!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Wednesday, December 29, 2021

இங்கேயும், அங்கேயும்



சமீபத்தில் பெரியார் இயக்கத்தை சேர்ந்த ஒருவர் சீமானின் `எனக்கு ஒரு வீடு கூட இல்ல` என்ற தன்னடக்கத்தை நன்றாக கிழித்து ஒரு வீடியோ போட்டிருந்தார். சீமானின் மனைவி மற்றும் மாமியாரின் சொத்துக்களையும் அவர் வெளியிட, அதற்கு சீமான் பதிலளித்த, ஸாரி பல்லிளித்த கதையும் சூப்பர்.

ஆனால் எனக்கு எதையுமே எதார்த்தமாக பார்த்து பழகிவிட்டது. எல்லோரும் அவரை மோசடி பேர்வழி என முத்திரை குத்தினாலும் அவருடைய செயல்பாடுகள் மற்றும் உடல் மொழி அவரை அப்படி காட்டுவதாக எனக்கு தோணவில்லை. காரணம், மோசடி நபர்களிடம் கொஞ்சமாவது திறமை இருக்கும். பின்னர் மாட்டிக்கொள்வார்கள், அது வேறு விஷயம். ஆனால் எதிரி எப்போது ஏமாறுவான் என எதிர்பார்த்து சரியான நேரத்தில் சுருட்டுவார்கள். இந்த திறமை நிச்சயம் அவர்களிடம் இருக்கும். 

இங்கே இவருடைய அரசியல் பயணத்தை பார்த்தால் இவருக்கு அப்படி ஒரு தகுதி இருப்பதாக தெரியவில்லை. தொடர்ந்து சளைக்காமல் பிரச்சாரத்தில் இருக்கிறரர். 4 சதவிகித ஓட்டை இந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே காட்டிவிட்டார். அதுவும் கடந்த தேர்தலில் வெற்றிக்காக எதையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் அதிமுக சற்று அதிகமாகவே இருந்தது.

இந்த சூழ்நிலையில் அவர் அந்த பலவீனத்தை பயன்படுத்தி அங்கேயோ அல்லது அதை காட்டி இங்கேயோ பேரம் பேசியிருக்கலாம். கொஞ்சம் வளைந்திருந்தால் இவரும் கோடிகளில் குளித்திருக்கலாம். இந்நேரம் ராமதாஸ் போல் எதாவது ஒரு பண்ணை வீட்டில் மரம் செடி நட்டு இயற்கையையும், அப்படியே தன்னையும், பாதுகாத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் கொள்கையில் உறுதியாக இருந்திருக்கிறார். அந்த வகையில் நாம் அவரை குறை சொல்ல முடியாது.   

ஒருவகையில் இவர் ஒரு (உருப்படாத) கொள்கை உடைய அரசியல் தலைவர் என்றுதான் கணிக்க வேண்டும். இரண்டாம் புலிகேசி என்பதுபோல் இவர் அரசியலில் இரண்டாவது வைகோ.

குண்டு பல்ப்

இந்த செய்தியையும் கவனித்தேன். தமிழ்நாட்டில் எல்லா விவசாய மின் இணைப்புகளுக்கும் மீட்டர்பொருத்தும் பணி நடைபெறுகிறதாம். காரணம் ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்பதுதான்.

நல்ல செய்திதான். ஆனால் இதிலும் ஒரு கெட்ட செய்தி இருக்கிறது. அதாவது சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு சம்பவம். ஒரு வீட்டில் காலையில் தோட்டத்தில் இருந்த பாத்ரூமுக்கு போனால், அங்கே விடிய விடிய குண்டுபல்ப் எரிந்து கொண்டிருந்தது. `இரவு இதை நிறுத்தி விடலாமே?` என்று கேட்டதற்கு , `எல்லா பல்ப் எரிந்தாலும் எங்களுக்கு பில் குறைவாத்தான் வரும்` என்று பதில். காரணம் அப்போது ஏழைகளுக்கு 100- யூனிட் மின்சாரம் இலவசம் (என்று நினைக்கிறன்). எனவே அவர்களுக்கு பெரும்பாலும் குறைவாகத்தான் பில் வருமாம். இதுதான் இலவசத்தின் லட்சணம்.

ஒரு பக்கம் மின் பற்றாக்குறை இருக்க, இன்னொருபக்கம் இலவசம் என்ற காரணத்திற்காக இப்படி பல வகைகளில் விரயம். இதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என அப்போதே நினைத்தேன். ஆனால் இப்போதுதான் கணக்கெடுக்கவே ஆரம்பித்திருக்கிறார்கள். எவ்வளவு வேகமாக இந்தியாவில் குறைகளை கண்டுபிடித்து சரி செய்கிறார்கள் பாருங்கள்! நாடு விளங்கிடும்.

மாமியார் உடைத்தால் ...

இது தேசிய செய்தி. கர்நாடகா மதமாற்ற தடை சட்டம் கொண்டுவந்திருக்கிறது. இதை விமர்சனம் செய்த காங்கிரஸ் உறுப்பினர் குலாம் நபி ஆசாத், யாரும் கழுத்தில் கத்தி வைத்து மதம் மாற கட்டாயப்படுத்துவதில்லை. ஒருவரின் செயல், அவருடைய நன்னடத்தைத்தான் மற்றவர்களை அவர்களின் பாதையில் போக வைக்கிறது என்று கருத்து சொல்லியிருக்கிறார்.

கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் எதார்த்தம் என்பது வேறு அல்லவா. அதுவும் அரசியல் நிகழ்வுகளை அதிகம் கவனிக்கும் ஆசாத்துக்கு தெரியாதா பல மன மாற்றங்கள் எதனால் நிகழ்கிறது என்று.

காங்கிரசிலிருந்து எத்தனையோ பெருந்தலைகள் பிஜேபிக்கு தாவி இருக்கிறார்கள். அவர்கள் கழுத்தில் பிஜேபி கத்தியையா வைத்தது? பாதி பேருக்கு பதவி ஆசை, மீதி பேருக்கு அங்கே மரியாதை இல்லை அல்லது புறக்கணிக்கப்படுகிறோம் என்ற உணர்வு. எனவே தாவிவிட்டார்கள்.

மத மாற்றங்களிலும் இதுதான் நடக்கிறது. இது குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதுதான். இங்கே மற்ற மதத்தினரை பிஜேபி குறை சொல்கிறது. அதேசமயம் அதே கொள்கையைத்தான் பிஜேபி அரசியலில் கடைபிடிக்கிறது.

இங்கே நாம் யாரை குறை சொல்வது?

Sunday, June 13, 2021

இது இங்கே நடந்துவிட்டது



இந்த கோரோனா காலத்தில் சில வார்த்தைகள் அதிகம் புழக்கத்தில் இருக்கிறது. அது நம் மனதில் பதிந்தும் விட்டது. ஆனால் அந்த வார்த்தைகள் அனைத்தும் வேறு ஒரு துறையில் பொருத்தி கவனித்தால் அது சில ஆச்சர்யமான செய்திகளை தருகிறது.

PEAK 

Peak, herd immunity, vaccine இவைதான் தற்போது நாம் கொரோனா காலத்தில் மிகவும் பயன்படுத்தும் வார்த்தைகள். முதல் அலையில் கொரோனா 1 லட்சத்தை நெருங்கி இறங்கியது. இரண்டாவது அலையில் அது 4 லட்சத்தை தொட்டு விட்டு இறங்கியது.

ஆரம்பத்தில் இது எந்த அளவு போகும் என தெரியாமல் திணறினோம். அது 3க்கு கீழே போய் 2, 1 லட்சம் என இறங்கிய பிறகு, இனி இது இந்த அலையில் மட்டுமின்றி அடுத்த அலையிலும் இந்த அளவுக்கு ஏறாது என தெரிகிறது. இதே  தியரியை நாம் தமிழக அரசியலில் பொருத்தி பார்த்தால் அங்கேயும் ஒரு சுவாரசியமான செய்தி தெரிகிறது.

இங்கே ஊழல் நடக்கிறது, அது இனியும் நடந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் ஊழலின் முதல் அலை அம்மா ஆட்சியில் டான்சி மற்றும் சில ஊழல்கள் என பரபரப்பாகி நம்மை திகைக்க வைத்தது.

வழக்கம் போல் மக்களின் / சட்டத்தின் அலட்சியம் காரணமாக கொஞ்சம் அடங்கிய அந்த அலை பின்னர் அய்யா ஆட்சியில் 2g ஊழல் என பிரமாண்டம் எடுத்தது. அது கொடுத்த அதிர்ச்சியும் விளைவுகளும் மிக கடுமையாக இருக்க, அந்த அலையும் அடங்கியது. அதன் பிறகு இமாலய ஊழல் அலை என எதுவும் காணோம். 

அந்த கணக்குகளின் அடிப்படையில் பார்த்தால் நாம் தமிழகத்தில் ஊழலின் உச்சத்தை தொட்டு விட்டோம் என தெரிகிறது. இனி அது இறங்குமுகமாகத்தான் இருக்கும். அதேசமயம் எல்லா தொற்று நோய்களும் ஆரம்பத்தில் கோரத்தாண்டவம் ஆடிவிட்டு அடங்கினாலும், அது அவ்வப்போது வரும் seasonal disease ஆக இருக்கும் என்பதும் எதார்த்தம். அந்த வகையில் இனி தமிழகத்தில் ஊழலும் அப்படித்தான் இருக்கும். இது தியரி. நாமும் நம்புவோம்.

Herd immunity

இதுதான் நடந்து முடிந்த தேர்தலில் நான் கவனித்த சுவாரசியமான, சந்தோஷபடவேண்டிய விஷயம்.

தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதுதான் மிகப்பெரிய பிரச்சினையாக நமக்கு இருந்தது. தொற்று நோய் நம்மை தாக்கும்போது, ஓன்று தடுப்பூசி கண்டுபிடித்து நம்மை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். அல்லது, மருந்து இல்லாத நிலையில், நம் உடல் இயற்கையாகவே அந்த நோயை எதிர்த்து போராடும் சக்தியை பெற்றுவிடும். இதைத்தான் நாம் கொரோன விஷயத்தில் Herd immunity என அதையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த ஓட்டுக்கு பணம் விஷயத்திலும் அப்படித்தானே நடக்கவேண்டும். அரசு ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்களை தண்டிக்கவேண்டும். அப்படி நடந்தால் இது குறையும். ஆனால் கொடுப்பதே ஆட்சியாளர்கள் எனும்போது என்ன செய்வது? இதற்கு மருந்தே இல்லை. ஆனால் அதிர்ஷ்டவசமாக ஹெர்ட் மெண்டாலிட்டி இங்கு வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது.

ஒரு காலத்தில் பணம் கொடுத்தால் கண்டிப்பாக அவர்களுக்குத்தான் ஓட்டு போடுவார்கள் என்ற எண்ணம் இருந்தது. இப்போது எல்லோரும் பணம் கொடுப்பதால், பணமும் கொடுக்கணும் கூடவே தகுதியும் இருக்கனும் என மக்கள் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அதிகாரம் கையில், ஊழல் செய்த பணமும் நிறைய, அதில் மக்களுக்கு கொடுத்ததும் அதிகம் என்ற நிலையில் அதிமுக தோற்கிறது என்றால், இனி பணம் தமிழக மக்களை ஏமாற்றாது என தெளிவாக தெரிகிறது. அவர்கள் எல்லோரிடமும் வாங்கி கொண்டு அவர்களுக்கு விருப்பமானவர்களுக்கு போட்டுவிடுகிறார்கள். இந்த சந்தை மனப்பான்மை `ஓட்டுக்கு நோட்டு` என்ற வியாதியையும் கட்டுப்படுத்திவிட்டது. இனி அரசியல்வாதிகள் பணம் கொடுக்க யோசிப்பார்கள். அந்த பயம் அவர்களுக்கு வந்துவிட்டது. எனவே இதுவும் சந்தோஷமான செய்திதான். 

தற்போதைய திமுக அரசு சிறப்பான ஆட்சியை கொடுக்குமா என தெரியாது, ஆனால் நிச்சயம் நல்லாட்சியாக அதாவது மோசமான பேர் எடுக்கும் ஆட்சியாக இருக்காது என நம்பலாம். அதற்கான அறிகுறிகள் தெரிகிறது. இதற்கு பின்னால் ஒரு லாஜிக் இருக்கிறது. நானும் ஏதாவது ஒரு சம்பவம் சொல்லாமல் பதிவை முடிக்கமாட்டேன். அந்த வகையில் ஒரு சம்பவம்.

இங்கே அகமதாபாத்தில் ஒரு திருமண நிகழ்ச்சி. கோரோனோவுக்கு முந்தையது. இரவு சாப்பாடு ஆரம்பமானது. சாப்பிடும் வரிசையில் சில சிறுவர்கள். முகமே சொல்லும் தமிழர்கள் இல்லை என்பதை. அந்த பகுதியில் இருக்கும் ஏழை சிறுவர்கள். அவர்களை கவனித்துவிட்ட `நம்மவர்` அவர்களை துரத்திவிட்டார்.

பின்னர் பந்தி முடிந்தது. சில உணவுகள் மீந்தது. இப்போது அந்த நம்மவர் சொல்கிறார், `எதையும் வீணாக்காதீங்க. பக்கத்துல ஏழைகளுக்கு கொடுத்திடுங்க` என்று. இது நல்ல செயல்தான். பல இடங்களில் கவனிக்கலாம். அதுவும் திருமண நிகழ்ச்சிகளில் விருந்தினர் சாப்பிட்ட பிறகுதான் நாம் சாப்பிடுவோம். எனவே இதை நான் இங்கே குறையாக குறிப்பிடவில்லை.

ஆனால்  மனிதர்களை நான் பல விதங்களில் கவனித்த வரையில், பசிக்கு சாப்பாடு போடும் மனிதர்களை விட தன் பசி அடங்கிய பின் சாப்பாடு போடும் மனிதர்களே இங்கே அதிகம். அந்த ஒரு விஷயத்தை மட்டும் நாம் இங்கே எடுத்துக்கொள்வோம்.

நம்மவர் 

நான் அவ்வப்போது ஏதாவது ஒரு விஷயத்துக்காக பதிவு எழுத ஆரம்பிப்பேன்  பின்னர் அது முழுமை பெறாமல் அப்படியே டிராப்டில் நின்று விடும். நம்மவர் கமல் ஒரு பேட்டியில் `மக்களுக்கு சேவை ` என பேசியதை கேட்டு கோபம் கொண்டு அவருக்காக எழுதிய பதிவில் இந்த உதாரணத்தை எழுதினேன். அதுதான் இங்கே.

கமல் அரசியலில் இறங்கியிருக்கிறார். சந்தோஷம். நடந்து முடிந்த தேர்தலில் சறுக்கியும் இருக்கிறார். அதுவும் சந்தோசம். ஆனால் மக்களுக்கு சேவை செய்ய நான் அரசியலில் இறங்கியிருக்கிறேன் என்று அவர் சொன்னால் அது பாதிதான் உண்மை.

நிஜத்தில் அவர் பணம், புகழ் மற்றும் பல என எல்லாமே திருப்தியாக பார்த்துவிட்டார். அவருடைய திரைப்பட வாழ்க்கை அந்திம காலத்தில் இருக்கிறது. எனவே இனி அவருக்கு தேவையில்லாத, பயன்படாத காலங்களை மக்களுக்காக ஒதுக்கி இருக்கிறார். சேவை எப்போது செய்தாலும் வரவேற்க வேண்டியதுதான். ஆனால் அவரின் இந்த செயல் சிறந்த முன்னுதாரணமாக சொல்லமுடியாது.

ஸ்டாலின்

கிட்டத்தட்ட ஸ்டாலின் கதையும் அப்படித்தான். அவர் இளமையிலேயே அரசியலுக்கு வந்துவிட்டது  நல்ல தொடக்கம் என்றாலும், இதற்கு  மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மை மட்டும்தான் காரணம் என்று சொல்லமுடியாது.

ஒரு மளிகை கடைக்காரர் பையன் 15 வயதில் கடைக்கு வந்து வியாபாரம் செய்வதும், ஒரு விவசாயின் மகன் சிறு வயதிலேயே நிலத்தில் இறங்குவதும் இயற்கையான நிகழ்வு. அதேபோல் ஒரு அரசியல்வாதியின், அதுவும் முதல்வரின் பிள்ளை, அரசியலுக்கு வந்தார் என்றால் அதுவும் இயற்கைதான். ஆனால் தகுதி? அது கேள்விக்குறியாகவே இருந்தது.

எனக்கும் ஸ்டாலின் மீது நல்ல அபிப்ராயம் இருந்தது கிடையாது. இதற்கு முன் `1g vs 2g` என்ற பதிவில் முதல் தலைமுறை வெற்றியாளர்களான மோடி மற்றும் எடப்பாடி போன்றவர்களை வாரிசு தலைவர்கள் வெல்வது சிரமம் என்ற தொனியில் ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதை மீறி இவர் வென்றிருக்கிறார். வாழ்த்துக்கள்.

அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாகவும், சுற்றிலும் ஜால்ரா கூட்டமாகவும் இருப்பதால் அவர்களால் பல விஷயங்களை கவனிக்க முடிவதில்லை. அது அவர்களை எதேச்சாதிகாரிகளாக மாற்றிவிடுகிறது.

ஆனால் ஸ்டாலின் அவர்களுக்கு கிடைத்த நீண்டகால ஓய்வில் அது போன்ற சிக்கல்களை சந்திக்காமல், அவர் பல விஷயங்களை கவனித்திருக்கிறார்/படித்திருக்கிறார் என தெரிகிறது. அது அவருடைய தற்போதைய நிர்வாக முடிவிலும் தெரிகிறது.

`உன் நண்பன் யார் என சொல் நீ யார் என நான் கூறுகிறேன்` என வசனம் ஓன்று உண்டு. அந்த வகையில் இறையன்பு அவர்களை முக்கிய பொறுப்பில் உட்கார வைத்ததன் மூலம் அவர் நாட்டுக்கு நல்ல நிர்வாகத்தை கொடுப்பதில் உறுதியாக இருக்கிறார் என தெரிகிறது.

அது மட்டுமின்றி மேலும் சில அமைச்சர்களின் பேச்சும் செயலும் தமிழகம் நல்லாட்சியை நோக்கி நகர்வதை உறுதிப்படுத்துகிறது. இதுவும் நல்ல செய்தி. வரவேற்போம்.       
 

Friday, March 26, 2021

`சின்னப்புள்ள` சீமான்


எப்போதாவது சீமானின் பேச்சை கேட்பதுண்டு. அப்படி ஒரு முறை கேட்டபோது `எதற்கய்யா 8 வழி சாலை.. வீட்டுக்கு சீக்கிரம் போய் என்ன பண்ணப்போற?` என கோபமாக கர்ஜித்தபோது, நான் அதிர்ச்சியானேன்.

பொருளாதாரத்தை தொடர்ந்து கவனிப்பவர்களுக்கு இது புரியும், உள்கட்டமைப்பு சரியாக இருந்தால்தான் எந்த ஒரு நாடும் வளம் பெறமுடியும் என்பதை. இந்த உள்கட்டமைப்பில் பல வழி சாலைகளும் ஓன்று. அப்போதே எனக்கு கோவம் வந்து ஒரு பதிவை எழுதவேண்டும் என நினைத்தேன். வழக்கம்போல் டிஃபரஷன் வந்து நின்றுவிட்டது.

சமீபத்தில் தேர்தல் பரப்புரையில் தொலைக்காட்சி நெறியாளர்களுக்கு ஒரு அறிவுரை சொன்னார். `எடப்பாடி, ஸ்டாலின், கமல் மற்றும் என்னை கூப்பிட்டு விவாதம் வையுங்கள், யார் ஜெயிக்கிறார் என பாப்போம்` என சவால் விட்டார். இவர் நன்கு வாயை வளர்த்து வைத்திருக்கிறார். அந்த நம்பிக்கை இவரை இப்படி வாயாட வைத்திருக்கிறது.

ஆனால் இவரின் வாய் சவடாலை கேட்டபோது எனக்கு கோபமும் வந்தது கூடவே இந்த நாட்டின் எதிர்காலம் குறித்து அவநம்பிக்கையும் வந்தது. இப்போதைக்கு இந்தியாவில் இரண்டுவிதமான தலைவர்கள்தான் கண்ணுக்கு தெரிகிறார்கள். ஊழல்வாதிகள் மற்றும் சீமானை போன்ற அரைவேக்காடுகள்.

இதில் துரதிர்ஷ்டம் என்னவென்றால் இவரை போன்ற நபர்கள் வார்த்தை ஜாலங்களில் அற்புதமாக, வசீகரமாக இருக்கிறார்கள். ஒருவகையில் நேர்மையான அரசியல்வாதி என்ற தோற்றமும் தெரிகிறது. அது ஒருவகையில் உண்மையாகவே இருக்கக்கூடும்.

ஆனால் எதார்த்தம் புரியாத, புத்திசாலித்தனம் இல்லாத நேர்மை யாருக்கும் பயன்படாது. மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு என்றோரு நேர்மையான மனிதர் இருந்தார். 23 வருடங்கள் தொடர்ந்து ஆட்சி புரிந்தார். அவருக்கு பிறகு வந்த புத்ததேவ் பட்டாச்சார்யா மற்றும் மம்தா பானர்ஜியும் நேர்மையான, எளிமையான மனிதர்களே. அவர்களின் ஆட்சியையும் 20 ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால் என்ன பயன்?

சமீபத்திய கொரோன லாக் டவுனில் ஒரு கவனிக்கத்தக்க செய்தி. இந்த லாக் டவுன் காரணமாக புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் கணிசமானவர்கள் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள். இந்த பரிதாபத்தை என்னவென்று சொல்வது? 40 ஆண்டுகால நேர்மையான தலைவர்களின் ஆட்சி இவர்களை எந்த நிலைமையில் வைத்திருக்கிறது.

இன்னொரு நேர்மையான தலைவரான ஒடிசாவின் நவீன் பட்நாயக் கதையும் அப்படிதான் இருக்கிறது. புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் கணிசமானவர்கள் ஒடிஷாவை சேர்ந்தவர்களும் அடக்கம்.

இங்கே நேர்மையான தலைவர்கள் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவில்லை. ஆனால் தமிழகம் கழங்களின் ஊழலில் சிக்கி தவித்தாலும், வளர்ச்சியில் தமிழகம் மற்ற மாநிலங்களை விட முன்னணியில்தான் இருக்கிறது.

இது ஒரு வினோதமான சூழ்நிலை. ஊழல்வாதிகள் வளர்ச்சியை கொடுக்கிறார்கள். நேர்மையானவர்கள் மக்களை வறுமையில் வைத்திருக்கிறார்கள். இதை எப்படி புரிந்து கொள்வது? அல்லது ஓரளவு புரிந்தாலும் இதை மற்றவர்களுக்கு புரியவைப்பது அதைவிட சிரமம்.

இங்கே ஒரே செய்திதான். ஊழல்வாதிகள் ஆபத்தானவர்கள்தான், ஆனால் அதைவிட ஆபத்து இப்படி நேர்மையை மட்டும் தகுதி என நினைத்துக்கொள்ளும் முட்டாள் தலைவர்கள்.

இதற்கு ஒரு கதை இருக்கிறது. கணவனை இழந்த ஒரு அம்மா தன் இரு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தார். வேலைக்கு போய் குடும்பத்தை நடத்தினார். ஓரளவு பொருளும் இருந்தது. இவரும் சம்பாதித்து சேமித்தார்.

காலத்தின் கொடுமை இவரின் ஒரு பிள்ளையை ஊதாரியாக மாற்றியது. இன்னொரு பிள்ளை உலகம் புரியாத அப்பாவியாக இருந்தது. பெரிய பிள்ளை அவ்வப்போது வீட்டிலேயே திருட ஆரம்பித்தான். அக்கம் பக்கத்தில் இதை சொல்லி அந்த அம்மா புலம்புவது வழக்கம். சின்னப்புள்ள அப்பாவியாக இருந்தாலும் அந்த பிள்ளை மீது அந்த அம்மாவிற்கு நம்பிக்கை.

ஒருநாள் அந்த அம்மா தன்னுடைய சின்னபுள்ளையை செமத்தியாக அடித்து கொண்டிருந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சி. தன்னுடைய திருட்டு புள்ளையை கூட இவர் இப்படி அடித்ததில்லையே என ஆச்சர்யம். `பெரியவனாவது 100-200 திருடுவான். இவன் என்னை நடுத்தெருவுல கொண்டுவந்து நிறுத்திட்டானே` என கத்திக்கொண்டிருந்தார்.

நடந்தது இதுதான். வீட்டில் இந்த சின்னப்புள்ள தனியாக இருந்தபோது கணவன் மனைவி போல் இருவர் வந்திருக்கின்றனர். திருடர்கள். இவர்களை பற்றிய விவரம் தெரிந்து வைத்திருக்கிறார்கள். `உங்கப்பா போன பிறகு உங்கம்மா ரொம்ப கஷ்டப்படறாங்க என வார்த்தைகளை அள்ளி வீசியிருக்கிறார்கள். கடைசியில், `வரும்போது உனக்காக பிஸ்கட் வாங்க மறந்துட்டோம். நீயே போய் உனக்கு பிடித்ததை வாங்கிக்கொள்` என சொல்ல, அந்த சின்னப்புள்ள காசை வாங்கிக்கொண்டு சிட்டாய் பறந்தான். இவர்களும் வீட்டில் கிடைத்தை வாரிக்கொண்டு கிளம்பிவிட்டார்கள்.

இப்படித்தான் உலகம் வித்தியாசமாய் இருக்கும். இங்கே அயோக்கியர்களை விட முட்டாள்கள் மிக ஆபத்தானவர்கள் என்பதையும் மக்கள் உணர வேண்டும்.

இங்கே இரண்டு கழகங்களின் அழிவை ஆவலுடன் எதிர்பார்க்கும் எனக்கு, அதற்கு மாற்று என வரும் இந்த சின்னப்புள்ள கமல்,சீமான் போன்றவர்களின் அரசியலை பார்த்தால் அதுவும் பயமாக இருக்கிறது.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை நேர்மையான அதே சமயம் திறமையான தலைவர்கள் தெரியவில்லை. இப்போதைக்கு எனக்கு ஒரே சந்தோசம், தமிழ்நாட்டில் எனக்கு ஓட்டு இல்லை.

Tuesday, March 16, 2021

வாலை ஆட்டும் மனிதர்கள்


சமீபத்தில் இரண்டு விஷயங்களை கவனிக்க நேர்ந்தது. ஓன்று, பதிவர் ஜோதிஜி அரசு ஊழியருக்கு (ஆசிரியர்) ஆதரவு தரும் தொனியில் ஒரு பதிவு எழுதினார். மற்றொன்று விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் கோபிநாத் இதே போன்று அவர்களுக்கு தரும் சம்பளத்தை நியாயப்படுத்தும் விதத்தில் பேசினார்.

இவர்களின் இந்த கருத்தில் எனக்கு உடன்பாடில்லை என்பது ஒருபக்கம் இருந்தாலும் இவர்கள் ஏன் இப்படி பேசுகிறார்கள் என்று ஆராய்ந்தால் அனேகமாக ஒரே பதில்தான் வரும். அதாவது இவர்களின் பெற்றோர்கள் அரசு ஊழியராக இருந்திருக்கக்கூடும். எனவே இவர்கள் கர்ணனாக இருக்கிறார்கள்.

ஜெயலலிதாவுக்கு அதிமுகவினரும் கலைஞருக்கு திமுகவினருக்கு கோவில் கட்டுவார்கள், காரணம் மக்களுக்கு அவர்கள் சேவை செய்தார்கள் என்பதால் அல்ல, ஏதோ அவர்களால் நாங்கள் வளம் பெற்றோம் என்பதுதான் காரணம். இது ஒரு உளவியல் சிக்கல்.

ஆனால் நிஜம் என்ன? அவர்களுக்கு அளவுக்கு மீறிய சம்பளம் கொடுக்கப்படுகிறது என்பதுதான் உண்மை. இது ஏன் நடந்தது, எப்படி நடந்தது?

இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. அந்த சிக்கலை புரிந்துகொள்ள வாங்க இனி சில எதார்த்தமான சம்பவங்களை பார்ப்போம்.

தனிக்குடித்தனம்

கடலூரில் நான் கடை வைத்திருந்த இடம் பாடலீஸ்வரர் கோவில் தெருவில். இங்கே எனக்கு நான்கு விதமான சிக்கல்கள் இருந்தன. முதல் தலைவலி பிச்சைக்காரர்கள். 15 நிமிடங்களுக்கு ஒரு முறை இவர்கள் வந்துகொண்டே இருப்பார்கள். ஆரம்பத்தில் புண்ணியம் தேடுவோம் என ஆரம்பித்தாலும் போக போக சலிப்பு தட்டிவிடும். இந்த தலைவலி எனக்கும் வந்தது. எனவே மூடுக்கு தகுந்தபடி போடுவேன், பல சமயம் துரத்திவிடுவேன்.

இரண்டாவது, ஆடிமாச தலைவலி அல்லது இந்த போலி பக்திமான்களின் தலைவலி. ஆடிமாசம் வந்துவிட்டால் கையில் ஒரு நோட்டீஸோடு வந்துவிடுவார்கள். ஒவ்வொரு தெருவுக்கு ஒரு கோவில்  என கடவுளையே தனிக்குடித்தனம் வைத்துவிடுவார்கள். இங்கே பாடலீஸ்வரர் இருக்கிறார், இது புராதனமான பெரிய கோவில், இங்கே போய் வந்தால் நிஜமான கோவிலுக்கு போன உணர்வு வரும்.

ஆனால் இவர்களுக்கு தனியாக கோவில் தேவை. ஒருவேளை கடவுளை இவர்கள் வேறு பெயர் கொண்டு கூப்பிட விரும்பலாம். சரி இது அவர்கள் உரிமை என்றே வைத்துக்கொள்வோம், அதற்கு அவர்கள் தெருவிலேயே வசூலை வைத்துக்கொள்ள வேண்டியதுதானே? வெளிஊருக்கெல்லாம் போய் வசூல் செய்வார்கள். காரணம் அடுத்தவர்கள் பணத்தில் நான் அதை செய்தேன் இதை செய்தேன் என பெருமை கிடைக்கும்.

இப்படி தெருவுக்கு ஒரு கோவில் என எத்தனை தெருக்கள் ஒரு நகரில் இருக்கும். எல்லோருக்கும் பணம் கொடுக்கவா முடியும்? மறுத்தால் `கோவிலுக்கு இல்லைன்னு சொல்லாதீங்க அதுல புண்ணியம் கிடைக்கும்` என்று இப்படி இந்த வசூலில் போனால் நமக்கு டீ கிடைக்கும் என கூட வரும் சில அல்லக்கைகள் வசனம் பேசும்.

அப்போதே நான் நினைத்தேன். மனிதர்களுக்கு குடும்ப கட்டுப்பாடைபோல் கடவுளுக்கும் வைக்கவேண்டும் என்று. அதாவது ஒரு ஊருக்கு ஒரு போலீஸ் ஸ்டேஷன் என்பதுபோல், குறிப்பிட்ட ஏரியாவிற்கு ஓன்று அல்லது  சில கோவில்கள்தான் இருக்கவேண்டும் என சட்டம் கொண்டு வரவேண்டும் என்று.

இந்த தலைவலி இந்த பதிவின் கிளை செய்திதான். இனி முக்கியமான செய்திக்கு வருவோம். இங்கே இன்னும் இரண்டு தலைவலிகள் இருந்தன. ஓன்று அரசியல் கட்சிகள், இன்னொன்று ஆதரவற்றோருக்கு சேவை செய்யும் தொண்டு நிறுவனங்கள்.

பெரிய அரசியல் அக்கட்சிகள் நம்மிடம் (சிறுவியாபாரிகள்) வரமாட்டார்கள். ஆனாலும் அதற்கு  அடுத்த நிலையில் இருப்பவர்கள் வருவார்கள். கிட்டத்தட்ட ரவுடிகள்தான். 10 பேர் ஒன்றாக வருவார்கள் `மக்களுக்காகவே போராடுகிறோம், அதற்காகவே நன்றாக சாப்பிட்டு உடம்பை வளர்த்து வைத்திருக்கிறோம் என `காட்டிக்`கொள்வார்கள். `இல்லை` என சொல்ல முடியாது. நாளை ஏதாவது பிரச்சினை என்றால் என்ன பண்ணுவார்கள் என தெரியாது. எனவே 100-200 என் அப்போதைய சூழ்நிலைக்கு வேண்டாவெறுப்பாக தருவோம்.

சிலசமயம் அனாதை ஆசிரமம் நடத்துகிறோம் என சிலர் வருவார்கள். இவர்களிலும் மோசடி பேர்வழிகள் இருக்கலாம். ஆனால் தோற்றம், பேச்சு நம்பும்படியாகவும், தன்மையாகவும் இருக்கும். ஆனால் மேலே சொன்ன பல தலைவலிகளை பார்த்து சலித்துப்போய் இருப்போம். இவர்கள் பலவீனமானவர்கள் என்பதால் 10-20 கொடுத்து அனுப்புவோம்.

கவனிக்கவும் பலம் பொருந்தியவர்களுக்கு, மிரட்ட கூடியவர்களுக்கு அதிகம். கொடுப்பதை வாங்கிக்கொள்ளும் எளியவர்களுக்கு குறைவு. ஆனால் தேவை எல்லோருக்கும்தான். இதுதான் எதார்த்தம்.

அரசு வேலைக்கு `விலை`

அரசு ஊழியர்கள் விஷயத்திலும் இதுதான் நடந்திருக்கிறது. இந்தியாவில் ஏழ்மையும் தேவையும் எல்லா இடத்திலும் இருக்கிறது. ஆனால் இங்கே அரசு ஊழியர்கள் பலமாக இருக்கிறார்கள், ஸ்ட்ரைக் செய்து அரசை மிரட்டும் அளவுக்கு சங்கமும், பலமும் இருக்கிறது. எனவே அவர்கள் வருடா வருடம்  அதை சாதித்துக்கொண்டு அவர்களுடைய சம்பளத்தை இந்த அளவுக்கு கொண்டுவந்து நிறுத்திவிட்டார்கள். பலமில்லாதவர்கள் கிடப்பதை வைத்துக் கொண்டு வறுமையில் வாடுகிறார்கள். இதுதான் தமிழ்நாட்டின் இன்றைய நிலை.

இங்கே இன்னொரு காரணமும் இருக்கிறது. பொதுவாக ஒருவன் திருடப்போனால் நகை பணம் மட்டும்தான் திருடுவானா, மொபைல் போனோ அல்லது வேறு விலை உயர்ந்த பொருள் இருந்தால் அதையும்தானே திருடுவான்? அந்த எதார்த்தம்தான் அரசு நிர்வாகத்திலும் நடக்கிறது.

அமைச்சர்கள் திட்டங்களில் கமிஷன் அடிப்பார்கள். மேலும் பல ல ல  ல  இடங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் அரசு வேலைக்கு `விலை` நிர்ணயம் செய்வது. அரசு சம்பளம் என்பது சந்தையின் டிமாண்ட் அன்ட் சப்ளை என்ற அடிப்படையில் இருந்தால் அவர்களுக்கு ஒன்றும் தேறாது. அது valuable ஆக இருந்தால்தான் அதற்கு premium அதிகமாக கிடைக்கும்.

அதாவது 20000 சம்பளம் என்றால் வேலை உத்திரவாதம் என்ற அடிப்படையில் பலர் விரும்பினாலும், அதற்கு அதிக விலை நிர்ணயம் செய்ய முடியாது. என்னிடம் ஒருவர் (15 வருடம் முன்பு) பேசினார். அரசு வேலைக்கு 3-5 லட்சம் கேட்கிறார்கள். ஒரு வருஷம் சம்பளம் நமக்கில்லைன்னு நினைச்சுக்க வேண்டியதுதான். அதற்குபின் நாம் நிம்மதியாய் இருக்கலாம் என்பது அவருடைய பிளான்.

இதற்கத்தான் இவர்கள் சம்பளத்தை உயர்த்தி இருக்கிறர்கள் என்று சொல்லமுடியாது. ஆனால் நிர்வாக கோளாறில் இப்படி தனியார் துறைக்கும் அரசு துறைக்கும் சம்பளம் வித்தியாசமாக இருக்கிறது என்பதையும், வறுமையில் மக்கள் இருக்க, அரசு நிதி இப்படி அநியாயமாக போகிறது என்பதை கவனித்து அவர்கள் அதை சரி செய்யவேண்டும். ஆனால் செய்யமாட்டார்கள். இது அவர்களின் வருமானத்தை குறைத்துவிடும்.

தற்போது பல கட்டுப்பாடுகள் வந்துகொண்டிருக்கலாம். ஆனால் இன்னமும் அரசு வேலை என்பது மக்களின் கனவாக இருக்கிறது என்றால் அது ஒரு அமுதசுரபியாக இருக்கிறது என்பதுதான் உண்மை.

சந்தைக்கு போகலாமா

அப்படியே நாம் இன்னொரு லாஜிக்கையும் பார்த்துவிடுவோம். உங்களில் பலர் சந்தைக்கு காய்கறி வாங்க அடிக்கடி போவீர்கள். அதே காய்கறியை உங்கள் தெருவிலேயே ஒரு மளிகை கடைக்காரர் விற்பார். அவசரத்துக்கு நாம் அங்கே சிலவற்றை வாங்கலாம். ஆனால் பெரும்பாலோனோர் என்ன செய்வார்கள்? சந்தைக்குத்தான் போவார்கள். அங்கே காய்கறிகள் சற்றே விலைகுறைவாக கிடைக்கும்.

அங்கே விலை குறைவாக இருக்கிறது என்பதால் அவற்றின் தரம் குறைவாக இருக்கும் என நினைக்கமுடியாது. இரண்டு வியாபாரிகளுமே தமிழர்தான். அங்கே விற்பவர் நஷ்டத்துக்கு விற்கவில்லை. அவரும் நன்றாக சம்பாதித்துக்கொண்டுதான் இருக்கிறார். இந்த எதார்த்தம் அரசு ஊழியர்கள் விஷயத்தில் ஏன் பிரதிபலிப்பதில்லை?

இன்று அரசு ஊழியருக்கு கொடுக்கும் சம்பளத்தை கணிசமாக குறைத்து கொடுத்தாலும் வேலை செய்ய ஊழியர்கள் இருக்கிறார்கள். அவர்களும் தமிழர்கள்தான். வேலையும் தரமாகத்தான்  இருக்கும்.

ஒருபக்கம் தங்கள் பலத்தை காட்டி மிரட்டி சாதிக்கும் அரசு சங்கங்கள் ஒருபக்கம், இப்படி நல்ல சம்பளம் இருந்தால்தான் நாம் இதை நல்ல விலைக்கு `விற்க` முடியும் என கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசியல்வாதிகள் இந்த பக்கம் என இருப்பதால்தான் இந்த நிலைமை.

இது காலத்தின் கொடுமை. வேறு என்ன சொல்வது?

Saturday, March 6, 2021

எதை நம்புவது?



சசிகலா அரசியலுக்கு வரவில்லையாம். உறுதியாக சொல்லிவிட்டார். சிலமாதங்களாக நான் இதைத்தான் கணித்தேன். ஆனால் பத்திரிக்கை செய்திகள் நம்மை அநியாயத்துக்கு குழப்பிவிட்டன.

சினிமாவையும் மிஞ்சிய திரைக்கதைகளை பத்திரிக்கைகள் எழுதின. சசிகலா விடுதலையாகி தற்போது பிரம்மனை நோக்கி ஒரு வார கடுந்தவம் இருக்கிறார். இந்த ஒரு வார தவத்துக்கு மிரண்டு பிரம்மன் அவருக்கு ஏதாவது வரம் கொடுப்பார், அதை வாங்கிக்கொண்டு சசிகலா அதிரடியாக களம் இறங்குவார் என ஒரு பக்கம். (நாமும் இப்படி ஏதாவது கொளுத்தி போடுவோம்)

இன்னொரு பக்கம் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பதில் பிஜேபி உறுதியாக இருக்கிறது. சமீபத்தில் சென்னை வந்த அமித்ஷா ஒரு ஓட்டலுக்கு எடப்பாடியை வரவழைத்து, சசிகலாவை உங்கள் கட்சியில் சேர்த்தால்தான் நான் இங்கே சாப்பாட்டில் கைவைப்பேன் இல்லையென்றால் ஒரு மணிநேர உண்ணாவிரதம் இருப்பேன் என அவர் எடப்பாடியை மிரட்டினாராம். இந்த மிரட்டலால் அதிர்ந்துபோன எடப்பாடி, வேண்டுமென்றால் பிஜேபிக்கு சீட் அதிகமாக தருகிறோம் அதில் அ ம மு க விற்கு உள் ஒதுக்கீடாக நீங்கள் ஒதுக்குங்கள் என கெஞ்சினாராம். எப்படியெல்லாம் செய்திகள்!

இந்த செய்திகளையெல்லாம் படித்துவிட்டு மறுநாள் பத்திரிகைகளை பார்த்தால் சசிகலாவின் இந்த அறிக்கை. தலைவலிதான் வருகிறது. இனி பத்திரிக்கை செய்திகளை pinch of salt என்ற அடிப்பையில்தான் படிக்கவேண்டும் போலிருக்கிறது.

சரி, என்னதான் நடந்திருக்கும்? இனி நமக்கிருக்கும் சுமாரான அறிவின் அடிப்படையில் நாமே ஓரளவு கணிக்க வேண்டியதுதான்.

தமிழ்நாட்டில் கழகங்கள் ஊழலில் ஊறிப்போய் மூழ்கிப்போன கட்சிகள். ஆனால் மத்திய அளவில் பிஜேபியோ, காங்கிரஸோ இவர்கள் அளவுக்கு மோசம் இல்லை என்பதுதான் என் கருத்து. அவர்கள் (காங்கிரஸ், பிஜேபி ) ஊழலை ஆதரிக்கவில்லை. இந்திய அரசியல் நிர்பந்தம் அவர்களை இந்த விஷயத்தில் அனுசரித்து போகவைக்கிறது. இதை பற்றி எழுத ஆரம்பித்தால் அது வேறு ஒரு நீண்ட பதிவில் போய் நிற்கும்.

இந்த பதிவை எழுதும் போதே சற்று ரிலாக்ஸ்டாக உலக செய்திகளை பார்ப்போம் என பார்த்தால் ஒரு செய்தி என் கவனத்தை ஈர்த்தது. தலைப்பே வித்தியாசம். Why clean hands turn corrupt in Indonesia https://asiatimes.com/2021/03/why-clean-hands-turn-corrupt-in-indonesia/ என்று தலைப்பு. உலகம் முழுக்க இதுதான் நிலைமை. எனவே ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன என்ற காரணத்துக்காக மத்திய தலைவர்களை தவறாக நினைக்க வேண்டாம். அவர்களுக்கு பல தலைவலிகள். எனவே இதை விட்டுவிட்டு இந்த சசிகலா விஷயத்தை மட்டும் பார்ப்போம்.

இங்கே பிஜேபியை பொறுத்தவரையில் தனது கை சுத்தமாக இருப்பதாகத்தான் காட்டிக் கொள்ளும், அல்லது அப்படி நடிக்கும். அப்படி இருக்கையில் ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்று வந்தவரை ஆதரிப்பதாக காட்டிக்கொள்ளுமா? அது வேறு ஒரு கட்சியின் தலைவலியாக இருந்தாலும், அவர்களுடன் கூட்டணி இருக்கையில் அப்படி ஒரு பிம்பத்தை உருவாக்க ஒருபோதும் விரும்பாது.

இது எதிர்கட்சிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துவிடும். தேர்தல் பிரச்சாரங்களில் இது அதிமுகவிற்கு,பிஜேபிக்கு பெரும் தலைவலியாக உருவாகியிருக்கும். தண்டனை பெற்றவர் 5 ஆண்டுகளில் மக்களால் மன்னிக்கப்பட்டு அல்லது மறக்கப்பட்ட நபராக இருந்தாலும் பரவாயில்லை. இப்படி சுடச்சுடவா அவரை முன்னிலைப்படுத்தும். அதற்கான வாய்ப்பே இல்லை. ஆனால் பிஜேபி அப்படி செய்வதாக ஒரு பிம்பத்தை பத்திரிகையாளர்கள் உருவாக்கியிருந்தார்கள். அல்லது ஏதோ ஒரு காரணத்துக்காக பிஜேபி இப்படி ஒரு செய்திகளை உலவ விட்டிருக்க வேண்டும். அதை இவர்களும் நம்பி மக்களையும் முட்டாளாக்கியிருக்கிறார்கள்.

இங்கே எடப்பாடியார் சொன்ன ஒரு விஷயம் உண்மையாக இருக்கக்கூடும். `டோன்ட் இன்குளுட் தட் லேடி இன் யுவர் பார்ட்டி` என பிரதமர் சொன்னதாக எடப்பாடி சொல்லியிருந்தார். அதுதான் உண்மை.

அப்படியென்றால் அவர் சிறையில் இருக்கும்போதே அவரை மிரட்டி அமைதியாக வெளியே அனுப்பியிருக்கலாமே? பிஜேபிக்கு பல மாநில தலைவலிகள். அமித்ஷாவிற்கு கிடைப்பதெல்லாம் இவர் சொன்ன தகவல்கள் அவர் சொன்ன தகவல்கள் என `சொல்லப்படும்` தகவல்கள் மற்றும் உளவுத்துறைகள் கொடுப்பவை போன்றவை. இவற்றை முழுவதும் நம்பமுடியாது.

சசிகலாவின் பலம் என்ன என்பதை தெரிந்து கொள்ள பிஜேபி காத்திருந்திருக்கலாம். எத்தனை எம் எல் ஏக்கள்/ மந்திரிகள் அவர் பக்கம் திரும்புகிறார்கள் என்பதை உறுதியாக தெரிந்து கொள்ள இந்த காலஅவகாசம் அவர்களுக்கு தேவைப்பட்டிருக்கும்.

இந்தியாவில் ஒரு அதிகாரமையம் உருவாகிவிட்டால், எல்லோரும் அதைத்தான் சுற்றுவார்கள் என்பது எடப்பாடி விஷயத்தில் உறுதியாகிவிட்டது. எனவே இனி சசிகலா தனியாக களம் கண்டால் அது ஓட்டுக்களை பிரித்து அதிமுகவின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்பதால், அடிக்கவேண்டிய ஆணியை அடித்து பிஜேபி சசிகலாவை அமைதியாக்கிவிட்டது. இதுதான் நடந்திருக்க்கூடும்.

இங்கே இன்னொரு காமெடியும் நடந்தது. ஒரு பத்திரிகை சசிகலாவின் துறவறத்தை பற்றி நாங்கள் முன்கூட்டியே சொன்னோம் என்று சொல்லியது. எனக்கு இங்கே ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. நான் லாட்டரி வியாபாரம் செய்தபோது ஒரு வாடிக்கையாளர் வருவார். பாதி நாட்கள் லாட்டரி கடைகளில்தான் இருப்பார். அவர் கொஞ்சம் டிக்கட் வாங்குவார். மற்றவர்களிடமும் `இந்த நம்பர் வாங்குங்க` பரிசு விழும்` என்று சொல்வார். தினம் 10 பேருக்கு இப்படி ஜோசியம் சொல்வார்.

நீங்கள் ஏதாவது ஒரு மரத்தின் கீழ் நின்றுகொண்டு 10 கல்களை விட்டெறியுங்கள் ஏதாவது ஒன்றில் மாங்காய் விழுந்துவிடும். இது திறமையல்ல, தியரி. அதுபோல்தான் இந்த நபரின் ஆலோசனையும். இவர் வாங்குங்கள் என்று சொன்ன 10 நபர்களில் யாரவது ஒருவருக்கு மறுநாள் பரிசு விழுந்துவிடும். அவர் ஆச்சர்யப்படுவார். `அவர் கரெக்ட்டா சொன்னாருங்க` என சொல்லி அவருக்கு ஒரு டீயும் ஒரு செட் டிக்கெட்டும் வாங்கி கொடுத்துவிடுவார். இந்த வகையிலும் அவர் தினம் நாட்களை ஒட்டிக்கொண்டிருந்தார்.

பத்திரிகைகளும் அப்படிதான் இருக்கின்றன. இந்த வாரம் இந்த செய்தியை போடுவார்கள். அடுத்த வாரம் செய்தியை வேறுமாதிரியாக போடுவார்கள் இப்படி 10 வாரங்களில் பலவிதமான செய்திகளை வெளியிட்டால் அதில் ஏதாவது ஓன்று பலிக்கத்தான் போகிறது. உடனே நாங்கள் அன்றே சொன்னோம் என்று ஒரு பில்டப். எப்படியோ எல்லோரும் வாழ்க்கை ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.

Tuesday, March 2, 2021

வெள்ளை யானை



என்னடா இது ஆளில்லாத ஊர்ல இந்த ஆள் வந்து திடீர்ன்னு டீக்கடை போடறார்ன்னு நினைக்கறீங்களா? பதிவுலகில் இருக்கும் டிராஃபிக்கை பார்க்கும்போது பதிவு எழுதும் எண்ணமே யாருக்கும் வராது. பல ஜாம்பவான்கள் குட்பை சொல்லிவிட்டார்கள். சிலர் விடாக்கண்டன் கொடாக்கண்டனாக இருக்கிறார்கள்.

நான் இப்படி அவ்வப்போது வருவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஓன்று, `என்னை மன்னார்குடியில கேட்டாக, மாயவரத்துல கேட்டாக...` என்று ஒரு வசனம் வருமே, அதுபோல் என் பதிவுகளை அமெரிக்காவுலேந்து படிக்கிறாக, ஆஸ்திரேலியாவிலிருந்து படிக்கிறாக என்று சொல்லலாம் போலிருக்கிறது. அந்த அளவுக்கு எனக்கு எல்லா கண்டங்களிலும் வாசகர்கள் உண்டு.

இப்படி பல நாடுகளிலிருந்து படிக்கும் வாசகர்கள் ஒரு பதிவை படித்தால் மேலும் 10 பதிவுகளையும் மேய்ந்துவிட்டுதான் போகிறார்கள். அதாவது எனக்கு வாசகர் வட்டம் உண்டு ஆனால் வருமானம்தான் இல்லை. ஆனானப்பட்ட சாரு நிவேதிதாவே `என் அக்கவுண்ட்ல பணம் போடுங்கனு` அவருடைய வலைதளத்தில் சொல்கிறார். நல்ல எழுத்தாளர் என பெயர் வாங்கிய ஞாநி கடைசி காலத்தில் வறுமையில்தான் இறந்திருக்கிறார் போலிருக்கிறது.

பேனாவை எடுத்தவன் உலகை ஆளலாம்னு எவனோ ஒருத்தவன் எங்கேயோ கிறுக்கி வைச்சிருக்கான். சனீஸ்வரன் நம்மை பிடித்தால் இப்படித்தான், பார்க்க கூடாத விஷயங்களை பார்ப்போம், கேட்க கூடாத விஷயங்களை கேட்போம், படிக்க கூடாத விஷ்யங்களையெல்லாம் படிச்சி அதையும் நம்பி வீணாபோய் விடுவோம்.

பிராக்டிகலாக இன்னொரு காரணம் இருக்கிறது. தனிமையை போக்குவதற்கு வேறு வழி இல்லாததுதான். இப்படி உண்மையை பட்டுனு போட்டு உடைக்க வேண்டியதுதானேன்னு நீங்க கேட்கலாம். ஆனால் எழுத்தாளன் இல்லையா, இப்படிதான் ஒரு வரில சொல்ல வேண்டிய விஷயத்தை ஒன்பது வரிகளாக இழுக்க வேண்டும். இது தொழில் தர்மம்.

அதுமட்டுமின்றி, அவ்வப்போது இப்படி நாம் போடும் பதிவுகளை எதிர்காலத்தில் நாமே படிக்கும்போது நாமும் எவ்வளவு மாறியிருக்கிறோம் என்பதை அது நமக்கு காட்டும். அந்த வகையில் இந்த கிறுக்கல்கள் அவ்வப்போது வரும். மூடை பொறுத்தது.

டீக்கடைக்காரர்

முதல் செய்தியே என்னை போல் இங்கே, அதாவது டெல்லியில், இருக்கும் ஒருவரை பற்றியது. இவருக்கும் ஆளில்லாத ஊரில் டீக்கடை போட ஆசை. உண்மையில் அவர் டீக்கடைக்காரரின் மகன்தான். இவர் பேரை சொன்னால் டெல்லியே அதிரும். என்ன செய்வது?  எதிரே இருப்பவர் டம்மி பீஸாக இருப்பதால் இவர் காட்டில் மழை. மிஸ்டர் மோடியை பற்றிய செய்திதான் இது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் போது இங்கே அகமதாபாத்தில் மெட்ரோ டிரைன் மிக விரைவாக, பந்தாவாக, விடப்பட்டது. காரணம் தேர்தல்தான். வெள்ளை யானைக்கு சிமெண்ட் கலர் அடித்து, நாங்கள் உங்களுக்காக என்னென்னெ திட்டங்கள் கொண்டு வந்திருக்கிறோம் பாருங்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டார் மிஸ்டர் மோடி. கடைசியில் அது ஒரு வெள்ளை யானை என்பது, அதாவது இது ஒரு உருப்படாத திட்டம் அல்லது மக்களுக்கு தேவை என ஓன்று இருக்க, அதற்காக இவர்கள் போட்ட திட்டம் தோல்வியில் முடிந்திருக்கிறது என தெரிகிறது.

நான் அடிக்கடி வாக்கிங் போகும் வழியில்தான் இந்த பாதை வருகிறது. ஒரே ஒரு முறைதான் என் கண்ணில் பட்டது. விசாரித்ததில் ஒரு நாளைக்கு நாலே சர்விஸ்தானாம். அதுவும் அந்த பயணமும் 5-10 நிமிட தூரம்தான். போட்ட பணத்துக்கு லாபம் வரவில்லை என்பதைவிட தற்போது நிர்வாக செலவுக்கே எதுவும் தேறாது போலிருக்கிறது. எனவே திட்டம் மேற்கொண்டு விரிவாக்கம் ஆகாமல் ஆமை வேகத்தில் நடக்கிறது. போக்குவரத்து வசதி முக்கியமான ஓன்று. ஆனால் அதை யார் தரவேண்டும், எப்படி தரவேண்டும் என்பதில்தான் மத்திய மாநில அரசுகள் மொக்கையாக சிந்திக்கின்றன.

பல இடங்களில் அவசியமான திட்டங்களுக்கு பணம் இல்லாமல் முடங்கி கிடக்க, இப்படி மொக்கையான திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கடைசியில் பணமும் முடங்கி மக்களுக்கும் அது எந்த ஒரு பலனையும் தரவில்லை. பொதுத்துறை என்பது இப்படித்தான். அதில் 10-ல் 8 வெள்ளை யானைதான்.

பொதுத்துறை என்பது ஒரு காலத்தில் அவசியமாக இருந்தது. சுதந்திரம் அடைந்த போது இந்தியாவில் நிறைய தலைவர்கள் உதை வாங்க/சிறைக்கு போக என போராட்ட தலைவர்கள் இருந்தார்கள்.

வெள்ளையர்கள் நம்மை தொழில்ரீதியாக வளர விடாததால் தொழில் முனைவோர் அப்போது இல்லை. வங்கிகள் மற்றும் வேறு பல கட்டமைப்புகளும் இல்லை. இருந்தாலும் தொழில்வளர்ச்சி அவசியமாக இருக்க, அதை செய்யக்கூடிய நபர்கள் அதிகமாக  இல்லாத நிலையில் அரசே பொதுத்துறை மூலம் அவற்றை செய்யவேண்டிய நிர்பந்தம். எனவே ஆரம்பகட்டத்தில் அரசு பொதுத்துறைகளை ஆரம்பித்தது அந்த கால சூழ்நிலைக்கு சரி. தற்போது நாடு ஓரளவு வளர்ந்துவிட்டது.இனி தொழில்களை தனியார் துறையினர் பார்த்துக் கொள்வார்கள். அரசாங்கம் வழிகாட்டுதலோடு மிக மிக அவசியமான இடங்களில் மட்டும் முதலீடு செய்தால் போதும்.

அரசு துறைகள் லாப நோக்கில் செயல்படாது என்பது உண்மைதான். ஆனால் அங்கே நிர்வாகம் என்பது ரொம்ப சிக்கலான ஓன்று. அங்கே நிர்வாகிகளால் முடிவெடுக்க முடியவில்லை. ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு நாம் என்ன தொழில் செய்கிறோம், இங்கே மேலும் என்ன செய்யலாம் என புரிந்து அவர் செயல்பட ஆரம்பிக்கும்போது அவரை வேறு இடத்துக்கு மாற்றி விடுகிறார்கள். அடுத்த அதிகாரி மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்கிறார்கள்.

இன்னொருபக்கம் அரசியல்வாதிகளுக்கு இது ஊழலின் இன்னொரு கதவு. அவசியமோ இல்லையோ வேண்டியவர்களுக்கு பணம் வாங்கிக்கொண்டு அல்லது கட்சிக்காரர்களுக்கு அவர்களுடைய விசுவாசத்துக்கு பரிசு என தேவையில்லாத வேலையை உருவாக்கி அந்த நிறுவனத்தை நாசமாக்கிவிடுகிறார்கள். இன்னும் பல சொல்லலாம். ஆனால் மக்களுக்கு இதை புரிய வைப்பது சிரமம். அதற்கு நமக்கு அபாரமான அறிவு வேண்டும். என்னிடம் அது இல்லாததால் அடுத்த செய்திக்கு தாவுவோம்.

இது அதைவிட மோசம்

சமீபத்திய கோரோனோவின் மிகப்பெரிய பாதிப்பு போக்குவரத்துதான். கொரானாவுக்கு முன் ஷேர் ஆட்டோவில் குறைந்த கட்டணம் இங்கே 5 ரூபாயாக இருந்தது. சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என இரண்டு பேருக்கு மேல் ஆட்டோவில் ஏற்றக்கூடாது என கட்டுப்பாடுகள் வர, அது 10 ரூபாயாக மாறியது. அதன்பின் நிலைமை சீரானாலும் மரத்தில் ஏறிய வேதாளம் இறங்க மறுக்கிறது. இனி இறங்கவும் மாட்டார்கள்.

ஒரு பயணத்தில் ஒரு பயணி சொல்லிக்கொண்டிருந்தார். அவர் வேலைக்கு போக மூன்று ஆட்டோ ஏற வேண்டுமாம். அந்த வகையில் அவருக்கு போக - வர மாதம் 1500 செலவு. அவருடைய சம்பளத்தில் இது 10 சதவிகிதம். விரைவில் டு வீலர் வாங்க போகிறாராம். (போக்குவரத்தை பொறுத்த வரையில் தமிழ்நாடு பரவாயில்லை. ஓரளவு தனியார் பங்களிப்பு இருக்கிறது.)

இப்படி பிச்சைக்காரர்கள் முதற்கொண்டு வண்டி வாங்கும் அளவுக்கு சூழ்நிலைகளை உருவாக்கிவிட்டு, அதன்காரணமாக டிராஃபிக் சிக்கல், சுற்று சூழல் மாசுபடுதல் என பல தலைவலிகள் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் இதன் காரணமாக பெட்ரோல் உபயோகம் அதிகரிக்க அது அரசுக்கும் தலைவலி, பெட்ரோல் விலை உயர்வால் மக்களுக்கும் தலைவலி. அதற்கு தீர்வு என்று அரசாங்கம் இப்படி உருப்படாத திட்டங்கள் போட்டு அதுவும் தலைவலி. கஷ்டம்டா சாமி.

அற்புதமான புத்திசாலிகள்

இந்தியர்கள் அற்புதமான புத்திசாலிகள். பல வருடங்களுக்கு முன் ஒரு முறை தியேட்டரில் டிக்கெட் வாங்க வரிசையில் நின்றிருந்தேன். பலர் குறுக்கே புகுந்து டிக்கெட் வாங்கி கொண்டிருந்தனர். வரிசையில் நின்றிருந்த பலருக்கு கோவம் வர சண்டை ஆரம்பித்தது. டிக்கெட் கவுண்டரில் புகார் செய்தால், அவர் கவுண்டர் கதவை மூடிவிட்டு `எல்லோரும் வரிசையில் வாங்க, அப்பத்தான் டிக்கெட் கொடுப்பேன்` என்று நீதியை நிலைநாட்டி விட்டார்.

குறுக்கே புகுந்த அவர்களை கண்டித்து விட்டு வரிசையில் வருபவர்களுக்கு டிக்கெட் கொடுப்பார்  என்று பார்த்தால், அவர்களுக்கும் டிக்கெட் இல்லையாம், வரிசையில் இருந்த எங்களுக்கும் டிக்கெட் இல்லையாம். இந்தியாவில் இப்படித்தான் கிறுக்குத்தனமாக முடிவெடுப்பார்கள். அதன்பின் பலர் என்ன முடிவெடுத்திருப்பார்கள்?  ஊரோடு ஒத்து போயிருப்பார்கள். அதுதான் நடந்திருக்கும்/ நடந்துகொண்டிருக்கிறது. அதாவது தவறான பாதைதான் இனி சரியான பாதை நமக்கு அவர்கள் சொல்லித்தருகிறார்கள். நாமும் அதை பின் தொடர்கிறோம். இப்படிப்பட்ட முட்டாள்தனமான நிர்வாகிகளால் இந்தியா மெல்ல மெல்ல சீரழிந்துகொண்டிருக்கிறது.

அதே காட்சி 

இங்கே அகமதாபாத்திலும் இப்படி ஒரு சம்பவம். இந்த குஜராத்தியர்கள் பெற்ற தாயை கூட எட்டி உதைப்பார்கள் ஆனால்  கோமாதாவுக்கு இவர்கள் கொடுக்கும் இருக்கும் மரியாதையே தனி. இங்கே தெருவில் மாடுகளுக்கு இருக்கும் சுதந்திரம் மனிதர்களுக்கு கூட கிடையாது. இப்படி உலாவும் மாடுகளில் பட்டா போட்டவை, போடாதவை  என இரண்டு விதம் உண்டு.

இங்கே ரபாரிகள் அதாவது இடையர்கள் செய்யும் கொடுமை வேறுவிதம். மாடுகளிடம் பாலை கறந்துவிட்டு அவற்றை வெளியே அனுப்பிவிடுவார்கள். அவை வெளியே தெருவெல்லாம் மேய்ந்து வயிற்றை நிரப்பிக்கொள்ள வேண்டும். பாலை மட்டும் இவர்களுக்கு கொடுத்துவிட வேண்டும். இது என்னவிதமான புண்ணியமோ? எனக்கு ஒன்றும் புரியவில்லை. பால் கறக்கும் நேரம் மற்றும் இரவு நேரங்களில் மட்டும் அட்டகாசமாக டூ வீலரில் வந்து மாடுகளை அழைத்து செல்வார்கள். அவைகளுக்கு இரவுநேர லாட்ஜிங் வசதி மட்டும் உண்டு போலிருக்கிறது.

இங்கே இந்த ரபாரிகளின் வீடுகளும் பிரமாண்டமாக இருக்கும். ஆண்களும் சரி பெண்களும் சரி எல்லாம் வாளிப்பாக இருப்பார்கள். நான் இந்த பதிவுக்காகத்தான் ரபாரி பெண்களை உற்று பார்த்தேன். வேறு எந்த காரணமும் இல்லை. மாடுகளால் இவர்களுக்கு வருமானம் ஆனால் செலவுகள் இல்லை. அதுதான் இந்த செழிப்புக்கு காரணம்.

சரி இனி விஷயத்துக்கு வருவோம். இப்படி மாடுகள் தெருக்களில் சுற்றுவதால் ஒரு பிரச்சினை. இங்கே அரசு, `ஸ்வச்ச பாரத்` என சுத்தத்துக்கு முன்னுரிமை கொடுத்து பல இடங்களில் சின்னதும் பெரியதுமாக குப்பை தொட்டிகளை வைத்தது. அதில் மக்கும் குப்பை இதில் போடவும், மக்காத குப்பைகளை மற்றதில் போடவும் என வசனம் வேறு எழுதி வைத்தார்கள்.

ஆனால் மாடுகளுக்கு இதெல்லாம் தெரியுமா? அவற்றுக்கு யார் மீது கோபமோ, குப்பை தொட்டி ஒரு பக்கம், குப்பைகள் வேறு பக்கம் என எல்லாவற்றையும் கதகளி ஆடிவிடும். விளைவு ரோடு நாசமாக காட்சி அளிக்கும். நம் நாட்டின் அற்புதமான நிர்வாகிகள் இதற்கும் ஒரு அற்புதமான வழி கண்டுபிடித்தார்கள். இப்படி குப்பை தொட்டிகள் இருப்பதால்தானே மாடுகள் இப்படி செய்கின்றன இனி குப்பை தொட்டியே வைக்க கூடாது என எடுத்துவிட்டார்கள்.

என்னிடம் ஒரு முறை குப்பை சேர்ந்துவிட நான் தெருவை அசுத்தப்படுத்த கூடாது என குப்பை தொட்டியை தேடி தேடி களைத்துப்போய் அப்படியே தூக்கி வீசினேன். எதிரே ஸ்வச்ச பாரத் என வசனம் எழுதி, ஒருவேளை படிக்காதவனுக்கு எப்படி புரியும் என ஒரு குப்பைத்தொட்டி படம் வரைந்து அதில் குப்பையை எப்படி போட வேண்டும் என படம் போட்டு விளக்கியிருந்தார்கள். அதாவது படத்தில் குப்பை தொட்டி இருக்கிறது ஆனால் தெருக்களில் இல்லை.

இந்தியா விளங்கிடும். கிறுக்கு பயல்கள் நிறைந்த நாட்டில் நாமும் கிறுக்காகவே நடந்து கொள்ளவேண்டும்.

Friday, February 12, 2021

தலைகீழ் உபதேசம்



கடந்த பதிவில் நான் என்னுடைய குணத்தை மாற்றிக்கொள்ள 10 வருடங்கள் ஆனது என குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அந்த பதிவை எழுதிக்கொண்டிருக்கும் போதே இன்னொரு செய்தியையும் கவனித்தேன். அதாவது சிலர் பச்சோந்தியாக பத்தே நாட்களில் குணம் மாறுவார்கள் போலிருக்கிறது. அப்படி ஒரு செய்தி இங்கே. 

சமீபத்தில் என்னுடைய பேஸ்புக்கில் ஒரு பதிவு வந்தது. பிக்பாஸ் கொஞ்சம் பார்க்க ஆரம்பித்த பிறகு ஜேம்ஸ் வசந்தன் அவர்களை நான் பாலோ செய்திருந்தேன். அவர் இந்து ராம் அவர்களின் ஒரு கருத்தை லைக் பண்ண, அது எனக்கு காட்டியது. இவர் லைக் பண்ணியிருக்கிறார் என்றால் இவருக்கும் அந்த கருத்தில் உடன்பாடு என்றுதான் அர்த்தம்.

சரி இனி விஷயத்துக்கு வருவோம். பிரபல பாப் ஸ்டார் ரிஹானா இந்திய விவசாயிகளின் போராட்டம் சம்பந்தமாக கருத்து தெரிவித்திருக்கிறார். இதற்கு பதிலாக டெண்டுல்கரும் ஒரு கருத்தை முன் வைத்திருக்கிறார். இது அவர்களின் உரிமை. எனவே அதை விட்டுவிடுவோம்.

ஆனால் இங்கே டெண்டுல்கரை விமரிசித்து  இந்து ராம் டிவிட்டரில் போட்ட செய்தி இங்கே.

And Sachin Tendulkar pontificating that “External forces can be spectators but not participants” is laughable. Is expressing an opinion ‘participation’?If Tendulkar wishes his opinion to be respected, he should stick to cricket and matters he is knowledgeable about.

ஒரு சம்பவம் நடக்கும் போது கருத்து (opinion) சொல்லும் உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் ஆலோசனை (advise) செல்லும்போதுதான் நாம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த துறையில் எக்ஸ்பர்ட்டா என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். இங்கே மிக மிக முக்கியமாக ஒன்றை கவனிக்கவும். நான் இங்கே எனது கருத்தைதான் பதிவு செய்கிறேன்.

அதேபோல் இந்து ராம் அவர்களும் ஒரு கருத்தை முன் வைத்ததில் தப்பில்லை. அதற்காக அவர் அவர் பயன்படுத்திய வார்த்தைகள்தான் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைவிட அதிர்ச்சி ஜேம்ஸ் வசந்தன் அதை லைக் பண்ணியது.      

சமீபத்தில் முடிந்த பிக்பாஸ் 4ல் ஒரு சம்பவம்.  பாலாஜிக்கும் ஆரிக்கும் சண்டை வந்தபோது, பாலாஜி பேசற வரைக்கும் அமைதியாக இருந்துவிட்டு, ஆரி பேசும்போது மட்டும் ரம்யா பாண்டியன் இடையில் புகுந்து தன்னுடைய மேதாவித்தனத்தை காட்டுவார். இதை கமலும் சுட்டி காட்டிவிட்டார். ஜேம்ஸ் வசந்தனும் சொல்லிவிட்டார்.

அதேதான் இங்கேயும் நடந்திருக்கிறது. தனக்கு சம்பந்தமில்லாத ஒரு துறையை பற்றி ஒரு பெண் பாடகி கருத்து சொல்கிறார். அப்போது வாய் திறந்து `உன்னுடைய கருத்து பிறரால் மதிக்கப்பட வேண்டுமென்றால் உனக்கு தெரிந்த துறையை பற்றி மட்டும் கருத்து சொல்` என்று அந்த பாடகிக்கு பதில் சொல்லியிருக்க வேண்டும். அப்போது வாய் திறக்காத இந்த புத்திசாலி, கிட்டத்தட்ட அதே கருத்தை /தவறை டெண்டுல்கர் செய்யும்போதுமட்டும்  இவருக்கு அறசீற்றம் வந்துவிட்டது. என்ன ஒரு மொள்ளமாரித்தனம். ஒரு வேளை ரம்யா பாண்டியனுக்கு இவர் ஒன்னுவிட்ட சித்தப்பாவா இருப்பாரோ? அல்லது ரெண்டு பேரோட பேரும் ர வுல ஆரம்பிக்கறதால இப்படித்தான் ரெண்டு நாக்கோட அலைவாங்களோ?

பிக்பாஸ் விமர்சனத்தில் ரம்யா பாண்டியன் செய்த தவறை சுட்டிக்காட்டிய ஜேம்ஸ் வசந்தன் இங்கே ராமை விமர்சனம் செய்யவில்லை, மாறாக லைக் செய்திருக்கிறார். என்ன கொடுமை சரவணன் இது. 

நான் என் குணத்தை மாற்றிக் கொள்வதற்கு பல வருடங்கள் ஆகியது. ஆனால் ஜேம்ஸ் வசந்தன் 10 நாளுக்கு முன்னால் நடுநிலைமை என்றால் என்ன என்று ரம்யாவுக்கு உபதேசம் செய்துவிட்டு, இங்கே இப்படி தலைகீழ் உபதேசம்.   

Tuesday, February 9, 2021

மனிதன் மாறிவிட்டான், மரத்தித்தில்....


காலம் மனிதனை எப்படி மாற்றுகிறது? பல விஷயங்களை நினைத்து பார்த்தால் நமக்கே அதிர்ச்சியாக இருக்கும். இப்படி ஒரு மாற்றம் என் வாழ்க்கையில் நடந்தது. அந்த சம்பவங்கள் இங்கே.

எனக்கு பணத்தின் மீதான ஆசை அதிகம். பேராசை கிடையாது. என் கழுத்தின் மீது பல வருடங்களாக, அதாவது இளமை பருவத்திலிருந்தே, கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது. அந்த சிக்கலிலிருந்து நான் தப்ப வேண்டுமென்றால் எனக்கு நிறைய பணம் வேண்டும். அப்புறம் மேலும் சில `விஷயங்கள்` நடக்க வேண்டும். அப்படி ஏதாவது நடந்தால்தான் நான் தப்பிக்க முடியும் என்பதால் இந்த ஆசை.

தற்போது காலம் கடந்துவிட்டது. இனி அதை பற்றி பேசி புண்ணியமில்லை. ஆனால் இந்த பணத்திற்கான தேடலில் நடந்த சில சுவாரசியமான சம்பவங்கள்.

25 வருடங்களுக்கு முன் லாட்டரியும் இருந்தது, எனக்கும் ஷேர் மார்க்கெட் பரிச்சியமாகி இருந்தது. இரண்டில் ஏதாவது ஓன்று என்னை கோடீஸ்வரனாக்கிவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. எனவே ஓரளவுக்கு வருமானம் இருந்தாலும் எனக்காக செலவு செய்வதிலும் கூட ரொம்பவே கஞ்சத்தனமாக இருந்தேன். பணம் வந்த பிறகு மொத்தமாக வாழ்க்கையை அனுபவித்துக் கொள்ளலாம் என்று திட்டம். கனவு காணும் உரிமை மட்டும்தான் மனிதனுக்கு இருக்கிறது, அதற்கு அப்ரூவல் கொடுப்பவர் வேறு ஒருவர் என்பதை ரொம்ப தாமதமாக உணர்ந்தேன்.

இப்படி கஞ்சனாக இருந்து மிச்சமாகிய பணத்தை உப்புமா கம்பெனிகளின் ஷேர்களை அனுபவமின்றி வாங்கி குவித்தேன். இப்போது அந்த ஷேர்களை எடைக்கு போட்டால் 50 ரூபாய் கூட தேறாது.

அப்போது வந்து கொண்டிருந்தே தமிழ்நாடு பம்பர் லாட்டரிகளை வியாபாரியாக இருந்தும் தொழில் தர்மத்தை மீறி விற்காமலும் வைத்து பார்த்தேன். அதாவது ஒழுங்காக வந்து கொண்டிருந்த பணத்தை உதாசீனப்படுத்தினேன். இப்போது அவற்றை நினைத்து பார்த்தால் கண்களில் ஏதோ ஓன்று வருகிறது. அதன்பின் என் கணக்குகள் என்னை கை கழுவிவிட நான் ஜெயிலுக்கு போனேன். அங்கே சில அனுபவங்கள்.

நான் முதலில் இருந்த பிளாக்கில் சாப்பாட்டுக்கு ரொம்பவே கஷ்டப்பட்டேன். அங்கே நான் இருந்த 8 மாதங்களில் பெரும்பாலும் மோர் சோறு அல்லது தண்ணி ஊற்றி சாப்பிடுவதுதான் நிலைமை. இதில் காலை பட்டினி வேறு. இடையில் சிறை கிச்சனுக்கு போய் காசு கொடுத்து மதியம் மட்டும் ரொட்டி வாங்கி வந்தாலும், அதற்கு மாசம் 300 ரூபாய் என்பதால் பட்ஜெட்டும் இடித்தது. அந்த ரொட்டியும் அப்பளத்தை விட கொஞ்சம் மொத்தமாக இருக்கும். எனவே அது பசியை தீர்க்காது. இப்படியும் 8 மாதம் எனக்கு சிறை வாழ்க்கை ஓடியது.

அதன் பிறகு அங்கேயே வேறு பிளாக்குக்கு மாறினேன். அதை சிறை என்று சொன்னால் எனக்கே சிரிப்பு வரும். எனவே அதை மென்ஸ் ஹாஸ்டல் என்று சொல்லலாம். இங்கே பெரும்பாலும் போதை பொருள் குற்றவாளிகள். இலங்கை தமிழர்கள். இவர்களுக்கு பெயில் கிடையாது என்பதாலும் நீண்ட காலம் இருக்கப்போவதால் மனத்தளர்ச்சி வந்துவிடும் என்பதால் இவர்களுக்கு நிறையவே சுதந்திரம்.

தொடர் குற்றவாளிகளை போல் இவர்கள் அடிக்கடி சண்டை போட மாட்டார்கள் என்பதாலும் இந்த சுதந்திரம். இங்கே இருந்தவர்கள் மிடில் கிளாஸ் மற்றும் வசதியானவர்கள். இதன் காரணமாக இந்த பிளாக் ஒரு ஹாஸ்டலை போல் சுத்தமாக சுகாதாரமாக இருந்தது. ஏதோ என்னுடைய அதிர்ஷடம் இங்கே வந்து சேர்ந்தேன். இங்கே எனக்கு சிறை வாழ்க்கை கொஞ்சம் நிம்மதியாகவே இருந்தது.

முதலில் இருந்த பிளாக்கில் அப்பர் மிடில் கிளாஸாக இருந்தவன்,இந்த பிளாக்கில் அப்படியே தலைகீழ். எல்லோரும் கொஞ்சம் வசதியாக இருக்க நான் மட்டும் படஜெட் பத்மநாபனாக இருந்தேன்.

இப்படி என் வாழ்க்கை பல மாதங்கள் ஓடிக்கொண்டிருக்க, ஒரு முறை குளிப்பதற்காக பாத்ரூம் போனேன். அது பிளாக்கை தள்ளி வெளியே இருந்தது. 5-6 பாத்ரூம் இருக்கும். வெளியே துணி துவைப்பதற்கு விசாலமான இடம். இப்படி நான் போனபோது வழியில் 2000 ரூபாய் கிடந்தது. (2000 அல்லது அதற்கும்மேல் சரியாக நினைவில்லை.)

அதை கொண்டு வந்து நான் இருந்த செல்லின் நிர்வாகியிடம்  (இலங்கை தமிழர்) கொடுத்து `யாரோ கீழே போட்டுவிட்டார்கள். யார் என்று விசாரித்து கொடுத்துவிடுங்கள்` என்றும் சொல்லிவிட்டேன். அப்போது நான் இருந்த மனநிலையில் இயல்பாக நான் செய்த விஷயம். இதில் எனக்கு விசேஷமாக எதுவும் தெரியவில்லை.

அதன்பின் மற்றவர்கள் என்னை பார்க்கும் பார்வையில் ஒரு மாற்றம் தெரிந்தது. வித்தியாசத்தை நான் வெளிப்படையாகவே உணர்ந்தேன். ஒருவர் என்னிடம் `உங்களையெல்லாம் யார் ஜெயில்ல போட்டது?` என்று ஆச்சர்யமாக கேட்டார். இன்னொருவர் `சிவா அண்ணனிடம் இந்த பணம் கிடைத்ததால்தான் திருப்பி கொடுத்தார். வேறு யாராவது இருந்தால் கொடுத்திருக்கமாட்டார்கள்` என்றார்.

அப்போதுதான் என்னுடைய செயலின் பாதிப்பு தெரிந்தது. நான் அங்கே `தனி ஒருவன்` அல்லது `ஆயிரத்தில் ஒருவனாக` இருந்தேன். மறுநாள் சிறையில் சிலர் ஸ்பெஷலாக வரவழைத்து குடிக்கும் டீ எனக்கு கிடைத்தது. மரியாதையாம்! சிறையில் அந்த டீ அவ்வளவு சுவையாக இருக்கும்.

சிறையில் பணம் இல்லாமல் பலர் கஷ்டப்படும் நிலையில், நானே மாதம் ரூ.1000 என்ற பட்ஜெட்டில் என் சிறை வாழக்கையை ஒட்டிக்கொண்டிருக்க, இந்த பணத்தை நானே வைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் தொடர்ந்து நல்ல புத்தகங்களை வாசித்து வந்ததால் அந்த எண்ணம் எனக்கு வரவில்லை. நான் இயல்பாக அப்போது நடந்து கொண்டேன். இதையே வேறு மொழியில் சொல்லவேண்டுமென்றால் என்னை தேடி வரும் பணத்தை நான் உதாசீனப்படுத்தியிருக்கிறேன். 

இதன்பின் சிறையில் பொழுதுபோகாமல், அரசியலையும் தொடர்ந்து (சிறையிலும்) வாசித்து கொண்டிருந்தபோது சில அரசியல் நிகழ்வுகள் என்னை கோபப்படுத்தியது. அப்படி ஒரு சம்பவம் என்னை கோவப்படுத்த, சிறையிலிருந்தே மத்திய அரசை விமரிசித்து தினமலருக்கு (இது உங்கள் இடம்) ஒரு கடிதம் எழுதினேன். நல்லவேளை மாநில அரசை விமர்ச்சிக்கவில்லை. அது பிரசுரமாக.. அப்படியே மேலும் சில என தொடர்ந்தது.

இந்த சமயத்தில் சிறையில் ஒரு வயதானவர் வந்தார். அவர் மீது மிசா (குண்டர் சட்டம்) போடப்பட்டிருந்தது. வசதியானவர். பிள்ளைகள் நல்ல நிலையில் சாப்ட்வெர் கம்பெனியில் வேலை பார்ப்பதாக சொன்னார். அவரை பார்த்தால் குற்றவாளியைப்போல் தெரியவில்லை. இருந்தாலும் எங்கேயோ பிரச்சினை. ஏதோ பிரஷர் வந்து இவர் மீது குண்டர் சட்டம் போட்டுவிட்டார்கள்.

குண்டர் சட்டம் போட வேண்டுமென்றால் யாரிடமாவது கத்தியை காட்டி மிரட்டி இருக்க வேண்டும். தமிழ்நாடு போலீசுக்கு திரைக்கதை நன்றாக அமைக்க தெரியும். எனவே ரோட்டோர டீக்கடையில் கத்தியை காட்டி மிரட்டியதாக ஒரு கதையை தயார் செய்து அதை காட்டி குண்டர் சட்டம் போட்டுவிட்டார்கள்.

சிறையில் பல கைதிகளின் சார்ஜ் சீட் படித்து பார்த்து, அது குறித்து கைதிகளிடம் பேசியிருக்கிறேன். பல வழக்குகள் இப்படித்தான் புனையப்படுகிறது. ஓன்று, வேண்டாதவர்களை உள்ளே தள்ள. இரண்டு, பல குற்றவாளிகள் வழக்கை இழுப்பது சாட்சிகளை மிரட்டுவது என தில்லாலங்கடி வேலை பார்த்து வழக்குகளிருந்து தப்பிவிடுவதால், இது போன்ற பொய் வழக்குகள்.

இங்கே எல்லாமே போலிசின் செட்டப் என்பதால், சாட்சிகள் பயப்படுவதில்லை. நடக்காத ஒன்றை நான் என் மூன்று கண்ணால் பார்த்தேன் என்று இந்த சாட்சிகள் சொல்ல, அவர்களுக்கு தண்டனை உறுதியாகிவிடும். அல்லது போலீஸ் மற்றும் குற்றவாளிகளின் `கெட் டு கெதர்` நல்லபடியாக இருந்தால், அந்த கேஸ் அவ்வளவுதான். இனி நம் விஷயத்துக்கு வருவோம்.

குண்டர் சட்டம் போடப்பட்டு 3-4 மாதத்தில் போர்ட் என ஒரு நீதிபதிகள் குழு வசம் இந்த குண்டர் சட்ட வழக்குகள் மறு பரிசீலனைக்கு வரும். இங்கே விசாரிப்பவர் ஒரு நீதிபதியா அல்லது பெஞ்சா என தெரியவில்லை. இங்கே பெரும்பாலான கேஸ்கள் குண்டர் சட்டத்திலிருந்து விடுவிக்கப்படும்.

பத்திரிகையாளர்களிடம் `நாங்கள் குற்றவாளிகளை 23 1/2 மணி நேரத்தில் பிடித்தோம். இவர்கள் இதற்கு முன் பல குற்றங்களை செய்திருக்கிறார்கள்` என பந்தாவாக போட்டோ செஷன் வைத்து போஸ் கொடுக்கும் இந்த  போலீசார், நீதிபதிகளிடம் எதுவும் சொல்வதில்லை.

நீதிபதி என்ன விவரம் தெரியாதவரா, போலீசார் மைண்ட் வாய்ஸில் சொல்வதை பாக்கெட்டில் போட்டு கொண்டு பெயில் கொடுத்து விடுவார். நான் சிறையில் இருந்த வரை 10-ல் 8 கேஸ்கள் இப்படி குண்டர் சட்டத்தை உடைத்து கொண்டு பெயிலில் போய் விடுவார்கள். அப்புறம் என்ன வெண்டக்காய்க்கு இந்த குண்டர் சட்டம் என்றே தெரியவில்லை. இந்த காமெடி இன்னும் தொடர்கிறது.

இங்கே நான் சொல்ல வந்த பெரியவர் குண்டர் சட்டத்தை உடைக்க வக்கீல்களிடம் பேசி இருக்கிறார். இதை உடைக்க உளி மற்றும் சுத்தியல் வாங்க வேண்டும் என கொட்டேஷன் கொடுத்திருக்கிறார்கள். பீஸ் எகிறி இருக்கிறது. இந்த நேரத்தில் `மத்திய அரசுக்கே அறிவுரை சொல்ற ஒரு அறிவாளி நம்ம பிளாக்குல இருக்கிறரர்`  என என்னை நோக்கி யாரோ கை காட்டிவிட்டார்கள். அப்படித்தான் அவர் என்னிடம் வந்தார்.

நான் சார்ஜ் ஷீட்டையும் படித்தேன், அவர் சொன்ன விளக்கத்தையும் கேட்டேன். `நான் நல்ல பொருளாதார நிலையில் இருக்கிறேன். என் பிள்ளைகள் சாப்ட்வேர் இன்ஜினியர்கள், நான் இந்த ரவுடித்தனம் செய்வேனா?` என்று கேள்வி கேட்டு மேலும் சில விளக்கங்களை பெட்டிஷனாக எழுதி கொடுத்தேன். அது காக்கா உட்கார பனங்காய் விழுந்த கதையாகிவிட்டது.

நீதிபதிகளுக்கு தெரியும் எது பொய் கேஸ் எது உண்மை என்று. இருந்தாலும் அவர்களுக்கும் பல `விஷயங்கள்` தேவை அல்லவா. அதை இப்படி பெயில் கொடுப்பதிலும், வழக்கை இழுக்கடிக்க குற்றவாளிகளுக்கு உதவுவதன் மூலம் பெற்று விடுகிறார்கள். இங்கே சில விதிவிலக்குகளும் உண்டு.

பொதுவாக வீட்டில் படைத்தால், காக்காய்க்கு சோறு வைப்பார்கள். காரணம் புண்ணியமாம்! இன்னொரு காரணம்  அது கொஞ்சமாய் சாப்பிடும். ஒருவேளை அது எனக்கு ஃபுல் மீல்ஸ் வேணும் என்று கேட்டு நிறைய வாங்கி சாப்பிட்டால் என்னவாகும். அதன்பின் நாம் காக்கையை கூப்பிடமாட்டோம். அதாவது நாம் புண்ணியம் செய்யவேண்டும், ஆனால் அது நம் கையை கொஞ்சமாக கடிக்க வேண்டும். இதுதான் மனிதன் காக்கையை தேர்ந்தெடுத்தன் காரணம் (என்று நான் நினைக்கிறேன்).

நீதிபதிகளும் அப்படிதான்.  காசேதான் கடவுளடா என்ற பாட்டைத்தான் விரும்பி கேட்பார்கள். அதேசமயம் இப்படி திடீர் என சில சின்ன புண்ணியங்களும் கிடைக்கும். `என்னடா இந்த ஆள் ஒரிஜினல் வக்கீல் மூலம் வராமல் ஒரு டுபாகூர் வக்கீல் மூலம் பெட்டிஷன் கொடுக்கிறாரே, இவரிடம் எதுவும் தேறாது` என நினைத்தார்களோ அல்லது காக்கைக்கு சோறு வைப்பது போல், இந்த வழக்கு பொய் என்பது நன்றாகவே தெரிகிறது, இதை ரத்து செய்து புண்ணியம் தேடலாம் என்றும் நினைத்திருக்கலாம். அந்த வகையில் அவர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது.

அவர் சந்தோஷமாக என்னிடம் வந்தார். `உங்களுக்கு ஏதாவது வேண்டுமா?` என்று கேட்டார். நான் அப்போதும் உத்தமபுத்திரனாக இருந்தேன். `எனக்கு எதுவும் வேண்டாம். வேறு யாராவது கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்யுங்கள்` என்றேன். அவர் என்னை மேலேயும் கிழேயுமாக ஒரு முறை பார்த்தார். பலர் என்னை அப்படி பார்த்திருக்கிறார்கள். இது எனக்கு அடிக்கடி நடக்கும். நான் ஒரு டிபெக்டிவ் பிராடக்ட். ஒன்னும் பண்ண முடியாது.   

இருந்தாலும் `ஏதாவது கேளுங்க` என்று அவர் வற்புறுத்த, அந்த சமயத்தில் சிறையில் என்னுடைய செருப்பு அறுந்துவிட்டது. ஊருக்கு தகவல் சொல்லி வர லேட்டாகும் என்பதால், அதை மட்டும் கேட்டேன். அவரும் வாங்கி கொடுத்ததாக ஞாபகம். அப்படியே அவருக்கு மனுவில் வந்த பிஸ்கட் பழம் என அவற்றையும் கொடுத்தார்.

ஒருவேளை பணம் கேட்டிருந்தால், 1000-5000 கிடைத்திருக்கக்கூடும். கவனிக்கவும், கொஞ்சமாகவே இருந்தாலும், பணம் என்னை தேடி வருகிறது. நான் அதை உதாசீனப்படுத்துகிறேன். விதி வலியது அல்லவா, அதான்.

இது நடந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. அதன் பின் வாழ்கை கதற கதற பல அனுபவங்களை கொடுத்தது. பணம் எனக்கு கண்களில் தண்ணியை மட்டும் காட்டவில்லை, பெட்ரோல், டீசல், எல் பில் ஜி  என எல்லாவற்றையும் காட்டிவிட்டது. எந்த சின்ன தொகையை நான் அலட்சியமாக உதறினேனோ, அதுவே ஒரு கட்டத்தில் எனக்கு பெருந்தொகையாக மாறிபோனது.

ஒருவேளை நான் பணத்துக்கு மரியாதை கொடுக்கவில்லை, அதனால்தான் இப்படி நடக்கிறதோ என்ற எண்ணம் எனக்குள் கேள்வியாக மாறியது. இனி அதை மதிக்கவேண்டும் என்ற உணர்வு வந்துவிட்டது.

இப்படிப்பட்ட மனநிலையில் நான் ஒரு நாள் இங்கே அகமதாபாத்தில் வாக்கிங் போய் கொண்டிருந்தேன். (இடத்தை சொல்லமாட்டேன். பின்னர் இன்னொரு பதிவுக்கு அது தேவைப்படும்.) எனக்கு முன்னே இருவர் பைக்கில் போய் கொண்டிருந்தனர். பின்னால் அமர்ந்தவர், அவர் சட்டையில் இருந்து எதையோ எடுக்க, அதிலிருந்து 200 ரூபாய் கீழே விழுந்தது. அவர் கவனிக்காமல் போய்விட்டார்.

நான் கவனித்து விட, விரைவாக போய் எடுத்துவிட்டேன். அப்போது `சாயப், மேனே பெஹலே தேக்கா` என்று குரல். திரும்பி பார்த்தால், 3 வீலரில் ஒரு பிச்சைக்காரன். அவர்தான் முதலில் பார்த்தாராம்.

ப்ரோட்டோகால்படி பார்த்தால், எனக்கு முன்னால் அந்த பிச்சைக்காரன்தான் இருந்தான். எனவே அவனுக்குத்தான் சொந்தம். எழுந்து வந்து எடுக்கமுடியவில்லை. நிஜமாகவே ஊனமுற்றவர்.

வழக்கமாக இவர்களை உட்காரவைத்து யாராவது ஒருவர் வண்டியை தள்ளிக்கொண்டு வருவார். இவர் தனியாகவே இருந்தார். என்னைப்போலவே சிங்கிள் போலிருக்கிறது. அதுமட்டுமின்றி ஸெல்ப் மேட் பில்லியனர் என்பதுபோல் இவர் ஸெல்ப் மேட் பிச்சைக்காரர்.இந்த இரண்டு காரணங்களுக்காக நான் அந்த பணத்தை அவரிடம் கொடுத்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி என்னை `சார்` ன்னு சொன்னான். அந்த மரியாதைக்காவது நான் கொடுத்திருக்க வேண்டும்.

ஆனால் காலம் என்னை மாற்றிவிட்டது. எனக்குள் ஒருவன் காணாமல் போய்விட்டான். அதே சமயம் பணத்தை முறைகேடாக அடையும் அளவுக்கு நான் மாறவில்லை. என்னை தேடிவரும் வரும் பணத்தை உதாசீனப்படுத்த கூடாது என்ற எண்ணம் மட்டும் வந்துவிட்டது.

எனவே நான் `யோவ்... நீ அபிஷியல் பிச்சைக்காரன், நான் அன் அபிஷியல்.. அவ்வளவுதான்` என்று மைண்ட் வாய்ஸில் சொல்லிவிட்டு, பணத்தை எடுத்துக்கொண்டு நகர்ந்தேன். அந்த  பிச்சைக்காரனுக்கு பணம் போனதைவிட, இப்படி ஒரு டீசண்டான பிச்சைக்காரனை பார்த்தது அதிர்ச்சியாக இருந்திருக்கும்.

மேலுலகத்திலிருந்து யாரவது பார்ப்பார்கள். அடடா இந்த ஆளுக்கு பணத்தோட அருமை தெரிஞ்சி போச்சி, இனிமே இவனுக்கு கொடுக்கலாம் நினைப்பார்கள் என்று ஒரு நம்பிக்கை. ஆனால் ஒரு மாற்றத்தையும் காணோம். ஒரு வேளை நான் இருக்கற ஏரியா பக்கம் கடவுள் ரவுண்ட்ஸ் வரலியோ? எப்படி இந்த மெசேஜை அவருக்கு பாஸ் பண்றது?

அதே சமயம் அந்த பிச்சைக்காரன் ஏதாவது சாபம் விட்டு நிலைமை இன்னும் மோசமாகிவிடுமோ என்ற பயமும் இருந்தது. ஆனால் அப்படியும் எதுவும் நடக்கவில்லை.