!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Monday, January 17, 2011

சிறை அனுபவம்: லஞ்சம். சாரி, ராமகிருஷ்ணன்...

சில தவறுகளை செய்யத்தூண்டும் அல்லது அதை நியாப்படுத்த கூடிய காரணங்கள் இருக்கின்றன என்பதை நான் எனது சிறை அனுபவத்தில் தெரிந்து கொண்டேன். இதோ, எனக்கும் அப்படி ஒரு அனுபவம்...      

`நான் கோர்டுக்கு வருவேன். என்னை வந்து பாருங்கள்` என்று சிறை நண்பர் (கேரியர்) ஒருவர் மெசேஜ் சொல்லி அனுப்பியி ருந்ததால்,அவரை பார்க்க ஐகோர்ட் வளாகத்துக்கு சமீபத்தில் செல்ல நேர்ந்தது. அந்த நேரம் வனிதா விஜயகுமார் குடும்பநல கோர்ட்டுக்கு வந்தாரோ அல்லது கிளம்பி கொண்டிருந்தாரோ... பிளாஷ்கள்  மின்னி கொண்டிருந்தன.

நான் பார்க்க வந்த நண்பர் வந்துவிட்டிருந்தார். ஆனால் அவரை அழைத்து வந்த எஸ்கார்ட் வண்டி மறைவாக இருந்ததை நான் கவனிக்கவில்லை. புழல் சிறையில் இருந்து வேறு சில வண்டிகளும் வந்திருந்ததால், அங்கு நின்றிருந்த ஒரு போலீசாரிடம் `EC கோர்ட் வண்டி வந்துவிட்டதா?` என்று விசாரித்தேன்.

 `யாரை பாக்கணும்? அவர் பேர் என்ன ? உனக்கு அவர் என்ன வேணும்?` என்று அந்த போலீஸ்காரர் கேள்வி மேல் கேள்வி கேட்க...  எனக்கு ஒரே குழப்பம். இருந்தாலும், `நான் அவரோட பிரென்ட்.` என்று அறிமுகப்படுத்திகொண்டேன்.

அதன்  பிறகு உள்ளே போனவர், கொஞ்ச நேரம் கழித்துதான் வந்தார். வந்தவர் கொஞ்சம் ஓரமாக நின்றிருந்த என்னை தேடியே வந்து,  `கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... வண்டி வந்துடுச்சு` என்றார். - இந்த முறை அவர் பேசும் தொனி கொஞ்சம் மாறி இருந்தது.

`நீங்க எங்கேயிருந்து வர்றீங்க?` - கேள்விகள் மேலும் தொடர்ந்தன.

``இங்கதான்... நங்கநல்லூர்.``
  
``சென்னைதானா... அப்ப நீங்க எங்கேயும் போவல இல்ல... இடம் இல்லாததால வண்டியை  உள்ளே விட்டிருக்காங்க... எப்படியும் மதிய சாப்பாட்டுக்கு பிறகுதான் கிளம்புவாங்க. இங்கியே இருங்க. பாத்துட்டு போவலாம்.`` - நான் எந்த கேள்வியும் கேட்காத அளவுக்கு எல்லா பதிலையும் அவரே சொல்லிவிட்டார்.

ரிமாண்ட் கைதிகளை ஜெயிலுக்கு சென்று மனு போட்டு பார்ப்பதை விட இப்படி கோர்ட்டுக்கு வரும்போது பார்த்தால், கொஞ்சம் தெளிவாக பேசலாம். புழல் சிறைக்கு பார்க்க சென்றால் அங்கே பேசிவிட்டு அவர்களுக்கு ஏதாவது பொருட்கள் வாங்கித்தரலாம். இங்கே முடியாது. அவவளவுதான்.

ஆனால், ஜெயிலுக்கு சென்று கைதிகளை பார்க்க உங்களுக்கு அசாத்திய பொறுமை வேணும். கைதிகளை பார்க்க மனு எழுதி கொடுத்துவிட்டு நீங்கள் வெயிலில் மணிக்கணக்கில் காத்திருக்கவேண்டியது மட்டுமின்றி, உள்ளே சென்றதும் உங்கள் உறவினரிடம் (கைதி ) பேச தொண்டைகிழிய கத்தவும்வேண்டும் . நான் சிறையில் இருந்தபோது என்னை பார்க்க வந்தவர்கள் பேசியது புரியாமல் பல சமயங்களில் நான் தலையைமட்டும் ஆட்டியிருக்கிறேன். எனவே கோர்ட்டில் பார்ப்பதுதான் நல்லது என்பதால் நான் இங்கே வந்தேன்.

ஆனால் அந்த போலீஸ்காரர் பேசிய விதம் என்னை குழப்பியது. வழக்கமாக சில ரிமாண்ட் கைதிகள் கோர்ட்டுக்கு வரும்போது எப்படியாவது எதையாவது (பீடி, ஹான்ஸ், கஞ்சா, அட... சில சமயம் வத்திபெட்டி கூட)  கடத்த முயற்சிப்பார்கள் என்பதால் இங்கேயும் கடுமையான பாதுகாப்பு உண்டு. அப்படி ஏதாவது கடத்தி நம்ம பேர் கெட்டுடும்ன்னு இந்த எஸ்கார்ட் போலீசார் கொஞ்சம் ரஃப்பாவே இருப்பாங்க. கிட்ட நெருங்கவே விடமாட்டார்கள்.

ஆனா இவர் சாஃப்டாவும், மரியாதையாவும் பேசியது கொஞ்சம் வித்தியாசமா இருந்தது. முக்கியமா, `இருங்க பாத்துட்டு போவலாம்!`னு அவர் விருந்தாளியாய் கவனிப்பது போல் பேசியது நான் எதிர்பாராதது.  

போதை பொருள் கடத்தல் கைதிகளை, அவர்கள் கைது செய்யப்பட பிறகும் அவர்களை சந்திக்க யார் யார் வருகிறார்கள் என்று NCB கண்காணிப்பதாக `உள்ளேயே`  எனக்கு சொல்லியிருந்தார்கள். எனவே எனக்கு சந்தேகம் வலுத்தது. `ஒருவேளை என்னை கண்காணிக்கிறார்களா? என்னை மேலும் விசாரிக்க யாராவது வருகிறார்களா? அவர்கள் வரும்வரை நான் இங்கு இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் என்னை இங்கு இருக்கசொல்கிறாரா?` பலவிதமான சந்தேகம் எனக்குள் ஓடியது. இருந்தாலும் `மடியில கணம் இருந்தாதானே வழியில பயப்படனும்` என்பதால் யார் வந்தாலும் வரட்டும் பார்த்துக்குவோம்னு இருந்தேன்.

கொஞ்ச நேரம் கழித்து அந்த வண்டி முன்னே வர, நண்பர்களுடன் கொஞ்சம் பிரீயாகவே பேசினேன். அவர்களுடன் பேசிய கொஞ்சநேரத்துலேயே தெரிந்துவிட்டது `எலி ஏன் அம்மணமா ஒடுச்சுன்னு`.

``அண்ணே. பணம் வச்சிருக்கீங்களா? - நமது கைதி நண்பர்.

``ம்.. இருக்கு. உங்களுக்கு என்ன வேணும்!``

``ரெண்டு அங்க கொடுங்க... ``

இதற்குள் அந்த போலீஸ்காரர் இடைமறித்து, `அஞ்சு கொடுக்கசொல்லுப்பா!` என்றார்.

எனக்கு புரிந்து போனது. வழக்கமாக கோர்டுக்கு வரும் கைதிகளை பார்க்க வரும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவர்களுக்கு இங்கே டீ, பிஸ்கட் வாங்கி கொடுத்துவிட்டு கூடவே போலீசாரையும் கவனிப்பதும் உண்டு. சில சமயம் தேறும்.சில சமயம் தேறாது. ஆனால் இதற்கு பழக்கப்பட்டுவிட்ட அவர், கோர்ட்டுக்கு அழைத்து வந்த கைதிகளிடம், `யாராவது வருவார்களா` என்று விசாரித்திருக்கிறார். என் நண்பர், நான் வருவதை குறிப்பிட்டு என்னிடம்   `வாங்கி தருகிறேன்` என்று சொல்லியிருக்கிறார். எனவேதான் `இருங்க பாத்துட்டு போவலாம்` என்ற அக்கறை.

இந்த சின்ன விஷயத்துகெல்லாம் ரெண்டே அதிகம் என்பதால் `நான் பணம் அதிகம் எடுத்து வரவில்லை` என்று கூறி சமாளித்தேன். இருந்தாலும் அவர்களுக்கு `கறக்கவா` தெரியாது. நண்பர்களுக்காக வாங்கிய பொருட்களில் அவர்களுடைய லிஸ்டையும் இணைக்க அதையும்  கவனிக்கவேண்டியதாகியது.

நான் சிறையில் இருந்த போது, சத்தியாகிரக அறக் கட்டளை நிறுவனத் தலைவர் ராம கிருஷ்ண சாஸ்திரி சிறை வாசிகள் அனைவரின் காலிலும் விழுந்து யாருக்கும் லஞ்சம் கொடுக்காதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். அந்த நேரம் அவருக்கு வாழ்த்து கூறி, லஞ்சம் கொடுக்கமாட்டேன் என்று உத்தரவாதம் கொடுத்தேன்.ஆனால்,  நடைமுறையில் இதை கடைபிடிக்க அசாத்திய மன உறுதி வேண்டும்.இங்கே நான் கொடுத்தாகவேண்டும் என்ற அவசியம் இல்லை என்றாலும்...  (பலர் வாங்குவதற்க்கே கூச்ப்படாத நிலையில், `கொடுத்தேன்` என்ற வார்த்தையை எழுதுவதற்கே எனக்கு தயக்கம்.)     காரணம்,  நான் பட்ட கடன்தான்.

நான் ரிமான்டிலேயே இரண்டரை வருடம் சிறையில் கழித்ததால் குறைந்தது மாதம் ஒருமுறையாவது காவல் நீட்டிப்புக்காக கோர்ட்டுக்கு போகவேண்டி இருந்தது. நான் வழக்கமாக சிறையில் காலை படியை தொடுவதில்லை. கோர்ட்டுக்கு போகும் கைதிகளுக்கு மதிய உணவாக புளிப்பில்லாத புளிசோறு கட்டித்தருவார்கள். நான் அதையும் சாப்பிடுவதில்லை. எனவே கோர்ட்டுக்கு போகும் அன்று, திரும்பி வர மணி 6 -ஆகிவிடும் என்பதால்,  பகல் முழுக்க பட்டினிதான். எனவே மதியமே வயிறு காய ஆரம்பிக்கும். இது போன்ற நேரத்தில் ஆபத்பாந்தவனாக வந்து எங்களுக்கு டீ, பிஸ்கட் என வாங்கி கொடுத்து கொஞ்சம் பசியாற்றுவது எங்களை பார்க்க வரும் உறவினர்கள்தான். ஆனால் என்னை பார்க்க வந்தது இருமுறைதான். மற்ற சமயங்களில் அறிமுகமில்லாத பலர் வாங்கி கொடுத்து அவர்கள் புண்ணியம் தேடிக்கொண்டு என்னை கடனாளியாக்கிவிட்டார்கள். அந்த கடனை நான் சரி செய்யவேண்டும்.

இன்னொரு பக்கம், நான் பார்க்க வந்த நண்பர்கள் சிறையில் அவர்களுக்கு எது கிடைத்தாலும் என்னிடம் பகிர்ந்து உண்டார்கள். ஆனால் நான் பகிர்ந்து கொண்டது குறைவு. அந்த கடனையும் நான் அடைக்க வேண்டும். எனவேதான் நான் இவர்களுக்கு டீ, பிஸ்கட் வாங்கி கொடுப்பது சிறிய உதவியாக இருந்தாலும், அதை நான் செய்தே ஆகவேண்டும். எனவே சில சறுக்கல்கள். அப்புறம்... நான் `சறுக்கி`யாவது இவர்களுக்கு உதவி செய்ய இன்னொரு காரணமும் (கண்டிப்பா சுயநலம் இல்ல)  இருக்குது. அது உங்களுக்கு தேவையில்ல. அதனால விட்ருங்க.  

சமுதாயத்தை குறை சொல்பவர்கள், அதை திருத்த முயற்சிப்பவர்கள், மற்றவர்களுக்கு முன் உதாரணமாய் வாழ்ந்துகாட்ட வேண்டும். அந்த வகையில் நான் செய்தது தவறுதான். சுயஆதாயத்துக்காக இது போன்ற செயலில் இறங்கக்கூடாது என்று மட்டும் நான் உறுதிமொழி எடுத்துக்கொண்டேன்.
  
பிடித்திருந்தால் வாக்களியுங்கள் 

0 comments:

Post a Comment