!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Sunday, May 15, 2022

உப்புமா கொள்ளையர்கள்

சென்னையில் சமீபத்தில் நடந்த இரட்டை கொலையில் போலீசார் மிக விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்துவிட்டார்களாம்.  சட்டசபையில் முதல்வரே இதற்கு பாராட்டு தெரிவித்துவிட்டார். இது எப்பேர்ப்பட்ட சாதனை? ஆனால் செய்திகளை படித்தால் எனக்கு அப்படி தெரியவில்லை.

நிஜத்தில் இது ஒரு உப்புமா கொள்ளையர்களின் கதை. அதாவது முன் அனுபவம் இல்லாத கத்துக்குட்டிகளின் வேலை. போலீசார் தங்கள் திறமைகளை `காட்டி`க் கொள்ள  உதவும் ஒரு கிரைம்.

Monday, May 9, 2022

புல்லட் டிரைன் - 3

அந்த காலத்தில் ஒரு அந்தணர் இருந்தார். அவருக்கு சிவனுக்கு கோவில் கட்டவேண்டும் என ஆசை. ஆனால் கையில் பணமில்லை. இதுபோன்ற நபர்கள் கற்பனையிலேயே தங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்வார்கள். எனவே அவர் மனசுக்குள் கோவில் கட்டினாராம்.

அதேநேரம் ஒரு மன்னர் ஆடம்பரமாக சிவனுக்கு கோவில் கட்ட, இரண்டுக்கும் கும்பாபிஷேகம் ஒரே நாளில் வந்தது. சிவன், பணத்தைவிட பக்திதான் பெரிது என மன்னனை புறக்கணித்து இந்த மனக்கோவிலுக்கு வந்ததாக ஒரு கதை.

இனி இந்த கதை நமக்கு தேவையில்லை. நானும் அந்த அந்தணரை போல கற்பனையில் நிழல் ரயில்வே அமைச்சராக மாறி எந்த ஆணியை பிடுங்காலம், எங்கே புதிதாக ஆணி அடிக்கலாம் என யோசித்தேன்.

ரயில்வேவை எப்படி தனியாருக்கு விடுவது என சிந்தித்தபோது நிறைய தலைவலிகள்தான் வந்தது. பஸ் ஓட்டுவதைபோல் இது அவ்வளவு எளிதாக  இல்லை. அங்கே பர்மிஷன் கொடுத்துவிட்டு ஒதுங்கிவிடலாம். இங்கே ஏகப்பட்ட சிக்கல்.

இந்த பதிவை எழுத ஆரம்பித்த பிறகுதான் இது குறித்து நிறைய செய்திகளை படித்தேன். பிள்ளையார் சுழி போட்டுவிட்டார்கள் என தெரிகிறது. அதாவது புள்ளி வைத்துவிட்டார்கள், ஆனால் எப்படி கோலம் போடுவது என்பதுதான் ரயில்வே அமைச்சருக்கு தெரியவில்லை. இவர்கள் போடும் கண்டிஷன் முறையால் தனியார் யாரும் திரும்பிக்கூட பார்க்கவில்லையாம்.   

ஒரு ரயிலில் குறைந்தது 16 பெட்டி இருக்கவேண்டும்; ரயில்வேயிடம்தான் பெட்டியை லீசுக்கு எடுக்க வேண்டும்; எடுத்தால் 5 வருடம் மொத்தமாகத்தான் எடுக்க வேண்டும் என நிபந்தனை நீள்கிறது.

சரவணபவன் ஓட்டல்களை போல் 2 இட்லி 22 சட்னி என அவசியமில்லாத சட்னி வைத்து ஐம்பது ரூபாய்க்கு பில் போடுவதைபோல் இருக்கிறது இந்த நிபந்தனைகள். அதிக பெட்டிகள் இருந்தால் லாபம் அதிகம் என்றாலும், கண்டிஷன் என்றால் எவனும் வரமாட்டான்.

இங்கே ரயில் பெட்டியை சில வருடங்கள் ரயில்வே கொடுக்கலாம். அதன்பிறகு பெட்டி டாடா நானோ மாதிரி வேணுமா அல்லது ரோல்ஸ் ராய் மாதிரியா என கேட்டு செஞ்சு கொடுக்கலாம், அல்லது நீங்களே செய்துக் கொள்ளுங்கள் என விட்டுவிடலாம்.

வருவாய் பகிர்வு மற்றும் இதற்கு அதற்கு என பல கட்டணங்கள் என செய்திகள் சொல்கிறது. இதில் வருவாய் பகிர்வு என்பது மிகவும் அபத்தமான முறை. டிக்கெட் கட்டணத்தில் 30 -50 சதவிகிதம் வருவாய் பகிர்வு என்றால், தனியார் துறையினர் இங்கே அரசின் தலையில் மிக ஈசியாய் மிளகாய் அரைத்துவிடுவார்கள்.

அதாவது டிக்கட் விலை 500 ரூபாய் என்றால் அரசுக்கு நிறைய கொடுக்க வேண்டும் என்பதால், டிக்கட் விலை 100, இதர சர்விஸ் சார்ஜ் 400 என மாற்றிவிடுவார்கள். அரசுக்கு இந்த 100 ல் தான் வருவாய் பகிர்வு கிடைக்கும். எனவே ஒரு பெட்டிக்கு மாசம் இவ்வளவு துட்டு என்பதுதான் சரியாக இருக்கும். 

அதேசமயம் என்னதான் அம்பானியாக / அதானியாக இருந்தாலும், இது புது துறை என்பதால் இங்கே தொழிலை புரிந்து கொண்டு விரிவுபடுத்த காலம் தேவை. அதிலும் இந்த தனியார் ரயில்வே பல வகைகளில் அரசின் உதவியை சார்ந்திருக்கும்.

நாளை புதிய அரசு வந்து, அவர்களுக்கு பிடிக்காத நபர்களுக்கு, `நைட் 12 மணிக்கு பிரைம் டைம்ல உங்களுக்கு நேரம் ஒதுக்கியிருக்கிறேன்` என குண்டை தூக்கிப்போடலாம். உங்களுக்கு தேவையான முக்கியமான சேவைகளை மிகவும் தாமதமாக வழங்கலாம். எனவே 5 வருட ஒப்பந்தம் என்றால் எந்த நாயும் உள்ளே வராது.

ஆரம்பகட்டத்தில் 6 மாதம் - 1 வருடம் சோதனை ஓட்டம் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். சரிப்பட்டால் ஓட்டுவார்கள் இல்லையென்றால் கிளம்புவார்கள். இங்கே இன்னொரு சிக்கல் என்னவென்றால் டிராவல் பஸ் போல் ஏகப்பட்டபேரை களத்தில் இறக்குவதும் பலனளிக்காது.

இங்கே எந்த தனியார் களத்தில் இருந்தாலும் அவர்கள் ஒரு பிராண்ட்  உருவாக்க நினைப்பார்கள். இதற்கு ஒரு உதாரணம் சொல்லலாம். பொதுவாக ஊருக்குள் இருக்கும் ஓட்டல்களில் உணவு ஓரளவு தரமாக இருக்கும். காரணம் அவர்கள் தரத்தை உறுதிப்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைப்பார்கள். ஆனால் பஸ் நிலையங்களில் இருக்கும் கடைகளை கவனியுங்கள். அங்கே தரமும் இருக்காது விலையும் தாறுமாறாக இருக்கும். இங்கே பஸ் நிலையங்களில் சாப்பிடுபவர்கள் வெளியூர்காரர்கள். அவர்களை மதிக்க வேண்டிய அவசியம் இவர்களுக்கு இருக்காது.

அப்படி ஒரு நிலைமை தேவை எனும்போது, இங்கே 5-10 தனியார் ரயில்வே மட்டுமே அனுமதி என இருக்கவேண்டும். அப்போதுதான் அவர்கள் தரமான சேவையின் மூலம் பிராண்ட் உருவாக்கி மக்களை கவரமுடியும்.

தனியார் துறை குதிரையைப்போலத்தான், வேகம் இருக்கும், அதற்காக கடிவாளம் இல்லாத  குதிரை மீது சவாரி செய்யமுடியுமா? எனவே இங்கேயும் ஒரு கடிவாளம் தேவை. அதற்கு என்ன செய்யலாம்? பிக் பாஸ் பார்முலாவை இங்கே அறிமுகப்படுத்தலாம்.

ஒரு வருடம் கழித்து மக்களிடையே (ஓட்டெடுப்பு) கருத்து கேட்டு விலையிலும் சேவையிலும் யார்  மோசமாக இருக்கிறார்களோ அவர்களை எலிமினேட் செய்யலாம். அல்லது அவர்களுக்கு மேலும் ரயில்தடம் வழங்கப்படாது எனவும், அவர்கள் குறைகளை சரி செய்யாவிட்டால் அடுத்த முறை எலிமினேஷன்தான் என கழுத்தில் கத்தியை வைக்கலாம்.

இப்படி வருடம் ஒருவர் எலிமினேட் என்றால் 5 ஆண்டுகளில் 5 பேர் காலி. இனி மீதி இருப்பவர்கள் தரமானவராக இருப்பார்கள் என நம்பலாம். அதோடு நிற்காமல் வருடா வருடம் ஒரு வைல்ட்கார்டாக யாரையாவது போட்டு, இந்த வருடமும் எலிமினேஷன் உண்டு என குண்டை தூக்கி போடலாம். இது அவர்களுக்கு ஒரு பயத்தை உண்டாக்கும்.

இங்கே நமக்கு இன்னொரு அனுபவமும் இருக்கிறது. தொழிலில் குறைந்த லாபத்தில் வியாபாரம் செய்து வாடிக்கையாளரை தக்க வைப்பது நல்ல வியாபாரமுறை. ஆனால் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு நிறைய சலுகைகளை கொடுத்து அதனால் ஏற்பட்ட நஷ்டத்தை தாங்கிக்கொண்டு போட்டியாளர்களை ஒழித்தது.

அதுபோல் நடக்காமல் இருக்க, ஒரு நிறுவனம் நஷ்டத்தை காட்டினால் அவர்களுக்கு மேலும் வழித்தடம் கிடையாது, அதுமட்டுமின்றி இந்த நிலைமை தொடர்ந்தால் கொடுக்கப்பட்ட வழிகளும் லாபகரமாக ஓட்டும் நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் என கண்டிஷன் வைக்கலாம்.  இது மொள்ளமாரிகளுக்கு ஆப்பு வைத்துவிடும். அப்படியும் அவர்கள் ஏதாவது செய்வார்கள். அதற்கும் ஒரு வழி நாம்  கண்டுபிடிப்போம்.     

தற்போதைய சூழ்நிலையில் ரயில்வே சினிமா தியேட்டர் போல் இருக்கிறது. இங்கே 300 ரூபாயில் ஒரு குடும்பம், ஒரு படம்தான் பார்க்கலாம். தனியார் உள்ளே வந்தால் அது மக்களுக்கு டிவி போல் ஆகிவிடும். 300 ரூபாயில் 30 படம் பார்க்கலாம்.

நான் இங்கே சொல்லவருவது 30 படம் பார்ப்பதை அல்ல. ஒரு டிரைனில் 1000 பேர் என்பது அவர்களுக்கு மிகப்பெரிய சந்தை. இதை முறையான மார்க்கெட்டிங் உத்தியாக பயன்படுத்தி விளம்பரங்கள் மற்றும் பிற சேவைகள் மூலம் சம்பாதிப்பார்கள். அவர்கள் அப்படி சம்பாதிக்க வேண்டுமென்றால் மக்கள் இவர்கள் ரயிலில் வரவேண்டும். அதனால் மக்களுக்கு கட்டணத்தில் கணிசமாக குறையும் வாய்ப்பிருக்கிறது.

மேலே சொன்னது சில உதாரணங்கள். இன்னும் நிறைய நடக்கலாம். சாத்தியங்கள் தெரிகிறது.

மேலும் வரும்..   

Monday, May 2, 2022

புல்லட் டிரைன் - 2

இந்தியாவில் போக்குவரத்தை நெரிசலை குறைக்க மற்ற வழிகளை பார்ப்போம்.

இந்தியாவில் வான்வழி போக்குவரத்து என்பது மிகவும் குறைவாக இருக்கிறது. தற்போது அதிகரித்திருப்பது போல் தெரிந்தாலும், இந்த பதிவுக்காக சில தகவல்களை தேடியபோது புள்ளிவிவரம் அதிர்ச்சியாக இருந்தது. 

இந்தியாவில் தினம் 2300 விமானம் கிளம்புகிறதாம். இதுவே அமெரிக்காவில் 42000. எவ்வளவு வித்தியாசம்?

எனவே உள்நாட்டு வான்வழி போக்குவரத்தை அதிகரிப்பதற்காக 10 ஆண்டுகளுக்கு அரசுக்கு எந்த வரியும் தேவையில்லை என திறந்துவிட்டால் இந்த துறை கணிசமாக வளரும்.

இங்கே  ஒரு விஷயத்தை நாம் கவனிக்கவேண்டும். அரசுக்கு தற்போது அதிக லாபம் இருந்து அதை பணக்காரர்களுக்காக விட்டுக்கொடுத்தால் அது தவறு. இங்கே லாபமே இல்லை, எனவே இதுபோன்ற இடங்களில் ஒரு குறிப்பிட்ட துறை வளர்வதற்காக சலுகைகள் தருவது தப்பில்லை.

இந்த உள்நாட்டு டவுன் பஸ்களை ஏற்கனவே இருக்கும் விமான நிலையங்களில் விட்டால் தாலி அறுந்துரும். இதற்கும் டவுன் பஸ்டாண்ட் என தனியாரையே BOT முறையில் கட்டி, இயக்க அனுமதி கொடுத்துவிடலாம். ஏற்கனவே சில சீர்திருத்தங்கள் ஆமை வேகத்தில் நடக்கின்றன.

ஆனால் மக்கள், அரசியல்வியாதிகள், சமூகப்போராளிகள் விடமாட்டார்கள். பணக்காரனுக்கு சலுகையா என கோஷம் எழுப்புவார்கள். ஆனால் நிஜத்தில் இது போன்ற சலுகைகள் ஏதாவது ஒரு வகையில் நாட்டுக்கு லாபத்தை கொடுக்கத்தான் போகிறது.

வீட்டு தோட்டத்தில் இருக்கும் மரத்துக்கு தண்ணீர் ஊற்றினால் அது பழம் தரும். இது கண்ணுக்கு தெரியும். அதற்காக காட்டில் மரத்துக்கு தண்ணீர் ஊற்றினால் அது விரயம் என்று சொல்லமுடியுமா? அதுவும் மறைமுகமாக இயற்கையை பாதுகாத்து நமக்கு நன்மையை ஏதோ ஒரு வகையில் கொடுத்துக் கொண்டுதான் இருக்கும். அதுபோலத்தான் இதுவும்.      

மொத்தத்தில் இங்கே முக்கியமான இன்னொரு நீதி என்னவென்றால், வாழைமரமாக இருக்கட்டும், தென்னைமரமாக இருக்கட்டும், முதலில் வளரவிட வேண்டும், அதன்பின்தான் அறுவடை செய்யவேண்டும்.

ரயில்வே

அடுத்து ரயில்வே துறையை பார்ப்போம். போக்குவரத்தில் ஒரு புரட்சியை கொண்டுவந்தது இந்த ரயில்வே துறைதான். அதன்பின் உலகம் மாற மாற ரயில்வே துறையும் கொஞ்சம் வளர்ந்தது. மீட்டர்கேஜ் -ஸ்டாண்டர்ட் கேஜ் -பிராட் கேஜ் என உருமாறிய இந்த துறை சில அதற்கு மேல் உருமாறவில்லை.

முதல் காரணம், இதை உருவாக்கிய மேலை நாடுகளில் மக்கள் தொகை வளர்ச்சி கட்டுக்குள் வர, அவர்களுக்கு போக்குவரத்துக்கு பெரும் தலைவலியாக மாறவில்லை.

அதேசமயம் விமானங்களின் எண்ணிக்கையும் பெருகி,  இரு சக்கர மற்றும் கனரக வாகனங்களும் கணிசமாக பெருக, நீண்ட பிரயாணத்துக்கு விமானம், மற்றவற்றுக்கு கார்கள் என மக்களின் விருப்பம் மாறிவிட ரயில்வே வளரவில்லை. 

இருந்தாலும் உலகம் முழுக்க ரயில்வே தற்போதும் மிகப்பெரிய துறைதான். ஆனால் இங்கே நான் சொல்லவருவது, அதன் உருவம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் பெரிய அளவில் மாற்றம் வரவில்லை  என்பதுதான்.

இது மேலை நாடுகளுக்கு சரி. ஆனால் நமது தேவை என்பது வேறு அல்லவா. பக்கத்துக்கு வீட்டுக்காரன் ரெண்டு இட்லி சாப்பிட்டுவிட்டு டயட்டில் இருந்தால் அது அந்த ஆளுக்கு பொருந்தும். பலவீனமாக இருப்பவன் கிடைத்ததை எல்லாம் சாப்பிட வேண்டியதுதான்.

தற்போது பல்வேறு துறைகளின் வளர்ச்சிகளை கவனியுங்கள். மொபைல் துறை 1g என ஆரம்பித்து 5g என போய்க்கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் மாடிவீடு என்றுதான் இருந்தது. அது தற்போது வானத்தை தொடும் அளவுக்கு பல மாடிகளாக மாறிவருகிறது.

எனவே இந்தியாவின் தேவையையும் வளர்ச்சியையும் கருத்தில்  கொண்டு ரயில்வேயில் பிராட்கேஜ் டிராக்கை மேலும் அகலப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து நாம் ஆராய்ச்சிகள் செய்திருக்க வேண்டும். அல்லது பக்கவாட்டில் 10 சதவிகிதம் மேல்வாக்கில் 10 சதவிகிதம் என ரயில் பெட்டிகள் வளர்வதற்கு வாய்ப்பிருக்கிறதா என அப்படியாவது முயற்சித்திருக்கலாம். அப்படி எந்த ஆராய்ச்சியும் நடந்ததுபோல் தெரியவில்லை.

சில தனியார் பஸ்களை கவனியுங்கள். கீழ் குடோனில் கார்கோ சர்விசும், அதன் மேல் இரண்டு அடுக்குகள் கட்டி அங்கே பிரயாணிகள் என மூன்றடுக்கு சேவை நடக்கிறது. இது அவர்கள் பணம் என்பதால் ரூம் போடாமலேயே அவர்களுக்கு மூளை வேலை செய்கிறது.

இங்கே அப்பட்டமான எதார்த்தம் என்னவென்றால், நாளை சூரியன் மேற்கில் உதிக்கும் என்று சொன்னால் கூட நான்  நம்புவேன், ஆனால் அரசு துறைகள் திறமையாக செயல்படும் என்று சொன்னால் நான் நம்பமாட்டேன். அதற்கான வாய்ப்பே இல்லை.

ஏதோ ஒரு மூலையில் ஒரு துறை சிறப்பாக இருக்கலாம். 50 பேர் படிக்கும் பள்ளியில் ஒரு சில மாணவர்கள் பாஸாகிவிட்டால் அது நல்ல பள்ளி என சொன்னால் எப்படி இருக்கும், அப்படித்தான் இந்தியாவில் பொதுத்துறையை தூக்கிபிடித்துக் கொண்டு நாட்டை நாசமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அதேசமயம் ரயில்வே போன்ற பிரமாண்டமான துறையை தனியாருக்கு தாரைவார்ப்பது சாத்தியமில்லாத, சிக்கலான ஓன்று. 

எனவே என்ன செய்யலாம்?

இங்கே நாம் ஒரு தனியார் துறையின் செயல்பாட்டை கவனிப்போம்.

மொபைல் துறை வந்த பிறகு அதற்கு பல இடங்களில் டவர் வைக்கவேண்டிய அவசியம் வந்தது. முதலில் அவர்கள் காலி இடத்தை வாங்கி/ வாடகைக்கு எடுத்து டவர் வைத்தார்கள்.

தனியார்துறை அல்லவா, போட்ட முதலீடு அவர்களுடையது, எனவே அவர்களுக்கு மூளை வேகமாக செயல்பட ஆரம்பித்தது. மொட்டை மாடியில் யாராவது அப்பளம் காயவைப்பதை பார்த்திருப்பார்கள். அட...மொட்டைமாடி பல வகைகளில் பயன்படும் போலிருக்கிறதே என யோசித்தவர்கள், அதற்கு வாடகை கொடுத்து டவர் வைத்துவிட்டார்கள். கீழே வைத்தால் அதற்கு செக்கூரிட்டி வேறு வைக்கவேண்டும். அந்த செலவும் மிச்சம். ஆக அவர்களுடைய செலவினங்கள் குறைந்தது.

அடுத்த சில வருடங்களில் மறுபடியும் மூளை கேள்வி கேட்டது. நம்ம டவர் கிழக்கு பக்கம் பார்க்கிறது, மற்ற திசைகள் சும்மாதானே இருக்கிறது என யோசித்தார்கள். கடைசியில் டவர் நிர்வாகம் என தனியாக துறை ஓன்று பிரிந்தது. அவர்கள்  ஒரே கல்லில், ஸாரி, ஒரே டவரில் நாலு கம்பெனி என வாடகைக்கு விட்டு மேலும் செலவை குறைத்தார்கள்.

அவர்களுக்கு மறுபடியும் மூளை வேலை செய்ய ஆரம்பித்தது. நம்ம டவர்ல சிக்னல் கெபாசிட்டி 1 லட்சம் என்றால் அதில் முழு பயன்பாடு இல்லையே, எனவே சில (மொபைல் துறையில் ஆரம்பத்தில் பல சிறு நிறுவனங்கள் இருந்தபோது) சின்ன கம்பெனிகளை, `உங்களுக்கு எதுக்கு டவர், வாங்க நம்ம வண்டியிலேயே ஏறிக்குங்க, கொடுக்கறதை கொடுங்கன்னு` அங்கேயும் காசு பார்த்தார்கள்.

மேலே சொன்ன சம்பவங்கள் தனியாரில் மட்டுமே சாத்தியம். இப்படியெல்லாம் அரசுத்துறையில் விரைவாக யோசித்து முடிவெடுத்து செலவை குறைப்பார்களா அல்லது கூடுதல் வ்ருமானத்துக்கான வழியைத்தான் தேடுவார்களா?

கிட்டத்தட்ட மொபைல் துறை செய்த அதே முறையை அரசும் ரயில்வே துறையில் கடைபிடிக்கலாம். கட்டமைப்பு என்னுடையது, வண்டி மற்றும் நிர்வாகம் தனியாருடையது என கொடுத்துவிட்டால் ரயில்வே நிர்வாகம் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு விரைவாக இருக்கும்.

இங்கே ரயில்வே அவ்வப்போது அதை செய்கிறோம் இதை செய்கிறோம் என ஆக்டிவாக காட்டிக்கொள்ளும். இதற்கும் என்னிடம் ஒரு அனுபவம் இருக்கிறது.

ஒரு வீட்டில் விருந்து. அவ்வளவாக அறிமுகமில்லாதவர் வீடுதான். இருந்தாலும் இதுபோன்ற அனுபவங்களுக்காக நானும் அதில் மாட்டிக் கொண்டேன்.

விருந்தினர்கள் சாப்பிடும்போது அந்த வீட்டின் கணவர்  ஜாலி மூடில் இருந்தார். அந்த மூடில், `ஏதோ உங்க புண்ணியத்துல நானும் இன்னிக்கி ருசியா சாப்பிடுறேன்` என்று ஜாலியாக மனைவியை கிணடலடித்துவிட்டார்.

விருந்தாளிகளுக்கு முன் அவமானமா... அவர் மனைவிக்கு வந்ததே கோபம், `அன்னைக்கி உங்களுக்கு நான் அதை (ஏதோ ஓன்று) செஞ்சி தரல?` என கோபமாக கேட்க...

`அது நடந்து 6 மாசம் இருக்குமே` என அவர் மறுபடியும் உண்மையை போட்டு உடைக்க, இப்போது அந்த பெண்மணிக்கு இதை எப்படி சமாளிப்பது என  தெரியவில்லை. விருந்து முடியும்வரை உம்மென்று இருந்தார். அங்கே மதுரை ஆட்சி போலிருக்கிறது.

சில வருடங்களுக்கு பின் ஒரு முறை அவரை பார்த்தேன். மனிதருக்கு பெரிதாக ஆபத்து ஒன்றும் இல்லை. நார்மலாகத்தான் இருந்தார். ஒருவேளை வடிவேலு வகையறாவாக இருக்கவேண்டும். `நாங்க வாங்காத அடியா` என  பழகிப்போயிருக்கும்.

இந்தியன் ரயில்வே இந்த லட்சணத்தில்தான் செயல்படுகிறது. அவ்வப்போது மினிஸ்டர்கள் மாறும்போது நாங்களும் அதை அறிமுகப்படுத்தினோம், இதை செய்தொம் என பில்டப் வகையறத்தானே தவிர, ரயில்வேயின் முதலீடுக்கும் அதன் பிரம்மாண்டத்தையும் ஒப்பிடும்போது புருஷனுக்கு 6 மாசத்துக்கு ஒரு முறை பிடித்ததை செஞ்சி கெடுத்த கதைதான் ரயில்வேயிலும் நடக்கிறது.

மேலும் வரும்.

Tuesday, April 26, 2022

இளையராஜாவும் , மோடியும்

சமீபத்திய சர்ச்சை இளையராஜாவின் மோடி குறித்த கருத்துதான். கிட்டத்தட்ட இது பல ஆண்டுகளுக்கு முன் பாடகி சின்மயி vs டிவிட்டர் என்ற எனது பழைய பதிவை நினைவுபடுத்துகிறது. 

இங்கேயும் அதே கதைதான்.  அங்கே சொன்னதைத்தான் நான் இங்கே மறுபடியும் சொல்லப்போகிறேன். ஒருவர் ஒரு குறிப்பிட்ட துறையில் பிரபலமாக இருக்கிறார் என்றால் அவர் அந்த துறையை மிக ஆழமாக கவனிக்கிறார் என்று அர்த்தம். அதன் காரணமாகவே அவர்களால் பிற துறைகளை கவனிக்கமுடிவதில்லை, அது சாத்தியமும் இல்லை.

எனவே இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நமக்கு அனுபவமில்லாத துறை குறித்து கருத்து சொல்லும்போது கவனமாக இருக்கவேண்டும். ஆனால் சனி நாக்கில், இங்கே பேனா  வடிவில் இளையராஜாவுக்கு வந்துவிட்ட பிறகு என்ன செய்யமுடியும்?

தமிழ்நாட்டில் பெரும்பாலோனோர் சித்தரிப்பதுபோல் மோடியை ஒரு மோசமான தலைவராக நான் நினைக்கவில்லை, அதற்கு சில காரணங்கள் இருக்கிறது. அதை நான் தெளிவாக புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் அதற்கு ஒரு நீண்ட பதிவு தேவை. அந்த பதிவும் நேரமிருந்தால் வரலாம்.

அதேசமயம் அவரை அம்பேத்காருடன் ஒப்பிட்டது அநியாயத்தின் உச்சக்கட்டம். இந்த பிரச்சினை தொடர்பாக ஜாதியை குறிப்பிட்டு காங்கிரஸ் தலைவர் கே வி எஸ் இளங்கோவன் பேசிய கருத்துக்களை பார்த்தீர்களா, இப்போதே ஜாதி ஆணவம் இந்த அளவுக்கு இருக்கிறது என்றால் அம்பேத்கார் வாழ்ந்த காலங்களில் அது எந்த அளவுக்கு இருந்திருக்கும். அதையெல்லாம் மீறி வாழ்ந்து காட்டியவர் அவர். தெளிவாக சொல்லவேண்டும் என்றால் சாதித்து காட்டியவர். எனவே இந்த ஒப்பீடு பொருத்தமில்லாதது, தேவையில்லாததும் கூட.

சரி அதற்காக இளையராஜாவை திட்டி தீர்ப்பதா? 

என் கணிப்பில் இங்கே கொஞ்சம் மொள்ளமாறித்தனம் கொஞ்சம் அறியாமை தெரிகிறது.

அறியாமை என்றால் அது இளையராஜாவிடம் தெரிகிறது. அதாவது அவருக்கே தெரியாமல் அவர் ஒரு எலிப்பொறியில் சிக்கிவிட்டார். அநேகமாக அதுதான் நடந்திருக்கும்.

அதற்கு முன் வழக்கமாக என் ஸ்டைலில் சில அனுபவங்களுக்கு போவோம். 

கடலூரில் ஓட்டலில் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ஒரு ஓட்டல் சாப்பாடு எனக்கு சுமாராக பிடித்துவிட்டது. எனவே அங்கே அதிகம் சாப்பிடுவேன்.

இன்னொரு நண்பருக்கு அந்த ஓட்டல் பிடிக்காது. சுவை ஒவ்வொருவருக்கும் வேறு மாதிரி இருக்கும். அது ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது வேறு ஏதோ  ஓன்று அவரை அந்த ஓட்டலை வெறுக்கவைத்தது. ஆனால் நான் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தேன். 

இப்போது நடுவில் மூன்றாவது (அம்பயர்) நபர் ஒருவர் வந்தார். அவரும் ஒரு நாள் அந்த ஓட்டலில் சாப்பிட்டுவிட்டார். இப்போது அவருடைய கருத்துதான் தீர்ப்பை நிர்ணயிக்கபோகிறது. எனவே அவரிடம் நம் நண்பர் கேள்வி கேட்டார்.

இங்கே நீங்கள் நன்கு கவனிக்கவேண்டும். மனிதர்கள் பல இடங்களில் அவர்கள் கேள்வி கேட்கும் முறையில் எதிரியை குழப்புவார்கள் அல்லது அவர்களுடைய கருத்தை திணிப்பார்கள். அதுதான் இங்கேயும் நடந்தது.

இங்கே கேள்விகள் எப்படி இருக்கவேண்டும்? கடலூரில் எந்த ஓட்டல் சாப்பாடு நன்றாக இருக்கும் என கேட்கலாம். அல்லது அந்த ஓட்டலை குறிப்பிட்டு அங்கே  நீங்கள் சாப்பிட்டிருக்கிறீர்களா? சாப்பாடு எப்படி என கேட்கலாம். ஆனால் இவர் கேள்வி கேட்டவிதமே வேறு.

அந்த ஓட்டலை குறிப்பிட்டு, `அந்த ஓட்டலில் சாப்பாடு ரொம்ப மோசம்னு எல்லோரும் சொல்றாங்க, நீங்க என்ன நினைக்கறீங்க? என குண்டை தூக்கி போட்டுவிட்டார்.  எனக்கு இப்போது பதில் தெரிந்துவிட்டது.

வடிவேலு ஒரு படத்தில் சொல்வார், `எவன் பொண்டாட்டி பத்தினியோ அவன் கண்ணுக்குத்தான் கடவுள் தெரிவார்` என்று. இப்போது உங்களுக்கு தெரியவில்லை என்று சொன்னால் உங்கள் பெண்டாட்டி கதை நாறும். எனவே `தெரிகிறது` என சொல்லி தப்பிக்க வேண்டியதுதான்.

அதேதான் இங்கேயும் நடந்தது. என்னது, எல்லோரும் இந்த ஓட்டல் மோசம்னு சொல்றாங்களா, இப்ப நாம என்ன சொல்வது  என யோசித்த அந்த முன்றாவது நபர், `ஆமாங்க நான் கூட அன்னிக்கி சாப்பிடும்போது கவனிச்சேன்.ஏதோ லைட்டா டிஃபரென்ட் தெரிந்தது` என்று சொல்லி கேள்வி கேட்டவரை திருப்திப்படுத்தினார்.

இதுதான் இங்கே நடந்திருக்கிறது. எங்கே அதிகாரமய்யம் இருக்கிறதோ அவர்களுக்கு ஜால்ரா அடித்து அவர்களின் கவனத்தை பெறுவதற்கும் காரியங்களை சாதித்துக் கொள்வதற்கும் ஒரு கூட்டம் எப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கும். இவர்கள் ஜால்ரா அடிப்பது போதாது என்று துணைக்கு நாலுபேரை கூப்பிடுவார்கள். அப்படிப்பட்ட அடிமட்ட பிஜேபி மொள்ளமாரிகளால் நடந்த கூத்துதான் இது.

இப்படி அவர்கள் இளையராஜாவை கூப்பிட்டிருக்க வேண்டும். அவர் மறுத்திருக்கலாம். ஆனால் பிரதமர் குறித்த புத்தகம் எனும்போது மறுப்பதற்கு தயக்கம் வரும். ஆக ஏதோ சிந்தனையில் தலையாட்டிவிட்டார்.

எனக்கு இங்கே இன்னொரு சந்தேகம். இதற்கு முன் இளையராஜா ஏதாவது புத்தகம் அல்லது முன்னுரை எழுதியிருக்கிறாரா? அந்த அனுபவம் இல்லாதவர்களுக்கு இப்படி முன்னுரை எழுதுவது சிரமம்.

சில பேச தெரியாத பேச்சாளர்களுக்கு பேச்சு எழுதித் தரப்படும். அவர்களும் அதை வைத்து சமாளிப்பார்கள். அதேபோல் இவரும் எப்படி எழுதுவது என தெரியாமல், தன்னுடைய உதவியாளர் அல்லது வேறு யாரிடமாவது கேட்க, அவர்கள் அவர்களுக்கு தெரிந்த அறிவாளிகளிடம் கேட்க, அந்த அறிவாளி  இந்த புத்தகம் மோடி மற்றும் அம்பேத்கார் குறித்து என்பதால் மோடி + அம்பேத்கார் =முத்தலாக் என எதையோ கிறுக்கி கொடுத்திருக்கவேண்டும்.

இளையராஜாவும் ஓஹோ இப்படிதான் முன்னுரை எழுதுவார்களோ என நினைத்து கையெழுத்து போட்டிருக்கக்கூடும். இப்போது பிரச்சினை என வந்தபிறகு `மாப்பிளை இவர்தான் ஆனா இவர் போட்டிருக்கிற சட்டை என்னுடையது` என்று சொன்னதுபோல், கையெழுத்து என்னுடையதுதான், ஆனால் இப்படி எழுதி கெடுத்தது வேறு ஆள் என்றா சொல்லமுடியும்?  அது இதைவிட அசிங்கமாக இருக்கும். இப்போது ஒரு தவறு நடந்துவிட்டது இனி பின்வாங்கினால் அசிங்கம் என அவர் உறுதியாக இருக்கிறார்.  

மேலே சொன்ன விளக்கங்கள் என் அனுமானம். அதாவது ஒரு குத்துமதிப்பாக சொல்கிறேன். அவரே இதை எழுதியிருக்க வாய்ப்பு குறைவுதான்.

ஆனால் இந்த மோடி எதிர்ப்பாளர்களின்  பேட்டிகள் அபத்தத்தின் உச்சக்கட்டம். ஏதோ இந்தியா உக்ரைனிலிருந்து  ஒரு ஆபரேஷன் என பெயர் வைத்து மூன்று மத்திய அமைச்சர்களையும் களத்தில் இறக்கி செயல்பட்டதுபோல், இளையராஜாவிடம் முன்னுரை வாங்கவேண்டும் என்பதற்காக GST நோட்டீஸ், ரெய்டு என பிளான் பண்ணி இந்த ப்ரொஜெக்டை வெற்றிகரமாக முடித்தார்கள் என கதை விடுவதை என்னவென்று சொல்வது.

இதுபோன்ற காரியங்களை பிஜேபி /காங்கிரஸ் போன்ற கட்சிகள் செய்யும். அது தேர்தல் நேரங்களில் கூட்டணிக்கு இழுக்க அல்லது பாராளுமன்றத்தில் முக்கியமான ஓட்டெடுப்புகளில் தேவைப்படும்போது இவை நடக்கும். ஆனால் ஒரு புத்தகத்தின் முன்னுரைக்காகவா?

அடுத்தமுறை இளையராஜா கச்சேரிக்கு போனால் கண்ணை மூடிக்கொண்டு காதுகளை மட்டும் திறந்துவையுங்கள். அது பேரின்பம். ஆனால் அவர் அங்கேயும் அரசியல் பேச ஆரம்பித்தால், அங்கே காதுகளையும் மூடிக்கொள்ளுங்கள்.

Monday, April 25, 2022

புல்லட் டிரைன்

இது சமீபத்தில் கவனித்த செய்தி. அகமதாபாத் -மும்பை இடையே புல்லட் டிரைன் இன்னும் 5-7 வருடங்களில் ஓட ஆரம்பிக்குமாம். 

இந்தியாவில் போக்குவரத்து வசதி என்பது படு மொக்கையாக இருப்பது எல்லோருக்கும் தெரியும். எனவே இதுபோன்ற திட்டங்கள் அவசியமாகவும் இருக்கலாம். ஆனால் ஏற்கனவே இருக்கும் பல்வேறு வசதிகளை சரியாக பயன்படுத்தாமல் இதுமட்டும்தான் தீர்வு என்று முன்னிறுத்தவதுதான் தவறு.

முதலில் இந்த திட்டத்தில் உள்ள ஆபத்துகளை பார்த்துவிடுவோம். இங்கே முதல் தலைவலி முதலீடுதான். இந்த திட்டத்திற்கு செலவு 1 லட்சம் கோடிக்கும் மேல் என தெரிகிறது. நாம் ஒரு முதலீடு செய்தால் அது லாபத்தை தருகிறதோ இல்லையோ, போட்ட முதலீடாவது திரும்ப எடுக்கும் அளவுக்கு இருக்க வேண்டும்.

அதாவது நீங்கள் ஒரு டிராவல் பஸ் வாங்கி விட வேண்டும் என ஆசைப்படுகிறீர்கள், சில மாதம் கழித்து உங்களுக்கு அது சரிப்பட்டு வரவில்லை என்றால், பஸ்ஸை `இந்தாப்பா பஸ் வாங்கி 3மாதம்தான் ஆகுது, 15 லட்சத்துக்கு வாங்கினேன், 15 ஆயிரம் குறைச்சுக்க` என யாரிடமாவது காது குத்தி பார்க்கலாம். பேரம் படியவில்லை என்றால் தடாலடியா 5 லட்சம் குறைத்தும் விற்கலாம். அது உங்கள் சாமர்த்தியம்.

இங்கே அதற்கான வாய்ப்பே இல்லை. இங்கே ஒருமுறை முதலீடு செய்துவிட்டால் அது கோவிந்தாதான். மறுபடியும் இடிக்கவேண்டும் என்றாலும் அதற்கும் செலவு. புறம்போக்கு நிலம் என்றாலும் பரவாயில்லை, இவை அத்தனையும் தற்போது ஏதோ   வகையில் பயன்பாட்டில் உள்ளவை.

அரசாங்கம் இந்த திட்டங்களை அப்படியே விட்டுவிடாது. இங்கே டிரைன் ஓடிக்கொண்டிருக்கும். மத்திய அரசு பட்ஜெட் மூலம் முக்காடு கொடுத்து, இதோ டிரைன் ஓடுகிறது பார் என `காட்டி`க்கொண்டிருக்கும். அதாவது அரசு ஏர் இந்தியாவை ஓட்டியது போல்.

இங்கே இந்த திட்டத்தை நான் சந்தேகக்கண்ணோடு பார்ப்பதற்கு வேறு சில காரணங்களும் உண்டு. முதல் காரணம் இந்த டிரைனின் உத்தேச டிக்கட் கட்டணம். அது 3000 வரை இருக்குமாம்.

தற்போது மும்பை -அகமதாபாத் பிளைட் கட்டணம் 3000-4000 என்ற அளவில்தான் இருக்கிறது. அது வரும் ஆண்டுகளில் பெரிதாக மாறப்போவதில்லை. எனவே மக்கள் எதற்கு முன்னுரிமை கொடுப்பார்கள்? இந்த கேள்விக்கு விடை இல்லை.

மற்றொன்று, இங்கே அகமதாபாத்தில் நான் அரசின் இரண்டு திட்டங்களை கவனித்தேன். ஓன்று, BRTS சேவை. இது விரைவான போக்குவரத்துக்கு வழி செய்கிறது என சொல்லப்பட்டது.ஆனால் நான் கவனித்தவரையில் இது நிலைமையை மேலும் மோசமாகியதுதான் நிஜம்.

அதாவது இங்கே இருக்கும் 6 வழி பாதையில் 2 வழிப்பாதைகள் இந்த BRTS காக, அதுவும் நடுவில் ஒதுக்கப்பட்டிருந்தது. இங்கே மற்ற வாகனங்கள் செல்ல தடை. இது நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிட்டது. இதில் ஒவ்வொரு 1- 2 கிலோமீட்டருக்கு இவர்களுக்கு பஸ் நிலையம்.

அதாவது நடு ரோட்டில் பிள்ளையார் கோவில் இருந்தால், அந்த பிள்ளையாரை தரிசிக்க மக்கள் அடிக்கடி ரோட்டில் குறுக்கே நடந்தால் எப்படி இருக்கும், அதுபோலத்தான் இந்த BRTS பஸ் ஸ்டாண்டுகள். பிள்ளையாராவது எங்கேயாவது ஒரு இடத்தில்தான் நடுரோட்டில் இருப்பார். இந்த பஸ்  ஓடும் இடமெல்லாம் இந்த தலைவலி. இந்த பஸ்ஸில் ஏறுவதற்காக மக்கள் அடிக்கடி ரோட்டை, அதாவது சிக்கனல் இல்லாத நடுரோட்டை தாண்டுவார்கள்.

ஒருபக்கம் இருக்கும் பொது வழிப்பாதையில் 33 சதவிகிதம் இவர்களுக்கு ஒதுக்கீடு, இன்னொரு பக்கம் இப்படி குறுக்கே போகும் மக்களால் மற்ற பொதுவழியை பயன்படுத்தும் வாகனங்கள் வண்டியை வேகமாக ஒட்டவும் முடியாது.

விளக்கமாக சொல்லவேண்டுமென்றால், முதல்வர் ஸ்டாலின் வேகமாக கோட்டைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக தினம் டிராபிக்கை நிறுத்தி ஆயிரக்கணக்கான மக்களை `1 மணி நேரம் லேட்டா ஆபிஸ் போங்க` என்று சொல்வதைப்போலத்தான் இருக்கிறது இந்த மொக்கை திட்டம். 

இன்னொன்று மெட்ரோ டிரைன். அதுவும் இங்கே இருக்கிறது. இருக்கிறது, அவ்வளவுதான். அங்கே டிரைன் ஓடுகிறதா, தினம் எவ்வளவு மக்கள் பயணிக்கிறார்கள், இந்த திட்டத்தின் வரவு செலவு எப்படி என்ற கேள்விக்கு பதில் தேடினால் கிடைத்த பதிலில் பிபி ஏறியதுதான் மிச்சம். இங்கே இந்த திட்டம் சில கிலோமீட்டர்கள் என்ற அளவில் ஆரம்பத்தில் இருக்கிறது, முழுமை அடைந்தபின் கூட்டம் ஏறும் என்று சொன்னாலும், எனக்கு நம்பிக்கையில்லை.

நிஜத்தில் இது மோடியின் திட்டம் என்று சொல்லி அகமதாபாத்தை தாண்டி வேறு எங்காவது சொல்லி பெருமைபட்டுக்கொள்ளலாம். அவ்வளவுதான்.

இதில் இன்னொரு மிகப்பெரிய கொடுமை என்னவென்றால், ஆளே இல்லாத ஊரில் டீக்கடை வைப்பதை கூட நாம் ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் சரவணபவன் ஓட்டலே இருந்தால் எப்படி இருக்கும் அப்படி இருக்கிறது இந்த ஸ்டேஷன்களின் நிலைமை.

இங்கே ஒரு ஓடாத மெட்ரோ ஸ்டேஷனுக்கு எஸ்கலேட்டர் வேறு வைத்திருக்கிறார்கள். மற்ற எல்லா ஸ்டேஷன்களிலும் இருக்கலாம். நான் கவனிக்கவில்லை. நான் கவனித்த ஒரு ஸ்டேஷனில் இருந்த எஸ்கலேட்டர் தற்போது ஓடவில்லை. ம்யூஸியத்தில் இருப்பதுபோல், காட்சியாக இருக்கிறது.

இன்னும் 5-10 ஆண்டுகளில் இது சுமாராகவாவது ஓடும் என நம்பிக்கை வைத்தாலும், இப்போதே ஏன்? ஏற்கனவே கவனிப்பாரின்றி இருந்த ஒரு செல்போன் டவரையே நம் ஆட்கள் கழட்டி விற்றுவிட்டார்கள். இது போலீசில் புகாராக பதிவாகி இருக்கிறது.

இது அப்படி போகாது என்றாலும், அதற்குள் துருப்பிடித்து... என்னவென்று சொல்வது. அரசாங்கத்தின் பணம் என்றால் கலைஞர் முதல் மோடி வரை எல்லோரும் பாரி வள்ளல்தான்.

இந்தியாவின் போக்குவரத்து பிரச்சினைக்கு வேறு சில தீர்வுகளும் இருக்கின்றன, அது அடுத்த பதிவில் . 

Monday, April 18, 2022

கடைசி டீ

சிலரிடம் பேசும்போது `அது போன வருஷம், 8ம் தேதி என்று நினைக்கிறேன், அன்னைக்கி செவ்வாய்கிழமை...` என்று துல்லியமாக பேசுவார்கள். விட்டால், நான் அன்று என்ன கலர் சட்டை போட்டிருந்தேன் என்று கூட சொல்வார்கள் போலிருக்கிறது. அந்த அளவுக்கு ஞாபக சக்தி அவர்களிடம் இருக்கும் .

நான் அப்படி இல்லை. `நேற்று என்ன சாப்பாடு` என்று கேட்டால் கூட முழிப்பேன். அப்படி நினைவுகளில் சிக்கல். இருந்தாலும் சில விஷயங்களை நம்மால் மறக்க முடியாது; மறக்கவும் கூடாது. அப்படிப்பட்ட சில நினைவுகள் இங்கே.

வாழை இலை

கடலூரில் இருந்தபோது, தனியாக ஒரு பேச்சிலர் ரூமில் தங்கி இருந்தேன். தினம் ஓட்டல் சாப்பாடுதான். இங்கே எனக்கு இரண்டு விதங்களில் நஷ்டம் மற்றும் கஷ்டம். ஓன்று, ஓட்டல் சாப்பாடு சில நாள்தான் ருசியாக இருக்கும். அதன்பின் அதுவும் சலித்துப்போகும். இரண்டு, இங்கே செலவும் அதிகம். மாதம் ஒரு நபர் ஓட்டலில் சாப்பாடும் செலவில் ஒரு சராசரி குடும்பமே, வீட்டு வாடகை கொடுத்தும், ஓட்டலாம்.

எனவே என்னால் ருசியாக சாப்பிடவும் முடியவில்லை, பணத்தை சேர்ப்பதும் சிரமமாக இருந்தது. அப்படியும் ஓரளவு வருமானம் இருந்ததால் தப்பித்தேன். பல ஓட்டல்களில் மாறி மாறி சாப்பிட்டாலும் ஒரு கட்டத்தில் நாக்கு வீட்டு சாப்பாட்டுக்கு ஏங்கும். சில சமயம் இந்த டிபரஷனில் இரவு உண்ணாவிரதம் இருந்து விடுவேன். அது இரவு நேரங்களில் நம்மை தூங்கவிடாது.

நான் 20 களின் ஆரம்பத்தில் இருந்த நேரம் அது. வாழ்க்கை இப்படி போய்க்கொண்டிருந்த போது நன்கு தெரிந்த ஒருவர் வாடிக்கையாளராகவும் இருந்தார். தெரிந்தவர் என்றால், `நீ குழந்தையாய் இருக்கும்போது` என்று சொல்லும் அளவுக்கு என்னை பற்றி தெரிந்தவர்.

ஒரு நாள் அவர் கடைக்கு வந்தபோது, `என்ன சாப்பிட போகலையா?` என கேட்க, நானும் எதையோ சொல்லிவிட்டேன். அதை கேட்டதும் அவர் முகம் மாறிவிட்டது. `நாளைலேந்து மதியம் ஒரு வேளை நம்ம வீட்டுல சாப்பிடு` என்று சொல்லிவிட்டார்.

வீட்டு சாப்பாடு என்ற உடன் எனக்கும் சந்தோசம். மறுநாள் போனேன். குடிசை வீடுதான். குனிந்துதான் வீட்டுக்குள்ளே நுழைய வேண்டும். அன்று நான் வாழை இலையில் பொரியல் அப்பளம் என நல்ல சாப்பாட்டை சாப்பிட்டேன்.

இந்த விருந்து ஒரு வாரம் தொடர்ந்தது. எளிய மனிதர்கள் இருப்பதை வைத்து சுமாராக வாழ்கையை ஓட்டுவார்கள். எனவே எனக்கு இப்படி சாப்பாடு போடுவது அவர்களுக்கு சிரமமாக இருந்தது. அதே சமயம் விருந்தாளிகளுக்கு முன்னால் நாங்கள் இப்படித்தான் சாப்பிடுவோம் என சொல்லவும் முடியாது. எனவே அந்த சேவை ஒரு வாரத்தில் நின்றுபோனது.

ஒரு வாரம் சாப்பிட்டாலும் அந்த சாப்பாடு என் மனதில் மறக்கமுடியாமல் நின்றுவிட்டது. குறைந்தபட்சம் ஒரு நபரின் மனக்குறையை உணர்ந்து அதை தீர்க்க அவர் முயற்சித்திருக்கிறார்.

மீன்

இது நடந்து பல வருடம் இருக்கும். வாழ்க்கையும்  அப்படியேதான் போய்க்கொண்டிருந்தது. நானும் சந்து பொந்தெல்லாம் நல்ல சுவையான ஓட்டல், குறைந்த கட்டணம் என தேடிக்கொண்டிருந்தேன். இப்படி தேடியபோது ஒரு சுமாரான ஓட்டல் கொஞ்சம் ஒதுக்குபுறமாக கிடைத்தது.

அசைவ ஓட்டல் அது. குடும்பமே ஓட்டலை கவனித்து கொண்டிருந்தார்கள். பரிமாறியவரும் பெண்தான். அவருக்கு என்னைவிட 10 வயது அதிகமாக இருந்திருக்கும். சில நாள் சாப்பிட்ட பிறகு அந்த பெண்மணி ஏதோ கேட்க, நானும் எதையோ சொல்லிவிட்டேன். அதன்பின் அவர் எனக்கு சாப்பாடு பரிமாறும் முறை மாறிவிட்டது.

வழக்கமாக இது போன்ற ஓட்டல்களில் மீன் குழம்பு ஊற்றினாலும் அதில் பேருக்கு சில மீன் சதைகள் இருக்கும். ஆனால் எனக்கு ஒரு முழு மீனே குழம்பில் வந்து விழுந்தது. அதேபோல் எக்ஸ்ட்ரா சாப்பாடு கேட்டாலும் அதுவும் கொஞ்சமாகத்தான் தருவார்கள். எனக்கு அந்த பெண்மணி இதிலும் நிறையவே வைத்தார்.

சில நாட்கள் இப்படி ஓடும்போது நான் ஒன்றை கவனித்தேன். இந்த சலுகை எனக்கு மட்டும்தான், மற்றவர்களுக்கு இப்படி அவர் சாப்பாடு போடவில்லை. அவர் ஏன் என்னை மட்டும் இப்படி கவனிக்க வேண்டும்?

அந்த சமயம் நான் நல்ல புத்தகங்களையும் படித்தேன், கெட்ட புத்தகங்களையும் படித்துக்கொண்டிருந்தேன். அங்கேதான் விதவிதமான கதைகள் இருக்குமே. அவையெல்லாம் என் மனதில் ஓடியது. அந்த பெண்ணுக்கு ஸாரி பெண்மணிக்கு என்னை பிடித்துவிட்டது, எனவே என்னை ஸ்பெஷலாக கவனிக்கிறார் என நினைத்தேன்.

அதே சமயம் ஷேர் மார்க்கெட், அரசியல் என என் சிந்தனை அதன் தலைவலிகள் தெரியாமல் கவனித்துக் கொண்டிருந்ததால், நான் எந்த ஸ்டெப்பும் எடுக்கவில்லை. அவரும் அதை பொருட்படுத்தாமல் என்னை ஸ்பெஷலாக கவனித்துக் கொண்டிருந்தார்.

இப்படி இது தொடர, ஒரு சமயம், அடிக்கடி நான்வெஜ் சாப்பிட்டால் உடம்புக்கு சரிவருமோ இல்லையோ, நம்ம பட்ஜெட்டுக்கு ஆகாது என ஒரு முறை வறுத்த மீன் வேண்டாம் என சொல்லிவிட்டேன். அந்த பெண் காரணம் கேட்க, `பட்ஜெட் இடிக்குது` என்று உண்மையையும் சொல்லிவிட்டேன்.

`சரி, இந்த மீனுக்கு காசு வேண்டாம்` என ஒரு வறுத்த மீனையும் வைத்துவிட்டார். இருந்தாலும் அது நாகரீகம் இல்லை என்பதால், அவர் மறுத்தாலும், நான் அதற்கும் காசு கொடுத்தேன்.

வாழ்க்கையில் நாம் பலவிதமான மனிதர்களை சந்தித்தாலும் இது எனக்கு புதிதாக இருந்தது. அவருக்கு என் மீது ஈர்ப்பு வந்துவிட்டது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.

குழப்பமான மனநிலையில் சில வாரம் நான் அந்த ஓட்டலுக்கு போகவில்லை. அதன்பின் மீண்டும் ஒரு முறை போனபோது, `என்ன ஆளையே காணோம்?` என்றார். நான் சமாளிப்பதற்காக, `அடிக்கடி இதே குழம்பு சாப்பிடுவதால், கொஞ்சம் டேஸ்ட் மாத்தி சாப்பிட்டேன்` என்றேன்.

அவரும் `ஆமாம்பா, கொஞ்சம் மாத்தி மாத்தி சாப்பிட்டாதான் சாப்பாடும் எறங்கும் என்றவர், உனக்கு பிடிச்சது ஏதாவது இருந்தா சொல்லு செஞ்சுதர்றேன்` என்றார்.

இதுவும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஓட்டலில் இப்படியெல்லாம் யார் கேட்பார்கள்? ஆனால் அதன்பிறகு அவர் ஒன்றை சொன்னார். `அன்னைக்கி நீ பேசும்போதே கவனிச்சேன், உனக்கு அம்மா சின்ன வயசுலயே போய்ட்டாங்கன்னு. எங்கம்மாவும் சின்ன வயசிலேயே போய்ட்டாங்க. அடுத்தவங்க வீட்டுல போட்டதை சாப்பிட்டு வளர்ந்தவதான் நானும். அங்கல்லாம் நமக்கு இது வேணும்,அது வேணும்னு கேட்கமுடியாது.

இவரை கல்யாணம் பண்ண பிறகுதான் நான் எனக்கு புடிச்சதெல்லாம் செஞ்சி சாப்பிட்டேன்` என்றவர், `உனக்கும் ஏதாவது வேணும்னா கூச்சப்படாம கேளு செஞ்சித்தர்றேன்` என்று சொல்லி அவர் அங்கே எனக்கு அம்மாவாக உயர்ந்து நிற்க, நான் குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டுவிட்டு கிளம்பினேன்.

அதன்பிறகு எனக்கு அங்கே போக மனமில்லை. அதேசமயம் வேறு ஒரு தலைவலி வந்து, எனது ஓட்டல் சாப்பாடும் முடிவுக்கு வந்தது. அது மீளமுடியாத இன்னொரு சிக்கலில் என்னை மாட்டிவிட்டது.

டீ

சிறையிலிருந்து விடுதலையாகி இரண்டு ஆண்டுகள் இருக்கும். மறுபடியும் ஷேர் மார்க்கெட் கனவு வந்தது. சிலர், வீடு மாறினால் அந்த வாஸ்து நமது வாழ்க்கையை மற்றும் என நினைப்பார்கள். அதுபோல் நானும் ஊரையும் மாற்றி ஷேர் புரோக்கரையும் மாற்றி பார்ப்போம் என்ற முடிவில் அகமதாபாத் கிளம்பினேன்.

டிரைனில் பயணிக்கும்போது ஒரு முறை நான் கதவருகில் நின்று கொண்டு பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் வெளி உலகத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது வடமாநிலத்தை சேர்ந்த ஒரு நண்பர்கள் குழு அங்கே அரட்டை அடித்துக் கொண்டிருந்தது. அதில் கொஞ்சம் வயதான நபரும் அடக்கம்.

அவர்கள் ஏதோ ஜாலியாக பேசி சிரித்துக்கொண்டிருக்க, எனக்கு இந்தி தெரிந்தாலும், நான் மௌனமாக வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். இந்த ஜாலி மூவ்மெண்ட்டில் அந்த வயதான நபர் என்னிடம் ஏதோ கேட்க, நானும் எதையோ சொல்லிவிட்டேன்.

அதன்பிறகு அவர் என்னிடம் நிறைய பேச ஆரம்பித்தார். அந்த நண்பர்கள் கலைந்து போன பிறகும் நிறைய பேசினார். பேசினார் என்பதைவிட நிறைய கேள்வி கேட்டார். தமிழக அரசியல், தேசிய அரசியல் என அது ஓடியது. என்ன செய்கிறீர்கள், எங்கே போகிறீர்கள் என சகலமும் அதில் இருந்தது.

நான் தெரிந்த நபர்களிடம் கூட அதிகம் பேசமாட்டேன். இவர் அறிமுகமில்லாத என்னிடம் ரொம்ப நேரம் பேசினார். எனக்கு எரிச்சலாக இருந்தது. இருந்தாலும் நாகரீகம் கருதி நானும் பதில் சொல்லிக்கொண்டிருந்தேன்.

அந்த நேரம் அங்கே டீ வர, இரண்டு டீ வாங்கி என்னிடம் ஒன்றை கொடுத்தார். நான் மறுத்தேன். அதேசமயம் சற்று முன் தன் நண்பர்களுடன் அவர் டீ குடித்ததையும் கவனித்தேன்.

`அபிதோ ஆப்னே பியா?` என நான் கேள்வி கேட்க, `இந்த டிரைனிலிருந்து கீழே குதித்தாலும் நான் டீ சாப்பிட்டுவிட்டுத்தான் குதிப்பேன்` என்றார். இந்த பதிலை அவர் சொல்லும்போது அவர் என்னை உற்று பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போதுதான் எனக்கு புரிந்தது. மௌனமாக இருக்கிறேன், கதவருகே நீண்ட நேரமாக இருக்கிறேன் என்பதால் அவர் அப்படி தவறாக புரிந்துகொண்டிருக்கிறார். இப்போது நான் வாய்விட்டு சிரித்துவிட்டேன். `என் முகமே அப்படித்தான்` என்று நான் சொன்னேன்.

இது எனக்கு புதிதல்ல. பலமுறை நான் எடுக்கும் முடிவுகளை பார்த்து, மற்றவர்களின் `இதை நான் எதிர்பார்க்கலியே` என்ற மாதிரியான கேள்விகளை நான் சந்தித்திருக்கிறேன். அதாவது என்னுடைய மனநிலையை என்னை சுற்றி இருப்பவர்கள் பெரும்பாலும் தவறாகவே புரிந்துகொள்கிறார்கள்.

அதன்பிறகு ரிலாக்ஸாக கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தோம். ஆனாலும் மனிதர் நம்பவில்லை. அவர் வேறு பெட்டியை சேர்ந்தவர். `இன்னைக்கி நான் டீ வாங்கிக்கொடுத்தேன். நாளை நான் கண்டிப்பாக வருவேன், நீங்கள் வாங்கித் தாருங்கள்.` என கண்டிஷன் போட்டார். அதாவது எனக்கு செக் வைக்கிறாராம்.

மறுநாளும் வந்தது. அகமதாபாத் 4 மணிக்கு மேல் வரும் என்பதால் நானும் 3 மணிவரை எதிர்பார்த்தேன். அவர் வரவில்லை. அப்போதும் டீ வந்தது. எனக்கும் அப்போது டீ குடிக்கும் மூட் இல்லை. இருந்தாலும் ஒரு டீ வாங்கி கடைசியாக குடித்தேன். அது அவருக்கான டீ.

மனிதர்களின் முகபாவனைகளை, பேச்சுக்களை வைத்து மனிதர்களை எடை போடுவது உண்டு. இது எல்லா இடத்திலும் பலிக்காது. சிரித்துக் கொண்டே இருந்த சின்னத்திரை சித்ரா இறந்தது எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்ததல்லவா? இதுதான் நிஜம். சிரித்துக்கொண்டிருப்பவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்றோ, உம்மென்று இருப்பவர்கள் டிக்கட் வாங்கப்போகிறார்கள் என்றோ சொல்லமுடியாது. இந்த கணக்கு சில இடங்களில் தப்பாகவும் போகும்.

இங்கே பேசும்போது எனக்கே தெரியாமல் நான் சொன்ன ஏதோ ஒரு வார்த்தையில் ஒரு நபரின் வாழ்க்கையை புரிந்து கொண்டு அதற்கு அவர்களால் முடிந்த உதவியை செய்ய முயற்சித்திருக்கிறார்கள். ஒரு இடத்தில் என்னுடைய கணக்கு தப்பாக இருந்தது, இன்னொரு இடத்தில் இவர்.  அவர் வாங்கிக்கொடுத்தது 5 ரூபாய் மதிப்புள்ள டீ யாக இருந்தாலும் மறக்கமுடியாத அளவுக்கு என் நினைவில் தங்கிவிட்ட டீ அது.

Tuesday, April 12, 2022

நல்ல மனிதர்கள்


இப்போது ஏதாவது ஒரு செய்தியை கவனித்துவிட்டால், அது நம்மை உணர்ச்சிவசப்பட வைத்துவிட்டால், உடனடியாக அதை ஷேர் செய்து பரபரப்பாக்கிவிடுகிறோம். அதாவது இங்கே செய்திகள் நல்லெண்ணத்தை பரப்புகின்றன. ஆனால் அதில் லாஜிக் இருக்கிறதா என்றெல்லாம் யாரும் கவனிப்பதில்லை.

இது சமீபத்திய செய்தி. மணிப்பூரில் 10 வயது சிறுமி தன்னுடைய 1 வயது தங்கையை மடியில் வைத்து கொண்டு பள்ளியில் பாடம் படிக்கிறாளாம்.  பெற்றோர் கூலிகளாம். வேலைக்கு போகும்போது குழந்தையை எடுத்து செல்ல முடியவில்லையாம்! எனவே இந்த சிறுமி குழந்தையோடு பள்ளிக்கூடம் வருகிறாராம்.

என்ன கொடுமை இது. ஒரு தாய் எப்பேர்ப்பட்ட அரைவேக்காடாக இருந்தாலும் இப்படி செய்யமாட்டார். இங்கே காரணம் வேறு ஏதாவது ஒன்றாக இருந்திருக்கும். ஏற்றுக்கொள்ளும் வகையில் இங்கே காரணமும் எதுவும் சொல்லப்படவில்லை.

பொதுவாக குழந்தைகள் அம்மா செய்வதை காப்பி அடிக்கும். இந்த காப்பி அடிக்கும் பழக்கம் சில சமயம் `பாப்பாவை நானே பார்த்துக்கொள்கிறேன்` என அடம்பிடிக்கும் அளவுக்கு போகும். அந்த காலத்தில் மரப்பாச்சி பொம்மையை வாங்கி கொடுத்து `இது உன் பாப்பா, அது அம்மா பாப்பா` என சமாளிப்பார்கள். அதுபோல் இந்த சிறுமியும் ஏதாவது அடம் பிடித்திருக்கும். சமாளிப்பதற்கு இப்படி ஒரு நாள் கூத்தை அரங்கேற்றியிருப்பார்கள். 

10 வயது சிறுமி பள்ளிக்கூடத்திற்கு குழந்தையை அழைத்து போக முடியுமா, பால் கொடுக்க என்ன செய்யும், கக்கா போனால் என்ன செய்யும், அல்லது பள்ளி நிர்வாகம்தான் இந்த அபாயத்தை அனுமதிக்குமா என்ற கேள்விக்கு  பதில் இல்லை. ஆனால் புகைப்படம் மனதை தொட்டுவிட்டதால்  லாஜிக் எல்லாம் பார்க்காமல் எல்லோரும் எமோஷனல் ஏகாம்பரமாக மாறி இந்த செய்தியை பரபரப்பாக்கிவிட்டார்கள்.

காட்சி 2

இது ஒரு CCTV காட்சி. அதாவது மனித நேயம் உள்ளவர்களை பற்றிய ஒரு வீடியோ. 

ஒரு வாழைப்பழ வியாபாரி தள்ளுவண்டியில் வியாபாரம் செய்கிறார். அந்த இடத்தில் பிச்சை எடுக்கும் அல்லது கூலி வேலை செய்யும் ஒரு பெண், குழந்தையோடு நிற்கிறார்.

குழந்தை வாழைப்பழம் கேட்டு அழுகிறது. அந்த பெண்ணிடம் காசில்லை. வாழைப்பழ கடைக்காரர் கொடுக்க மறுக்கிறார். அழும் குழந்தையை கட்டுப்படுத்த முடியாமல், அந்த குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு பணத்திற்கு வேறு வழி தேடி ஓடுகிறார். அந்த குழந்தை தனியாக அழுதுகொண்டிருக்கிறது. அப்போதும் அந்த வியாபாரிக்கு மனம் இரங்கவில்லை.

அப்போது அந்த வழியாக ஒரு வயதான பாட்டி வருகிறார். குழந்தை தனியாக அழுவதை பார்த்து, என்ன என்று கேட்க, அந்த குழந்தை வாழைப்பழத்தை கை காட்டுகிறது. அவர் தன் பணத்தில் அந்த குழந்தைக்கு பழம் வாங்கித்தருகிறார். இதற்கிடையில் அந்த அம்மாவும் வந்துவிட, குழந்தை அம்மாவிடம் போய்விடுகிறது. கதை சுபமாக முடிந்தது. இங்கே அந்த வயதான பெண் கடவுளுக்கு சமமாக உயர்ந்து நிற்கிறார். அந்த வியாபாரி வில்லனாகிவிட்டார்.

ஆனால் நிஜம் என்பது எப்போதும் வேறுவிதமாக இருக்கும். இதே தள்ளுவண்டியை அந்த பாட்டியிடம் கொடுத்து 6 மாதம் வியாபாரம் செய்ய சொல்லுங்கள். இப்போது கதை வேறு மாதிரி இருக்கும். பெண் என்பதால் இரக்க குணம் ஆணை விட பெண்களுக்கு அதிகமாக இருக்கலாம், ஆனாலும் அவரும் அந்த வியாபாரியை போல் நடந்து கொள்ளும் வாய்ப்புதான் அதிகம்.

காரணம், இந்தியா ஏழை நாடு. இங்கே நீங்கள் வியாபாரத்துக்காக ரோட்டில் இறங்கிவிட்டால் தினம் நூறு பிச்சைக்காரர்களை பார்க்க வேண்டும். ஆரம்பத்தில் மனித நேயம் எல்லோருக்கும் பொங்கும். பின்னர் அது மரத்துவிடும். இதுதான் எதார்த்தம்.

ஹீரோக்களை கொண்டாடுவோம்,அதேசமயம் மற்றவர்களை எல்லாம் வில்லனாகவும் சித்தரிக்க வேண்டாம்.  

காட்சி 3

இதுவும் குழந்தைகள் சம்பந்தமாக ஒரு `காட்டப்பட்ட` காட்சி. அதாவது விஷுவலாக நம்மை எமோஷனல் ஆக்கியிருக்கிறார்கள்.

ஒரு பெண் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்கிறார். அப்படி வியாபாரம் செய்யும்போது ஒரு இடத்தில் ஒரு மேடான இடத்தில் வண்டியை தள்ள முடியவில்லை. அப்போது அந்த வழியாக போன சில பள்ளி சிறுமியர் இதை கவனித்து அந்த வண்டியை தள்ள உதவுகிறார்கள். கவனிக்கவும், ரோட்டில் மனிதர்களே இல்லையாம். குழந்தைகளுக்குதான் தற்போது சமூக அக்கறை அதிகமாக இருக்கிறதாம். இதுதான் அந்த காட்சி சொல்லும் செய்தி

சிக்கல் இங்கே என்னவென்றால் தற்போது யூடுப் வீடியோக்கள் வருமானம் தருகிறது. சன் டிவியிலிருந்து கபில்ஷர்மா வரை (கூடுதல்) வருமானத்துக்காக வீடியோக்களை யு டியூபில் வெளியிடுகிறார்கள். 

இதனால் பலர் இப்படி செயற்கையான மனித நேயத்தை மனிதர்களை/குழந்தைகளை நடிக்க வைத்து அதை குறும்படம் என்று சொல்லாமல் வெளியிடுகிறாரகள். ஆனால் இது போன்ற வீடியோக்களில் காட்சி அமைப்பு அதை காட்டிக் கொடுத்துவிடும்.

நல்லவனாக வாழ்வது வேறு நல்லவனாக நடிப்பது வேறு. நல்லவனாக வாழ்பவனை நீங்கள் CCTV கேமராவில் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். அப்படிப்பட்ட மனிதர்களை நீங்கள் காண நேர்ந்தால் அதை மட்டும் ஷேர் செய்யுங்கள். நடிக்கும் மனிதர்களை நாம் தினம்தோறும் நம் வாழ்வில் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இங்கேயுமா?

 

Wednesday, January 26, 2022

நாவடக்கம் தேவை

சமீபத்தில் ஒரு சட்டக்கல்லூரி மாணவர் காவலர்களால் தாக்கப்பட்டார். வழக்கம்போல் இங்கே தாக்கப்பட்டவர் அப்பாவி தாக்கியவர்கள் குற்றவாளி என்ற பொதுமனப்பான்மை வெளிப்படுகிறது. ஆனால் நான் எப்போதும் வித்தியாசமானவன். தொடர்ந்து செய்திகளை கவனித்துவருவதால் பல விஷயங்களில் எனக்கு மாற்று பார்வை உண்டு. டேட்டா அனலைஸ்ட் என்று சொல்வார்களே அதுபோல் நான் நியூஸ் அனலைஸ்ட் ஆகிவிட்டேன் என எனக்கு ஒரு நம்பிக்கை.

தற்போது வரும் செய்திகளை மேம்போக்காக பார்த்தால் போலீசார் குற்றவாளி என முடிவு செய்துவிடலாம். ஆனால் நாம்  கொஞ்சம் எதார்த்தமாக பார்ப்போம். 

இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு செய்தி பொதுவாக போலீசாரின் மரியாதை பெருமளவு குறைந்திருக்கிறது. அதிலும் வழக்கறிஞ்சர்கள் போலீசாரை சுத்தமாக மதிப்பதில்லை என்பதுதான்.

அந்த இளைஞனின் பேட்டியையும் பார்த்தேன். வருத்தமாக இருந்தது. அதேசமயம் அங்கங்கே சுருதி இல்லாததும் தெரிந்தது. அதேசமயம் இவ்வளவு அப்பாவியான, பலவீனமானவர்களை போலீசார் இப்படி தாக்கமாட்டார்கள். இங்கே உண்மை இப்படியும் அப்படியுமாக இருக்கிறது.

இவர் பாதி உண்மையை சொல்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் மொபைல் கேமராவை ஆண் செய்தபோதே இந்த பையன் கொஞ்சம் விவரமானவன் என தெரிகிறது. ஆனால் நான் ரொம்ப அப்பாவி என முகத்தையும் நம்பும் அளவுக்கு வைத்துக்கொண்டு பேட்டி கொடுத்திருக்கிறான். இங்கே யாரை நம்புவது?         

கடந்த வருடம் ஒரு சம்பவம். ஒரு இளம் பெண் காரில் முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தார். போலீசார் தடுத்து  அபராதம் விதிக்க, அவர் தனது அம்மாவுக்கு போன் செய்து வரவழைத்தார்.

அவர் ஹைகோர்ட்டில் பெரிய்ய  வக்கீலாம். வந்தவர் போலீசாரை தாறுமாறாக கெட்ட வார்த்தைகளில் திட்டினார். `எப்படி ஒரு வழக்கறிஞ்சரின் காரை தடுக்கலாம்? எல்லோரையும் ஏன் பிடிக்கவில்லை?` என அவர் எகிறியது இன்னும் உங்களுக்கு நினைவிருக்கலாம்.

நாட்டின் எல்லை பகுதிகளில் தடுப்புகள் அமைத்து அனைவரையும் சோதிப்பது அவசியம். ஆனால் உள்நாட்டில் சோதனைகள் இப்படி குத்துமதிப்பாகத்தான் இருக்கும். சில இடங்களில் பணக்காரர் தப்பித்துவிடுவார், சில இடங்களில் ஏழைகள். ஆனால் `அவனை ஏன் பிடிக்கல, இவனை ஏன் கேள்வி கேக்கல?` என்று வாதம் செய்யும் அற்பமான அறிவாளிகளை என்ன செய்வது? அதுவும் வழக்கறிஞர்கள் என்றால் யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்ற இறுமாப்பு இவர்களுக்கு நிறையவே வந்துவிட்டது.

நாம் கவனித்தது இந்த சம்பவத்தை மட்டும். போலீசாரிடம் கேட்டால் இன்னும் பல கதைகள் கிடைக்கும். அதுவும் சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்னும் மோசம்.

இங்கே போலீசார் சரியில்லை என்றே வைத்துக்கொள்வோம். இருந்தாலும் அவர்களின் தவறுகளை அம்பலப்படுத்துவது என்பது வேறு, பொதுவெளியில் அவர்களை அவமானப்படுத்துவது என்பது வேறு. முன்னது நிச்சயம் செய்யவேண்டிய ஓன்று. இரண்டாவது தவிர்க்கப் படவேண்டிய ஓன்று.

ஒரு அனுபவம். ஒரு வீட்டுக்கு போயிருந்தேன். பல விஷயங்களை பேசும்போது முன்னேறிய மனிதர்கள் பற்றிய விவாதம் வந்தது. அந்த வீட்டு பெண்ணின் ஒரு உறவினர் முன்னேறிவிட்டார். `திறமைசாலிகள் எப்படியும் முன்னே வந்துவிடுகிறார்கள். பலர் வெறும் வேலை செய்வதிலேயே வாழ்க்கையை தொலைத்துவிடுகிறாரகள்` என பேசினார்.

இப்படி பேசிக்கொண்டிருக்கும்போது அந்த வீட்டில் முதன்மையானவர் சட்டென்று கிளம்பி வெளியே சென்றுவிட்டார். அவர் இன்னும் சில படிகள் கூட மேலே ஏறவில்லை. எனவே அவருக்கு கோவம். விருந்தினர் மத்தியில் தன்னை குறை சொல்கிறாள் என அவருக்கு வருத்தம். இது வருத்தமாக இருக்கும் வரையில் பிரச்சினை இல்லை. கோபமாக மாறினால் என்னவாக ஆகும் என்பது உங்களுக்கே தெரியும்.

இதுதான் எதார்த்தம். என்னதான் குறை இருந்தாலும் அதை சுட்டிக்காட்டும் விதம் நாகரிகமாக இருக்கவேண்டும். அதுவும் பொதுவெளியில் போலீசாரை அவமானப்படுத்தினால் அது இப்படித்தான் போய் முடியும்.

நிகழ்கால வழக்கறிஞர்கள் செய்யும் அடாவடித்தனத்தை பார்த்து, எதிர்கால வழக்கறிஞர்களும் துணிந்துவிட்டார்கள். அதிகாரவர்க்கம் அத்துமீறும் போது அதை துணிச்சலுடன் எதிர்க்க வழக்கறிஞர்களுக்கு துணிச்சலும் ஆவேசமும் தேவைதான். ஆனால் அது அகங்காரம் ஆணவம் என்ற அளவுக்கு இவர்களுக்கு போய்விட்டதாக எனக்கு தெரிகிறது.

போலீசார் வழக்கு பதிவு செய்யலாமே என பலர் உபதேசம் செய்வதை நான் கவனிக்கிறேன். இங்கே நம்மைவிட போலீசாருக்கு நன்றாகவே தெரியும், இந்திய நீதிமன்றங்கள் எதற்கும் லாயக்கில்லாத ஓன்று. எனவே  இங்கே வழக்கு போடுவதால் எந்த பயனும் இல்லை.

இங்கே துரதிருஷ்டம் என்னவென்றால், போலீசார் தங்கள் வீரத்தை பலமானவர்கள் மீது காட்டியிருக்க வேண்டும். அதாவது அந்த வழக்கறிஞர் பெண்மணியின் பேச்சில் ஆணவம் தெரிந்தது, அங்கே தூக்கிப்போட்டு மிதித்திருக்க வேண்டும். ஆனால் ஒரு அதிகப்பிரசங்கி அப்பாவி இளைஞனிடம் காட்டியிருப்பதுதான் கண்டிக்கப்பட வேண்டிய ஓன்று. 

Wednesday, January 19, 2022

கிரிப்டோ கரன்சி


ஏதாவது சில விஷயங்கள் தீடீரென்று நம் ஆர்வத்தை தூண்டிவிடும். அதுகுறித்த செய்திகளை அதிகம் படிப்போம். இந்த வாரம் அப்படி கவனித்தது QR கோட் மற்றும் கிரிப்டோ கரன்சி குறித்த தகவல்களைத்தான். 

ஜப்பானில் சரக்குகளை தரம் பிரிக்க/கையாள இந்த QR முறையை ஒரு நிறுவனம் பின்பற்ற, பின்னர் அது  இப்படி  விரிவடைத்திருக்கிறது. QR கோட், பணப்பரிமாற்றம் மற்றும் பல விஷயங்களை மிக சுலபமாக முடித்துவிடுவதால் அது தற்போது தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறிவிட்டது. 

இதில் கிரிப்டோ வேறு வகை. இங்கே அகமதாபாத்தில் சிறு வயதில் பால் வாங்க போகும்போது, அப்போது சில்லறை தட்டுப்பாடு நிறைய இருந்ததால், சில்லறைக்கு பதில் அவர்கள் கடை பெயர் அச்சடித்த டோக்கன் தருவார்கள். 50 காசு 25 காசு என அதில் அச்சடிக்கப்பட்டிருக்கும். அது அவர்களிடம் மட்டும் செல்லுபடியாகும். 

இப்படி  உள்ளூர் பிரச்சினைகளில் நம் வசதிக்காக சில நடைமுறைகளை மனிதர்கள் உருவாக்குவார்கள். அப்படி வந்த சில விஷயங்கள் அற்புதமான கண்டுபிடிப்பாக மாறும். இதில் QR கோட் வரவேற்கத்தக்க ஓன்று. ஆனால் கிரிப்டோ? 

கிரிப்டோ குறித்து படிக்கும்போது எனக்கு பல சொந்த அனுபவங்கள் நினைவுக்கு வருகிறது. அதில் பல டேஜாவு வகை. அந்த அனுபவங்களுடன் இதை பொருத்தி பார்த்தால் இதுவும் அதே அடிப்படையில் போகக்கூடும்.

கரன்சிக்கு ஒரு சிறந்த மாற்றாம்; திருடு போகும் வாய்ப்பு இல்லையாம்; சுலபமானது என்று பல காரணங்கள் அது கண்டுபிடிக்கப்பட்ட காலத்திற்கு பொருத்தமாக இருந்திருக்கும்.

ஆனால் தற்போது இன்டர்நெட்டின் வளர்ச்சி, ஸ்மார்ட்போன் வருகை, UPI  என பல விஷயங்கள் வந்துவிட்ட நிலையில், கிரிப்டோ அவசியமே இல்லாத ஓன்று. இருந்தும் மக்கள் அதன் மீது மோகம் கொண்டு அலைவதின் காரணம் புதிர்தான்.

இங்கே நாம் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். அவ்வப்போது சில புது வரவுகள் வரும் பின்னர் அது காணாமல் போகும். உதாரணம் எவ்வளவோ சொல்லலாம். பேஜர் போய் ஆண்ட்ராய்டு வந்து பின்னர் அதை ஸ்மார்ட்போன் ஒழித்தது.

தற்போது இன்னொன்றையும் நான் கவனிக்கிறேன். வங்கிகளுக்கு போய் பணம் எடுப்பது என்பது சிரமமாக இருந்தநிலையில் ஏடிஎம்கள் ஒரு வரப்பிரசாதமாக வந்தது. தெருவுக்கு நாலு ஏடிஎம்கள்கள் என உருவானது. அதே பல ஏடிஎம்கள்கள்  தற்போது காற்று வாங்கிக்கொண்டிருக்கின்றன.

PAYTM/GPAY போன்ற UPI வரவுகள் பணபரிமாற்றத்தை மேலும் சுலபமாக்கிவிட்டதால் ஏடிஎம்கள் பயன்பாடு பெருமளவு குறைந்துவிட்டது. ஏடிஎம்கள்கள் இருக்கும். ஆனால்  வரும் காலங்களில் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் மூடுவிழா கண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இதேதான் கிரிப்டோவிலும் நடக்கக்கூடும்.

இனி சில அனுபவங்களை பார்ப்போம். 90களில் புதிய பொருளாதார கொள்கைகள் வந்தபோது இப்படித்தான் பல ஷேர்களை தாறுமாறாக ஏற்றினார்கள். 10 ரூ ஷேர் 5000 போன கதையெல்லாம் நடந்தது. என் கெட்டநேரம் நான் அப்போதுதான் ஷேர்மார்கெட்டில் நுழைகிறேன். 

பொதுவாக ஷேர்களுக்குத்தான் PE/Ratio வைப்பார்கள். அந்த நேரத்தில் படுபாவிகள் அப்போதிருந்த மியூட்சுவல் பண்ட்களுக்கு கூட PE/Ratio வைத்து அதையும் விலை ஏற்றி ஏமாந்தவன் தலையில் கட்டினார்கள். ஏகப்பட்ட பென்னி ஸ்டாக் தாறுமாறாக ஏறி ஆப்ரேட்டர்களுக்கு பணமழையையும் ஏமாந்த சோணகிரிகளுக்கு அல்வாவையும் கொடுத்தது. 

அந்த நேரத்தில் இன்னொரு மோசடியும் நடந்தது. புற்றீசல்போல்  நிறைய புது வெளியீடுகள் வந்தன. வாரம் 10 பொது வெளியீடு வரும். தற்போது அதன் பேர் IPO. தெருக்களில்/பங்கு தரகர் அலுவலகத்தில் இதற்காகவே நிறைய விண்ணப்பங்கள் இருக்கும். அதில் நிறைய எடுத்துவந்து ஆராய்ச்சி செய்வேன்.

கம்பெனி 2 வது வருடமே லாபத்துக்கு வந்துவிடுமாம். வெளிநாட்டு நிறுவனம் முதலீடு செய்திருக்குதாம். உற்பத்தியான உடனே அவர்கள் வாங்கி கொள்வார்களாம். இப்படி நிறைய கதை விட்ட வெளியீடுகள் வந்து பின்னர் காணாமல் போனது. தற்போது நிறைய கிரிப்டோ வருவதை பார்த்தால் அதே நிலைமைதான் வரும் என நினைக்கிறன்.

அடுத்து ரியல் எஸ்டேட் பூம் வந்தது.  எல்லா பூமிலும் ஆரம்பகட்டத்தில் முதலீடு செய்பவர்கள் லாபம் பார்த்துவிடுவார்கள். இது தியரி. ஆனால் இவர்களை பார்த்து ஆட்டுமந்தைகளை போல் பலர் வந்து விழுவார்கள். அவர்களில் 10-20 தப்பித்தால் அதிர்ஷ்டம். மற்றவர்கள் இப்போதும் நிலங்களை வைத்திருக்கிறார்கள். நல்ல விலை வந்தால் கொடுத்துடுவேன் என்பார்கள். அதுவே அவர்களுக்கு பெருத்த நஷ்டமாக இருக்கும்.

அப்போதைய விலை ஏற்றம் இயற்கையான ஓன்று. அரசு தாராளமயமாக்களை கொண்டுவந்ததால், நிறைய உள்நாட்டு/வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில்களை தொடங்கின. கூடவே மக்கள் தொகை பெருக்கமும் கொரோனவை போல் வேகமாக இருந்தது. தொழில் தொடங்க இடம், மக்களுக்கு வீடு என்ற தேவை எல்லாம் சேர்ந்து விலை தாறுமாறாக ஏறியது. தற்போது அதுவும் கொரோனவைபோல் சமநிலைக்கு வந்துவிட்டது.

மேலே குறிப்பிட்ட இரண்டு விஷயங்களிலும் நிறைய மோசடிகள், கணக்கில் வராத  கருப்பு பணம் என விளையாட ஆரம்பித்ததால், அரசு பல வகைகளில் கடிவாளம் போட ஆரம்பிக்க, அங்கேயும் மந்தநிலை  வந்தது.

கிட்டத்தட்ட அதேதான் கிரிப்டோவிலும் நடக்கும். தற்போது சில நாடுகள் கடிவாளம் போட ஆரம்பித்துவிட்டன. இந்தியாவும் விரைவில் அந்த வேலையை ஆரம்பிக்கும். எந்த ஆட்டுமந்தை மனப்பான்மை இந்த விலையேற்றத்திற்கு காரணமாக இருந்ததோ, அதே ரிவர்ஸ் மனப்பான்மை இங்கே விலை வீழ்ச்சிக்கும் வழி வகுக்கும்.

இங்கே இன்னொரு தியரி சொல்வார்கள். ஒரு பொருள் நிறையவே விலை குறைந்தால் வாங்குவது நல்லது என மூளை சலவை செய்வார்கள். இந்த விஷயத்தில் நிபுணர்கள் மட்டுமே இதை சரியாக கணிக்கமுடியும். ஷேர் மார்க்கெட்டில் கொசுவை பூனை, புலி அளவுக்கு அல்ல, யானை அளவுக்கு ஏற்றிவைப்பார்கள். அது புலி அளவுக்கு வந்தாலே விலை வீழ்ச்சி என சாதாரண மனிதன் தலையில் கட்டுவார்கள். எனவே கவனம் தேவை.

ஷேர் மார்கெட்டிலாவது கொசுவை யானையாக்குவார்கள். ஆனால் பிட்காயின் தற்போதைய விலையை எதனுடன் ஒப்பிடுவது. 1டாலருக்கும் கீழே இருந்தது தற்போது அதிகபட்சம் 47 லட்சம் போயிருக்கிறது. இது என்ன லாஜிக்கோ.   இதற்கு சப்போர்ட் பிரைஸ் என எப்படி நிர்ணயிப்பது?

இன்னும் சில காலங்களில் `என்கிட்டே கிரிப்டோ இருக்கு, நல்ல விலை வந்தா சொல்லுங்க` என புலம்பும் மனிதர்களை நாம் காணக்கூடும்.

Friday, January 7, 2022

இங்கே முதலீடு தேவை




சீமானை பற்றி பதிவு எழுதியதால் அவர் குறித்த செய்திகளை இந்த வாரம் அதிகமாக கவனித்தேன். சிந்தனை இப்படியும் அப்படியுமாக ஓடியது. அதில் ஒரு எதார்த்தம் அப்பட்டமாக தெரிந்தது. அது கொஞ்சம் கவலைப்படவேண்டிய விஷயம்.

தற்போது அவருக்கு சொத்தோ அல்லது வேறு நிரந்தர வருமானமோ இருப்பதாக தெரியவில்லை. அதேசமயம் அவர் ஒரு கட்சியின் தலைவர். இடைவிடாது பிரச்சாரம் அல்லது கட்சி வேலை என ஏதாவது செய்துகொண்டிருக்கிறார்; செய்தாக வேண்டும். இதற்கான செலவை கட்சி நிதியிலிருந்து செலவழிக்கலாம். ஆனால் குடும்பம், குழந்தைகள் என இருக்கிறதே, அதற்கான செலவுகள் இருக்குமே, அதற்கு என்ன செய்வது?

மனைவிக்கு மல்லிகை பூவோ, குழந்தைக்கு பிஸ்கட்டோ வாங்க வேண்டும் என்றால் அதற்கு கட்சி நிதியிலிருந்தே செலவு செய்தால் விமர்ச்சனம் வரும். அல்லது `உனக்கு பூ வாங்க வேண்டும், அதற்கு பணம் கொடு` என்று மனைவியிடம் கேட்கதான் முடியுமா?

ஆக நிச்சயம் அவர் தற்போது ஒரு  உளவியல் சிக்கலில் இருப்பதுபோல் தோன்றுகிறது. `நாட்டை அடைய துடிக்கும் எனக்கு,  ஒரு வீடு இல்லை என்பது எப்பேர்ப்பட்ட வரலாற்று பிழை` என்று கொஞ்சம் அதிகப்படியாக பேசியிருக்கலாம். அதேசமயம் இந்த வார்த்தைகளை அவர் பேசியபோது அவருடைய முகபாவனையை நீங்கள் கவனித்திருந்தால் அதில் ஒரு இயலாமை இருந்ததை கவனித்திருக்கலாம்.

பல வீடுகளில் இது நடக்கும். கணவனையோ, மாமியாரையோ திட்டமுடியாத பெண்கள் வீட்டில்  சாமானை கழுவும்போது சத்தம் அபாரமாக இருக்கும். பிள்ளைகளை அற்ப காரணங்களுக்காக  அடிப்பார்கள். இவையெல்லாம் இயலாமையின் வெளிப்பாடு. மனஅழுத்தத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகளை கவனித்தால்  இப்படி எதாவது ஒரு வகையில் இருக்கும். சீமான் பொது மேடையில் செருப்பை தூக்கி காட்டியபோது இவருக்கும் அப்படி எதாவது மனஉளைச்சல் வந்துவிட்டதா என ஒரு சந்தேகம். 

உடம்பில் பலம் இருக்கும் மனிதனை விட பாக்கெட்டில் பணம் இருக்கும் மனிதன் கொஞ்சம் அதிக தெம்போடு இருப்பான். பணம் உள்ளவனைத்தான் இந்த உலகமும் மதிக்கும். இதுதான் எதார்த்தம். சீமானின் வாழ்க்கை முறையை கவனிக்கும்போது அவரிடம் பணம் இல்லை. அந்த இயலாமை காரணமான கோபம் அவருடைய வார்த்தைகளில் செயலில் தெரிகிறது.

இங்கே மீடியாவில் காட்டப்படும் சொத்துக்கள் அவருடைய மனைவி மற்றும் மாமியாருடையது. இதற்கான நிதியை இவர் கொடுத்திருந்தால் இவர் மீது பழிபோடுவதில் அர்த்தம் இருக்கும். அப்படி ஒரு தகவலும் தெரியவில்லை. 

தனக்கு வீடு இல்லை என்பவர் மனைவியின் சொத்தை விற்று வாங்கலாமே என்பதுதான் கேள்வி. ஆனால் அது தன்மானத்துக்கு இழுக்கு அல்லவா. நம் சொத்து என்பது வேறு மனைவியின் சொத்து என்பது வேறு. இது எதார்த்தம் புரியாதவர்களின் வாதம்.

இங்கே நாம் ஒரு எதார்த்தத்தை கவனிக்க வேண்டும். சேவை எப்போதும் இலவசமாக கிடைக்காது.  நாட்டுக்கு ராணுவத்தினர்/ஆசிரியர்கள் சேவை செய்கிறரர்கள். அதாவது அவர்கள் அப்படி சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் இவர்களுக்கெல்லாம் சம்பளம் கிடைக்கிறது. அவ்வளவு ஏன், என்ஜிஓ என பலர் சமூக சேவை செய்கிறார்கள். 10 பேருக்கு நல்லது செய்கிறேன் என்று 12 பேரிடம் வசூலிப்பார்கள். அந்த 2, நிர்வாக செலவு என சம்பளமாக /கிம்பளமாக போய்விடும்.

எங்கே நாம் செய்த வேலைக்கு (சற்று கூடுதலாகவே) கூலி வாங்கிக்கொள்கிறோமோ அங்கே அதை சேவை என சொல்லக்கூடாது. ஆனால் அப்படி சொல்லிக்கொள்வதில் இவர்களுக்கு பெருமை. ப்ரீபெய்ட் சர்வீஸ் என்று சொல்வார்களே அதுபோல் இவர்களுடையது வெல் பெய்டு சர்விஸ் என்று சொல்லலாம். அரசியல்வாதிகளுக்கு அப்படி எதுவும் கிடைப்பதில்லை.
 
இங்கே பதிவுலகில் ஒரு பதிவர் சத்தமே இல்லாமல் ஒரு அறக்கட்டளை ஆரம்பித்து பொது சேவை செய்தார்; பலரின் பாராட்டுகளையும் பெற்றார். இப்போது என்னவாயிற்று? இதுதான் நிஜம். சேவை செய்ய பணம் கொடுப்பது மட்டுமில்லை, அதற்காக நாம் நேரம் ஒதுக்குகிறோமே, அதற்கும் ஒரு விலை உண்டு. அதுவும் குடும்பம், கடமை என உள்ளவர்களுக்கு இது மேலும் கடினம். அது கிடைக்காதபட்சத்தில் இப்படித்தான் போய் முடியும்.

அரசியல்வாதிகளுக்கோ இது இன்னும் ஒரு படி மேல். நீங்கள் மக்களுக்கு சேவை செய்கிறீர்கள் என்றால் ஏழைகள்தான் உதவிக்கு  உங்களை நாடி வருவார்கள். பணக்காரர்கள் அவர்களாகவே பார்த்துக்கொள்வார்கள். இப்படி வரும் ஏழைகளிடம் பணமும் இருக்காது. அவர்களுக்கு காபியே நீங்கள்தான் வாங்கி கொடுக்க வேண்டும்.

கொடுக்காவிட்டால், `ஏழைகளுக்கு பத்து காசு செலவு செய்யமாட்டான், இவனுக்கு நான் ஒட்டு போடணுமா?` என கேட்பார்கள். ஆக உங்களுக்கே பால் வாங்க காசில்லை என்ற நிலையில், இது அவர்களுக்கு கூடுதல் தலைவலி. இங்கே ஊழல் செய்து, அந்த பணத்தில் மக்களுக்கு 100 ரூபாயை கொடுப்பவன் நல்லவனாகிவிடுவான். அது இதைவிட பெரிய கொடுமை.

தற்போது சீமானுக்கு கூட்டம் கூடுகிறது, ஆனால் அது ஓட்டாக மாறுவதில்லை.  நாம் எந்த செயலில் ஈடுபட்டாலும் அங்கே பலனும் வேண்டும் கூடவே பணமும் வேண்டும். ஒன்றில்லாமல் மற்றொன்று சுவைக்காது. 

இங்கே இன்னொரு விஷயத்தையும் கவனிக்கவேண்டும். திருமணமானவர்களுக்கு 6 மாதம் ஹனிமூன். தொழில் செய்பவர்களுக்கு, 2 ஆண்டுகளுக்கு லாபம் வராது அதன் பின் வரும் என்பதும் ஒரு நிலை. அதேபோல் அரசியல் தலைவர்களுக்கு 10 ஆண்டுகள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள காலஅவகாசம் இருக்கும். இவர் இந்த வாசற்படியையும் தாண்டிவிட்டார். இனி அவர் தனித்து நிற்பதும் சிரமம், கூட்டணி அமைப்பதும், ஒரு கூட்டணியில் சரணடைவதும் சிரமம். இதன்காரணமாக நிதி கொடுப்பவர்களும் களைத்து போயிருப்பார்கள். எனவே அங்கேயும் ஏதாவது `குறை` வந்திருக்கலாம். 
   
சரி,  இப்போது தன்னுடைய தனிப்பட்ட செலவுகளுக்கு என்ன செய்கிறார்? நிதி எந்த வகையில் வந்தாலும் அதை தன்னுடைய தனிப்பட்ட/ குடும்ப செலவுக்காக அவர் பயன்படுத்த முடியுமா? அந்த தவறை ஓரளவு செய்தாலும், இது எவ்வளவு நாள் தாங்கும்? வாழ்க்கை முழுக்க இப்படி தொணடர்களை நம்பியோ அல்லது குற்றஉணர்ச்சியோடு ஒரு மனிதன் வாழமுடியுமா? 

ஆக மொத்தத்தில் இங்கே அரசியல்வாதிகள் ஜாப் செக்யூரிட்டி என்ற நிலை இல்லாமல் வாழ்கிறார்கள். இதுதான் நிஜம். ஆரம்பத்தில் அட்டகாசமாக கனவுகளோடும், வாய்சவடாலோடும் ஆரம்பிக்கும் இந்த பயணம், பின்னர் களைத்துப்போய்  தடுமாறும்போது ஊழல் அரசியல்வாதிகள்/தொழிலதிபர்கள் கை கொடுக்க, கடைசியில் இவர்களும் அந்த ஜோதியில் ஐக்கியமாகிவிடுகிறார்கள். அரசியல்வாதிகளின் இந்த அடிப்படை பிரச்சினையை தீர்க்காதவரையில் இந்தியாவில் ஊழல் ஒழியப்போவதில்லை.
 
இங்கே என்ன செய்யவேண்டும்.

தற்போது அரசு பல்வேறு இடங்களில் எதிர்கால நோக்கில் முதலீடு செய்கிறது. நன்கு படிக்கும் மாணவனுக்கு உதவித்தொகை வழங்குகிறது. அந்த மாணவன் படித்து பட்டம் பெற்று நாட்டுக்கு நன்மை செய்வான் என நம்பிக்கை. ஆனால் அதில் பெரும்பாலோனோர் வெளிநாட்டில் வேலை தேடுவார்கள் அல்லது ஓட்டு போடுவதால் என்ன பயன் என வியாக்கினம் பேசுவார்கள். ஆனாலும் அரசு நிச்சயம் மாணவர்கள் மீது முதலீடு செய்யும். அது கடமை. 

இதேதான் விளையாட்டு துறையிலும் நடக்கிறது. தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பலவேறு வகைகளில் உதவி செய்கிறது. அவர்கள் விளையாட்டில் நாட்டுக்கு பெருமை சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கை. ஆனால் ஜெயிப்பவர்களுக்கு மட்டுமே உதவி செய்யமுடியுமா? இங்கே 10 பேருக்கு கொடுப்போம் அதில் ஒருவன் சாதித்தாலே அது நல்ல அறுவடைதான்.

அரசியலிலும் அதேபாணியை கடைபிடிக்க வேண்டியதுதான். ஒட்டு சதவிகிதத்தின் அடிப்படையில் முதல் 5-7 அரசியல்கட்சிகளின் தலைவர்களுக்கு அரசே கவரவமான மாத சம்பளம்  கொடுக்கலாம். தற்போது எதிர்க்கட்சி தலைவரை மட்டும் அரசு அங்கீகரிக்கறது. ஆனால்  இப்படி மேலும் 5 கட்சிகளை ஓரளவாவது ஆதரிக்க வேண்டும். இது ஒரு நல்ல முதலீடாக மாறலாம்.

`அரசியல்வாதிகள் நிறைய சொத்து சேர்த்துவைத்திருக்கிறார்கள் எனவே அவர்களுக்கு எதற்கு பணம்` என கேள்வி எழுப்பும் அறிவுஜீவிகள் நிறைய இருக்கிறார்கள். ஆனால் நேர்மையான அரசியல்வாதிகளுக்கும் பணம் தேவைப்படுகிறது. ஒரு கட்டத்தில் நமக்கான தேவைக்காக மட்டும் கை நீட்டுவோம் என சிம்பிளாக ஆரம்பிக்கும் இந்த தவறுதான் கடைசியில் அவர்களை மெல்ல மெல்ல ஊழல் பெருச்சாலிகளாக மாற்றிவிடுகிறது. எனவே அவர்களின் அடிப்படை தேவையை ஓரளவு அரசு கொடுக்குமேயானால் இது ஓரளவுக்காவது நேர்மையான அரசியல்வாதிகளை தடுமாறவிடாமல் தடுக்கும்.

அதேசமயம் சீமான்  சிறந்த நிர்வாகியாகவோ உருப்படியான தலைவராகவோ எனக்கு தோன்றவில்லை. இவர் வைகோ நம்பர் 2. தானாகவே காணாமல் போய்விடுவார்.

நமக்கு பிடிக்குதோ இல்லையோ, மக்கள் தேர்ந்தெடுத்த ஒருவரை முதல்வர் என மரியாதை தருகிறோம். அதேபோல் ஓரளவு வாக்கு வாங்கும் அரசியல்கட்சிகளுக்கும் பொருளாதார உதவிகளை அளித்து  அரசு அங்கீகரிக்க வேண்டும். அரசியல்கட்சிகள் ஏன் தடம் மாறுகின்றன என யோசித்தபோது வந்த யோசனை இது.

அரசியல்வாதிகள் தங்கள் எதிர்காலம் குறித்து கவலைப்பட ஆரம்பித்தால் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். எனவே இது போன்ற முதலீடுகளும் நாட்டுக்கு தேவை.