!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Sunday, May 4, 2025

காஷ்மீர் மாறி வருகிறதா


சமீபகாலமாக பெஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு இது குறித்து நிறைய கவனிக்க ஆரம்பித்தேன். ஏகப்பட்ட செய்திகள் தெரிகிறது. அதில் நல்ல செய்தியும் கெட்ட செய்தியும் இருக்கிறது. நல்ல செய்தி, காஷ்மீரும் அதன் மக்களும் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்த மாற்றத்திற்கு முக்கியமான காரணமாக நான் கருதுவது மூன்று விஷயங்கள். இந்த மூன்றும் தன்னிச்சையாக அதன் போக்கில் நிகழ்ந்தவை. ஆனாலும் இந்த மூன்றும் ஒன்றுடன் ஓன்று தொடர்புடையவை. இவற்றில் ஒரு தியரி வேலை செய்யவில்லை என்றால் மற்ற இரண்டு தியரியும் எந்த பயனும் தராது.

முதல் மாற்றம் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. இது மோடி செய்த மிகபெரிய நல்ல செய்தி. அங்கே மக்கள் சுதந்திர மற்றும் தீவிரவாத மனநிலையில் இருந்தார்கள். வளர்ச்சி வேண்டும் என்றால் வேலை வாய்ப்பு வேண்டும். அரசும் பொதுத்துறை மூலம் முதலீடு செய்வதை நிறுத்திவிட்டது. அது முட்டாள்தனமும் கூட. எல்லை பகுதி மற்றும் சண்டைகள் அடிக்கடி நடக்கும் பகுதி என்பதால் தனியார் வருவதும் சிரமம். காஷ்மீர்களிடமும் பணம் இல்லை. இது ஒரு சிக்கலான நிலை.

சட்டப்பிரிவு 370 பல விஷ்யங்களை கொண்டிருந்தாலும், பிற பகுதிகளை சேர்ந்த இந்தியர்கள் அங்கே நிலம் வாங்குவதையும் தடை செய்தது. பெரும்பான்மையாக இருக்கும் இந்தியர்கள் அங்கே நிலம் வாங்கி காஷ்மீரிகளை சிறுபான்மை மக்களாக மாற்றும் அச்சுறுத்தல் இருந்ததால் இந்த சட்டம் தேவைப்பட்டது.

தற்போது அந்த சட்டம் நீங்கிவிட்டதால் முதலீடுகள் வந்து வேலை வாய்ப்பு, கல்வி என பல வாய்ப்புகள் உருவானால் தீவிரவாதம் மறைந்து மக்கள் தேசிய நீரோட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக இணைகிறார்கள். இருந்தாலும் இன்னமும் பிரிவினைவாதம் என்பது 30-40 சதவிகித மக்களிடம் இருக்கும். அதுவும் மறைய இன்னும் 20 வருடங்கள் தேவைப்படும். இது நல்ல செய்தி. இந்த சாதனைக்கு சொந்தக்காரர் மோடிதான்.

ஆனாலும் ஒரு விஷயத்தில் அவர்களின் பயம் நியாயமானதுதான். இலங்கையில் தமிழர் பகுதியில் சிங்கள குடியேற்றம் என தகவல் வருவதில்லையா. அது போல் இங்கும் நடக்க வாய்ப்பு இருக்கிறது. இந்தியா வேண்டும் என்றே இதை செய்யப்போவதில்லை. ஆனால் காஷ்மீரிகளிடம் பணம் இல்லாமல் மற்ற மாநில தொழில் அதிபர்களிடம் பணம் இருந்து இயல்பாக அங்கே நிலம் வாங்கினால், காலஓட்டத்தில் காஷ்மீரிகளின் அச்சம் நியாயம் என்ற உணர்வு வந்துவிடும். எனவே இதற்கும் ஒரு தீர்வு தேவை.

இரண்டாவது விஷயம் என்னவென்றால் பாகிஸ்தான் நாசமாக போனது. நாம் அவர்களை எதுவும் செய்யவில்லை. அவர்களே குழி தோண்டி படுத்துக்கொண்டு உலகை குறை சொல்கிறார்கள். மதம், தீவிரவாதம் என இரண்டு உருப்படாத, டயரே இல்லாத, வண்டியில் ஏறி அமர்ந்து, ஏன் இந்த வண்டி ஓட மாட்டேங்குது ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள். இது நமக்கு நல்ல செய்தி, அவர்களுக்கு கெட்ட செய்தி.

மூன்றாவதாக, தற்போது காஷ்மீர் மக்களின் இந்த முக்கியமான மனமாற்றத்திற்கு காரணம் இணையமும் சமூகவலைதங்களின் அபாரமான வளர்ச்சியும்தான். ஒரு காலத்தில் வேலை தேடி வெளிநாடு சென்றால், அங்கே சூழ்நிலை எப்படி என்பது அவர் சில வருடங்களுக்கு பிறகு ஊருக்கு வந்தபின்தான் தெரியும். அதன்பிறகுதான் நீங்கள் அங்கே போகலாமா வேண்டாமா என முடிவெடுப்பீர்கள்.

தற்போது நிலைமை தலைகீழ். பாகிஸ்தானின் வண்டவாளம் தண்டவாளம் என எல்லாம் விஷயங்களும் இணையத்தில் நாறுகிறது. அதே சமயம் இந்தியாவின் கருத்து சுதந்திரமும், வளர்ச்சியும் அதே அளவுக்கு காஷ்மீரிகளுக்கு விரைவாக போய் சேருகிறது. இங்கே சண்டை சச்சரவுகள் இருந்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பான நாடு இந்தியாதான் என்பதை இந்த விரைவான தகவல் பரிமாற்றம் அவர்களுக்கு உணர்த்திவிட்டது.

ஒரு காலத்தில் பத்திரிகைகள்தான் தகவலை கொடுத்தார்கள். மக்கள் அதை நம்பவில்லை. இப்போது யூடுப் மூலம் உங்கள் மண்ணின் மைந்தனே இந்த உண்மைகளை காட்டும்போது அவர்கள் புரிந்து கொண்டார்கள், நம்புகிறார்கள்.

நான் கவனித்த வரையில் கணிசமான காஷ்மீர் மக்களுக்கு தற்போது பாகிஸ்தான் மீது எந்த காதலும் இல்லை. அதே சமயம் இந்திய ஆதரவு என்பதும் ஓரளவு கூடி இருக்கிறது. அது 10ல் 30-40 என்ற அளவில் இருக்கக்கூடும். விரைவில் காஷ்மீரில் மக்கள் பாகிஸ்தான் கொடியை எரித்தாலும் நான் ஆச்சர்யப்படமாட்டேன்.

தற்போது அங்கே காஷ்மீரிகள் கொடுக்கும் பேட்டியை கவனிக்கும்போது அதில் ஒரு வருத்தம் தெரிகிறது. அவர்கள் இதை ஆதரிக்கவில்லை என்பதும் புரிகிறது. ஒரு காஷ்மீரி சொன்னார். `அடுப்பில் சோறு இருந்தது. அதை நாங்கள் சாப்பிடுவதற்குள்  இந்த தீவிரவாதிகள் அதில் விஷத்தை வைத்துவிட்டார்கள்` என வேதனைப்பட்டார். இவர் இந்திய ஆதரவை எடுத்திருக்கும் நபராக இருக்கலாம். ஆனால் பாகிஸ்தானை எதிர்ப்பதும் தீவிரவாதிகளை பகைத்துக்கொள்வதும் இப்போதைக்கு அவர்களுக்கு ஆபத்து. எனவே அதை கண்டிக்க மாட்டார்கள். அது வெறும் வாயளவில் இருக்கும். இருந்தாலும் இதுவே நல்ல விஷயம்தான்.

எப்படி இந்திய அரசு எல்லாம் நல்லபடி நடக்கிறது என்று கொஞ்சம் அசட்டையாக இருந்துவிட்டார்களோ அதேபோல் காஷ்மீரிகளும் இதை எதிர்பார்க்கவில்லை. இங்கே பெரும்பான்மையான என்ற வார்த்தையை சேர்த்துக்கொள்கிறேன். ஏனென்றால் 10 சதவிகித மக்கள் எப்போதும் இந்திய எதிர்ப்பில் இருப்பார்கள். அவர்கள் இந்த தீவிரவாதிகளுக்கு உதவி செய்திருக்கலாம். 

இனி இந்திய உளவுத்துறையும் கவனமாக இருக்கும், காஷ்மீரிகளும் இனி சந்தேகப்படும்படியான தகவல்களை அரசிடம் பகிரும் வாய்ப்பு இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக அவர்கள் அனுபவித்த சுதந்திரம், வளர்ச்சி என்பது அவர்களுக்கு ருசியை காட்டிவிட்டது. இந்த ருசி அவர்களுக்கு நிரந்தரமாக வேண்டுமென்றால் அவர்கள் இந்தியாவுடன் கைகோர்த்து நடப்பதில்தான் இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள் என்றுதான் நானும் கணிக்கிறேன்.

கடைசியாக 

இனி காஷ்மீரிகளும், முஸ்லிம்களும் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும். முஸ்லிம்கள் `இஸ்லாம் இதை ஆதரிக்கவில்லை நாங்கள் இது போன்ற தீவிரவாத செயல்களை கண்டிக்கிறோம்` என வாயால் வடை சுடுவார்கள். மறுபடியும் சில ஆண்டுகளுக்கு பின் இதேபோல் நடக்கும். இப்போது மறுபடியும் அதே வசனம். அதாவது முஸ்லிம்கள் தீவிரவாத செயல்களை கண்டிப்பார்கள் ஆனால் அவர்களை தண்டிக்கமாட்டார்கள். இது அவர்களுடைய ஸ்டைல். 

இப்போது பேயிங் த சேம் காயின் என்று சொல்வார்களில்லையா அதைத்தான் தற்போது அமெரிக்கா தலைமையிலான மேலை நாடுகள் செய்கின்றன. இஸ்ரேல் காஸா மீது குண்டு மழை பொழிந்து அதை சுடுகாடாகியபோது, மேலை நாடுகள் கடுமையாக கண்டித்தன. அவ்வளவுதான். அவர்கள் இஸ்ரேலை தண்டிக்கவில்லை. ஒன்றரை ஆண்டுகள் முடிந்தும் இன்னமும் அங்கே குண்டு மழைதான். அதாவது நாங்களும் முஸ்லீம் மாதிரிதான் சும்மா கண்டிப்போம், ஆனால் தடுக்கமாட்டோம் என்று அதே பார்முலாவை கடைபிடிக்கிறார்கள்.

வழக்கமா கல்யாணத்துக்கு அல்லது ஏதாவது விசேஷத்துக்கு பத்திரிகை வச்சி அழைக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால் `வா எங்க ஏரியாவை சுடுகாடா மாத்து' என பத்திரிக்கை வைத்து அழைப்பு கொடுத்தவர்கள் இந்த ஹமாஸ் பிரிவினர். தற்போது பாகிஸ்தானும் அந்த லிஸ்டில் சேர்ந்திருக்கிறது.  

0 comments:

Post a Comment