இந்தத் தேர்தல் பல உண்மைகளை உணர்த்திவிட்டது. இதுவரை 'தற்குறி' என்றால் அது விஜய் ரசிகர்கள் மட்டும்தான் என்ற பிம்பம் இருந்தது. நானும் பல காணொளிகளை கவனித்தேன்; இளம் விஜய் ரசிகர்கள், பெண்கள், படித்தவர்கள் எனப் பலரும் உளறினார்கள். அவர்களுக்கு அரசியலே தெரியவில்லை; ஏதோ ஒரு மாய உலகத்தில் அவர்கள் இருக்கிறார்கள். அந்த இளைஞர்களின் பேட்டியை கவனிக்கும் எவரும், விஜய் ரசிகர்கள் தற்குறிகள் தான் என்ற முடிவுக்கு வருவார்கள். அந்த அளவுக்கு அந்தப் பேட்டிகள் அபத்தமாக இருந்தன.
இருந்தாலும், விஜய் ஜெயிக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். காரணம், விஜய் ரசிகர்கள் வேண்டுமானால் தற்குறிகளாக இருக்கலாம், ஆனால் விஜய் அப்படி அல்ல. அவருக்கு ஓரளவாவது அரசியல் தெரிந்திருக்கிறது. தன்னுடைய பலம் என்ன என்பதை உணர்ந்துதான் அவர் கூட்டணிக்கு முயற்சி செய்தார். "வென்றால் கூட்டணி ஆட்சிதான்" என்பதையும் முதலிலேயே சொல்லிவிட்டார். ஆரம்பகாலத்தில் சீமான், எடப்பாடி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடந்ததாகத் தகவல்கள் வந்தன. ஆனால் அவர்கள் இருவரும் தங்களை 'சூப்பர்மேன்' என நினைத்துக்கொண்டு பேசினார்கள்.
அதன்பிறகு, தேர்தல் நெருங்கும் வேளையில் சிபிஐ விசாரணை என விஜய்யை டெல்லி வரவழைத்து, எடப்பாடியிடம் மீண்டும் பிஜேபியினர் பேசியிருக்கிறார்கள். ஆனால், எடப்பாடி போடும் பிச்சையை ஏற்க விஜய் தயாராக இல்லை. விஜய் எதார்த்தமான கூட்டணி அரசியலை விரும்பினார், அதற்காக முயற்சித்தார. அது கூடாத நிலையில், "வருவது வரட்டும்" எனத் தனித்துக் களம் இறங்கிவிட்டார். அந்த வகையில் அவர் ஓரளவுக்கு அரசியல்வாதிதான்.
அப்படியும் விஜய்யின் சில அரசியல் செயல்பாடுகளும், அவருடைய தேர்தல் வாக்குறுதிகளும் தலை சொறிய வைத்தன. இருந்தாலும் திராவிடக் கட்சிகளை, குறிப்பாக திமுகவை வீழ்த்தக் கிடைக்கும் ஆயுதத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில், விஜய் ஜெயிக்க வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால், இது அதையும் தாண்டிய ஒரு வெற்றி.
இருந்தாலும், இது விஜய்யின் தனிப்பட்ட வெற்றி என்று சொல்ல முடியாது. பல 'கேயாஸ் தியரி' 'பட்டர்பிளை தியரி' எல்லாம் ஒரே நேரத்தில் வேலை செய்ய, கடைசியில் இது 'காக்கா உட்காரப் பனம் பழம் விழுந்த' கதையாக மாறிவிட்டது. அவருடைய உண்மையான வாக்கு வங்கி 10-15 சதவீதம்தான். ஆனால் கூடுதலாக வந்த 20 சதவீத வாக்குகள் இந்தச் சூழலினால் கிடைத்தவை.
சினிமாவில் இந்தக் காட்சியைப் பார்த்திருப்பீர்கள்: மிகக் கொடூரமான வில்லனை கதாநாயகனோ அல்லது ஒரு பெண்ணோ கொன்றுவிடுவார்கள். அப்போது அங்கு வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர், "நீ ரொம்ப நல்லவன், உன் எதிர்காலம் பாழாகிவிடும். அதனால் இந்த வில்லனை நானே கொன்றதாக இருக்கட்டும்" என்று சொல்லி கதாநாயகனைக் காப்பாற்றுவார். மறுநாள் செய்தித்தாள்களில், "போலீசாரால் பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை" என்று செய்தி வரும். இப்போது அந்த இன்ஸ்பெக்டருக்கு எந்தச் சிரமமும் இன்றி 'ஸ்டார்' கிடைக்கும்.
அப்படித்தான் தற்போதைய தமிழகத் தேர்தலும் நடந்திருக்கிறது. பலர் பல காரணங்களுக்காக விஜய்க்கு ஓட்டுப் போட்டுவிட்டார்கள்; கடைசியில் அந்தப் பெருமை விஜய்க்குப் போய் சேர்ந்துவிட்டது.
ஆனாலும், இன்னமும் இணையத்தில் இந்த 'உபி'களின் தொல்லை தாங்க முடியவில்லை. அவர்களின் வாதங்களைக் கேட்கும்போதுதான் உண்மையான தற்குறிகள் திமுகவினர்தான் என்பது புரிகிறது. விஜய் ரசிகர்கள் இளைஞர்கள், எனவே அவர்களுக்கு அரசியல் தெரியவில்லை என விட்டுவிடலாம். ஆனால் திமுகவினர் வயதானவர்கள்; அவர்களின் பேச்சோ அதைவிட மோசமாக இருக்கிறது.
பக்கத்து வீட்டுப் பையனைத் தற்குறி என்று சொன்னால் அதில் ஒரு லாஜிக் இருக்கும். தமிழ்நாட்டில் இருக்கும் 35 சதவீத மக்கள் விஜய்க்கு ஓட்டுப் போட்டிருக்கிறார்கள்; அவர்களைத் தற்குறி என்று சொன்னால், அவர்கள் இந்தத் திராவிட ஆட்சியில் வளர்ந்தவர்கள் தானே? உன் பிள்ளை தறுதலை என்றால், அப்படிப்பட்ட பிள்ளையை வளர்த்த நீ யார்?
அதாவது, திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டை ஆண்ட லட்சணம் அப்படி. இது அவர்கள் முகத்திலேயே அவர்கள் காறி உமிழ்வதற்குச் சமம். இந்த அடிப்படை உண்மை தெரியாத திமுகவினரை என்ன வார்த்தையில் விளாசுவது? என்ன சொன்னாலும் அவர்களுக்கு உறைக்காது.
தமிழ்நாட்டில் திமுகவினரும், நாம் தமிழர் கட்சியினரும் வித்தியாசமான பிறவிகள். மற்ற கட்சியினர் தங்கள் தலைவர்களைத் தலைவர்களாக நினைக்கிறார்கள்; இவர்கள் மட்டும்தான் தங்களையே மாபெரும் தலைவர்களாக நினைத்துக் கொள்கிறார்கள். இது மன வியாதியின் உச்சகட்டம். தேர்தல் தோல்விக்குப் பின் சீமான் வெளியிட்ட வீடியோ இதற்கு ஒரு நல்ல உதாரணம்.
"நாங்க எதிர்க்கட்சியா இருக்கும்போதுதான் பலமா இருப்போம்" என்று ஒரு உடன்பிறப்பு சொல்கிறான். இதிலிருந்து என்ன தெரிகிறது? மக்கள் திமுகவிற்கு நல்லது செய்ய வேண்டுமென்றால், அவர்களை எப்போதும் எதிர்க்கட்சியாகவே வைத்திருக்க வேண்டும்! கொடுமை!
கூடிய சீக்கிரம் சீமான் 'காதல் பரத்' போல ஆவதற்கு வாய்ப்புத் தெரிகிறது. ஆனால் திமுக நிலைத்து நிற்கும். தமிழ்நாட்டிற்கு இன்னும் பல நடிகர்கள் வருவார்கள், ஜெயிப்பார்கள், போவார்கள். அப்போதும் திமுக ஒரு அரசியல் கட்சியாக இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும். அவர்கள் அதற்காகவே பிறந்தவர்கள், அதையும் பெருமையாக நினைப்பவர்கள். உண்மையில் அவர்கள் அதிசயப் பிறவிகள்.
0 comments:
Post a Comment