!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Tuesday, February 25, 2020

தமிழ்மணம் - மீண்டும் அதே தவறு


சில புதிய தமிழ் திரட்டிகள் வருவது போல் தெரிகிறது. அதில் ஒன்றை கவனித்தேன்.

தமிழ்மணம் தமிழ் வலைப்பதிவர்களின் வாழ்க்கையில்  மறக்க முடியாத ஓன்று. இது எளிமையாக இருந்தது மட்டுமின்றி நீண்டகாலம் தாக்குபிடித்ததுதும் கூட. ஆனால்  லாபமற்ற சேவைகள் கடைசியில் காணாமல் போவதுபோல் இதற்கும் முடிவு வந்தது.

பதிவர்கள் கூட லாபம்/அங்கீகாரம் என எதிர்பார்த்துதான் வருகிறார்கள். அவர்கள் எண்ணங்கள் நிறைவேறி அல்லது நிறைவேறாமல் தங்களுடைய பாதைகளை மாற்றிக் கொள்கிறார்கள். ஆனால் தமிழ்மணம் நின்றபோது அது வலித்தது.

புதிய எழுத்தாளர்களுக்கு தமிழ்மணம் ஒரு அருமையான தளம் அமைத்து கொடுத்து அவர்களுக்கு உற்சாகத்தையும், செம்மைப்படுத்திக் கொள்ள வாய்ப்பையும் அளித்திருந்தது. அது தற்போது இல்லாதது நமக்கு மிகப்பெரிய இழப்பு.

குறைந்த பட்சம், `இதுதான் பிரச்சினை..இதை சமாளித்து நடத்த விருப்பமுள்ளவர்கள் நடத்தலாம்` என்று மற்றவர்களுக்கு வழி விட்டிருக்கலாம். அதையும் இவர்கள் செய்யவில்லை. கடைசியில் இவர்களும் ஒரு `அ அ` வாக இருக்கிறார்கள்.

தற்போது புதிதாய் முயற்சி செய்யும் நண்பர்களும் அதே தவறைதான் செய்கிறார்கள். அவர்களுக்கு ஆர்வம் இருக்கிறது. வாழ்த்துவோம், வரவேற்போம். ஆனால் நிர்வாக செலவுக்கு வழி?

இன்று தொழில்நுட்பம் எவ்வளவோ முன்னேறிவிட்டது. அதில் பணம் வசூலிக்கும் முறைக்கும் ஏதாவது சுலபமானதாக ஓன்று இருக்கும். அதை இவர்கள் முயற்சிக்க வேண்டும்.

பதிவுகளை பதிய விரும்புபவர்கள்,ரூ 100 க்கு ரீசார்ஜ் செய்தால் 10 பதிவுகள் பதியலாம்.ரூ 1000 வருடம் கொடுத்தால் தினம் 2ஜிபி.. சாரி தினம் 2 பதிவு போடலாம் என்று பணம் கேட்கலாம். அநேகமாக பதிவர்கள் கொடுப்பார்கள்.

வாசிப்பவர்களுக்கு மாதம் ரூ 35 அல்லது 49 என கட்டணம் வைக்கலாம். அமேசான் 10 ரூபாய்க்கு படிக்க புக் தர்றான். பத்தே போதும் என்றால் paytm நம்பர் கொடுத்து வசூல் பண்ணலாம். வந்தவரை லாபம். கடந்த காலங்களில் பதிவர் கூட்டம் நடந்த போது இதை பற்றி விவாதித்திருக்க வேண்டும்

இன்னொரு வழியும் இருக்கிறது. ஒரு காலத்தில் லைப்ரரியில் புத்தகம் படிக்கும்போது சில புத்தகங்கள் இருக்கும். விலை போட்டிருக்கும். கடைகளில் கிடைக்காது. யாராவது ஒரு புரவலர்/ நிறுவனம் பணம் கொடுக்கும். அவர்களின் விளம்பரம் மட்டும் அந்த புத்தகங்களில் வரும்.

அதேபோல் இந்த திரட்டிகள் நிறுவனங்களை அணுகலாம். அவர்கள் அளிக்கும் நிதிக்கு பதிலாக அவர்களின் விளம்பரம் பதிவுகளில் வெளியிடப்படும் என கேன்வாஸ் செய்யலாம். அது html கோடாக இல்லாமல் இமேஜாக இருக்க வேண்டும்.

ஏற்கனவே ஒரு போராட்டத்தில் பெரும்பாலான பதிவர்கள் இப்படி போட்டோ போட்டிருக்கிறார்கள்.

இந்த முறை ஒரு மாற்றமாக, அந்த இமேஜை பதிவுக்குள்ளேயே இணைப்போம் என்றும், கூடவே, பதிவை எழுதுபவர்கள், `இந்த வாரம் இந்த பதிவை உங்களுக்கு வழங்குவது சுடர்மணி பனியன் ஜட்டிகள்..ஒரு முறை அணிந்து பாருங்கள், உலகத்தையே மறந்து விடுவீர்கள்.` (வேறு ஸ்பான்சர் இருந்தால் அவர்களையும் சேர்த்து) என்று எழுதிவிட்டுத்தான் பதிவை தொடங்க வேண்டும்  என்று பதிவர்களுக்கு சொல்லிவிட வேண்டும்.

அப்படியும் யாரும் மசியவில்லையா, இன்னொருவர் இருக்கிறார். சரவணா ஸ்டோர் ஓனர். விளம்பரங்களில் நடித்தவர் இப்போது சினிமாவிலும் என்று கேள்வி. அவரிடம் போய் `வெளியாகும் உங்களின் அத்தனை படத்திற்கும் எங்கள் பதிவர்கள் அற்புதமான பாசிட்டிவ் விமர்சனம் எழுதுவார்கள். அப்படி எழுதாதவர்களை நாங்கள் எங்கள் திரட்டியிலிருந்தே தூக்கி விடுவோம் என்று மிரட்டியிருக்கிறோம் என்று சொல்லுங்கள். மனிதர் பணத்தை பையில் போட்டு தருவார்.

நிறைய வழி இருக்கிறது.

இங்கே நகைசுவைக்காக சில விஷயங்களை சொல்லி இருந்தாலும் திரட்டி நடத்த விரும்புபவர்கள், அல்லது பதிவர் சங்கம் நடத்துபவர்கள் இந்த வாய்ப்புகளை முயற்சிக்கலாம்.

கடைசியாக, 

வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைத்தது போல், ஐடியா கொடுத்த என்னிடமே யாரும் பணம் கேட்க கூடாது. எனக்கு மட்டும் லைஃ டைம் உறுப்பினர் வசதியை இலவசமாய் கொடுத்துவிட வேண்டும்.                                                

Monday, February 24, 2020

அற்புதமான அறிவாளிகள்- பகுதி 2



சமீபகாலமாக கவனித்த சில `அறிவாளிகள்` சம்பவம்.

இது வோடபோன் கதை. திவாலாகப் போகிறதாம். எவ்வளவோ கோடி கட்ட வேண்டுமாம்! பக்கத்தில் நிறைய சைபர் இருப்பதால் மயக்கம் வருகிறது.

ஒரு மாணவன் பெயிலானால் அவனை மக்கு என்று சொல்லலாம். பெரும்பாலான மாணவர்கள் பெயில் என்றால்? சந்தைக்கு வந்த 90 சதவிகித மொபைல் இன்று காணாமல் போய்விட்டன. இங்கே எங்கேயோ அரசின் கொள்கை கணக்கு தப்பு என்றுதான் நினைக்கிறேன்.

சரி, ஒரு வேளை அவ்வளவு பணம் இல்லை என்றால் வோடபோன் என்ன செய்யும்? அவங்க நாட்டுக்கு போய் சின்னக்கவுண்டர் சுகன்யா செஞ்ச மாதிரி எல்லாருக்கும் சாப்பாடு போட்டு பிச்சை எடுத்து கடனை அடைப்பங்களா! நிச்சயம் கிடையாது. மஞ்ச கடுதாசி கொடுத்துட்டு துண்டை உதறி தோள்ல போட்டுகுனு போய்க்கினே இருப்பான் வோடபோன்காரன் . இதுதான் நடக்கப்போவுது.

வோடோபோனோ அல்லது ஆதித்ய பிர்லாவோ கவர்ன்மென்டை ஏமாற்றுபவர்களாக அல்லது நிர்வாக திறமை இல்லாதவர்களாகவோ தெரியவில்லை. அதற்கு பதிலா ஏதாவது ஸ்கீம் கொடுத்து அவர்களை காப்பாற்றலாம்.

இது தொடர்பா எக்கனாமிக்ஸ் டைம்ஸ்ல் ஒரு செய்தி படித்தேன்.

It (vodafone) has said it cannot immediately pay the $3.9 billion it owes and its ability to survive was contingent on the government agreeing a flexible payment schedule.

With 13,000 direct employees and loans from banks of about $3.8 billion,

கவர்மென்டுக்கே பணம் கட்ட முடியலை, இதுல இந்த லோன் என்னவாகும்?

இன்னொரு விஜய் மல்லையா?

கண்ணா உனக்கு இரண்டு லட்டு 

இனி உள்ளூர் அறிவாளிகள் கதை

இங்கே ஒரு நண்பர் வீட்டுக்கு பைப் மூலம் கேஸ் வாங்குகிறார். எவ்வளவு என்று கேட்டால் இரண்டு மாதத்துக்கு 200-300 ஆகும் என்கிறார். நம்ப முடியாமல் கேட்டால், பில் காட்டுகிறேன் என்கிறார். உண்மையாகத்தான் இருக்கக்கூடும். இருப்பினும் பலர் சந்தேகத்தோடு வாங்குவதில்லை.

இப்படி பைப் மூலம் கேஸ் கொடுக்க ஆரம்பித்தால், அட்லீஸ்ட் அரை பர்சென்ட் டிராபிக் குறையும். இடைநிலை கமிஷன் பெருமளவு தவிர்க்கப்படுவதால் விலையும்  கணிசமாக குறையும்.

ஆனால் இதை மக்களிடம் முறையாக மார்க்கெட் செய்வதில்லை. இது வாங்கிவிட்டால் மானிய விலை கேஸ் நின்றுவிடும் என்று சிலருக்கு பயம்.

இதில் இன்னொரு காமெடியையும் நான் கேள்விப்பட்டேன். ஒருவர் பைப்லைன் கேஸ் வாங்குகிறார்.அதேசமயம் எல்பிஜி கேசும் வாங்கி அதையும் பிளாக்கில் விற்கிறார்.

இரண்டும் கொடுப்பது ஒருவகை அரைவேக்காட்டுத்தனம். இன்னொருபக்கம் மக்களுக்கு இது தெரியாமல் பைப் கேஸ் வாங்குவது இல்லை.  இது எப்படி இருக்கு?

என்னதான் செய்வது?

சமீபத்தில் ஒரு (அகமதாபாத்) விஷேஷம். உள்ளூர் டைப் சாப்பாடு. அதாவது ஒரு தட்டை எடுத்தால் அதுதான் கணக்கு. Rs.150-200

நம் தமிழ் விசேஷங்களில் இலை போட்டால் அனைத்தையும் வைத்துவிடுவார்கள். பல சமயம் குழந்தைகள் கூட தனியாக என ஆடம் பிடிக்கும். இதில் பல விதங்களில் சாப்பாடு விரயமாகும். இந்த பஃபே சிஸ்டம் இதற்கு சரியான மாற்று என நினைத்தால் அங்கேயும் தலைவலி.

அதே மனிதர்கள். அதேபோல் குழந்தைகள். வீட்டில் `கொஞ்சமா சாப்பிட்டு அப்புறம் வைச்சிக்கோ` என்று இருப்பவர்கள், இங்கே அடுத்தவன் பணம்தானே என்று தாராளமாக இருக்கிறார்கள். அந்த தட்டுகளில் மீந்த உணவுகளை பார்க்கும்போது இதற்கு என்னதான் தீர்வு என்றே புரியவில்லை?                           


Tuesday, February 18, 2020

அற்புதமான அறிவாளிகள்


சமீபத்தில் சில செய்திகளை படித்தபோது இந்தியா எப்பேற்பட்ட அற்புதமான அறிவாளிகளை கொண்ட நாடு என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.

இது அதில் ஓன்று.  இந்தியா சீனாவிலிருந்து இந்தியர்களை விசேஷ விமானம் மூலம் அழைத்து வந்திருக்கிறது.  நல்லதுதான். ஆனால் ஒரு விஷயம்  இடித்தது. நான் இது தொடர்பாக இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது  இன்னொரு செய்தியையும் கவனித்தேன். வழக்கமாக எங்கேயும் நடப்பதுதான். அவசர காலங்களில் அத்தியாவசிய பொருட்களை பதுங்குவது.

அதாவது கோரோனோ பீதியால் நோய் பரவிய அந்த சில வாரங்களில் எல்லோரும் மாஸ்க் வேண்டும் என நாயாய் அலைந்திருக்கிறார்கள்.

இங்கேயிருந்து காலியாக போன விமானத்தில் நம்மிடம் இருந்த மாஸ்குகளை முடிந்தவரை கொண்டுபோய் கொடுத்திருக்கலாம். ஆனால் நம் ஆட்கள் செய்யவில்லை. நான்கு நாள் கழித்து, நம் மோடி அவர்களுக்கு கடிதம் எழுதுகிறார். `இந்த நேரத்தில் நாங்கள் உங்களுக்கு பக்கபலமாக இருக்கிறோம். தேவைப்பட்ட உதவிகளை செய்கிறோம்` என்று கடிதமும் எழுதுகிறார். உதவி என்பது இப்படி கேட்டு செய்வதா ?

சீனா இந்தியாவைவிட பலமானதுதான். இந்த உதவியும் சாதாரமானதுதான். இந்த நேரத்தில் அவர்களுக்கு இது அவசியம் தேவை. கொண்டுபோய் கொடுத்திருக்கலாம்.

நமது நண்பர் ஒருவர் வேலையைவிட்டு நின்று விட்டார். முதலாளிக்கும் கோவம் வரும் என்பதை இவர் உணரவில்லை. தொழிலாளிக்கும் ரோஷம் உண்டு என்பதை முதலாளி உணரவில்லை. வேறு இடத்துக்கு வேலைக்குப்போன  சில மாதங்களிலேயே இவருடைய வீட்டில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை. புது முதலாளி இவரை பற்றி தெரியாததால் அவ்வளவாக உதவவில்லை. மருத்துவ செலவு கண் பிதுங்கியது.

பழைய முதலாளி இதை கேள்விப்பட்டு வந்தார். நலம் விசாரித்தவர், அவரை தனியே அழைத்துப்போய், சற்றும் எதிர்பாராதவிதமாக அவர் பாக்கட்டில் கொஞ்சம் பணத்தை வைத்து `செலவுக்கு வைத்துக்கொள்` என்று சொல்லிவிட்டார். இதை அவரால் மறுக்கமுடியாது.

இதுவே நாலுபேர் மத்தியில் `உனக்கு ஏதாவது உதவி தேவை என்றால் சொல்` என்றால், இவர் கேட்டிருப்பாரா? அவரிடம் வேலை செய்யாத நிலையில் நிச்சயம் மறுத்திருப்பார். அது அவருக்கு கவுரவமாக இருந்திருக்கும். அவ்வளவுதான். (பின்னர் இவர் மீண்டும் அங்கேயே வேலைக்கு போய்விட்டார்.)

உதவி செய்யும் மனிதர்கள் இப்படித்தான். இவர்கள் கேட்டு செய்யமாட்டார்கள். அதுவும் நாலுபேர் மத்தியில் நிச்சயம் கேட்கமாட்டார்கள்.

ஆனால் நம்ம மோடிஜி எது செஞ்சாலும் நாலுபேர்  பார்க்கற மாதிரி செய்யறவர்.

இதே கதைதான் பாகிஸ்தானுக்கும், நம் ஆட்களை அழைத்து வந்தாகிவிட்டது. பாகிஸ்தான் அப்படி செய்யவில்லை. ஏதாவது காரணம் இருக்கலாம். சீனாவில் உள்ள  பாகிஸ்தானிகள் இணையத்தில் இதை குறிப்பிட்டு கதறும்போது மனது நெருடுகிறது.

இந்திய வெளியுறவுத்துறை அனைத்து அண்டை நாடுகளையும் கேட்டதாம். அவர்கள் மறுத்துவிட்டார்களாம். இந்தியாவை ஜன்ம எதிரியாக பார்க்கும் பாகிஸ்தான் இந்திய உதவியை  ஏற்குமா?

இங்கே வார்த்தைகளும் நோக்கமும்தான் முக்கியம். `நாம இந்த வாரம் புல்லா காஷ்மீர்ல சண்டை போடுவோம், அது வேறே. இது மனித நேய உதவி. நாங்க அவங்களை அழைத்து வந்து, சரியானதும் பாகிஸ்தானுக்கு அனுப்பிவிடுகிறோம்` என்று இம்ரான்கானிடம் பஞ்ச் டயலாக் பேசியிருக்கலாம்.

இந்த பக்கம், சீனாவிடம் `உனக்கு பேஷண்டுகளை கவனிக்கவே நேரம் பத்தாது. இதுல இவங்களை எப்படி கவனிப்பாய் ? எனவே விதிமுறைகளை பார்க்காமல் அனுப்பிவை` என்று  அங்கே  கொஞ்சம் செண்டிமெண்ட் காட்டியிருக்கலாம்.

சந்தேகம்தான். ஆனால் நாம் சிலருக்கு உதவ வேண்டும் என முயற்சித்தால் எதுவும் சாத்தியம். பெரும்பாலான உடைந்துபோன உறவுகள் இக்கட்டான நேரத்தில் உதவுவதன் மூலம் இணைந்திருக்கின்றன.
                   

Thursday, February 13, 2020

அதிர்ஷ்டம்: அரவிந்த் கெஜ்ரிவால்


அதிர்ஷ்டம். இதை சிறுவயதிலிருந்தே கவனித்துக் கொண்டிருக்கிறேன். ஆரம்பகாலங்களில் தன்னம்பிக்கை நிறைய இருந்ததால் அதை மூட நம்பிக்கை என்று இருந்தேன். ஆனால்  அதன்பின் பல சூழ்நிலைகள் அதை நம்ப வைத்திருக்கிறது.

உதாரணத்திற்கு ஒரு சம்பவம் போதும். அப்போது லாட்டரி வியாபாரம். இது நம்பகமான துறை இல்லை என்பதால் இதை நம்பி எதுவும் செய்ய முடியாது.  நிச்சயமற்ற நிலைமை. நானும் டிபரஷன் மனநிலைக்கு வந்திருந்தேன். நமக்கே லாட்டரி விழுந்தால் செட்டில் ஆகிவிடலாம் என்று குறுக்குபுத்தியில் இருந்தேன். அப்போதெல்லாம் டிக்கெட் விற்காவிட்டால்  மதியம் 3 மணிக்குள் திரும்ப கொடுத்துவிடலாம். ஆனால் பல சமயம் செய்வதில்லை. நானே வைத்து பார்ப்பேன். தினம் 500, 1000 நஷ்டம் வரும். இப்போது அதை நினைத்தால் கண்ணில்  ரத்தம் வருகிறது

இப்படி பல  நாட்கள்,மாதங்கள் நஷ்டங்களை  சந்தித்த பிறகு ஒரு நாள் இரவு 7 மணிக்கு 100 ரூபாய் அளவுக்கு டிக்கட் மீந்துவிட்டது. வாடிக்கையாளர் ஒருவர் வந்தார். இவர் தினம் வாங்குபவர் இல்லை. என்ன பண பிரச்சினையோ, `ஏதாவது லாட்டரி இருக்கா, அதுதான் என் பிரச்சினை தீர்க்கும்` என்று சொல்லி கேட்டார். 

அப்போது ஒரு தில்லுமுல்லு நடந்து கொண்டிருந்தது. லாட்டரி ரிசல்ட் மறுநாள்தான் பேப்பரில் வரும். சிலர் முன் கூட்டியே பரிசு விழுந்த நம்பரை மதியம் 4 மணிக்கே போன் மூலம் வாங்கிவிடுவார்கள். இதற்கென்று சிலர் இருந்தார்கள். பல கடைக்காரர்களுக்கு இது தெரியாது. பரிசு விழுந்த டிக்கட்களை இந்த திருட்டு கும்பல் கடைக்காரர்களுக்கே தெரியாமல் அவர்களுக்கு பிடித்த நம்பரை வாங்குவது போல் வாங்கிவிடுவார்கள்.

இது பின்னர் எங்களுக்கு தெரிய வந்ததால் 4 மணிக்கு மேல் டிக்கட் வாங்குபவர்களை கவனிப்போம். சந்தேகம் என்றால் விற்கவே மாட்டோம்.

இவர் அப்படிப்பட்டவர் இல்லை. நான் அப்போது இருந்த வெறுப்பில் `இருக்கு, ஆனா மொத்தமா வாங்கணும்..` என்று கண்டிஷன் போட்டேன். அத்துடன் அசல் வந்தால் போதும் என்று 30+10 பர்சென்ட் தள்ளுபடியெல்லாம் கொடுத்து அந்த 100 டிக்கட்டை 60 ரூபாய்க்குத்தான் அவரிடம் விற்றேன். விதி அப்போதே என்னை பார்த்து சிரித்திருக்கிறது. நான்தான் உணரவில்லை.

மறுநாள் அந்த லாட்டரியில் அவர் 60,000 பரிசு பெற்றார். 20 வருடத்துக்கு முன் பெரியதொகை. ஒரு வாரத்துக்கு சிவா புராணம்தான். அந்த சிவாவை (பாடலீஸ்வரர்) பார்த்துவிட்டு இந்த சிவாவை பார்த்தேன், கைமேல் பலன் என்று எனக்கு மார்க்கெட்டிங் மேனேஜராக இருந்தார்.

எனக்கு தனியாக இதில் பாதி அல்லது கொஞ்சம் குறைவாக போனஸாக கிடைக்கும்.  ஆனால் அங்கேயும் விதி விளையாடியது. அப்போது  சில வியாபாரிகள் போனஸை மட்டும் தனியாக விற்கும் பழக்கத்தை ஆரம்பித்திருந்தார்கள். அந்த வகையில் நான் போனஸை வேறு ஒருவரிடம் விற்க, அவர் `சிவா நீயும் நானும் ஷேர்`  என்று என்னையும் அதில் இழுத்திருந்தார். எனவே அந்த போனஸில் பாதி கிடைத்தது.  இல்லையென்றால் நான் அன்றே ஹார்ட் அட்டாக் வந்து செத்திருப்பேன். வலையுலகம் ஒரு பிரபல பதிவரை இழந்திருக்கும்.

அந்த பரிசு பெற்ற நபர் எனக்கு 5000 ரூபாய் கொடுத்து, ஒரு வாரத்துக்கு இலவச டீயூம்  வாங்கி கொடுத்தார். கூடவே `சிவா உன்னை நான் வாழ்நாளில் மறக்கவே மாட்டேன்` என்றும் சொன்னார்.

`நீங்களாவது இந்த ஜென்மத்துல மறக்க மாட்டீர்கள்,  நான் உங்களை அடுத்த ஜென்மத்துலேயும் மறக்கமாட்டேன்` என்று பல்லை கடித்தேன். எனக்கு ஏற்பட்ட பல அனுபவங்களில் இது ஓன்று. இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் அந்த நபருக்கு அதிர்ஷ்டம் இருந்திருக்கிறது. அவ்வளவுதான்  

அரவிந்த் கெஜ்ரிவால்

அதே கதைதான். பொருளாதார மந்தம், ஜி எஸ் டி தலைவலிகள் பத்தாது என்று என் ஆர் சி மற்றும் சி ஏ  ஏ பிரச்சினையும் சேர்ந்து கொள்ள, காங்கிரஸ் ம்ஹும்... நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன் என்று ஒதுங்கிக்கொள்ள, அத்தனையும் அவருக்கு சாதகமாக உருவாகி இருக்கிறது.

அத்வானி அவருக்காக ரோடு போட, அதில் அதிர்ஷ்டம் மோடிக்கு வண்டி ஓட்ட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. அன்னா ஹசாரே அவர் ஏதோ  கணக்கில் போராட்டத்தை ஆரம்பிக்க, பலனை கெஜ்ரிவால் அறுவடை செய்தார். அத்வானியை போல் இவரும் தற்போது  செய்திகளில் வருவதில்லை.

தமிழகத்தில் அம்மா மண்டையை போட, நினைத்தே பார்க்க முடியாத எடப்பாடி அரியணை ஏறினார். அதுமட்டுமா பிஜேபிக்கு தமிழ்நாட்டில் ஆள் இல்லாததால், இந்த ஆள் நமக்கு தேவை என அவருக்கு பின்னால் நிற்க...இந்த அதிர்ஷ்டம் காரணமாகவும் அவர் காட்டில் மழை.

இந்த தலைவர்களுக்கு திறமை இருக்கிறது என்பது உண்மையானாலும், அதிர்ஷ்டம் இவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருக்கிறது என்பதும் உண்மை.