இந்தத் தேர்தல் எவ்வளவோ பாடங்களைச் சொல்லியிருக்கிறது. அதில் ஒன்று, இனி அரசியலில் ஜெயிக்க நினைக்கும் தலைவர்கள் பத்திரிகையாளர்களை ஒரு பொருட்டாகவே மதிக்கக் கூடாது என்பதுதான்.
அரசியலில் வாயால் மட்டுமே அரசியல் செய்து வீணாய்ப் போன அரசியல்வாதிகளைப் போல், இவர்களும் வாயை மட்டுமே வளர்த்திருக்கிறார்கள். அந்த அரசியல் வியாதிகளைப் போலவே, இந்தத் தற்பெருமை பேசும் பத்திரிகையாளர்களின் கணிப்பும் முட்டாள்தனமாக இருந்திருக்கிறது.
தற்போது தோற்ற அரசியல்வாதிகளுக்குக் குறைந்தது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எதிர்காலம் போய்விட்டது. ஆனால், இந்தப் பத்திரிகையாளர்கள் அதே வாயை வைத்துக்கொண்டு மீண்டும் பல உருட்டல்களை உருட்டி, விஜய்க்கு ஜால்ரா அடித்துப் பிழைத்துக்கொள்வார்கள். இதுதான் அவர்களின் பலம்.
த.வெ.க ஜெயிக்கும் எனக் கணிப்பது வேறு; ஆனால், ஒரு முதல்வரே தோற்கும் அளவுக்கு மக்களிடையே வெறுப்பு இருக்கிறது என்பதைக் கணிக்க முடியாத பத்திரிகையாளர்களை என்ன சொல்வது?
இதற்கு இரண்டே பதில்கள்தான்: ஒன்று, அவர்கள் விலை போய்விட்டார்கள். இரண்டு, அவர்களும் நம்மைப் போலவே சராசரி மனிதர்கள்தான்; நன்றாகப் பேசத் தெரிந்தவன் திருமணப் புரோக்கராக இருப்பதைப் போல, இவர்கள் தங்களைப் பத்திரிகையாளர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள். இந்த உண்மை நமக்குத் தெரிகிறது, அவர்களுக்குத் தெரியவில்லை.
இனி அவர்களின் பேட்டிகளைக் கேளுங்கள்; சுவாரசியமாக இருக்கும். எங்களுடைய கணக்கு எங்கே தப்பாகிவிட்டது என்று (சப்பைக் கட்டு) சொல்லுவார்கள். அதுவும் நம்புகிற மாதிரியே இருக்கும். ஆனாலும், உலகம் இவர்களைப் பொருட்படுத்தாமல் முன்னேறிக்கொண்டிருக்கும்.
மொத்தத்தில் இவர்கள் இருவரும் திருந்தப்போவதில்லை.
0 comments:
Post a Comment