!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Showing posts with label society. Show all posts
Showing posts with label society. Show all posts

Thursday, June 22, 2023

இவர்கள் திருந்தமாட்டார்கள்


எழுதும் ஆர்வம் போய்விட்டது. ஆனாலும் இந்த நீதித்துறை கனவான்கள் செய்யும் அட்டூழியங்களை அவ்வப்போது படிக்க நேரும்போது அறச்சீற்றம் பொங்கிவிடுகிறது. இது அந்த வகை பதிவு.

சமீபத்தில் தமிழ்நாட்டு ஐபிஸ் ஆபிஸர் ராஜேஷ் தாஸ் சக பெண் போலீசுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் 3 ஆண்டு தண்டனை பெற்றிருக்கிறார். இதுதான் செய்தி. இதில் சந்தோசம் மற்றும் ஆச்சர்யம் என்னவென்றால், அவர் மிக விரைவாக 3 ஆண்டுகளிலேயே வழக்கு விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டிருக்கிறார்.

Monday, April 18, 2022

கடைசி டீ

சிலரிடம் பேசும்போது `அது போன வருஷம், 8ம் தேதி என்று நினைக்கிறேன், அன்னைக்கி செவ்வாய்கிழமை...` என்று துல்லியமாக பேசுவார்கள். விட்டால், நான் அன்று என்ன கலர் சட்டை போட்டிருந்தேன் என்று கூட சொல்வார்கள் போலிருக்கிறது. அந்த அளவுக்கு ஞாபக சக்தி அவர்களிடம் இருக்கும் .

நான் அப்படி இல்லை. `நேற்று என்ன சாப்பாடு` என்று கேட்டால் கூட முழிப்பேன். அப்படி நினைவுகளில் சிக்கல். இருந்தாலும் சில விஷயங்களை நம்மால் மறக்க முடியாது; மறக்கவும் கூடாது. அப்படிப்பட்ட சில நினைவுகள் இங்கே.

வாழை இலை

கடலூரில் இருந்தபோது, தனியாக ஒரு பேச்சிலர் ரூமில் தங்கி இருந்தேன். தினம் ஓட்டல் சாப்பாடுதான். இங்கே எனக்கு இரண்டு விதங்களில் நஷ்டம் மற்றும் கஷ்டம். ஓன்று, ஓட்டல் சாப்பாடு சில நாள்தான் ருசியாக இருக்கும். அதன்பின் அதுவும் சலித்துப்போகும். இரண்டு, இங்கே செலவும் அதிகம். மாதம் ஒரு நபர் ஓட்டலில் சாப்பாடும் செலவில் ஒரு சராசரி குடும்பமே, வீட்டு வாடகை கொடுத்தும், ஓட்டலாம்.

எனவே என்னால் ருசியாக சாப்பிடவும் முடியவில்லை, பணத்தை சேர்ப்பதும் சிரமமாக இருந்தது. அப்படியும் ஓரளவு வருமானம் இருந்ததால் தப்பித்தேன். பல ஓட்டல்களில் மாறி மாறி சாப்பிட்டாலும் ஒரு கட்டத்தில் நாக்கு வீட்டு சாப்பாட்டுக்கு ஏங்கும். சில சமயம் இந்த டிபரஷனில் இரவு உண்ணாவிரதம் இருந்து விடுவேன். அது இரவு நேரங்களில் நம்மை தூங்கவிடாது.

நான் 20 களின் ஆரம்பத்தில் இருந்த நேரம் அது. வாழ்க்கை இப்படி போய்க்கொண்டிருந்த போது நன்கு தெரிந்த ஒருவர் வாடிக்கையாளராகவும் இருந்தார். தெரிந்தவர் என்றால், `நீ குழந்தையாய் இருக்கும்போது` என்று சொல்லும் அளவுக்கு என்னை பற்றி தெரிந்தவர்.

ஒரு நாள் அவர் கடைக்கு வந்தபோது, `என்ன சாப்பிட போகலையா?` என கேட்க, நானும் எதையோ சொல்லிவிட்டேன். அதை கேட்டதும் அவர் முகம் மாறிவிட்டது. `நாளைலேந்து மதியம் ஒரு வேளை நம்ம வீட்டுல சாப்பிடு` என்று சொல்லிவிட்டார்.

வீட்டு சாப்பாடு என்ற உடன் எனக்கும் சந்தோசம். மறுநாள் போனேன். குடிசை வீடுதான். குனிந்துதான் வீட்டுக்குள்ளே நுழைய வேண்டும். அன்று நான் வாழை இலையில் பொரியல் அப்பளம் என நல்ல சாப்பாட்டை சாப்பிட்டேன்.

இந்த விருந்து ஒரு வாரம் தொடர்ந்தது. எளிய மனிதர்கள் இருப்பதை வைத்து சுமாராக வாழ்கையை ஓட்டுவார்கள். எனவே எனக்கு இப்படி சாப்பாடு போடுவது அவர்களுக்கு சிரமமாக இருந்தது. அதே சமயம் விருந்தாளிகளுக்கு முன்னால் நாங்கள் இப்படித்தான் சாப்பிடுவோம் என சொல்லவும் முடியாது. எனவே அந்த சேவை ஒரு வாரத்தில் நின்றுபோனது.

ஒரு வாரம் சாப்பிட்டாலும் அந்த சாப்பாடு என் மனதில் மறக்கமுடியாமல் நின்றுவிட்டது. குறைந்தபட்சம் ஒரு நபரின் மனக்குறையை உணர்ந்து அதை தீர்க்க அவர் முயற்சித்திருக்கிறார்.

மீன்

இது நடந்து பல வருடம் இருக்கும். வாழ்க்கையும்  அப்படியேதான் போய்க்கொண்டிருந்தது. நானும் சந்து பொந்தெல்லாம் நல்ல சுவையான ஓட்டல், குறைந்த கட்டணம் என தேடிக்கொண்டிருந்தேன். இப்படி தேடியபோது ஒரு சுமாரான ஓட்டல் கொஞ்சம் ஒதுக்குபுறமாக கிடைத்தது.

அசைவ ஓட்டல் அது. குடும்பமே ஓட்டலை கவனித்து கொண்டிருந்தார்கள். பரிமாறியவரும் பெண்தான். அவருக்கு என்னைவிட 10 வயது அதிகமாக இருந்திருக்கும். சில நாள் சாப்பிட்ட பிறகு அந்த பெண்மணி ஏதோ கேட்க, நானும் எதையோ சொல்லிவிட்டேன். அதன்பின் அவர் எனக்கு சாப்பாடு பரிமாறும் முறை மாறிவிட்டது.

வழக்கமாக இது போன்ற ஓட்டல்களில் மீன் குழம்பு ஊற்றினாலும் அதில் பேருக்கு சில மீன் சதைகள் இருக்கும். ஆனால் எனக்கு ஒரு முழு மீனே குழம்பில் வந்து விழுந்தது. அதேபோல் எக்ஸ்ட்ரா சாப்பாடு கேட்டாலும் அதுவும் கொஞ்சமாகத்தான் தருவார்கள். எனக்கு அந்த பெண்மணி இதிலும் நிறையவே வைத்தார்.

சில நாட்கள் இப்படி ஓடும்போது நான் ஒன்றை கவனித்தேன். இந்த சலுகை எனக்கு மட்டும்தான், மற்றவர்களுக்கு இப்படி அவர் சாப்பாடு போடவில்லை. அவர் ஏன் என்னை மட்டும் இப்படி கவனிக்க வேண்டும்?

அந்த சமயம் நான் நல்ல புத்தகங்களையும் படித்தேன், கெட்ட புத்தகங்களையும் படித்துக்கொண்டிருந்தேன். அங்கேதான் விதவிதமான கதைகள் இருக்குமே. அவையெல்லாம் என் மனதில் ஓடியது. அந்த பெண்ணுக்கு ஸாரி பெண்மணிக்கு என்னை பிடித்துவிட்டது, எனவே என்னை ஸ்பெஷலாக கவனிக்கிறார் என நினைத்தேன்.

அதே சமயம் ஷேர் மார்க்கெட், அரசியல் என என் சிந்தனை அதன் தலைவலிகள் தெரியாமல் கவனித்துக் கொண்டிருந்ததால், நான் எந்த ஸ்டெப்பும் எடுக்கவில்லை. அவரும் அதை பொருட்படுத்தாமல் என்னை ஸ்பெஷலாக கவனித்துக் கொண்டிருந்தார்.

இப்படி இது தொடர, ஒரு சமயம், அடிக்கடி நான்வெஜ் சாப்பிட்டால் உடம்புக்கு சரிவருமோ இல்லையோ, நம்ம பட்ஜெட்டுக்கு ஆகாது என ஒரு முறை வறுத்த மீன் வேண்டாம் என சொல்லிவிட்டேன். அந்த பெண் காரணம் கேட்க, `பட்ஜெட் இடிக்குது` என்று உண்மையையும் சொல்லிவிட்டேன்.

`சரி, இந்த மீனுக்கு காசு வேண்டாம்` என ஒரு வறுத்த மீனையும் வைத்துவிட்டார். இருந்தாலும் அது நாகரீகம் இல்லை என்பதால், அவர் மறுத்தாலும், நான் அதற்கும் காசு கொடுத்தேன்.

வாழ்க்கையில் நாம் பலவிதமான மனிதர்களை சந்தித்தாலும் இது எனக்கு புதிதாக இருந்தது. அவருக்கு என் மீது ஈர்ப்பு வந்துவிட்டது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.

குழப்பமான மனநிலையில் சில வாரம் நான் அந்த ஓட்டலுக்கு போகவில்லை. அதன்பின் மீண்டும் ஒரு முறை போனபோது, `என்ன ஆளையே காணோம்?` என்றார். நான் சமாளிப்பதற்காக, `அடிக்கடி இதே குழம்பு சாப்பிடுவதால், கொஞ்சம் டேஸ்ட் மாத்தி சாப்பிட்டேன்` என்றேன்.

அவரும் `ஆமாம்பா, கொஞ்சம் மாத்தி மாத்தி சாப்பிட்டாதான் சாப்பாடும் எறங்கும் என்றவர், உனக்கு பிடிச்சது ஏதாவது இருந்தா சொல்லு செஞ்சுதர்றேன்` என்றார்.

இதுவும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஓட்டலில் இப்படியெல்லாம் யார் கேட்பார்கள்? ஆனால் அதன்பிறகு அவர் ஒன்றை சொன்னார். `அன்னைக்கி நீ பேசும்போதே கவனிச்சேன், உனக்கு அம்மா சின்ன வயசுலயே போய்ட்டாங்கன்னு. எங்கம்மாவும் சின்ன வயசிலேயே போய்ட்டாங்க. அடுத்தவங்க வீட்டுல போட்டதை சாப்பிட்டு வளர்ந்தவதான் நானும். அங்கல்லாம் நமக்கு இது வேணும்,அது வேணும்னு கேட்கமுடியாது.

இவரை கல்யாணம் பண்ண பிறகுதான் நான் எனக்கு புடிச்சதெல்லாம் செஞ்சி சாப்பிட்டேன்` என்றவர், `உனக்கும் ஏதாவது வேணும்னா கூச்சப்படாம கேளு செஞ்சித்தர்றேன்` என்று சொல்லி அவர் அங்கே எனக்கு அம்மாவாக உயர்ந்து நிற்க, நான் குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டுவிட்டு கிளம்பினேன்.

அதன்பிறகு எனக்கு அங்கே போக மனமில்லை. அதேசமயம் வேறு ஒரு தலைவலி வந்து, எனது ஓட்டல் சாப்பாடும் முடிவுக்கு வந்தது. அது மீளமுடியாத இன்னொரு சிக்கலில் என்னை மாட்டிவிட்டது.

டீ

சிறையிலிருந்து விடுதலையாகி இரண்டு ஆண்டுகள் இருக்கும். மறுபடியும் ஷேர் மார்க்கெட் கனவு வந்தது. சிலர், வீடு மாறினால் அந்த வாஸ்து நமது வாழ்க்கையை மற்றும் என நினைப்பார்கள். அதுபோல் நானும் ஊரையும் மாற்றி ஷேர் புரோக்கரையும் மாற்றி பார்ப்போம் என்ற முடிவில் அகமதாபாத் கிளம்பினேன்.

டிரைனில் பயணிக்கும்போது ஒரு முறை நான் கதவருகில் நின்று கொண்டு பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் வெளி உலகத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது வடமாநிலத்தை சேர்ந்த ஒரு நண்பர்கள் குழு அங்கே அரட்டை அடித்துக் கொண்டிருந்தது. அதில் கொஞ்சம் வயதான நபரும் அடக்கம்.

அவர்கள் ஏதோ ஜாலியாக பேசி சிரித்துக்கொண்டிருக்க, எனக்கு இந்தி தெரிந்தாலும், நான் மௌனமாக வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். இந்த ஜாலி மூவ்மெண்ட்டில் அந்த வயதான நபர் என்னிடம் ஏதோ கேட்க, நானும் எதையோ சொல்லிவிட்டேன்.

அதன்பிறகு அவர் என்னிடம் நிறைய பேச ஆரம்பித்தார். அந்த நண்பர்கள் கலைந்து போன பிறகும் நிறைய பேசினார். பேசினார் என்பதைவிட நிறைய கேள்வி கேட்டார். தமிழக அரசியல், தேசிய அரசியல் என அது ஓடியது. என்ன செய்கிறீர்கள், எங்கே போகிறீர்கள் என சகலமும் அதில் இருந்தது.

நான் தெரிந்த நபர்களிடம் கூட அதிகம் பேசமாட்டேன். இவர் அறிமுகமில்லாத என்னிடம் ரொம்ப நேரம் பேசினார். எனக்கு எரிச்சலாக இருந்தது. இருந்தாலும் நாகரீகம் கருதி நானும் பதில் சொல்லிக்கொண்டிருந்தேன்.

அந்த நேரம் அங்கே டீ வர, இரண்டு டீ வாங்கி என்னிடம் ஒன்றை கொடுத்தார். நான் மறுத்தேன். அதேசமயம் சற்று முன் தன் நண்பர்களுடன் அவர் டீ குடித்ததையும் கவனித்தேன்.

`அபிதோ ஆப்னே பியா?` என நான் கேள்வி கேட்க, `இந்த டிரைனிலிருந்து கீழே குதித்தாலும் நான் டீ சாப்பிட்டுவிட்டுத்தான் குதிப்பேன்` என்றார். இந்த பதிலை அவர் சொல்லும்போது அவர் என்னை உற்று பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போதுதான் எனக்கு புரிந்தது. மௌனமாக இருக்கிறேன், கதவருகே நீண்ட நேரமாக இருக்கிறேன் என்பதால் அவர் அப்படி தவறாக புரிந்துகொண்டிருக்கிறார். இப்போது நான் வாய்விட்டு சிரித்துவிட்டேன். `என் முகமே அப்படித்தான்` என்று நான் சொன்னேன்.

இது எனக்கு புதிதல்ல. பலமுறை நான் எடுக்கும் முடிவுகளை பார்த்து, மற்றவர்களின் `இதை நான் எதிர்பார்க்கலியே` என்ற மாதிரியான கேள்விகளை நான் சந்தித்திருக்கிறேன். அதாவது என்னுடைய மனநிலையை என்னை சுற்றி இருப்பவர்கள் பெரும்பாலும் தவறாகவே புரிந்துகொள்கிறார்கள்.

அதன்பிறகு ரிலாக்ஸாக கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தோம். ஆனாலும் மனிதர் நம்பவில்லை. அவர் வேறு பெட்டியை சேர்ந்தவர். `இன்னைக்கி நான் டீ வாங்கிக்கொடுத்தேன். நாளை நான் கண்டிப்பாக வருவேன், நீங்கள் வாங்கித் தாருங்கள்.` என கண்டிஷன் போட்டார். அதாவது எனக்கு செக் வைக்கிறாராம்.

மறுநாளும் வந்தது. அகமதாபாத் 4 மணிக்கு மேல் வரும் என்பதால் நானும் 3 மணிவரை எதிர்பார்த்தேன். அவர் வரவில்லை. அப்போதும் டீ வந்தது. எனக்கும் அப்போது டீ குடிக்கும் மூட் இல்லை. இருந்தாலும் ஒரு டீ வாங்கி கடைசியாக குடித்தேன். அது அவருக்கான டீ.

மனிதர்களின் முகபாவனைகளை, பேச்சுக்களை வைத்து மனிதர்களை எடை போடுவது உண்டு. இது எல்லா இடத்திலும் பலிக்காது. சிரித்துக் கொண்டே இருந்த சின்னத்திரை சித்ரா இறந்தது எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்ததல்லவா? இதுதான் நிஜம். சிரித்துக்கொண்டிருப்பவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்றோ, உம்மென்று இருப்பவர்கள் டிக்கட் வாங்கப்போகிறார்கள் என்றோ சொல்லமுடியாது. இந்த கணக்கு சில இடங்களில் தப்பாகவும் போகும்.

இங்கே பேசும்போது எனக்கே தெரியாமல் நான் சொன்ன ஏதோ ஒரு வார்த்தையில் ஒரு நபரின் வாழ்க்கையை புரிந்து கொண்டு அதற்கு அவர்களால் முடிந்த உதவியை செய்ய முயற்சித்திருக்கிறார்கள். ஒரு இடத்தில் என்னுடைய கணக்கு தப்பாக இருந்தது, இன்னொரு இடத்தில் இவர்.  அவர் வாங்கிக்கொடுத்தது 5 ரூபாய் மதிப்புள்ள டீ யாக இருந்தாலும் மறக்கமுடியாத அளவுக்கு என் நினைவில் தங்கிவிட்ட டீ அது.

Tuesday, April 12, 2022

நல்ல மனிதர்கள்


இப்போது ஏதாவது ஒரு செய்தியை கவனித்துவிட்டால், அது நம்மை உணர்ச்சிவசப்பட வைத்துவிட்டால், உடனடியாக அதை ஷேர் செய்து பரபரப்பாக்கிவிடுகிறோம். அதாவது இங்கே செய்திகள் நல்லெண்ணத்தை பரப்புகின்றன. ஆனால் அதில் லாஜிக் இருக்கிறதா என்றெல்லாம் யாரும் கவனிப்பதில்லை.

இது சமீபத்திய செய்தி. மணிப்பூரில் 10 வயது சிறுமி தன்னுடைய 1 வயது தங்கையை மடியில் வைத்து கொண்டு பள்ளியில் பாடம் படிக்கிறாளாம்.  பெற்றோர் கூலிகளாம். வேலைக்கு போகும்போது குழந்தையை எடுத்து செல்ல முடியவில்லையாம்! எனவே இந்த சிறுமி குழந்தையோடு பள்ளிக்கூடம் வருகிறாராம்.

என்ன கொடுமை இது. ஒரு தாய் எப்பேர்ப்பட்ட அரைவேக்காடாக இருந்தாலும் இப்படி செய்யமாட்டார். இங்கே காரணம் வேறு ஏதாவது ஒன்றாக இருந்திருக்கும். ஏற்றுக்கொள்ளும் வகையில் இங்கே காரணமும் எதுவும் சொல்லப்படவில்லை.

பொதுவாக குழந்தைகள் அம்மா செய்வதை காப்பி அடிக்கும். இந்த காப்பி அடிக்கும் பழக்கம் சில சமயம் `பாப்பாவை நானே பார்த்துக்கொள்கிறேன்` என அடம்பிடிக்கும் அளவுக்கு போகும். அந்த காலத்தில் மரப்பாச்சி பொம்மையை வாங்கி கொடுத்து `இது உன் பாப்பா, அது அம்மா பாப்பா` என சமாளிப்பார்கள். அதுபோல் இந்த சிறுமியும் ஏதாவது அடம் பிடித்திருக்கும். சமாளிப்பதற்கு இப்படி ஒரு நாள் கூத்தை அரங்கேற்றியிருப்பார்கள். 

10 வயது சிறுமி பள்ளிக்கூடத்திற்கு குழந்தையை அழைத்து போக முடியுமா, பால் கொடுக்க என்ன செய்யும், கக்கா போனால் என்ன செய்யும், அல்லது பள்ளி நிர்வாகம்தான் இந்த அபாயத்தை அனுமதிக்குமா என்ற கேள்விக்கு  பதில் இல்லை. ஆனால் புகைப்படம் மனதை தொட்டுவிட்டதால்  லாஜிக் எல்லாம் பார்க்காமல் எல்லோரும் எமோஷனல் ஏகாம்பரமாக மாறி இந்த செய்தியை பரபரப்பாக்கிவிட்டார்கள்.

காட்சி 2

இது ஒரு CCTV காட்சி. அதாவது மனித நேயம் உள்ளவர்களை பற்றிய ஒரு வீடியோ. 

ஒரு வாழைப்பழ வியாபாரி தள்ளுவண்டியில் வியாபாரம் செய்கிறார். அந்த இடத்தில் பிச்சை எடுக்கும் அல்லது கூலி வேலை செய்யும் ஒரு பெண், குழந்தையோடு நிற்கிறார்.

குழந்தை வாழைப்பழம் கேட்டு அழுகிறது. அந்த பெண்ணிடம் காசில்லை. வாழைப்பழ கடைக்காரர் கொடுக்க மறுக்கிறார். அழும் குழந்தையை கட்டுப்படுத்த முடியாமல், அந்த குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு பணத்திற்கு வேறு வழி தேடி ஓடுகிறார். அந்த குழந்தை தனியாக அழுதுகொண்டிருக்கிறது. அப்போதும் அந்த வியாபாரிக்கு மனம் இரங்கவில்லை.

அப்போது அந்த வழியாக ஒரு வயதான பாட்டி வருகிறார். குழந்தை தனியாக அழுவதை பார்த்து, என்ன என்று கேட்க, அந்த குழந்தை வாழைப்பழத்தை கை காட்டுகிறது. அவர் தன் பணத்தில் அந்த குழந்தைக்கு பழம் வாங்கித்தருகிறார். இதற்கிடையில் அந்த அம்மாவும் வந்துவிட, குழந்தை அம்மாவிடம் போய்விடுகிறது. கதை சுபமாக முடிந்தது. இங்கே அந்த வயதான பெண் கடவுளுக்கு சமமாக உயர்ந்து நிற்கிறார். அந்த வியாபாரி வில்லனாகிவிட்டார்.

ஆனால் நிஜம் என்பது எப்போதும் வேறுவிதமாக இருக்கும். இதே தள்ளுவண்டியை அந்த பாட்டியிடம் கொடுத்து 6 மாதம் வியாபாரம் செய்ய சொல்லுங்கள். இப்போது கதை வேறு மாதிரி இருக்கும். பெண் என்பதால் இரக்க குணம் ஆணை விட பெண்களுக்கு அதிகமாக இருக்கலாம், ஆனாலும் அவரும் அந்த வியாபாரியை போல் நடந்து கொள்ளும் வாய்ப்புதான் அதிகம்.

காரணம், இந்தியா ஏழை நாடு. இங்கே நீங்கள் வியாபாரத்துக்காக ரோட்டில் இறங்கிவிட்டால் தினம் நூறு பிச்சைக்காரர்களை பார்க்க வேண்டும். ஆரம்பத்தில் மனித நேயம் எல்லோருக்கும் பொங்கும். பின்னர் அது மரத்துவிடும். இதுதான் எதார்த்தம்.

ஹீரோக்களை கொண்டாடுவோம்,அதேசமயம் மற்றவர்களை எல்லாம் வில்லனாகவும் சித்தரிக்க வேண்டாம்.  

காட்சி 3

இதுவும் குழந்தைகள் சம்பந்தமாக ஒரு `காட்டப்பட்ட` காட்சி. அதாவது விஷுவலாக நம்மை எமோஷனல் ஆக்கியிருக்கிறார்கள்.

ஒரு பெண் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்கிறார். அப்படி வியாபாரம் செய்யும்போது ஒரு இடத்தில் ஒரு மேடான இடத்தில் வண்டியை தள்ள முடியவில்லை. அப்போது அந்த வழியாக போன சில பள்ளி சிறுமியர் இதை கவனித்து அந்த வண்டியை தள்ள உதவுகிறார்கள். கவனிக்கவும், ரோட்டில் மனிதர்களே இல்லையாம். குழந்தைகளுக்குதான் தற்போது சமூக அக்கறை அதிகமாக இருக்கிறதாம். இதுதான் அந்த காட்சி சொல்லும் செய்தி

சிக்கல் இங்கே என்னவென்றால் தற்போது யூடுப் வீடியோக்கள் வருமானம் தருகிறது. சன் டிவியிலிருந்து கபில்ஷர்மா வரை (கூடுதல்) வருமானத்துக்காக வீடியோக்களை யு டியூபில் வெளியிடுகிறார்கள். 

இதனால் பலர் இப்படி செயற்கையான மனித நேயத்தை மனிதர்களை/குழந்தைகளை நடிக்க வைத்து அதை குறும்படம் என்று சொல்லாமல் வெளியிடுகிறாரகள். ஆனால் இது போன்ற வீடியோக்களில் காட்சி அமைப்பு அதை காட்டிக் கொடுத்துவிடும்.

நல்லவனாக வாழ்வது வேறு நல்லவனாக நடிப்பது வேறு. நல்லவனாக வாழ்பவனை நீங்கள் CCTV கேமராவில் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். அப்படிப்பட்ட மனிதர்களை நீங்கள் காண நேர்ந்தால் அதை மட்டும் ஷேர் செய்யுங்கள். நடிக்கும் மனிதர்களை நாம் தினம்தோறும் நம் வாழ்வில் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இங்கேயுமா?

 

Wednesday, January 19, 2022

கிரிப்டோ கரன்சி


ஏதாவது சில விஷயங்கள் தீடீரென்று நம் ஆர்வத்தை தூண்டிவிடும். அதுகுறித்த செய்திகளை அதிகம் படிப்போம். இந்த வாரம் அப்படி கவனித்தது QR கோட் மற்றும் கிரிப்டோ கரன்சி குறித்த தகவல்களைத்தான். 

ஜப்பானில் சரக்குகளை தரம் பிரிக்க/கையாள இந்த QR முறையை ஒரு நிறுவனம் பின்பற்ற, பின்னர் அது  இப்படி  விரிவடைத்திருக்கிறது. QR கோட், பணப்பரிமாற்றம் மற்றும் பல விஷயங்களை மிக சுலபமாக முடித்துவிடுவதால் அது தற்போது தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறிவிட்டது. 

இதில் கிரிப்டோ வேறு வகை. இங்கே அகமதாபாத்தில் சிறு வயதில் பால் வாங்க போகும்போது, அப்போது சில்லறை தட்டுப்பாடு நிறைய இருந்ததால், சில்லறைக்கு பதில் அவர்கள் கடை பெயர் அச்சடித்த டோக்கன் தருவார்கள். 50 காசு 25 காசு என அதில் அச்சடிக்கப்பட்டிருக்கும். அது அவர்களிடம் மட்டும் செல்லுபடியாகும். 

இப்படி  உள்ளூர் பிரச்சினைகளில் நம் வசதிக்காக சில நடைமுறைகளை மனிதர்கள் உருவாக்குவார்கள். அப்படி வந்த சில விஷயங்கள் அற்புதமான கண்டுபிடிப்பாக மாறும். இதில் QR கோட் வரவேற்கத்தக்க ஓன்று. ஆனால் கிரிப்டோ? 

கிரிப்டோ குறித்து படிக்கும்போது எனக்கு பல சொந்த அனுபவங்கள் நினைவுக்கு வருகிறது. அதில் பல டேஜாவு வகை. அந்த அனுபவங்களுடன் இதை பொருத்தி பார்த்தால் இதுவும் அதே அடிப்படையில் போகக்கூடும்.

கரன்சிக்கு ஒரு சிறந்த மாற்றாம்; திருடு போகும் வாய்ப்பு இல்லையாம்; சுலபமானது என்று பல காரணங்கள் அது கண்டுபிடிக்கப்பட்ட காலத்திற்கு பொருத்தமாக இருந்திருக்கும்.

ஆனால் தற்போது இன்டர்நெட்டின் வளர்ச்சி, ஸ்மார்ட்போன் வருகை, UPI  என பல விஷயங்கள் வந்துவிட்ட நிலையில், கிரிப்டோ அவசியமே இல்லாத ஓன்று. இருந்தும் மக்கள் அதன் மீது மோகம் கொண்டு அலைவதின் காரணம் புதிர்தான்.

இங்கே நாம் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். அவ்வப்போது சில புது வரவுகள் வரும் பின்னர் அது காணாமல் போகும். உதாரணம் எவ்வளவோ சொல்லலாம். பேஜர் போய் ஆண்ட்ராய்டு வந்து பின்னர் அதை ஸ்மார்ட்போன் ஒழித்தது.

தற்போது இன்னொன்றையும் நான் கவனிக்கிறேன். வங்கிகளுக்கு போய் பணம் எடுப்பது என்பது சிரமமாக இருந்தநிலையில் ஏடிஎம்கள் ஒரு வரப்பிரசாதமாக வந்தது. தெருவுக்கு நாலு ஏடிஎம்கள்கள் என உருவானது. அதே பல ஏடிஎம்கள்கள்  தற்போது காற்று வாங்கிக்கொண்டிருக்கின்றன.

PAYTM/GPAY போன்ற UPI வரவுகள் பணபரிமாற்றத்தை மேலும் சுலபமாக்கிவிட்டதால் ஏடிஎம்கள் பயன்பாடு பெருமளவு குறைந்துவிட்டது. ஏடிஎம்கள்கள் இருக்கும். ஆனால்  வரும் காலங்களில் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் மூடுவிழா கண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இதேதான் கிரிப்டோவிலும் நடக்கக்கூடும்.

இனி சில அனுபவங்களை பார்ப்போம். 90களில் புதிய பொருளாதார கொள்கைகள் வந்தபோது இப்படித்தான் பல ஷேர்களை தாறுமாறாக ஏற்றினார்கள். 10 ரூ ஷேர் 5000 போன கதையெல்லாம் நடந்தது. என் கெட்டநேரம் நான் அப்போதுதான் ஷேர்மார்கெட்டில் நுழைகிறேன். 

பொதுவாக ஷேர்களுக்குத்தான் PE/Ratio வைப்பார்கள். அந்த நேரத்தில் படுபாவிகள் அப்போதிருந்த மியூட்சுவல் பண்ட்களுக்கு கூட PE/Ratio வைத்து அதையும் விலை ஏற்றி ஏமாந்தவன் தலையில் கட்டினார்கள். ஏகப்பட்ட பென்னி ஸ்டாக் தாறுமாறாக ஏறி ஆப்ரேட்டர்களுக்கு பணமழையையும் ஏமாந்த சோணகிரிகளுக்கு அல்வாவையும் கொடுத்தது. 

அந்த நேரத்தில் இன்னொரு மோசடியும் நடந்தது. புற்றீசல்போல்  நிறைய புது வெளியீடுகள் வந்தன. வாரம் 10 பொது வெளியீடு வரும். தற்போது அதன் பேர் IPO. தெருக்களில்/பங்கு தரகர் அலுவலகத்தில் இதற்காகவே நிறைய விண்ணப்பங்கள் இருக்கும். அதில் நிறைய எடுத்துவந்து ஆராய்ச்சி செய்வேன்.

கம்பெனி 2 வது வருடமே லாபத்துக்கு வந்துவிடுமாம். வெளிநாட்டு நிறுவனம் முதலீடு செய்திருக்குதாம். உற்பத்தியான உடனே அவர்கள் வாங்கி கொள்வார்களாம். இப்படி நிறைய கதை விட்ட வெளியீடுகள் வந்து பின்னர் காணாமல் போனது. தற்போது நிறைய கிரிப்டோ வருவதை பார்த்தால் அதே நிலைமைதான் வரும் என நினைக்கிறன்.

அடுத்து ரியல் எஸ்டேட் பூம் வந்தது.  எல்லா பூமிலும் ஆரம்பகட்டத்தில் முதலீடு செய்பவர்கள் லாபம் பார்த்துவிடுவார்கள். இது தியரி. ஆனால் இவர்களை பார்த்து ஆட்டுமந்தைகளை போல் பலர் வந்து விழுவார்கள். அவர்களில் 10-20 தப்பித்தால் அதிர்ஷ்டம். மற்றவர்கள் இப்போதும் நிலங்களை வைத்திருக்கிறார்கள். நல்ல விலை வந்தால் கொடுத்துடுவேன் என்பார்கள். அதுவே அவர்களுக்கு பெருத்த நஷ்டமாக இருக்கும்.

அப்போதைய விலை ஏற்றம் இயற்கையான ஓன்று. அரசு தாராளமயமாக்களை கொண்டுவந்ததால், நிறைய உள்நாட்டு/வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில்களை தொடங்கின. கூடவே மக்கள் தொகை பெருக்கமும் கொரோனவை போல் வேகமாக இருந்தது. தொழில் தொடங்க இடம், மக்களுக்கு வீடு என்ற தேவை எல்லாம் சேர்ந்து விலை தாறுமாறாக ஏறியது. தற்போது அதுவும் கொரோனவைபோல் சமநிலைக்கு வந்துவிட்டது.

மேலே குறிப்பிட்ட இரண்டு விஷயங்களிலும் நிறைய மோசடிகள், கணக்கில் வராத  கருப்பு பணம் என விளையாட ஆரம்பித்ததால், அரசு பல வகைகளில் கடிவாளம் போட ஆரம்பிக்க, அங்கேயும் மந்தநிலை  வந்தது.

கிட்டத்தட்ட அதேதான் கிரிப்டோவிலும் நடக்கும். தற்போது சில நாடுகள் கடிவாளம் போட ஆரம்பித்துவிட்டன. இந்தியாவும் விரைவில் அந்த வேலையை ஆரம்பிக்கும். எந்த ஆட்டுமந்தை மனப்பான்மை இந்த விலையேற்றத்திற்கு காரணமாக இருந்ததோ, அதே ரிவர்ஸ் மனப்பான்மை இங்கே விலை வீழ்ச்சிக்கும் வழி வகுக்கும்.

இங்கே இன்னொரு தியரி சொல்வார்கள். ஒரு பொருள் நிறையவே விலை குறைந்தால் வாங்குவது நல்லது என மூளை சலவை செய்வார்கள். இந்த விஷயத்தில் நிபுணர்கள் மட்டுமே இதை சரியாக கணிக்கமுடியும். ஷேர் மார்க்கெட்டில் கொசுவை பூனை, புலி அளவுக்கு அல்ல, யானை அளவுக்கு ஏற்றிவைப்பார்கள். அது புலி அளவுக்கு வந்தாலே விலை வீழ்ச்சி என சாதாரண மனிதன் தலையில் கட்டுவார்கள். எனவே கவனம் தேவை.

ஷேர் மார்கெட்டிலாவது கொசுவை யானையாக்குவார்கள். ஆனால் பிட்காயின் தற்போதைய விலையை எதனுடன் ஒப்பிடுவது. 1டாலருக்கும் கீழே இருந்தது தற்போது அதிகபட்சம் 47 லட்சம் போயிருக்கிறது. இது என்ன லாஜிக்கோ.   இதற்கு சப்போர்ட் பிரைஸ் என எப்படி நிர்ணயிப்பது?

இன்னும் சில காலங்களில் `என்கிட்டே கிரிப்டோ இருக்கு, நல்ல விலை வந்தா சொல்லுங்க` என புலம்பும் மனிதர்களை நாம் காணக்கூடும்.

Tuesday, February 9, 2021

மனிதன் மாறிவிட்டான், மரத்தித்தில்....


காலம் மனிதனை எப்படி மாற்றுகிறது? பல விஷயங்களை நினைத்து பார்த்தால் நமக்கே அதிர்ச்சியாக இருக்கும். இப்படி ஒரு மாற்றம் என் வாழ்க்கையில் நடந்தது. அந்த சம்பவங்கள் இங்கே.

எனக்கு பணத்தின் மீதான ஆசை அதிகம். பேராசை கிடையாது. என் கழுத்தின் மீது பல வருடங்களாக, அதாவது இளமை பருவத்திலிருந்தே, கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது. அந்த சிக்கலிலிருந்து நான் தப்ப வேண்டுமென்றால் எனக்கு நிறைய பணம் வேண்டும். அப்புறம் மேலும் சில `விஷயங்கள்` நடக்க வேண்டும். அப்படி ஏதாவது நடந்தால்தான் நான் தப்பிக்க முடியும் என்பதால் இந்த ஆசை.

தற்போது காலம் கடந்துவிட்டது. இனி அதை பற்றி பேசி புண்ணியமில்லை. ஆனால் இந்த பணத்திற்கான தேடலில் நடந்த சில சுவாரசியமான சம்பவங்கள்.

25 வருடங்களுக்கு முன் லாட்டரியும் இருந்தது, எனக்கும் ஷேர் மார்க்கெட் பரிச்சியமாகி இருந்தது. இரண்டில் ஏதாவது ஓன்று என்னை கோடீஸ்வரனாக்கிவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. எனவே ஓரளவுக்கு வருமானம் இருந்தாலும் எனக்காக செலவு செய்வதிலும் கூட ரொம்பவே கஞ்சத்தனமாக இருந்தேன். பணம் வந்த பிறகு மொத்தமாக வாழ்க்கையை அனுபவித்துக் கொள்ளலாம் என்று திட்டம். கனவு காணும் உரிமை மட்டும்தான் மனிதனுக்கு இருக்கிறது, அதற்கு அப்ரூவல் கொடுப்பவர் வேறு ஒருவர் என்பதை ரொம்ப தாமதமாக உணர்ந்தேன்.

இப்படி கஞ்சனாக இருந்து மிச்சமாகிய பணத்தை உப்புமா கம்பெனிகளின் ஷேர்களை அனுபவமின்றி வாங்கி குவித்தேன். இப்போது அந்த ஷேர் பத்திரங்களை எடைக்கு போட்டால் 50 ரூபாய் கூட தேறாது.

அப்போது வந்து கொண்டிருந்தே தமிழ்நாடு பம்பர் லாட்டரிகளை வியாபாரியாக இருந்தும் தொழில் தர்மத்தை மீறி விற்காமலும் வைத்து பார்த்தேன். அதாவது ஒழுங்காக வந்து கொண்டிருந்த பணத்தை உதாசீனப்படுத்தினேன். இப்போது அவற்றை நினைத்து பார்த்தால் கண்களில் ஏதோ ஓன்று வருகிறது. அதன்பின் என் கணக்குகள் என்னை கை கழுவிவிட நான் ஜெயிலுக்கு போனேன். அங்கே சில அனுபவங்கள்.

நான் முதலில் இருந்த பிளாக்கில் சாப்பாட்டுக்கு ரொம்பவே கஷ்டப்பட்டேன். அங்கே நான் இருந்த 8 மாதங்களில் பெரும்பாலும் மோர் சோறு அல்லது தண்ணி ஊற்றி சாப்பிடுவதுதான் நிலைமை. இதில் காலை பட்டினி வேறு. இடையில் சிறை கிச்சனுக்கு போய் காசு கொடுத்து மதியம் மட்டும் ரொட்டி வாங்கி வந்தாலும், அதற்கு மாசம் 300 ரூபாய் என்பதால் பட்ஜெட்டும் இடித்தது. அந்த ரொட்டியும் அப்பளத்தை விட கொஞ்சம் மொத்தமாக இருக்கும். எனவே அது பசியை தீர்க்காது. இப்படியும் 8 மாதம் எனக்கு சிறை வாழ்க்கை ஓடியது.

அதன் பிறகு அங்கேயே வேறு பிளாக்குக்கு மாறினேன். அதை சிறை என்று சொன்னால் எனக்கே சிரிப்பு வரும். எனவே அதை மென்ஸ் ஹாஸ்டல் என்று சொல்லலாம். இங்கே பெரும்பாலும் போதை பொருள் குற்றவாளிகள், இலங்கை தமிழர்கள்தான் இருப்பார்கள். இவர்களுக்கு பெயில் கிடையாது என்பதாலும் நீண்ட காலம் இருக்கப்போவதால் மனத்தளர்ச்சி வந்துவிடும் என்பதால் இவர்களுக்கு நிறையவே சுதந்திரம்.

தொடர் குற்றவாளிகளை போல் இவர்கள் அடிக்கடி சண்டை போட மாட்டார்கள் என்பதாலும் இந்த சுதந்திரம். இங்கே இருந்தவர்கள் மிடில் கிளாஸ் மற்றும் வசதியானவர்கள். இதன் காரணமாக இந்த பிளாக் ஒரு ஹாஸ்டலை போல் சுத்தமாக சுகாதாரமாக இருந்தது. ஏதோ என்னுடைய அதிர்ஷடம் இங்கே வந்து சேர்ந்தேன். இங்கே எனக்கு சிறை வாழ்க்கை கொஞ்சம் நிம்மதியாகவே இருந்தது.

முதலில் இருந்த பிளாக்கில் அப்பர் மிடில் கிளாஸாக இருந்தவன், இந்த பிளாக்கில் அப்படியே தலைகீழ். எல்லோரும் கொஞ்சம் வசதியாக இருக்க நான் மட்டும் படஜெட் பத்மநாபனாக இருந்தேன்.

இப்படி என் வாழ்க்கை பல மாதங்கள் ஓடிக்கொண்டிருக்க, ஒரு முறை குளிப்பதற்காக பாத்ரூம் போனேன். அது பிளாக்கை தள்ளி வெளியே இருந்தது. 5-6 பாத்ரூம் இருக்கும். வெளியே துணி துவைப்பதற்கு விசாலமான இடம். இப்படி நான் போனபோது வழியில் 2000 ரூபாய் கிடந்தது. எடுத்தேன். 

அதை கொண்டு வந்து நான் இருந்த செல்லின் நிர்வாகியிடம்  (இலங்கை தமிழர்) கொடுத்து `யாரோ கீழே போட்டுவிட்டார்கள். யார் என்று விசாரித்து கொடுத்துவிடுங்கள்` என்றும் சொல்லிவிட்டேன். அப்போது நான் இருந்த மனநிலையில் இயல்பாக நான் செய்த விஷயம். இதில் எனக்கு விசேஷமாக எதுவும் தெரியவில்லை.

அதன்பின் மற்றவர்கள் என்னை பார்க்கும் பார்வையில் ஒரு மாற்றம் தெரிந்தது. வித்தியாசத்தை நான் வெளிப்படையாகவே உணர்ந்தேன். ஒருவர் என்னிடம் `உங்களையெல்லாம் யார் ஜெயில்ல போட்டது?` என்று ஆச்சர்யமாக கேட்டார். இன்னொருவர் `சிவா அண்ணனிடம் இந்த பணம் கிடைத்ததால்தான் திருப்பி கொடுத்தார். வேறு யாராவது இருந்தால் கொடுத்திருக்கமாட்டார்கள்` என்றார்.

அப்போதுதான் என்னுடைய செயலின் பாதிப்பு தெரிந்தது. நான் அங்கே `தனி ஒருவன்` அல்லது `ஆயிரத்தில் ஒருவனாக` இருந்தேன். மறுநாள் சிறையில் சிலர் ஸ்பெஷலாக வரவழைத்து குடிக்கும் டீ எனக்கு கிடைத்தது. மரியாதையாம்! சிறையில் அந்த டீ அவ்வளவு சுவையாக இருக்கும்.

சிறையில் பணம் இல்லாமல் பலர் கஷ்டப்படும் நிலையில், நானே மாதம் ரூ.1000 என்ற பட்ஜெட்டில் என் சிறை வாழக்கையை ஒட்டிக்கொண்டிருக்க, இந்த பணத்தை நானே வைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் தொடர்ந்து நல்ல புத்தகங்களை வாசித்து வந்ததால் அந்த எண்ணம் எனக்கு வரவில்லை. நான் இயல்பாக அப்போது நடந்து கொண்டேன். இதையே வேறு மொழியில் சொல்லவேண்டுமென்றால் என்னை தேடி வரும் பணத்தை நான் உதாசீனப்படுத்தியிருக்கிறேன். 

இதன்பின் சிறையில் பொழுதுபோகாமல், அரசியலையும் தொடர்ந்து (சிறையிலும்) வாசித்து கொண்டிருந்தபோது சில அரசியல் நிகழ்வுகள் என்னை கோபப்படுத்தியது. அப்படி ஒரு சம்பவம் என்னை கோவப்படுத்த, சிறையிலிருந்தே மத்திய அரசை விமரிசித்து தினமலருக்கு (இது உங்கள் இடம்) ஒரு கடிதம் எழுதினேன். நல்லவேளை மாநில அரசை விமர்ச்சிக்கவில்லை. அது பிரசுரமாக.. அப்படியே மேலும் சில என தொடர்ந்தது.

இந்த சமயத்தில் சிறையில் ஒரு வயதானவர் வந்தார். அவர் மீது மிசா (குண்டர் சட்டம்) போடப்பட்டிருந்தது. வசதியானவர். பிள்ளைகள் நல்ல நிலையில் சாப்ட்வெர் கம்பெனியில் வேலை பார்ப்பதாக சொன்னார். அவரை பார்த்தால் குற்றவாளியைப்போல் தெரியவில்லை. இருந்தாலும் எங்கேயோ பிரச்சினை. ஏதோ பிரஷர் வந்து இவர் மீது குண்டர் சட்டம் போட்டுவிட்டார்கள்.

குண்டர் சட்டம் போட வேண்டுமென்றால் யாரிடமாவது கத்தியை காட்டி மிரட்டி இருக்க வேண்டும். தமிழ்நாடு போலீசுக்கு திரைக்கதை நன்றாக அமைக்க தெரியும். எனவே ரோட்டோர டீக்கடையில் கத்தியை காட்டி மிரட்டியதாக ஒரு கதையை தயார் செய்து அதை காட்டி குண்டர் சட்டம் போட்டுவிட்டார்கள்.

சிறையில் பல கைதிகளின் சார்ஜ் சீட் படித்து பார்த்து, அது குறித்து கைதிகளிடம் பேசியிருக்கிறேன். பல வழக்குகள் இப்படித்தான் புனையப்படுகிறது. ஓன்று, வேண்டாதவர்களை உள்ளே தள்ள. இரண்டு, பல குற்றவாளிகள் வழக்கை இழுப்பது சாட்சிகளை மிரட்டுவது என தில்லாலங்கடி வேலை பார்த்து வழக்குகளிருந்து தப்பிவிடுவதால், இது போன்ற பொய் வழக்குகள்.

இங்கே எல்லாமே போலிசின் செட்டப் என்பதால், சாட்சிகள் பயப்படுவதில்லை. நடக்காத ஒன்றை நான் என் மூன்று கண்ணால் பார்த்தேன் என்று இந்த சாட்சிகள் சொல்ல, அவர்களுக்கு தண்டனை உறுதியாகிவிடும். அல்லது போலீஸ் மற்றும் குற்றவாளிகளின் `கெட் டு கெதர்` நல்லபடியாக இருந்தால், அந்த கேஸ் அவ்வளவுதான். இனி நம் விஷயத்துக்கு வருவோம்.

குண்டர் சட்டம் போடப்பட்டு 3-4 மாதத்தில் போர்ட் என ஒரு நீதிபதிகள் குழு வசம் இந்த குண்டர் சட்ட வழக்குகள் மறு பரிசீலனைக்கு வரும். இங்கே விசாரிப்பவர் ஒரு நீதிபதியா அல்லது பெஞ்சா என தெரியவில்லை. இங்கே பெரும்பாலான கேஸ்கள் குண்டர் சட்டத்திலிருந்து விடுவிக்கப்படும்.

பத்திரிகையாளர்களிடம் `நாங்கள் குற்றவாளிகளை 23 1/2 மணி நேரத்தில் பிடித்தோம். இவர்கள் இதற்கு முன் பல குற்றங்களை செய்திருக்கிறார்கள்` என பந்தாவாக போட்டோ செஷன் வைத்து போஸ் கொடுக்கும் இந்த  போலீசார், நீதிபதிகளிடம் எதுவும் சொல்வதில்லை.

நீதிபதி என்ன விவரம் தெரியாதவரா, போலீசார் மைண்ட் வாய்ஸில் சொல்வதை பாக்கெட்டில் போட்டு கொண்டு பெயில் கொடுத்து விடுவார். நான் சிறையில் இருந்த வரை 10-ல் 8 கேஸ்கள் இப்படி குண்டர் சட்டத்தை உடைத்து கொண்டு பெயிலில் போய் விடுவார்கள். அப்புறம் என்ன வெண்டக்காய்க்கு இந்த குண்டர் சட்டம் என்றே தெரியவில்லை. இந்த காமெடி இன்னும் தொடர்கிறது.

இங்கே நான் சொல்ல வந்த பெரியவர் குண்டர் சட்டத்தை உடைக்க வக்கீல்களிடம் பேசி இருக்கிறார். இதை உடைக்க உளி மற்றும் சுத்தியல் வாங்க வேண்டும் என கொட்டேஷன் கொடுத்திருக்கிறார்கள். பீஸ் எகிறி இருக்கிறது. இந்த நேரத்தில் `மத்திய அரசுக்கே அறிவுரை சொல்ற ஒரு அறிவாளி நம்ம பிளாக்குல இருக்கிறரர்`  என என்னை நோக்கி யாரோ கை காட்டிவிட்டார்கள். அப்படித்தான் அவர் என்னிடம் வந்தார்.

நான் சார்ஜ் ஷீட்டையும் படித்தேன், அவர் சொன்ன விளக்கத்தையும் கேட்டேன். `நான் நல்ல பொருளாதார நிலையில் இருக்கிறேன். என் பிள்ளைகள் சாப்ட்வேர் இன்ஜினியர்கள், நான் இந்த ரவுடித்தனம் செய்வேனா?` என்று கேள்வி கேட்டு மேலும் சில விளக்கங்களை பெட்டிஷனாக எழுதி கொடுத்தேன். அது காக்கா உட்கார பனங்காய் விழுந்த கதையாகிவிட்டது.

நீதிபதிகளுக்கு தெரியும் எது பொய் கேஸ் எது உண்மை என்று. இருந்தாலும் அவர்களுக்கும் பல `விஷயங்கள்` தேவை அல்லவா. அதை இப்படி பெயில் கொடுப்பதிலும், வழக்கை இழுக்கடிக்க குற்றவாளிகளுக்கு உதவுவதன் மூலம் பெற்று விடுகிறார்கள். இங்கே சில விதிவிலக்குகளும் உண்டு.

பொதுவாக வீட்டில் படைத்தால், காக்காய்க்கு சோறு வைப்பார்கள். காரணம் புண்ணியமாம்! இன்னொரு காரணம்  அது கொஞ்சமாய் சாப்பிடும். ஒருவேளை அது எனக்கு ஃபுல் மீல்ஸ் வேணும் என்று கேட்டு நிறைய வாங்கி சாப்பிட்டால் என்னவாகும். அதன்பின் நாம் காக்கையை கூப்பிடமாட்டோம். அதாவது நாம் புண்ணியம் செய்யவேண்டும், ஆனால் அது நம் கையை கொஞ்சமாக கடிக்க வேண்டும். இதுதான் மனிதன் காக்கையை தேர்ந்தெடுத்தன் காரணம் (என்று நான் நினைக்கிறேன்).

நீதிபதிகளும் அப்படிதான்.  காசேதான் கடவுளடா என்ற பாட்டைத்தான் விரும்பி கேட்பார்கள். அதேசமயம் இப்படி திடீர் என சில சின்ன புண்ணியங்களும் கிடைக்கும். `என்னடா இந்த ஆள் ஒரிஜினல் வக்கீல் மூலம் வராமல் ஒரு டுபாகூர் வக்கீல் மூலம் பெட்டிஷன் கொடுக்கிறாரே, இவரிடம் எதுவும் தேறாது` என நினைத்தார்களோ அல்லது காக்கைக்கு சோறு வைப்பது போல், இந்த வழக்கு பொய் என்பது நன்றாகவே தெரிகிறது, இதை ரத்து செய்து புண்ணியம் தேடலாம் என்றும் நினைத்திருக்கலாம். அந்த வகையில் அவர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது.

அவர் சந்தோஷமாக என்னிடம் வந்தார். `உங்களுக்கு ஏதாவது வேண்டுமா?` என்று கேட்டார். நான் அப்போதும் உத்தமபுத்திரனாக இருந்தேன். `எனக்கு எதுவும் வேண்டாம். வேறு யாராவது கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்யுங்கள்` என்றேன். அவர் என்னை மேலேயும் கிழேயுமாக ஒரு முறை பார்த்தார். பலர் என்னை அப்படி பார்த்திருக்கிறார்கள். இது எனக்கு அடிக்கடி நடக்கும். நான் ஒரு டிபெக்டிவ் பிராடக்ட். ஒன்னும் பண்ண முடியாது.   

இருந்தாலும் `ஏதாவது கேளுங்க` என்று அவர் வற்புறுத்த, அந்த சமயத்தில் சிறையில் என்னுடைய செருப்பு அறுந்துவிட்டது. ஊருக்கு தகவல் சொல்லி வர லேட்டாகும் என்பதால், அதை மட்டும் கேட்டேன். அவரும் வாங்கி கொடுத்ததாக ஞாபகம். அப்படியே அவருக்கு மனுவில் வந்த பிஸ்கட் பழம் என அவற்றையும் கொடுத்தார்.

ஒருவேளை பணம் கேட்டிருந்தால், 1000-5000 கிடைத்திருக்கக்கூடும். கவனிக்கவும், கொஞ்சமாகவே இருந்தாலும், பணம் என்னை தேடி வருகிறது. நான் அதை உதாசீனப்படுத்துகிறேன். விதி வலியது அல்லவா, அதான்.

இது நடந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. அதன் பின் வாழ்கை கதற கதற பல அனுபவங்களை கொடுத்தது. பணம் எனக்கு கண்களில் தண்ணியை மட்டும் காட்டவில்லை, பெட்ரோல், டீசல், எல் பில் ஜி  என எல்லாவற்றையும் காட்டிவிட்டது. எந்த சின்ன தொகையை நான் அலட்சியமாக உதறினேனோ, அதுவே ஒரு கட்டத்தில் எனக்கு பெருந்தொகையாக மாறிபோனது.

ஒருவேளை நான் பணத்துக்கு மரியாதை கொடுக்கவில்லை, அதனால்தான் இப்படி நடக்கிறதோ என்ற எண்ணம் எனக்குள் கேள்வியாக மாறியது. இனி அதை மதிக்கவேண்டும் என்ற உணர்வு வந்துவிட்டது.

இப்படிப்பட்ட மனநிலையில் நான் ஒரு நாள் இங்கே அகமதாபாத்தில் வாக்கிங் போய் கொண்டிருந்தேன். (இடத்தை சொல்லமாட்டேன். பின்னர் இன்னொரு பதிவுக்கு அது தேவைப்படும்.) எனக்கு முன்னே இருவர் பைக்கில் போய் கொண்டிருந்தனர். பின்னால் அமர்ந்தவர், அவர் சட்டையில் இருந்து எதையோ எடுக்க, அதிலிருந்து 200 ரூபாய் கீழே விழுந்தது. அவர் கவனிக்காமல் போய்விட்டார்.

நான் கவனித்து விட, விரைவாக போய் எடுத்துவிட்டேன். அப்போது `சாயப், மேனே பெஹலே தேக்கா` என்று குரல். திரும்பி பார்த்தால், 3 வீலரில் ஒரு பிச்சைக்காரன். அவர்தான் முதலில் பார்த்தாராம்.

ப்ரோட்டோகால்படி பார்த்தால், எனக்கு முன்னால் அந்த பிச்சைக்காரன்தான் இருந்தான். எனவே அவனுக்குத்தான் சொந்தம். எழுந்து வந்து எடுக்கமுடியவில்லை. நிஜமாகவே ஊனமுற்றவர்.

வழக்கமாக இவர்களை உட்காரவைத்து யாராவது ஒருவர் வண்டியை தள்ளிக்கொண்டு வருவார். இவர் தனியாகவே இருந்தார். என்னைப்போலவே சிங்கிள் போலிருக்கிறது. அதுமட்டுமின்றி ஸெல்ப் மேட் பில்லியனர் என்பதுபோல் இவர் ஸெல்ப் மேட் பிச்சைக்காரர். இந்த இரண்டு காரணங்களுக்காக நான் அந்த பணத்தை அவரிடம் கொடுத்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி என்னை `சார்` ன்னு சொன்னான். அந்த மரியாதைக்காவது நான் கொடுத்திருக்க வேண்டும்.

ஆனால் காலம் என்னை மாற்றிவிட்டது. எனக்குள் ஒருவன் காணாமல் போய்விட்டான். அதே சமயம் பணத்தை முறைகேடாக அடையும் அளவுக்கு நான் மாறவில்லை. என்னை தேடிவரும் வரும் பணத்தை உதாசீனப்படுத்த கூடாது என்ற எண்ணம் மட்டும் வந்துவிட்டது.

எனவே நான் `யோவ்... நீ அபிஷியல் பிச்சைக்காரன், நான் அன் அபிஷியல்.. அவ்வளவுதான்` என்று மைண்ட் வாய்ஸில் சொல்லிவிட்டு, பணத்தை எடுத்துக்கொண்டு நகர்ந்தேன். அந்த  பிச்சைக்காரனுக்கு பணம் போனதைவிட, இப்படி ஒரு டீசண்டான பிச்சைக்காரனை பார்த்தது அதிர்ச்சியாக இருந்திருக்கும்.

மேலுலகத்திலிருந்து யாரவது பார்ப்பார்கள். அடடா இந்த ஆளுக்கு பணத்தோட அருமை தெரிஞ்சி போச்சி, இனிமே இவனுக்கு கொடுக்கலாம் நினைப்பார்கள் என்று ஒரு நம்பிக்கை. ஆனால் ஒரு மாற்றத்தையும் காணோம். ஒரு வேளை நான் இருக்கற ஏரியா பக்கம் கடவுள் ரவுண்ட்ஸ் வரலியோ? எப்படி இந்த மெசேஜை அவருக்கு பாஸ் பண்றது?

அதே சமயம் அந்த பிச்சைக்காரன் ஏதாவது சாபம் விட்டு நிலைமை இன்னும் மோசமாகிவிடுமோ என்ற பயமும் இருந்தது. ஆனால் அப்படியும் எதுவும் நடக்கவில்லை.