!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Tuesday, April 26, 2022

இளையராஜாவும் , மோடியும்

சமீபத்திய சர்ச்சை இளையராஜாவின் மோடி குறித்த கருத்துதான். கிட்டத்தட்ட இது பல ஆண்டுகளுக்கு முன் பாடகி சின்மயி vs டிவிட்டர் என்ற எனது பழைய பதிவை நினைவுபடுத்துகிறது. 

இங்கேயும் அதே கதைதான்.  அங்கே சொன்னதைத்தான் நான் இங்கே மறுபடியும் சொல்லப்போகிறேன். ஒருவர் ஒரு குறிப்பிட்ட துறையில் பிரபலமாக இருக்கிறார் என்றால் அவர் அந்த துறையை மிக ஆழமாக கவனிக்கிறார் என்று அர்த்தம். அதன் காரணமாகவே அவர்களால் பிற துறைகளை கவனிக்கமுடிவதில்லை, அது சாத்தியமும் இல்லை.

எனவே இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நமக்கு அனுபவமில்லாத துறை குறித்து கருத்து சொல்லும்போது கவனமாக இருக்கவேண்டும். ஆனால் சனி நாக்கில், இங்கே பேனா  வடிவில் இளையராஜாவுக்கு வந்துவிட்ட பிறகு என்ன செய்யமுடியும்?

தமிழ்நாட்டில் பெரும்பாலோனோர் சித்தரிப்பதுபோல் மோடியை ஒரு மோசமான தலைவராக நான் நினைக்கவில்லை, அதற்கு சில காரணங்கள் இருக்கிறது. அதை நான் தெளிவாக புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் அதற்கு ஒரு நீண்ட பதிவு தேவை. அந்த பதிவும் நேரமிருந்தால் வரலாம்.

அதேசமயம் அவரை அம்பேத்காருடன் ஒப்பிட்டது அநியாயத்தின் உச்சக்கட்டம். இந்த பிரச்சினை தொடர்பாக ஜாதியை குறிப்பிட்டு காங்கிரஸ் தலைவர் கே வி எஸ் இளங்கோவன் பேசிய கருத்துக்களை பார்த்தீர்களா, இப்போதே ஜாதி ஆணவம் இந்த அளவுக்கு இருக்கிறது என்றால் அம்பேத்கார் வாழ்ந்த காலங்களில் அது எந்த அளவுக்கு இருந்திருக்கும். அதையெல்லாம் மீறி வாழ்ந்து காட்டியவர் அவர். தெளிவாக சொல்லவேண்டும் என்றால் சாதித்து காட்டியவர். எனவே இந்த ஒப்பீடு பொருத்தமில்லாதது, தேவையில்லாததும் கூட.

சரி அதற்காக இளையராஜாவை திட்டி தீர்ப்பதா? 

என் கணிப்பில் இங்கே கொஞ்சம் மொள்ளமாறித்தனம் கொஞ்சம் அறியாமை தெரிகிறது.

அறியாமை என்றால் அது இளையராஜாவிடம் தெரிகிறது. அதாவது அவருக்கே தெரியாமல் அவர் ஒரு எலிப்பொறியில் சிக்கிவிட்டார். அநேகமாக அதுதான் நடந்திருக்கும்.

அதற்கு முன் வழக்கமாக என் ஸ்டைலில் சில அனுபவங்களுக்கு போவோம். 

கடலூரில் ஓட்டலில் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ஒரு ஓட்டல் சாப்பாடு எனக்கு சுமாராக பிடித்துவிட்டது. எனவே அங்கே அதிகம் சாப்பிடுவேன்.

இன்னொரு நண்பருக்கு அந்த ஓட்டல் பிடிக்காது. சுவை ஒவ்வொருவருக்கும் வேறு மாதிரி இருக்கும். அது ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது வேறு ஏதோ  ஓன்று அவரை அந்த ஓட்டலை வெறுக்கவைத்தது. ஆனால் நான் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தேன். 

இப்போது நடுவில் மூன்றாவது (அம்பயர்) நபர் ஒருவர் வந்தார். அவரும் ஒரு நாள் அந்த ஓட்டலில் சாப்பிட்டுவிட்டார். இப்போது அவருடைய கருத்துதான் தீர்ப்பை நிர்ணயிக்கபோகிறது. எனவே அவரிடம் நம் நண்பர் கேள்வி கேட்டார்.

இங்கே நீங்கள் நன்கு கவனிக்கவேண்டும். மனிதர்கள் பல இடங்களில் அவர்கள் கேள்வி கேட்கும் முறையில் எதிரியை குழப்புவார்கள் அல்லது அவர்களுடைய கருத்தை திணிப்பார்கள். அதுதான் இங்கேயும் நடந்தது.

இங்கே கேள்விகள் எப்படி இருக்கவேண்டும்? கடலூரில் எந்த ஓட்டல் சாப்பாடு நன்றாக இருக்கும் என கேட்கலாம். அல்லது அந்த ஓட்டலை குறிப்பிட்டு அங்கே  நீங்கள் சாப்பிட்டிருக்கிறீர்களா? சாப்பாடு எப்படி என கேட்கலாம். ஆனால் இவர் கேள்வி கேட்டவிதமே வேறு.

அந்த ஓட்டலை குறிப்பிட்டு, `அந்த ஓட்டலில் சாப்பாடு ரொம்ப மோசம்னு எல்லோரும் சொல்றாங்க, நீங்க என்ன நினைக்கறீங்க? என குண்டை தூக்கி போட்டுவிட்டார்.  எனக்கு இப்போது பதில் தெரிந்துவிட்டது.

வடிவேலு ஒரு படத்தில் சொல்வார், `எவன் பொண்டாட்டி பத்தினியோ அவன் கண்ணுக்குத்தான் கடவுள் தெரிவார்` என்று. இப்போது உங்களுக்கு தெரியவில்லை என்று சொன்னால் உங்கள் பெண்டாட்டி கதை நாறும். எனவே `தெரிகிறது` என சொல்லி தப்பிக்க வேண்டியதுதான்.

அதேதான் இங்கேயும் நடந்தது. என்னது, எல்லோரும் இந்த ஓட்டல் மோசம்னு சொல்றாங்களா, இப்ப நாம என்ன சொல்வது  என யோசித்த அந்த முன்றாவது நபர், `ஆமாங்க நான் கூட அன்னிக்கி சாப்பிடும்போது கவனிச்சேன்.ஏதோ லைட்டா டிஃபரென்ட் தெரிந்தது` என்று சொல்லி கேள்வி கேட்டவரை திருப்திப்படுத்தினார்.

இதுதான் இங்கே நடந்திருக்கிறது. எங்கே அதிகாரமய்யம் இருக்கிறதோ அவர்களுக்கு ஜால்ரா அடித்து அவர்களின் கவனத்தை பெறுவதற்கும் காரியங்களை சாதித்துக் கொள்வதற்கும் ஒரு கூட்டம் எப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கும். இவர்கள் ஜால்ரா அடிப்பது போதாது என்று துணைக்கு நாலுபேரை கூப்பிடுவார்கள். அப்படிப்பட்ட அடிமட்ட பிஜேபி மொள்ளமாரிகளால் நடந்த கூத்துதான் இது.

இப்படி அவர்கள் இளையராஜாவை கூப்பிட்டிருக்க வேண்டும். அவர் மறுத்திருக்கலாம். ஆனால் பிரதமர் குறித்த புத்தகம் எனும்போது மறுப்பதற்கு தயக்கம் வரும். ஆக ஏதோ சிந்தனையில் தலையாட்டிவிட்டார்.

எனக்கு இங்கே இன்னொரு சந்தேகம். இதற்கு முன் இளையராஜா ஏதாவது புத்தகம் அல்லது முன்னுரை எழுதியிருக்கிறாரா? அந்த அனுபவம் இல்லாதவர்களுக்கு இப்படி முன்னுரை எழுதுவது சிரமம்.

சில பேச தெரியாத பேச்சாளர்களுக்கு பேச்சு எழுதித் தரப்படும். அவர்களும் அதை வைத்து சமாளிப்பார்கள். அதேபோல் இவரும் எப்படி எழுதுவது என தெரியாமல், தன்னுடைய உதவியாளர் அல்லது வேறு யாரிடமாவது கேட்க, அவர்கள் அவர்களுக்கு தெரிந்த அறிவாளிகளிடம் கேட்க, அந்த அறிவாளி  இந்த புத்தகம் மோடி மற்றும் அம்பேத்கார் குறித்து என்பதால் மோடி + அம்பேத்கார் =முத்தலாக் என எதையோ கிறுக்கி கொடுத்திருக்கவேண்டும்.

இளையராஜாவும் ஓஹோ இப்படிதான் முன்னுரை எழுதுவார்களோ என நினைத்து கையெழுத்து போட்டிருக்கக்கூடும். இப்போது பிரச்சினை என வந்தபிறகு `மாப்பிளை இவர்தான் ஆனா இவர் போட்டிருக்கிற சட்டை என்னுடையது` என்று சொன்னதுபோல், கையெழுத்து என்னுடையதுதான், ஆனால் இப்படி எழுதி கெடுத்தது வேறு ஆள் என்றா சொல்லமுடியும்?  அது இதைவிட அசிங்கமாக இருக்கும். இப்போது ஒரு தவறு நடந்துவிட்டது இனி பின்வாங்கினால் அசிங்கம் என அவர் உறுதியாக இருக்கிறார்.  

மேலே சொன்ன விளக்கங்கள் என் அனுமானம். அதாவது ஒரு குத்துமதிப்பாக சொல்கிறேன். அவரே இதை எழுதியிருக்க வாய்ப்பு குறைவுதான்.

ஆனால் இந்த மோடி எதிர்ப்பாளர்களின்  பேட்டிகள் அபத்தத்தின் உச்சக்கட்டம். ஏதோ இந்தியா உக்ரைனிலிருந்து  ஒரு ஆபரேஷன் என பெயர் வைத்து மூன்று மத்திய அமைச்சர்களையும் களத்தில் இறக்கி செயல்பட்டதுபோல், இளையராஜாவிடம் முன்னுரை வாங்கவேண்டும் என்பதற்காக GST நோட்டீஸ், ரெய்டு என பிளான் பண்ணி இந்த ப்ரொஜெக்டை வெற்றிகரமாக முடித்தார்கள் என கதை விடுவதை என்னவென்று சொல்வது.

இதுபோன்ற காரியங்களை பிஜேபி /காங்கிரஸ் போன்ற கட்சிகள் செய்யும். அது தேர்தல் நேரங்களில் கூட்டணிக்கு இழுக்க அல்லது பாராளுமன்றத்தில் முக்கியமான ஓட்டெடுப்புகளில் தேவைப்படும்போது இவை நடக்கும். ஆனால் ஒரு புத்தகத்தின் முன்னுரைக்காகவா?

அடுத்தமுறை இளையராஜா கச்சேரிக்கு போனால் கண்ணை மூடிக்கொண்டு காதுகளை மட்டும் திறந்துவையுங்கள். அது பேரின்பம். ஆனால் அவர் அங்கேயும் அரசியல் பேச ஆரம்பித்தால், அங்கே காதுகளையும் மூடிக்கொள்ளுங்கள்.

Monday, April 25, 2022

புல்லட் டிரைன்

இது சமீபத்தில் கவனித்த செய்தி. அகமதாபாத் -மும்பை இடையே புல்லட் டிரைன் இன்னும் 5-7 வருடங்களில் ஓட ஆரம்பிக்குமாம். 

இந்தியாவில் போக்குவரத்து வசதி என்பது படு மொக்கையாக இருப்பது எல்லோருக்கும் தெரியும். எனவே இதுபோன்ற திட்டங்கள் அவசியமாகவும் இருக்கலாம். ஆனால் ஏற்கனவே இருக்கும் பல்வேறு வசதிகளை சரியாக பயன்படுத்தாமல் இதுமட்டும்தான் தீர்வு என்று முன்னிறுத்தவதுதான் தவறு.

முதலில் இந்த திட்டத்தில் உள்ள ஆபத்துகளை பார்த்துவிடுவோம். இங்கே முதல் தலைவலி முதலீடுதான். இந்த திட்டத்திற்கு செலவு 1 லட்சம் கோடிக்கும் மேல் என தெரிகிறது. நாம் ஒரு முதலீடு செய்தால் அது லாபத்தை தருகிறதோ இல்லையோ, போட்ட முதலீடாவது திரும்ப எடுக்கும் அளவுக்கு இருக்க வேண்டும்.

அதாவது நீங்கள் ஒரு டிராவல் பஸ் வாங்கி விட வேண்டும் என ஆசைப்படுகிறீர்கள், சில மாதம் கழித்து உங்களுக்கு அது சரிப்பட்டு வரவில்லை என்றால், பஸ்ஸை `இந்தாப்பா பஸ் வாங்கி 3மாதம்தான் ஆகுது, 15 லட்சத்துக்கு வாங்கினேன், 15 ஆயிரம் குறைச்சுக்க` என யாரிடமாவது காது குத்தி பார்க்கலாம். பேரம் படியவில்லை என்றால் தடாலடியா 5 லட்சம் குறைத்தும் விற்கலாம். அது உங்கள் சாமர்த்தியம்.

இங்கே அதற்கான வாய்ப்பே இல்லை. இங்கே ஒருமுறை முதலீடு செய்துவிட்டால் அது கோவிந்தாதான். மறுபடியும் இடிக்கவேண்டும் என்றாலும் அதற்கும் செலவு. புறம்போக்கு நிலம் என்றாலும் பரவாயில்லை, இவை அத்தனையும் தற்போது ஏதோ   வகையில் பயன்பாட்டில் உள்ளவை.

அரசாங்கம் இந்த திட்டங்களை அப்படியே விட்டுவிடாது. இங்கே டிரைன் ஓடிக்கொண்டிருக்கும். மத்திய அரசு பட்ஜெட் மூலம் முக்காடு கொடுத்து, இதோ டிரைன் ஓடுகிறது பார் என `காட்டி`க்கொண்டிருக்கும். அதாவது அரசு ஏர் இந்தியாவை ஓட்டியது போல்.

இங்கே இந்த திட்டத்தை நான் சந்தேகக்கண்ணோடு பார்ப்பதற்கு வேறு சில காரணங்களும் உண்டு. முதல் காரணம் இந்த டிரைனின் உத்தேச டிக்கட் கட்டணம். அது 3000 வரை இருக்குமாம்.

தற்போது மும்பை -அகமதாபாத் பிளைட் கட்டணம் 3000-4000 என்ற அளவில்தான் இருக்கிறது. அது வரும் ஆண்டுகளில் பெரிதாக மாறப்போவதில்லை. எனவே மக்கள் எதற்கு முன்னுரிமை கொடுப்பார்கள்? இந்த கேள்விக்கு விடை இல்லை.

மற்றொன்று, இங்கே அகமதாபாத்தில் நான் அரசின் இரண்டு திட்டங்களை கவனித்தேன். ஓன்று, BRTS சேவை. இது விரைவான போக்குவரத்துக்கு வழி செய்கிறது என சொல்லப்பட்டது.ஆனால் நான் கவனித்தவரையில் இது நிலைமையை மேலும் மோசமாகியதுதான் நிஜம்.

அதாவது இங்கே இருக்கும் 6 வழி பாதையில் 2 வழிப்பாதைகள் இந்த BRTS காக, அதுவும் நடுவில் ஒதுக்கப்பட்டிருந்தது. இங்கே மற்ற வாகனங்கள் செல்ல தடை. இது நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிட்டது. இதில் ஒவ்வொரு 1- 2 கிலோமீட்டருக்கு இவர்களுக்கு பஸ் நிலையம்.

அதாவது நடு ரோட்டில் பிள்ளையார் கோவில் இருந்தால், அந்த பிள்ளையாரை தரிசிக்க மக்கள் அடிக்கடி ரோட்டில் குறுக்கே நடந்தால் எப்படி இருக்கும், அதுபோலத்தான் இந்த BRTS பஸ் ஸ்டாண்டுகள். பிள்ளையாராவது எங்கேயாவது ஒரு இடத்தில்தான் நடுரோட்டில் இருப்பார். இந்த பஸ்  ஓடும் இடமெல்லாம் இந்த தலைவலி. இந்த பஸ்ஸில் ஏறுவதற்காக மக்கள் அடிக்கடி ரோட்டை, அதாவது சிக்கனல் இல்லாத நடுரோட்டை தாண்டுவார்கள்.

ஒருபக்கம் இருக்கும் பொது வழிப்பாதையில் 33 சதவிகிதம் இவர்களுக்கு ஒதுக்கீடு, இன்னொரு பக்கம் இப்படி குறுக்கே போகும் மக்களால் மற்ற பொதுவழியை பயன்படுத்தும் வாகனங்கள் வண்டியை வேகமாக ஒட்டவும் முடியாது.

விளக்கமாக சொல்லவேண்டுமென்றால், முதல்வர் ஸ்டாலின் வேகமாக கோட்டைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக தினம் டிராபிக்கை நிறுத்தி ஆயிரக்கணக்கான மக்களை `1 மணி நேரம் லேட்டா ஆபிஸ் போங்க` என்று சொல்வதைப்போலத்தான் இருக்கிறது இந்த மொக்கை திட்டம். 

இன்னொன்று மெட்ரோ டிரைன். அதுவும் இங்கே இருக்கிறது. இருக்கிறது, அவ்வளவுதான். அங்கே டிரைன் ஓடுகிறதா, தினம் எவ்வளவு மக்கள் பயணிக்கிறார்கள், இந்த திட்டத்தின் வரவு செலவு எப்படி என்ற கேள்விக்கு பதில் தேடினால் கிடைத்த பதிலில் பிபி ஏறியதுதான் மிச்சம். இங்கே இந்த திட்டம் சில கிலோமீட்டர்கள் என்ற அளவில் ஆரம்பத்தில் இருக்கிறது, முழுமை அடைந்தபின் கூட்டம் ஏறும் என்று சொன்னாலும், எனக்கு நம்பிக்கையில்லை.

நிஜத்தில் இது மோடியின் திட்டம் என்று சொல்லி அகமதாபாத்தை தாண்டி வேறு எங்காவது சொல்லி பெருமைபட்டுக்கொள்ளலாம். அவ்வளவுதான்.

இதில் இன்னொரு மிகப்பெரிய கொடுமை என்னவென்றால், ஆளே இல்லாத ஊரில் டீக்கடை வைப்பதை கூட நாம் ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் சரவணபவன் ஓட்டலே இருந்தால் எப்படி இருக்கும் அப்படி இருக்கிறது இந்த ஸ்டேஷன்களின் நிலைமை.

இங்கே ஒரு ஓடாத மெட்ரோ ஸ்டேஷனுக்கு எஸ்கலேட்டர் வேறு வைத்திருக்கிறார்கள். மற்ற எல்லா ஸ்டேஷன்களிலும் இருக்கலாம். நான் கவனிக்கவில்லை. நான் கவனித்த ஒரு ஸ்டேஷனில் இருந்த எஸ்கலேட்டர் தற்போது ஓடவில்லை. ம்யூஸியத்தில் இருப்பதுபோல், காட்சியாக இருக்கிறது.

இன்னும் 5-10 ஆண்டுகளில் இது சுமாராகவாவது ஓடும் என நம்பிக்கை வைத்தாலும், இப்போதே ஏன்? ஏற்கனவே கவனிப்பாரின்றி இருந்த ஒரு செல்போன் டவரையே நம் ஆட்கள் கழட்டி விற்றுவிட்டார்கள். இது போலீசில் புகாராக பதிவாகி இருக்கிறது.

இது அப்படி போகாது என்றாலும், அதற்குள் துருப்பிடித்து... என்னவென்று சொல்வது. அரசாங்கத்தின் பணம் என்றால் கலைஞர் முதல் மோடி வரை எல்லோரும் பாரி வள்ளல்தான்.

இந்தியாவின் போக்குவரத்து பிரச்சினைக்கு வேறு சில தீர்வுகளும் இருக்கின்றன, அது அடுத்த பதிவில் . 

Monday, April 18, 2022

கடைசி டீ

சிலரிடம் பேசும்போது `அது போன வருஷம், 8ம் தேதி என்று நினைக்கிறேன், அன்னைக்கி செவ்வாய்கிழமை...` என்று துல்லியமாக பேசுவார்கள். விட்டால், நான் அன்று என்ன கலர் சட்டை போட்டிருந்தேன் என்று கூட சொல்வார்கள் போலிருக்கிறது. அந்த அளவுக்கு ஞாபக சக்தி அவர்களிடம் இருக்கும் .

நான் அப்படி இல்லை. `நேற்று என்ன சாப்பாடு` என்று கேட்டால் கூட முழிப்பேன். அப்படி நினைவுகளில் சிக்கல். இருந்தாலும் சில விஷயங்களை நம்மால் மறக்க முடியாது; மறக்கவும் கூடாது. அப்படிப்பட்ட சில நினைவுகள் இங்கே.

வாழை இலை

கடலூரில் இருந்தபோது, தனியாக ஒரு பேச்சிலர் ரூமில் தங்கி இருந்தேன். தினம் ஓட்டல் சாப்பாடுதான். இங்கே எனக்கு இரண்டு விதங்களில் நஷ்டம் மற்றும் கஷ்டம். ஓன்று, ஓட்டல் சாப்பாடு சில நாள்தான் ருசியாக இருக்கும். அதன்பின் அதுவும் சலித்துப்போகும். இரண்டு, இங்கே செலவும் அதிகம். மாதம் ஒரு நபர் ஓட்டலில் சாப்பாடும் செலவில் ஒரு சராசரி குடும்பமே, வீட்டு வாடகை கொடுத்தும், ஓட்டலாம்.

எனவே என்னால் ருசியாக சாப்பிடவும் முடியவில்லை, பணத்தை சேர்ப்பதும் சிரமமாக இருந்தது. அப்படியும் ஓரளவு வருமானம் இருந்ததால் தப்பித்தேன். பல ஓட்டல்களில் மாறி மாறி சாப்பிட்டாலும் ஒரு கட்டத்தில் நாக்கு வீட்டு சாப்பாட்டுக்கு ஏங்கும். சில சமயம் இந்த டிபரஷனில் இரவு உண்ணாவிரதம் இருந்து விடுவேன். அது இரவு நேரங்களில் நம்மை தூங்கவிடாது.

நான் 20 களின் ஆரம்பத்தில் இருந்த நேரம் அது. வாழ்க்கை இப்படி போய்க்கொண்டிருந்த போது நன்கு தெரிந்த ஒருவர் வாடிக்கையாளராகவும் இருந்தார். தெரிந்தவர் என்றால், `நீ குழந்தையாய் இருக்கும்போது` என்று சொல்லும் அளவுக்கு என்னை பற்றி தெரிந்தவர்.

ஒரு நாள் அவர் கடைக்கு வந்தபோது, `என்ன சாப்பிட போகலையா?` என கேட்க, நானும் எதையோ சொல்லிவிட்டேன். அதை கேட்டதும் அவர் முகம் மாறிவிட்டது. `நாளைலேந்து மதியம் ஒரு வேளை நம்ம வீட்டுல சாப்பிடு` என்று சொல்லிவிட்டார்.

வீட்டு சாப்பாடு என்ற உடன் எனக்கும் சந்தோசம். மறுநாள் போனேன். குடிசை வீடுதான். குனிந்துதான் வீட்டுக்குள்ளே நுழைய வேண்டும். அன்று நான் வாழை இலையில் பொரியல் அப்பளம் என நல்ல சாப்பாட்டை சாப்பிட்டேன்.

இந்த விருந்து ஒரு வாரம் தொடர்ந்தது. எளிய மனிதர்கள் இருப்பதை வைத்து சுமாராக வாழ்கையை ஓட்டுவார்கள். எனவே எனக்கு இப்படி சாப்பாடு போடுவது அவர்களுக்கு சிரமமாக இருந்தது. அதே சமயம் விருந்தாளிகளுக்கு முன்னால் நாங்கள் இப்படித்தான் சாப்பிடுவோம் என சொல்லவும் முடியாது. எனவே அந்த சேவை ஒரு வாரத்தில் நின்றுபோனது.

ஒரு வாரம் சாப்பிட்டாலும் அந்த சாப்பாடு என் மனதில் மறக்கமுடியாமல் நின்றுவிட்டது. குறைந்தபட்சம் ஒரு நபரின் மனக்குறையை உணர்ந்து அதை தீர்க்க அவர் முயற்சித்திருக்கிறார்.

மீன்

இது நடந்து பல வருடம் இருக்கும். வாழ்க்கையும்  அப்படியேதான் போய்க்கொண்டிருந்தது. நானும் சந்து பொந்தெல்லாம் நல்ல சுவையான ஓட்டல், குறைந்த கட்டணம் என தேடிக்கொண்டிருந்தேன். இப்படி தேடியபோது ஒரு சுமாரான ஓட்டல் கொஞ்சம் ஒதுக்குபுறமாக கிடைத்தது.

அசைவ ஓட்டல் அது. குடும்பமே ஓட்டலை கவனித்து கொண்டிருந்தார்கள். பரிமாறியவரும் பெண்தான். அவருக்கு என்னைவிட 10 வயது அதிகமாக இருந்திருக்கும். சில நாள் சாப்பிட்ட பிறகு அந்த பெண்மணி ஏதோ கேட்க, நானும் எதையோ சொல்லிவிட்டேன். அதன்பின் அவர் எனக்கு சாப்பாடு பரிமாறும் முறை மாறிவிட்டது.

வழக்கமாக இது போன்ற ஓட்டல்களில் மீன் குழம்பு ஊற்றினாலும் அதில் பேருக்கு சில மீன் சதைகள் இருக்கும். ஆனால் எனக்கு ஒரு முழு மீனே குழம்பில் வந்து விழுந்தது. அதேபோல் எக்ஸ்ட்ரா சாப்பாடு கேட்டாலும் அதுவும் கொஞ்சமாகத்தான் தருவார்கள். எனக்கு அந்த பெண்மணி இதிலும் நிறையவே வைத்தார்.

சில நாட்கள் இப்படி ஓடும்போது நான் ஒன்றை கவனித்தேன். இந்த சலுகை எனக்கு மட்டும்தான், மற்றவர்களுக்கு இப்படி அவர் சாப்பாடு போடவில்லை. அவர் ஏன் என்னை மட்டும் இப்படி கவனிக்க வேண்டும்?

அந்த சமயம் நான் நல்ல புத்தகங்களையும் படித்தேன், கெட்ட புத்தகங்களையும் படித்துக்கொண்டிருந்தேன். அங்கேதான் விதவிதமான கதைகள் இருக்குமே. அவையெல்லாம் என் மனதில் ஓடியது. அந்த பெண்ணுக்கு ஸாரி பெண்மணிக்கு என்னை பிடித்துவிட்டது, எனவே என்னை ஸ்பெஷலாக கவனிக்கிறார் என நினைத்தேன்.

அதே சமயம் ஷேர் மார்க்கெட், அரசியல் என என் சிந்தனை அதன் தலைவலிகள் தெரியாமல் கவனித்துக் கொண்டிருந்ததால், நான் எந்த ஸ்டெப்பும் எடுக்கவில்லை. அவரும் அதை பொருட்படுத்தாமல் என்னை ஸ்பெஷலாக கவனித்துக் கொண்டிருந்தார்.

இப்படி இது தொடர, ஒரு சமயம், அடிக்கடி நான்வெஜ் சாப்பிட்டால் உடம்புக்கு சரிவருமோ இல்லையோ, நம்ம பட்ஜெட்டுக்கு ஆகாது என ஒரு முறை வறுத்த மீன் வேண்டாம் என சொல்லிவிட்டேன். அந்த பெண் காரணம் கேட்க, `பட்ஜெட் இடிக்குது` என்று உண்மையையும் சொல்லிவிட்டேன்.

`சரி, இந்த மீனுக்கு காசு வேண்டாம்` என ஒரு வறுத்த மீனையும் வைத்துவிட்டார். இருந்தாலும் அது நாகரீகம் இல்லை என்பதால், அவர் மறுத்தாலும், நான் அதற்கும் காசு கொடுத்தேன்.

வாழ்க்கையில் நாம் பலவிதமான மனிதர்களை சந்தித்தாலும் இது எனக்கு புதிதாக இருந்தது. அவருக்கு என் மீது ஈர்ப்பு வந்துவிட்டது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.

குழப்பமான மனநிலையில் சில வாரம் நான் அந்த ஓட்டலுக்கு போகவில்லை. அதன்பின் மீண்டும் ஒரு முறை போனபோது, `என்ன ஆளையே காணோம்?` என்றார். நான் சமாளிப்பதற்காக, `அடிக்கடி இதே குழம்பு சாப்பிடுவதால், கொஞ்சம் டேஸ்ட் மாத்தி சாப்பிட்டேன்` என்றேன்.

அவரும் `ஆமாம்பா, கொஞ்சம் மாத்தி மாத்தி சாப்பிட்டாதான் சாப்பாடும் எறங்கும் என்றவர், உனக்கு பிடிச்சது ஏதாவது இருந்தா சொல்லு செஞ்சுதர்றேன்` என்றார்.

இதுவும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஓட்டலில் இப்படியெல்லாம் யார் கேட்பார்கள்? ஆனால் அதன்பிறகு அவர் ஒன்றை சொன்னார். `அன்னைக்கி நீ பேசும்போதே கவனிச்சேன், உனக்கு அம்மா சின்ன வயசுலயே போய்ட்டாங்கன்னு. எங்கம்மாவும் சின்ன வயசிலேயே போய்ட்டாங்க. அடுத்தவங்க வீட்டுல போட்டதை சாப்பிட்டு வளர்ந்தவதான் நானும். அங்கல்லாம் நமக்கு இது வேணும்,அது வேணும்னு கேட்கமுடியாது.

இவரை கல்யாணம் பண்ண பிறகுதான் நான் எனக்கு புடிச்சதெல்லாம் செஞ்சி சாப்பிட்டேன்` என்றவர், `உனக்கும் ஏதாவது வேணும்னா கூச்சப்படாம கேளு செஞ்சித்தர்றேன்` என்று சொல்லி அவர் அங்கே எனக்கு அம்மாவாக உயர்ந்து நிற்க, நான் குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டுவிட்டு கிளம்பினேன்.

அதன்பிறகு எனக்கு அங்கே போக மனமில்லை. அதேசமயம் வேறு ஒரு தலைவலி வந்து, எனது ஓட்டல் சாப்பாடும் முடிவுக்கு வந்தது. அது மீளமுடியாத இன்னொரு சிக்கலில் என்னை மாட்டிவிட்டது.

டீ

சிறையிலிருந்து விடுதலையாகி இரண்டு ஆண்டுகள் இருக்கும். மறுபடியும் ஷேர் மார்க்கெட் கனவு வந்தது. சிலர், வீடு மாறினால் அந்த வாஸ்து நமது வாழ்க்கையை மற்றும் என நினைப்பார்கள். அதுபோல் நானும் ஊரையும் மாற்றி ஷேர் புரோக்கரையும் மாற்றி பார்ப்போம் என்ற முடிவில் அகமதாபாத் கிளம்பினேன்.

டிரைனில் பயணிக்கும்போது ஒரு முறை நான் கதவருகில் நின்று கொண்டு பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் வெளி உலகத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது வடமாநிலத்தை சேர்ந்த ஒரு நண்பர்கள் குழு அங்கே அரட்டை அடித்துக் கொண்டிருந்தது. அதில் கொஞ்சம் வயதான நபரும் அடக்கம்.

அவர்கள் ஏதோ ஜாலியாக பேசி சிரித்துக்கொண்டிருக்க, எனக்கு இந்தி தெரிந்தாலும், நான் மௌனமாக வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். இந்த ஜாலி மூவ்மெண்ட்டில் அந்த வயதான நபர் என்னிடம் ஏதோ கேட்க, நானும் எதையோ சொல்லிவிட்டேன்.

அதன்பிறகு அவர் என்னிடம் நிறைய பேச ஆரம்பித்தார். அந்த நண்பர்கள் கலைந்து போன பிறகும் நிறைய பேசினார். பேசினார் என்பதைவிட நிறைய கேள்வி கேட்டார். தமிழக அரசியல், தேசிய அரசியல் என அது ஓடியது. என்ன செய்கிறீர்கள், எங்கே போகிறீர்கள் என சகலமும் அதில் இருந்தது.

நான் தெரிந்த நபர்களிடம் கூட அதிகம் பேசமாட்டேன். இவர் அறிமுகமில்லாத என்னிடம் ரொம்ப நேரம் பேசினார். எனக்கு எரிச்சலாக இருந்தது. இருந்தாலும் நாகரீகம் கருதி நானும் பதில் சொல்லிக்கொண்டிருந்தேன்.

அந்த நேரம் அங்கே டீ வர, இரண்டு டீ வாங்கி என்னிடம் ஒன்றை கொடுத்தார். நான் மறுத்தேன். அதேசமயம் சற்று முன் தன் நண்பர்களுடன் அவர் டீ குடித்ததையும் கவனித்தேன்.

`அபிதோ ஆப்னே பியா?` என நான் கேள்வி கேட்க, `இந்த டிரைனிலிருந்து கீழே குதித்தாலும் நான் டீ சாப்பிட்டுவிட்டுத்தான் குதிப்பேன்` என்றார். இந்த பதிலை அவர் சொல்லும்போது அவர் என்னை உற்று பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போதுதான் எனக்கு புரிந்தது. மௌனமாக இருக்கிறேன், கதவருகே நீண்ட நேரமாக இருக்கிறேன் என்பதால் அவர் அப்படி தவறாக புரிந்துகொண்டிருக்கிறார். இப்போது நான் வாய்விட்டு சிரித்துவிட்டேன். `என் முகமே அப்படித்தான்` என்று நான் சொன்னேன்.

இது எனக்கு புதிதல்ல. பலமுறை நான் எடுக்கும் முடிவுகளை பார்த்து, மற்றவர்களின் `இதை நான் எதிர்பார்க்கலியே` என்ற மாதிரியான கேள்விகளை நான் சந்தித்திருக்கிறேன். அதாவது என்னுடைய மனநிலையை என்னை சுற்றி இருப்பவர்கள் பெரும்பாலும் தவறாகவே புரிந்துகொள்கிறார்கள்.

அதன்பிறகு ரிலாக்ஸாக கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தோம். ஆனாலும் மனிதர் நம்பவில்லை. அவர் வேறு பெட்டியை சேர்ந்தவர். `இன்னைக்கி நான் டீ வாங்கிக்கொடுத்தேன். நாளை நான் கண்டிப்பாக வருவேன், நீங்கள் வாங்கித் தாருங்கள்.` என கண்டிஷன் போட்டார். அதாவது எனக்கு செக் வைக்கிறாராம்.

மறுநாளும் வந்தது. அகமதாபாத் 4 மணிக்கு மேல் வரும் என்பதால் நானும் 3 மணிவரை எதிர்பார்த்தேன். அவர் வரவில்லை. அப்போதும் டீ வந்தது. எனக்கும் அப்போது டீ குடிக்கும் மூட் இல்லை. இருந்தாலும் ஒரு டீ வாங்கி கடைசியாக குடித்தேன். அது அவருக்கான டீ.

மனிதர்களின் முகபாவனைகளை, பேச்சுக்களை வைத்து மனிதர்களை எடை போடுவது உண்டு. இது எல்லா இடத்திலும் பலிக்காது. சிரித்துக் கொண்டே இருந்த சின்னத்திரை சித்ரா இறந்தது எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்ததல்லவா? இதுதான் நிஜம். சிரித்துக்கொண்டிருப்பவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்றோ, உம்மென்று இருப்பவர்கள் டிக்கட் வாங்கப்போகிறார்கள் என்றோ சொல்லமுடியாது. இந்த கணக்கு சில இடங்களில் தப்பாகவும் போகும்.

இங்கே பேசும்போது எனக்கே தெரியாமல் நான் சொன்ன ஏதோ ஒரு வார்த்தையில் ஒரு நபரின் வாழ்க்கையை புரிந்து கொண்டு அதற்கு அவர்களால் முடிந்த உதவியை செய்ய முயற்சித்திருக்கிறார்கள். ஒரு இடத்தில் என்னுடைய கணக்கு தப்பாக இருந்தது, இன்னொரு இடத்தில் இவர்.  அவர் வாங்கிக்கொடுத்தது 5 ரூபாய் மதிப்புள்ள டீ யாக இருந்தாலும் மறக்கமுடியாத அளவுக்கு என் நினைவில் தங்கிவிட்ட டீ அது.

Tuesday, April 12, 2022

நல்ல மனிதர்கள்


இப்போது ஏதாவது ஒரு செய்தியை கவனித்துவிட்டால், அது நம்மை உணர்ச்சிவசப்பட வைத்துவிட்டால், உடனடியாக அதை ஷேர் செய்து பரபரப்பாக்கிவிடுகிறோம். அதாவது இங்கே செய்திகள் நல்லெண்ணத்தை பரப்புகின்றன. ஆனால் அதில் லாஜிக் இருக்கிறதா என்றெல்லாம் யாரும் கவனிப்பதில்லை.

இது சமீபத்திய செய்தி. மணிப்பூரில் 10 வயது சிறுமி தன்னுடைய 1 வயது தங்கையை மடியில் வைத்து கொண்டு பள்ளியில் பாடம் படிக்கிறாளாம்.  பெற்றோர் கூலிகளாம். வேலைக்கு போகும்போது குழந்தையை எடுத்து செல்ல முடியவில்லையாம்! எனவே இந்த சிறுமி குழந்தையோடு பள்ளிக்கூடம் வருகிறாராம்.

என்ன கொடுமை இது. ஒரு தாய் எப்பேர்ப்பட்ட அரைவேக்காடாக இருந்தாலும் இப்படி செய்யமாட்டார். இங்கே காரணம் வேறு ஏதாவது ஒன்றாக இருந்திருக்கும். ஏற்றுக்கொள்ளும் வகையில் இங்கே காரணமும் எதுவும் சொல்லப்படவில்லை.

பொதுவாக குழந்தைகள் அம்மா செய்வதை காப்பி அடிக்கும். இந்த காப்பி அடிக்கும் பழக்கம் சில சமயம் `பாப்பாவை நானே பார்த்துக்கொள்கிறேன்` என அடம்பிடிக்கும் அளவுக்கு போகும். அந்த காலத்தில் மரப்பாச்சி பொம்மையை வாங்கி கொடுத்து `இது உன் பாப்பா, அது அம்மா பாப்பா` என சமாளிப்பார்கள். அதுபோல் இந்த சிறுமியும் ஏதாவது அடம் பிடித்திருக்கும். சமாளிப்பதற்கு இப்படி ஒரு நாள் கூத்தை அரங்கேற்றியிருப்பார்கள். 

10 வயது சிறுமி பள்ளிக்கூடத்திற்கு குழந்தையை அழைத்து போக முடியுமா, பால் கொடுக்க என்ன செய்யும், கக்கா போனால் என்ன செய்யும், அல்லது பள்ளி நிர்வாகம்தான் இந்த அபாயத்தை அனுமதிக்குமா என்ற கேள்விக்கு  பதில் இல்லை. ஆனால் புகைப்படம் மனதை தொட்டுவிட்டதால்  லாஜிக் எல்லாம் பார்க்காமல் எல்லோரும் எமோஷனல் ஏகாம்பரமாக மாறி இந்த செய்தியை பரபரப்பாக்கிவிட்டார்கள்.

காட்சி 2

இது ஒரு CCTV காட்சி. அதாவது மனித நேயம் உள்ளவர்களை பற்றிய ஒரு வீடியோ. 

ஒரு வாழைப்பழ வியாபாரி தள்ளுவண்டியில் வியாபாரம் செய்கிறார். அந்த இடத்தில் பிச்சை எடுக்கும் அல்லது கூலி வேலை செய்யும் ஒரு பெண், குழந்தையோடு நிற்கிறார்.

குழந்தை வாழைப்பழம் கேட்டு அழுகிறது. அந்த பெண்ணிடம் காசில்லை. வாழைப்பழ கடைக்காரர் கொடுக்க மறுக்கிறார். அழும் குழந்தையை கட்டுப்படுத்த முடியாமல், அந்த குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு பணத்திற்கு வேறு வழி தேடி ஓடுகிறார். அந்த குழந்தை தனியாக அழுதுகொண்டிருக்கிறது. அப்போதும் அந்த வியாபாரிக்கு மனம் இரங்கவில்லை.

அப்போது அந்த வழியாக ஒரு வயதான பாட்டி வருகிறார். குழந்தை தனியாக அழுவதை பார்த்து, என்ன என்று கேட்க, அந்த குழந்தை வாழைப்பழத்தை கை காட்டுகிறது. அவர் தன் பணத்தில் அந்த குழந்தைக்கு பழம் வாங்கித்தருகிறார். இதற்கிடையில் அந்த அம்மாவும் வந்துவிட, குழந்தை அம்மாவிடம் போய்விடுகிறது. கதை சுபமாக முடிந்தது. இங்கே அந்த வயதான பெண் கடவுளுக்கு சமமாக உயர்ந்து நிற்கிறார். அந்த வியாபாரி வில்லனாகிவிட்டார்.

ஆனால் நிஜம் என்பது எப்போதும் வேறுவிதமாக இருக்கும். இதே தள்ளுவண்டியை அந்த பாட்டியிடம் கொடுத்து 6 மாதம் வியாபாரம் செய்ய சொல்லுங்கள். இப்போது கதை வேறு மாதிரி இருக்கும். பெண் என்பதால் இரக்க குணம் ஆணை விட பெண்களுக்கு அதிகமாக இருக்கலாம், ஆனாலும் அவரும் அந்த வியாபாரியை போல் நடந்து கொள்ளும் வாய்ப்புதான் அதிகம்.

காரணம், இந்தியா ஏழை நாடு. இங்கே நீங்கள் வியாபாரத்துக்காக ரோட்டில் இறங்கிவிட்டால் தினம் நூறு பிச்சைக்காரர்களை பார்க்க வேண்டும். ஆரம்பத்தில் மனித நேயம் எல்லோருக்கும் பொங்கும். பின்னர் அது மரத்துவிடும். இதுதான் எதார்த்தம்.

ஹீரோக்களை கொண்டாடுவோம்,அதேசமயம் மற்றவர்களை எல்லாம் வில்லனாகவும் சித்தரிக்க வேண்டாம்.  

காட்சி 3

இதுவும் குழந்தைகள் சம்பந்தமாக ஒரு `காட்டப்பட்ட` காட்சி. அதாவது விஷுவலாக நம்மை எமோஷனல் ஆக்கியிருக்கிறார்கள்.

ஒரு பெண் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்கிறார். அப்படி வியாபாரம் செய்யும்போது ஒரு இடத்தில் ஒரு மேடான இடத்தில் வண்டியை தள்ள முடியவில்லை. அப்போது அந்த வழியாக போன சில பள்ளி சிறுமியர் இதை கவனித்து அந்த வண்டியை தள்ள உதவுகிறார்கள். கவனிக்கவும், ரோட்டில் மனிதர்களே இல்லையாம். குழந்தைகளுக்குதான் தற்போது சமூக அக்கறை அதிகமாக இருக்கிறதாம். இதுதான் அந்த காட்சி சொல்லும் செய்தி

சிக்கல் இங்கே என்னவென்றால் தற்போது யூடுப் வீடியோக்கள் வருமானம் தருகிறது. சன் டிவியிலிருந்து கபில்ஷர்மா வரை (கூடுதல்) வருமானத்துக்காக வீடியோக்களை யு டியூபில் வெளியிடுகிறார்கள். 

இதனால் பலர் இப்படி செயற்கையான மனித நேயத்தை மனிதர்களை/குழந்தைகளை நடிக்க வைத்து அதை குறும்படம் என்று சொல்லாமல் வெளியிடுகிறாரகள். ஆனால் இது போன்ற வீடியோக்களில் காட்சி அமைப்பு அதை காட்டிக் கொடுத்துவிடும்.

நல்லவனாக வாழ்வது வேறு நல்லவனாக நடிப்பது வேறு. நல்லவனாக வாழ்பவனை நீங்கள் CCTV கேமராவில் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். அப்படிப்பட்ட மனிதர்களை நீங்கள் காண நேர்ந்தால் அதை மட்டும் ஷேர் செய்யுங்கள். நடிக்கும் மனிதர்களை நாம் தினம்தோறும் நம் வாழ்வில் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இங்கேயுமா?