எரிபொருள் பற்றாக்குறை மற்றும் அதன் விலை உயர்வு நாட்டைப் பெருமளவில் பாதிப்பதாகக் கூறி, பிரதமர் சிக்கனத்தை வலியுறுத்தியிருக்கிறார். இது நல்ல விஷயம்தான். ஆனால், இந்தியாவில் உள்ள மிகப்பெரிய தலைவலி என்னவென்றால், தொலைத்த பொருளைத் தொலைத்த இடத்தில் தேடாமல், "அங்கே இருட்டாக இருக்கிறது" என்று கூறி வெளிச்சம் இருக்கும் இடத்தில் தேடுவதுதான்.
பிரதமர் பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்தும்படியும், 'கார்ப்பூலிங்' (Carpooling) போன்ற கூட்டுப் பயணங்களை மேற்கொள்ளும்படியும் சொல்லியிருக்கிறார். அறிவுரை ஓகே, நடைமுறை?
பொதுவாகச் சாலையில் செல்லும் போக்குவரத்தைக் கவனித்தால் ஒரு விஷயம் அப்பட்டமாகத் தெரியும். இருசக்கர வாகனங்களில் செல்பவர்களில் கிட்டத்தட்ட 50-60 சதவீதத்தினர் தனி நபர்களாகவே பயணிக்கிறார்கள். அவர்களின் பின் இருக்கை காலியாகவே இருக்கிறது. இதை ஏன் நகர்ப்புறப் பயணங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது?


