இது ஒரு நேரம்கெட்ட பதிவு. அணு உலை விபத்திற்கு பிறகு, அதன் பாதிப்பை இன்னும் முழுதாக அலசமுடியாத நிலையில் , அணு உலைகளுக்கு ஆதரவாக யாரும் எழுத மாட்டார்கள். இருந்தாலும் கல்கியில் ஞாநி அவர்களின் அணுஉலைகள் பற்றிய `பிருமாண்டமான இலவசம் வருகிறது! உஷார் !!` என்ற கட்டுரையை படித்தவுடன் அதற்கு பதிலளிக்க வேண்டும் என்று தோன்றியது. எனவே எழுதிவிட்டேன்.
ஜப்பானில் பூகம்பம் ஏற்பட்டு அணு மின் நிலையங்கள் விபத்தில் சிக்கிய பிறகு, இப்படி ஒரு ஆபத்தான பாதையில் நாம் போகவேண்டுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இன்றைய நமது தேவைக்காக பல தலைமுறைகளை சிக்கலில் விட்டுவிட்டு செல்ல நமக்கு உரிமை இருக்கிறதா என்ற கேள்வியெல்லாம் கேட்கப்படுகிறது.
நியாயமான கேள்விதான் இது. ஆனால், ஒரு ஊதாரி தகப்பனாக நாம் நமது பரம்பரை சொத்தை காலி பண்ணிவிட்டு, பிள்ளைகளை நிதி ஆதாரம் இல்லாமல் நடுத்தெருவில் விட்டுவிட்டு செல்லும் உரிமை மட்டும் நமக்கு இருக்கிறதா? இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது? ஏனென்றால் நாம் தற்போது அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். தற்போதைய நிலைமையை அப்படியே தொடர்ந்தால், எதிர்கால சந்ததியருக்கு எரிபொருள் இல்லாமல் மாட்டுவண்டியும், கைவிசிறியும் கூடவே பூமியை வாழ முடியாத அளவுக்கு வெப்பமாகவும் மாற்றிவிட்டுப் போகப்போகிறோம்.
