். வெள்ளை யானைக்கு சிமெண்ட் கலர் அடித்து, நாங்கள் உங்களுக்காக என்னென்னெ திட்டங்கள் கொண்டு வந்திருக்கிறோம் பாருங்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டார் மிஸ்டர் மோடி. கடைசியில் அது ஒரு வெள்ளை யானை என்பது, அதாவது இது ஒரு உருப்படாத திட்டம் அல்லது மக்களுக்கு தேவை என ஓன்று இருக்க, அதற்காக இவர்கள் போட்ட திட்டம் தோல்வியில் முடிந்திருக்கிறது என தெரிகிறது.

நான் அடிக்கடி வாக்கிங் போகும் வழியில்தான் இந்த பாதை வருகிறது. ஒரே ஒரு முறைதான் என் கண்ணில் பட்டது. விசாரித்ததில் ஒரு நாளைக்கு நாலே சர்விஸ்தானாம். அதுவும் அந்த பயணமும் 5-10 நிமிட தூரம்தான். போட்ட பணத்துக்கு லாபம் வரவில்லை என்பதைவிட தற்போது நிர்வாக செலவுக்கே எதுவும் தேறாது போலிருக்கிறது. எனவே திட்டம் மேற்கொண்டு விரிவாக்கம் ஆகாமல் ஆமை வேகத்தில் நடக்கிறது. போக்குவரத்து வசதி முக்கியமான ஓன்று. ஆனால் அதை யார் தரவேண்டும், எப்படி தரவேண்டும் என்பதில்தான் மத்திய மாநில அரசுகள் மொக்கையாக சிந்திக்கின்றன.

பல இடங்களில் அவசியமான திட்டங்களுக்கு பணம் இல்லாமல் முடங்கி கிடக்க, இப்படி மொக்கையான திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கடைசியில் பணமும் முடங்கி மக்களுக்கும் அது எந்த ஒரு பலனையும் தரவில்லை. பொதுத்துறை என்பது இப்படித்தான். அதில் 10-ல் 8 வெள்ளை யானைதான்.

பொதுத்துறை என்பது ஒரு காலத்தில் அவசியமாக இருந்தது. சுதந்திரம் அடைந்த போது இந்தியாவில் நிறைய தலைவர்கள் உதை வாங்க/சிறைக்கு போக என போராட்ட தலைவர்கள் இருந்தார்கள்.

வெள்ளையர்கள் நம்மை தொழில்ரீதியாக வளர விடாததால் தொழில் முனைவோர் அப்போது இல்லை. வங்கிகள் மற்றும் வேறு பல கட்டமைப்புகளும் இல்லை. இருந்தாலும் தொழில்வளர்ச்சி அவசியமாக இருக்க, அதை செய்யக்கூடிய நபர்கள் அதிகமாக  இல்லாத நிலையில் அரசே பொதுத்துறை மூலம் அவற்றை செய்யவேண்டிய நிர்பந்தம். எனவே ஆரம்பகட்டத்தில் அரசு பொதுத்துறைகளை ஆரம்பித்தது அந்த கால சூழ்நிலைக்கு சரி. தற்போது நாடு ஓரளவு வளர்ந்துவிட்டது.இனி தொழில்களை தனியார் துறையினர் பார்த்துக் கொள்வார்கள். அரசாங்கம் வழிகாட்டுதலோடு மிக மிக அவசியமான இடங்களில் மட்டும் முதலீடு செய்தால் போதும்.

அரசு துறைகள் லாப நோக்கில் செயல்படாது என்பது உண்மைதான். ஆனால் அங்கே நிர்வாகம் என்பது ரொம்ப சிக்கலான ஓன்று. அங்கே நிர்வாகிகளால் முடிவெடுக்க முடியவில்லை. ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு நாம் என்ன தொழில் செய்கிறோம், இங்கே மேலும் என்ன செய்யலாம் என புரிந்து அவர் செயல்பட ஆரம்பிக்கும்போது அவரை வேறு இடத்துக்கு மாற்றி விடுகிறார்கள். அடுத்த அதிகாரி மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்கிறார்கள்.

இன்னொருபக்கம் அரசியல்வாதிகளுக்கு இது ஊழலின் இன்னொரு கதவு. அவசியமோ இல்லையோ வேண்டியவர்களுக்கு பணம் வாங்கிக்கொண்டு அல்லது கட்சிக்காரர்களுக்கு அவர்களுடைய விசுவாசத்துக்கு பரிசு என தேவையில்லாத வேலையை உருவாக்கி அந்த நிறுவனத்தை நாசமாக்கிவிடுகிறார்கள். இன்னும் பல சொல்லலாம். ஆனால் மக்களுக்கு இதை புரிய வைப்பது சிரமம். அதற்கு நமக்கு அபாரமான அறிவு வேண்டும். என்னிடம் அது இல்லாததால் அடுத்த செய்திக்கு தாவுவோம்.

இது அதைவிட மோசம்

சமீபத்திய கோரோனோவின் மிகப்பெரிய பாதிப்பு போக்குவரத்துதான். கொரானாவுக்கு முன் ஷேர் ஆட்டோவில் குறைந்த கட்டணம் இங்கே 5 ரூபாயாக இருந்தது. சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என இரண்டு பேருக்கு மேல் ஆட்டோவில் ஏற்றக்கூடாது என கட்டுப்பாடுகள் வர, அது 10 ரூபாயாக மாறியது. அதன்பின் நிலைமை சீரானாலும் மரத்தில் ஏறிய வேதாளம் இறங்க மறுக்கிறது. இனி இறங்கவும் மாட்டார்கள்.

ஒரு பயணத்தில் ஒரு பயணி சொல்லிக்கொண்டிருந்தார். அவர் வேலைக்கு போக மூன்று ஆட்டோ ஏற வேண்டுமாம். அந்த வகையில் அவருக்கு போக - வர மாதம் 1500 செலவு. அவருடைய சம்பளத்தில் இது 10 சதவிகிதம். விரைவில் டு வீலர் வாங்க போகிறாராம். (போக்குவரத்தை பொறுத்த வரையில் தமிழ்நாடு பரவாயில்லை. ஓரளவு தனியார் பங்களிப்பு இருக்கிறது.)

இப்படி பிச்சைக்காரர்கள் முதற்கொண்டு வண்டி வாங்கும் அளவுக்கு சூழ்நிலைகளை உருவாக்கிவிட்டு, அதன்காரணமாக டிராஃபிக் சிக்கல், சுற்று சூழல் மாசுபடுதல் என பல தலைவலிகள் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் இதன் காரணமாக பெட்ரோல் உபயோகம் அதிகரிக்க அது அரசுக்கும் தலைவலி, பெட்ரோல் விலை உயர்வால் மக்களுக்கும் தலைவலி. அதற்கு தீர்வு என்று அரசாங்கம் இப்படி உருப்படாத திட்டங்கள் போட்டு அதுவும் தலைவலி. கஷ்டம்டா சாமி.

அற்புதமான புத்திசாலிகள்

இந்தியர்கள் அற்புதமான புத்திசாலிகள். பல வருடங்களுக்கு முன் ஒரு முறை தியேட்டரில் டிக்கெட் வாங்க வரிசையில் நின்றிருந்தேன். பலர் குறுக்கே புகுந்து டிக்கெட் வாங்கி கொண்டிருந்தனர். வரிசையில் நின்றிருந்த பலருக்கு கோவம் வர சண்டை ஆரம்பித்தது. டிக்கெட் கவுண்டரில் புகார் செய்தால், அவர் கவுண்டர் கதவை மூடிவிட்டு `எல்லோரும் வரிசையில் வாங்க, அப்பத்தான் டிக்கெட் கொடுப்பேன்` என்று நீதியை நிலைநாட்டி விட்டார்.

குறுக்கே புகுந்த அவர்களை கண்டித்து விட்டு வரிசையில் வருபவர்களுக்கு டிக்கெட் கொடுப்பார்  என்று பார்த்தால், அவர்களுக்கும் டிக்கெட் இல்லையாம், வரிசையில் இருந்த எங்களுக்கும் டிக்கெட் இல்லையாம். இந்தியாவில் இப்படித்தான் கிறுக்குத்தனமாக முடிவெடுப்பார்கள். அதன்பின் பலர் என்ன முடிவெடுத்திருப்பார்கள்?  ஊரோடு ஒத்து போயிருப்பார்கள். அதுதான் நடந்திருக்கும்/ நடந்துகொண்டிருக்கிறது. அதாவது தவறான பாதைதான் இனி சரியான பாதை நமக்கு அவர்கள் சொல்லித்தருகிறார்கள். நாமும் அதை பின் தொடர்கிறோம். இப்படிப்பட்ட முட்டாள்தனமான நிர்வாகிகளால் இந்தியா மெல்ல மெல்ல சீரழிந்துகொண்டிருக்கிறது.

அதே காட்சி 

இங்கே அகமதாபாத்திலும் இப்படி ஒரு சம்பவம். இந்த குஜராத்தியர்கள் பெற்ற தாயை கூட எட்டி உதைப்பார்கள் ஆனால்  கோமாதாவுக்கு இவர்கள் கொடுக்கும் இருக்கும் மரியாதையே தனி. இங்கே தெருவில் மாடுகளுக்கு இருக்கும் சுதந்திரம் மனிதர்களுக்கு கூட கிடையாது. இப்படி உலாவும் மாடுகளில் பட்டா போட்டவை, போடாதவை  என இரண்டு விதம் உண்டு.

இங்கே ரபாரிகள் அதாவது இடையர்கள் செய்யும் கொடுமை வேறுவிதம். மாடுகளிடம் பாலை கறந்துவிட்டு அவற்றை வெளியே அனுப்பிவிடுவார்கள். அவை வெளியே தெருவெல்லாம் மேய்ந்து வயிற்றை நிரப்பிக்கொள்ள வேண்டும். பாலை மட்டும் இவர்களுக்கு கொடுத்துவிட வேண்டும். இது என்னவிதமான புண்ணியமோ? எனக்கு ஒன்றும் புரியவில்லை. பால் கறக்கும் நேரம் மற்றும் இரவு நேரங்களில் மட்டும் அட்டகாசமாக டூ வீலரில் வந்து மாடுகளை அழைத்து செல்வார்கள். அவைகளுக்கு இரவுநேர லாட்ஜிங் வசதி மட்டும் உண்டு போலிருக்கிறது.

இங்கே இந்த ரபாரிகளின் வீடுகளும் பிரமாண்டமாக இருக்கும். ஆண்களும் சரி பெண்களும் சரி எல்லாம் வாளிப்பாக இருப்பார்கள். நான் இந்த பதிவுக்காகத்தான் ரபாரி பெண்களை உற்று பார்த்தேன். வேறு எந்த காரணமும் இல்லை. மாடுகளால் இவர்களுக்கு வருமானம் ஆனால் செலவுகள் இல்லை. அதுதான் இந்த செழிப்புக்கு காரணம்.

சரி இனி விஷயத்துக்கு வருவோம். இப்படி மாடுகள் தெருக்களில் சுற்றுவதால் ஒரு பிரச்சினை. இங்கே அரசு, `ஸ்வச்ச பாரத்` என சுத்தத்துக்கு முன்னுரிமை கொடுத்து பல இடங்களில் சின்னதும் பெரியதுமாக குப்பை தொட்டிகளை வைத்தது. அதில் மக்கும் குப்பை இதில் போடவும், மக்காத குப்பைகளை மற்றதில் போடவும் என வசனம் வேறு எழுதி வைத்தார்கள்.

ஆனால் மாடுகளுக்கு இதெல்லாம் தெரியுமா? அவற்றுக்கு யார் மீது கோபமோ, குப்பை தொட்டி ஒரு பக்கம், குப்பைகள் வேறு பக்கம் என எல்லாவற்றையும் கதகளி ஆடிவிடும். விளைவு ரோடு நாசமாக காட்சி அளிக்கும். நம் நாட்டின் அற்புதமான நிர்வாகிகள் இதற்கும் ஒரு அற்புதமான வழி கண்டுபிடித்தார்கள். இப்படி குப்பை தொட்டிகள் இருப்பதால்தானே மாடுகள் இப்படி செய்கின்றன இனி குப்பை தொட்டியே வைக்க கூடாது என எடுத்துவிட்டார்கள்.

என்னிடம் ஒரு முறை குப்பை சேர்ந்துவிட நான் தெருவை அசுத்தப்படுத்த கூடாது என குப்பை தொட்டியை தேடி தேடி களைத்துப்போய் அப்படியே தூக்கி வீசினேன். எதிரே ஸ்வச்ச பாரத் என வசனம் எழுதி, ஒருவேளை படிக்காதவனுக்கு எப்படி புரியும் என ஒரு குப்பைத்தொட்டி படம் வரைந்து அதில் குப்பையை எப்படி போட வேண்டும் என படம் போட்டு விளக்கியிருந்தார்கள். அதாவது படத்தில் குப்பை தொட்டி இருக்கிறது ஆனால் தெருக்களில் இல்லை.

இந்தியா விளங்கிடும். கிறுக்கு பயல்கள் நிறைந்த நாட்டில் நாமும் கிறுக்காகவே நடந்து கொள்ளவேண்டும்.