!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Saturday, May 23, 2026

இனி விஜய்யை எதிர்க்க வேண்டும்

ஆமாம் நிலைமை அந்த அளவுக்கு மோசமாகிவிட்டது. திராவிட கட்சிகள் ஆணவத்தோடு இருக்கின்றன எனவே அதற்கு ஒரு மாற்று இருந்தால்தான் அரசியல் ஆரோக்கியமாக இருக்கும் என்ற நிலை இருந்ததால் நான் விஜய்யை ஆதரித்தேன்.

நிலைமை இப்போது தலைகீழ். எப்படி பார்த்தாலும் இனி திராவிட கட்சிகள் எழுந்து நிற்கும் வாய்ப்பு குறைவு. அந்த அளவுக்கு மரண அடி இரண்டு கட்சிகளுக்கும் கிடைத்திருக்கிறது. இப்படி எதிர்க் கட்சியே இல்லாமல் ஒரு அரசு இருப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்து. எனவே இனி இவருக்கு ஒரு மாற்றை தேட வேண்டிய நிர்பந்தத்துக்கு வந்துவிட்டோம்.

Tuesday, May 19, 2026

திராவிட கட்சிகள்.....கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு

மழை விட்டும் இன்னும் தூவானம் நிற்கவில்லை. இன்னமும் விஜய் கொடுத்த அதிர்ச்சியைப் பலரால் ஜீரணிக்க முடியவில்லை; விதவிதமான வியாக்கியானங்கள். விஜய், திமுக கூட்டணிக் கட்சிகளை எப்படி அழைக்கலாம்? அவர்கள் தீய சக்தி இல்லையா? அதிமுகவை எப்படி உடைக்கலாம்? இப்படி திமுக மற்றும் அதிமுக ஆதரவு ஊடகவியலாளர்களின் புலம்பல் ஓவராக இருக்கிறது.

ஒவ்வொரு தேர்தலும் தலைவலிதான். எவ்வளவோ சீர்திருத்தங்கள் வந்தாலும் மீண்டும் மீண்டும் ஏதோ ஒரு கோளாறு வந்துவிடுகிறது. `இந்தத் தேர்தல் நிறைய குழப்பங்களை உருவாக்கிவிட்டது` என்று ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். ஒருவேளை அந்த சீர்திருத்தங்களை மத்திய அரசு கொண்டுவந்தால், இந்தத் திரைமறைவு குதிரை பேரங்கள் குறையும்.

இங்கே கவனிக்கப் போவது விஜய் செய்தது சரியா தவறா என்ற விமர்சனங்களைத்தான்.

Sunday, May 17, 2026

கட்டாயப் போக்குவரத்துச் சேவை

எரிபொருள் பற்றாக்குறை மற்றும் அதன் விலை உயர்வு நாட்டைப் பெருமளவில் பாதிப்பதாகக் கூறி, பிரதமர் சிக்கனத்தை வலியுறுத்தியிருக்கிறார். இது நல்ல விஷயம்தான். ஆனால், இந்தியாவில் உள்ள மிகப்பெரிய தலைவலி என்னவென்றால், தொலைத்த பொருளைத் தொலைத்த இடத்தில் தேடாமல், "அங்கே இருட்டாக இருக்கிறது" என்று கூறி வெளிச்சம் இருக்கும் இடத்தில் தேடுவதுதான்.

பிரதமர் பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்தும்படியும், 'கார்ப்பூலிங்' (Carpooling) போன்ற கூட்டுப் பயணங்களை மேற்கொள்ளும்படியும் சொல்லியிருக்கிறார். அறிவுரை ஓகே, நடைமுறை?

பொதுவாகச் சாலையில் செல்லும் போக்குவரத்தைக் கவனித்தால் ஒரு விஷயம் அப்பட்டமாகத் தெரியும். இருசக்கர வாகனங்களில் செல்பவர்களில் கிட்டத்தட்ட 50-60 சதவீதத்தினர் தனி நபர்களாகவே பயணிக்கிறார்கள். அவர்களின் பின் இருக்கை காலியாகவே இருக்கிறது. இதை ஏன் நகர்ப்புறப் பயணங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது?

Sunday, May 10, 2026

எது முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தா? தேசிய கீதமா?

"ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்."

விஜய் பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இது போன்ற ஒரு சர்ச்சை எழுந்தபோது, இதற்கான சம்பிரதாய நடைமுறை எப்படி இருக்க வேண்டும் என்று நானே யோசித்தேன். இந்தியா போன்ற கூட்டாட்சி நாடுகளில் இதில் ஒரு குழப்பம் இருப்பது இயல்புதான். ஆனால், இதற்கான சரியான வழிமுறை என்ன?

Saturday, May 9, 2026

தேர்தல் சீர்திருத்தங்கள்: அளவுச் சாப்பாடு

இந்தத் தேர்தல் நிறைய குழப்பங்களை உருவாக்கிவிட்டது. நிறைய தேர்தல் சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. இந்தத் தலைப்பில் நிறைய எழுதலாம் என்றாலும், முக்கியமானவற்றை மட்டும் கவனிப்போம்.

இந்தியாவின் ஜனநாயக அமைப்பில், இது போன்ற தொங்கு சட்டமன்றம் ஒரு நிரந்தரத் தலைவலி. எனவே, இதற்குத்தான் முதலில் தீர்வு தேவை. என்ன செய்யலாம்?

ஓட்டலுக்குச் செல்கிறோம்; கையில் காசு குறைவாக இருந்தால் என்ன செய்வோம்? 'அளவுச் சாப்பாடு' அல்லது இருப்பதற்குத் தகுந்தாற்போல் சாப்பிடுவோம். அதே கொள்கைதான் இங்கேயும்.

Wednesday, May 6, 2026

விஜய்யின் தேர்தல் வாக்குறுதிகள்

டிவி சீரியல்களில் யாரோ ஒரு பெண், ஒரு குடும்பத்தைப் பற்றி ஏதாவது போட்டுக் கொடுத்து அவர்களின் நிம்மதியைக் கெடுக்கப் பார்ப்பார். இப்போது அரசியலில் ஊடகவியலாளர்கள் அந்த வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்தத் தேர்தல் ஊடகவியாளர்களுக்கு மிகப்பெரிய அவமானத்தைக் கொடுத்துவிட்டது; அதை அவர்களால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. வெளியே ‘இட்ஸ் மிராக்கிள், வாழ்த்துகிறோம்’ என இளித்தாலும், உள்ளுக்குள் இருக்கும் எரிச்சலை எப்படித் தீர்ப்பது என்று அவர்களுக்குத் தெரியவில்லை.

சரி, அவர்கள் என்னதான் சொல்கிறார்கள், எப்படி சமாளிக்கிறார்கள் என்று நானும் சில பேட்டிகளைக் கவனித்தேன். கிட்டத்தட்ட எல்லாம் சீமான் ரேஞ்சுக்குத்தான் இருக்கிறது. அதாவது, மக்களுக்கு அறிவில்லையாம்! அதனால்தான் இந்த முடிவாம்! ஒரே டெம்ப்லேட்.

இது விஜய்யின் வெற்றியா?


இந்தத் தேர்தல் பல உண்மைகளை உணர்த்திவிட்டது. இதுவரை 'தற்குறி' என்றால் அது விஜய் ரசிகர்கள் மட்டும்தான் என்ற பிம்பம் இருந்தது. நானும் பல காணொளிகளை கவனித்தேன்; இளம் விஜய் ரசிகர்கள், பெண்கள், படித்தவர்கள் எனப் பலரும் உளறினார்கள். அவர்களுக்கு அரசியலே தெரியவில்லை; ஏதோ ஒரு மாய உலகத்தில் அவர்கள் இருக்கிறார்கள். அந்த இளைஞர்களின் பேட்டியை கவனிக்கும் எவரும், விஜய் ரசிகர்கள் தற்குறிகள் தான் என்ற முடிவுக்கு வருவார்கள். அந்த அளவுக்கு அந்தப் பேட்டிகள் அபத்தமாக இருந்தன.

இருந்தாலும், விஜய் ஜெயிக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். காரணம், விஜய் ரசிகர்கள் வேண்டுமானால் தற்குறிகளாக இருக்கலாம், ஆனால் விஜய் அப்படி அல்ல. அவருக்கு ஓரளவாவது அரசியல் தெரிந்திருக்கிறது. தன்னுடைய பலம் என்ன என்பதை உணர்ந்துதான் அவர் கூட்டணிக்கு முயற்சி செய்தார். "வென்றால் கூட்டணி ஆட்சிதான்" என்பதையும் முதலிலேயே சொல்லிவிட்டார். ஆரம்பகாலத்தில் சீமான், எடப்பாடி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடந்ததாகத் தகவல்கள் வந்தன. ஆனால் அவர்கள் இருவரும் தங்களை 'சூப்பர்மேன்' என நினைத்துக்கொண்டு பேசினார்கள்.

Tuesday, May 5, 2026

தேர்தல் பாடம் 1, 2026

இந்தத் தேர்தல் எவ்வளவோ பாடங்களைச் சொல்லியிருக்கிறது. அதில் ஒன்று, இனி அரசியலில் ஜெயிக்க நினைக்கும் தலைவர்கள் பத்திரிகையாளர்களை ஒரு பொருட்டாகவே மதிக்கக் கூடாது என்பதுதான்.

அரசியலில் வாயால் மட்டுமே அரசியல் செய்து வீணாய்ப் போன அரசியல்வாதிகளைப் போல், இவர்களும் வாயை மட்டுமே வளர்த்திருக்கிறார்கள். அந்த அரசியல் வியாதிகளைப் போலவே, இந்தத் தற்பெருமை பேசும் பத்திரிகையாளர்களின் கணிப்பும் முட்டாள்தனமாக இருந்திருக்கிறது.

தற்போது தோற்ற அரசியல்வாதிகளுக்குக் குறைந்தது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எதிர்காலம் போய்விட்டது. ஆனால், இந்தப் பத்திரிகையாளர்கள் அதே வாயை வைத்துக்கொண்டு மீண்டும் பல உருட்டல்களை உருட்டி, விஜய்க்கு ஜால்ரா அடித்துப் பிழைத்துக்கொள்வார்கள். இதுதான் அவர்களின் பலம்.

த.வெ.க ஜெயிக்கும் எனக் கணிப்பது வேறு; ஆனால், ஒரு முதல்வரே தோற்கும் அளவுக்கு மக்களிடையே வெறுப்பு இருக்கிறது என்பதைக் கணிக்க முடியாத பத்திரிகையாளர்களை என்ன சொல்வது?

இதற்கு இரண்டே பதில்கள்தான்: ஒன்று, அவர்கள் விலை போய்விட்டார்கள். இரண்டு, அவர்களும் நம்மைப் போலவே சராசரி மனிதர்கள்தான்; நன்றாகப் பேசத் தெரிந்தவன் திருமணப் புரோக்கராக இருப்பதைப் போல, இவர்கள் தங்களைப் பத்திரிகையாளர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள். இந்த உண்மை நமக்குத் தெரிகிறது, அவர்களுக்குத் தெரியவில்லை.

இனி அவர்களின் பேட்டிகளைக் கேளுங்கள்; சுவாரசியமாக இருக்கும். எங்களுடைய கணக்கு எங்கே தப்பாகிவிட்டது என்று (சப்பைக் கட்டு) சொல்லுவார்கள். அதுவும் நம்புகிற மாதிரியே இருக்கும். ஆனாலும், உலகம் இவர்களைப் பொருட்படுத்தாமல் முன்னேறிக்கொண்டிருக்கும்.

மொத்தத்தில் இவர்கள் இருவரும் திருந்தப்போவதில்லை.


Monday, May 4, 2026

யோவ்.. நாங்களெல்லம் எம் ஜி ஆர், ஜெயலிதாவையே பார்த்தவங்க...


எனக்கு என்ன எழுதறதுன்னே தெரியல...

என்னுடைய 2000 வருட அனுபவத்துல (ஜேம்ஸ் வசந்தன்) சொல்றேன்.

ஜேம்ஸ் வசந்தன் தப்பான முடிவுக்கு வந்துராதீங்க. த வெ க ரசிகனுக்கு நீங்கள் சொன்ன ஆலோசனையை, அதாவது உங்களுடைய பதிவை நீங்களே அடிக்கடி படிங்க. தப்பான முடிவுக்கு போயிடாதீங்க.