!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Tuesday, February 18, 2020

அற்புதமான அறிவாளிகள்


சமீபத்தில் சில செய்திகளை படித்தபோது இந்தியா எப்பேற்பட்ட அற்புதமான அறிவாளிகளை கொண்ட நாடு என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.

இது அதில் ஓன்று.  இந்தியா சீனாவிலிருந்து இந்தியர்களை விசேஷ விமானம் மூலம் அழைத்து வந்திருக்கிறது.  நல்லதுதான். ஆனால் ஒரு விஷயம்  இடித்தது. நான் இது தொடர்பாக இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது  இன்னொரு செய்தியையும் கவனித்தேன். வழக்கமாக எங்கேயும் நடப்பதுதான். அவசர காலங்களில் அத்தியாவசிய பொருட்களை பதுங்குவது.

அதாவது கோரோனோ பீதியால் நோய் பரவிய அந்த சில வாரங்களில் எல்லோரும் மாஸ்க் வேண்டும் என நாயாய் அலைந்திருக்கிறார்கள்.

இங்கேயிருந்து காலியாக போன விமானத்தில் நம்மிடம் இருந்த மாஸ்குகளை முடிந்தவரை கொண்டுபோய் கொடுத்திருக்கலாம். ஆனால் நம் ஆட்கள் செய்யவில்லை. நான்கு நாள் கழித்து, நம் மோடி அவர்களுக்கு கடிதம் எழுதுகிறார். `இந்த நேரத்தில் நாங்கள் உங்களுக்கு பக்கபலமாக இருக்கிறோம். தேவைப்பட்ட உதவிகளை செய்கிறோம்` என்று கடிதமும் எழுதுகிறார். உதவி என்பது இப்படி கேட்டு செய்வதா ?

சீனா இந்தியாவைவிட பலமானதுதான். இந்த உதவியும் சாதாரமானதுதான். இந்த நேரத்தில் அவர்களுக்கு இது அவசியம் தேவை. கொண்டுபோய் கொடுத்திருக்கலாம்.

நமது நண்பர் ஒருவர் வேலையைவிட்டு நின்று விட்டார். முதலாளிக்கும் கோவம் வரும் என்பதை இவர் உணரவில்லை. தொழிலாளிக்கும் ரோஷம் உண்டு என்பதை முதலாளி உணரவில்லை. வேறு இடத்துக்கு வேலைக்குப்போன  சில மாதங்களிலேயே இவருடைய வீட்டில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை. புது முதலாளி இவரை பற்றி தெரியாததால் அவ்வளவாக உதவவில்லை. மருத்துவ செலவு கண் பிதுங்கியது.

பழைய முதலாளி இதை கேள்விப்பட்டு வந்தார். நலம் விசாரித்தவர், அவரை தனியே அழைத்துப்போய், சற்றும் எதிர்பாராதவிதமாக அவர் பாக்கட்டில் கொஞ்சம் பணத்தை வைத்து `செலவுக்கு வைத்துக்கொள்` என்று சொல்லிவிட்டார். இதை அவரால் மறுக்கமுடியாது.

இதுவே நாலுபேர் மத்தியில் `உனக்கு ஏதாவது உதவி தேவை என்றால் சொல்` என்றால், இவர் கேட்டிருப்பாரா? அவரிடம் வேலை செய்யாத நிலையில் நிச்சயம் மறுத்திருப்பார். அது அவருக்கு கவுரவமாக இருந்திருக்கும். அவ்வளவுதான். (பின்னர் இவர் மீண்டும் அங்கேயே வேலைக்கு போய்விட்டார்.)

உதவி செய்யும் மனிதர்கள் இப்படித்தான். இவர்கள் கேட்டு செய்யமாட்டார்கள். அதுவும் நாலுபேர் மத்தியில் நிச்சயம் கேட்கமாட்டார்கள்.

ஆனால் நம்ம மோடிஜி எது செஞ்சாலும் நாலுபேர்  பார்க்கற மாதிரி செய்யறவர்.

இதே கதைதான் பாகிஸ்தானுக்கும், நம் ஆட்களை அழைத்து வந்தாகிவிட்டது. பாகிஸ்தான் அப்படி செய்யவில்லை. ஏதாவது காரணம் இருக்கலாம். சீனாவில் உள்ள  பாகிஸ்தானிகள் இணையத்தில் இதை குறிப்பிட்டு கதறும்போது மனது நெருடுகிறது.

இந்திய வெளியுறவுத்துறை அனைத்து அண்டை நாடுகளையும் கேட்டதாம். அவர்கள் மறுத்துவிட்டார்களாம். இந்தியாவை ஜன்ம எதிரியாக பார்க்கும் பாகிஸ்தான் இந்திய உதவியை  ஏற்குமா?

இங்கே வார்த்தைகளும் நோக்கமும்தான் முக்கியம். `நாம இந்த வாரம் புல்லா காஷ்மீர்ல சண்டை போடுவோம், அது வேறே. இது மனித நேய உதவி. நாங்க அவங்களை அழைத்து வந்து, சரியானதும் பாகிஸ்தானுக்கு அனுப்பிவிடுகிறோம்` என்று இம்ரான்கானிடம் பஞ்ச் டயலாக் பேசியிருக்கலாம்.

இந்த பக்கம், சீனாவிடம் `உனக்கு பேஷண்டுகளை கவனிக்கவே நேரம் பத்தாது. இதுல இவங்களை எப்படி கவனிப்பாய் ? எனவே விதிமுறைகளை பார்க்காமல் அனுப்பிவை` என்று  அங்கே  கொஞ்சம் செண்டிமெண்ட் காட்டியிருக்கலாம்.

சந்தேகம்தான். ஆனால் நாம் சிலருக்கு உதவ வேண்டும் என முயற்சித்தால் எதுவும் சாத்தியம். பெரும்பாலான உடைந்துபோன உறவுகள் இக்கட்டான நேரத்தில் உதவுவதன் மூலம் இணைந்திருக்கின்றன.
                   

Thursday, February 13, 2020

அதிர்ஷ்டம்: அரவிந்த் கெஜ்ரிவால்


அதிர்ஷ்டம். இதை சிறுவயதிலிருந்தே கவனித்துக் கொண்டிருக்கிறேன். ஆரம்பகாலங்களில் தன்னம்பிக்கை நிறைய இருந்ததால் அதை மூட நம்பிக்கை என்று இருந்தேன். ஆனால்  அதன்பின் பல சூழ்நிலைகள் அதை நம்ப வைத்திருக்கிறது.

உதாரணத்திற்கு ஒரு சம்பவம் போதும். அப்போது லாட்டரி வியாபாரம். இது நம்பகமான துறை இல்லை என்பதால் இதை நம்பி எதுவும் செய்ய முடியாது.  நிச்சயமற்ற நிலைமை. நானும் டிபரஷன் மனநிலைக்கு வந்திருந்தேன். நமக்கே லாட்டரி விழுந்தால் செட்டில் ஆகிவிடலாம் என்று குறுக்குபுத்தியில் இருந்தேன். அப்போதெல்லாம் டிக்கெட் விற்காவிட்டால்  மதியம் 3 மணிக்குள் திரும்ப கொடுத்துவிடலாம். ஆனால் பல சமயம் செய்வதில்லை. நானே வைத்து பார்ப்பேன். தினம் 500, 1000 நஷ்டம் வரும். இப்போது அதை நினைத்தால் கண்ணில்  ரத்தம் வருகிறது

இப்படி பல  நாட்கள்,மாதங்கள் நஷ்டங்களை  சந்தித்த பிறகு ஒரு நாள் இரவு 7 மணிக்கு 100 ரூபாய் அளவுக்கு டிக்கட் மீந்துவிட்டது. வாடிக்கையாளர் ஒருவர் வந்தார். இவர் தினம் வாங்குபவர் இல்லை. என்ன பண பிரச்சினையோ, `ஏதாவது லாட்டரி இருக்கா, அதுதான் என் பிரச்சினை தீர்க்கும்` என்று சொல்லி கேட்டார். 

அப்போது ஒரு தில்லுமுல்லு நடந்து கொண்டிருந்தது. லாட்டரி ரிசல்ட் மறுநாள்தான் பேப்பரில் வரும். சிலர் முன் கூட்டியே பரிசு விழுந்த நம்பரை மதியம் 4 மணிக்கே போன் மூலம் வாங்கிவிடுவார்கள். இதற்கென்று சிலர் இருந்தார்கள். பல கடைக்காரர்களுக்கு இது தெரியாது. பரிசு விழுந்த டிக்கட்களை இந்த திருட்டு கும்பல் கடைக்காரர்களுக்கே தெரியாமல் அவர்களுக்கு பிடித்த நம்பரை வாங்குவது போல் வாங்கிவிடுவார்கள்.

இது பின்னர் எங்களுக்கு தெரிய வந்ததால் 4 மணிக்கு மேல் டிக்கட் வாங்குபவர்களை கவனிப்போம். சந்தேகம் என்றால் விற்கவே மாட்டோம்.

இவர் அப்படிப்பட்டவர் இல்லை. நான் அப்போது இருந்த வெறுப்பில் `இருக்கு, ஆனா மொத்தமா வாங்கணும்..` என்று கண்டிஷன் போட்டேன். அத்துடன் அசல் வந்தால் போதும் என்று 30+10 பர்சென்ட் தள்ளுபடியெல்லாம் கொடுத்து அந்த 100 டிக்கட்டை 60 ரூபாய்க்குத்தான் அவரிடம் விற்றேன். விதி அப்போதே என்னை பார்த்து சிரித்திருக்கிறது. நான்தான் உணரவில்லை.

மறுநாள் அந்த லாட்டரியில் அவர் 60,000 பரிசு பெற்றார். 20 வருடத்துக்கு முன் பெரியதொகை. ஒரு வாரத்துக்கு சிவா புராணம்தான். அந்த சிவாவை (பாடலீஸ்வரர்) பார்த்துவிட்டு இந்த சிவாவை பார்த்தேன், கைமேல் பலன் என்று எனக்கு மார்க்கெட்டிங் மேனேஜராக இருந்தார்.

எனக்கு தனியாக இதில் பாதி அல்லது கொஞ்சம் குறைவாக போனஸாக கிடைக்கும்.  ஆனால் அங்கேயும் விதி விளையாடியது. அப்போது  சில வியாபாரிகள் போனஸை மட்டும் தனியாக விற்கும் பழக்கத்தை ஆரம்பித்திருந்தார்கள். அந்த வகையில் நான் போனஸை வேறு ஒருவரிடம் விற்க, அவர் `சிவா நீயும் நானும் ஷேர்`  என்று என்னையும் அதில் இழுத்திருந்தார். எனவே அந்த போனஸில் பாதி கிடைத்தது.  இல்லையென்றால் நான் அன்றே ஹார்ட் அட்டாக் வந்து செத்திருப்பேன். வலையுலகம் ஒரு பிரபல பதிவரை இழந்திருக்கும்.

அந்த பரிசு பெற்ற நபர் எனக்கு 5000 ரூபாய் கொடுத்து, ஒரு வாரத்துக்கு இலவச டீயூம்  வாங்கி கொடுத்தார். கூடவே `சிவா உன்னை நான் வாழ்நாளில் மறக்கவே மாட்டேன்` என்றும் சொன்னார்.

`நீங்களாவது இந்த ஜென்மத்துல மறக்க மாட்டீர்கள்,  நான் உங்களை அடுத்த ஜென்மத்துலேயும் மறக்கமாட்டேன்` என்று பல்லை கடித்தேன். எனக்கு ஏற்பட்ட பல அனுபவங்களில் இது ஓன்று. இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் அந்த நபருக்கு அதிர்ஷ்டம் இருந்திருக்கிறது. அவ்வளவுதான்  

அரவிந்த் கெஜ்ரிவால்

அதே கதைதான். பொருளாதார மந்தம், ஜி எஸ் டி தலைவலிகள் பத்தாது என்று என் ஆர் சி மற்றும் சி ஏ  ஏ பிரச்சினையும் சேர்ந்து கொள்ள, காங்கிரஸ் ம்ஹும்... நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன் என்று ஒதுங்கிக்கொள்ள, அத்தனையும் அவருக்கு சாதகமாக உருவாகி இருக்கிறது.

அத்வானி அவருக்காக ரோடு போட, அதில் அதிர்ஷ்டம் மோடிக்கு வண்டி ஓட்ட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. அன்னா ஹசாரே அவர் ஏதோ  கணக்கில் போராட்டத்தை ஆரம்பிக்க, பலனை கெஜ்ரிவால் அறுவடை செய்தார். அத்வானியை போல் இவரும் தற்போது  செய்திகளில் வருவதில்லை.

தமிழகத்தில் அம்மா மண்டையை போட, நினைத்தே பார்க்க முடியாத எடப்பாடி அரியணை ஏறினார். அதுமட்டுமா பிஜேபிக்கு தமிழ்நாட்டில் ஆள் இல்லாததால், இந்த ஆள் நமக்கு தேவை என அவருக்கு பின்னால் நிற்க...இந்த அதிர்ஷ்டம் காரணமாகவும் அவர் காட்டில் மழை.

இந்த தலைவர்களுக்கு திறமை இருக்கிறது என்பது உண்மையானாலும், அதிர்ஷ்டம் இவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருக்கிறது என்பதும் உண்மை.          
      

Wednesday, August 13, 2014

அகமதாபாத் நகர் (பொங்கல்) வலம்


இந்த வாரம் பொங்கல் தொடர்பான காட்சிகளே வித்தியாசமாய் இருந்தது. பல இடங்களில் கவனித்ததில் இவர்கள் காத்தாடி வாங்கியது 100, 2000 என இருந்தது. அந்த அளவுக்கா காத்தாடி விடுவார்கள் என ஆச்சர்யப்பட்டேன். பொங்கல் அன்று சில வீடுகளில் காத்தாடி விட்டதை கவனித்த போதுதான் அதுவே குறைவு என்பது தெரிந்தது. அந்த அளவுக்கு விண்ணில் காத்தாடிகள்.

எந்த வம்புக்கும் போகவேண்டாம், அதாவது எந்த காத்தாடியையும் அறுக்க வேண்டாம் என நினைத்து காத்தாடி விட முடியாது. நீங்கள் காத்தாடி பறக்க விட்ட சில நிமிடங்களிலே ஏதாவது ஓன்று உங்களை காவு வாங்கிவிடும். 

நான் வேடிக்கை பார்க்க போன இடத்தில் ஒருவர் 5 நிமிடத்திற்கு ஒன்றை பலி கொடுத்துக் கொண்டிருந்தார். இந்த வேகத்தில் இருந்தால் நூறு காத்தாடிகளே பத்தாது.

பொங்கல் தொடர்பான மேலும் சில விஷயங்கள்

ஆர்ச்

நீங்கள் பல விதமான ஆர்ச் பார்த்திருக்கலாம். இது புதுவிதம். மூவிங் ஆர்ச். டூ வீலர்களில் இருக்கிறது. காத்தாடி நூல்களால் உயிருக்கு ஆபத்து என்பதால் வண்டிகளில் இதை பொருத்தி இருக்கிறார்கள். ஒரு நீட்டு கம்பியை எடுத்து டூ வீலரின் முன்னே இருக்கும் இரண்டு கண்ணாடிகளுக்கான கம்பிகளில் பொருத்தி விடுகிறார்கள். அவ்வளவுதான். இனி வண்டி ஓட்டும்போது முன்னே காத்தாடி நூல் இருந்தால் இந்த ஆர்ச் உங்களை அதிலிருந்து காப்பாற்றும்.

விளக்கு பலூன் 



டுக்கள்

இப்போது இந்த பேஷனும் கிளம்பி இருக்கிறது. மாலை 7 மணிக்கு பிறகு எல்லோரும் ஒரு சேர இந்த (விளக்கு) பலூன்களை பறக்கவிடுகிறார்கள். மாடியிலிருந்து பார்த்தால் காட்சிகள் அற்புதமாக இருக்கிறது.

தீபாங்கல்

ம்ஹும். ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லை. தீபாவளியையும் பொங்கலையும் இணைத்தால் இந்த வார்த்தைதான் வருகிறது. இங்கே பொங்கலுக்கும் பட்டாசு வெடிக்கிறார்கள். புது பழக்கமாம். எனவே எங்கும் வெடிமயம்தான்.

ஒருபக்கம் இந்த விளக்கு பலூன்கள் கண்கொள்ளா காட்சியாக இருக்க, அத்துடன் விண்ணிலே வெடித்து சிதறும் ராக்கெட் பட்டாசுகளின் வர்ண ஜாலங்களும் சேர...அற்புதமான காட்சிதான். 




Saturday, May 24, 2014

தப்புக்கணக்கு


`பிஜேபி 3 0 +` என்று ஒரு பதிவு போட்டாலும் போட்டேன், நான் என்னவோ கோடிகணக்கில் செலவு செய்து தேர்தலில் நிற்பதுபோல் ரிசல்டுக்காக வழிமேல் விழி வைத்து காத்திருந்தேன். வந்தது ரிசல்ட். தலைகுப்பற விழுந்தேன். (நான் மட்டுமா?) இருந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை. மீசை இருந்தாத்தானே ஓட்டறதுக்கு. தற்போது எனக்கு மீசையே இல்லை. அகமதாபாத் வரும் முன்பே அதை எடுத்துவிட்டேன். இப்படி ஒரு அதிர்ஷ்டம்.

Monday, April 21, 2014

பிஜேபி கூட்டணி 3 0 +


`அந்த பொண்ணுக்கு விவரம் பத்தாதுக்கா..` - இப்படிதான் அந்த பேச்சு ஆரம்பித்தது. அப்போது நான் சென்னையில் இருந்தேன். ஏதோ ஓரிடத்தில் இருந்தேன். என்னை கவனிக்காமல் அல்லது பொருட்படுத்தாமல் இரண்டு பெண்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். நான் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தேன்.

இங்கே பேச்சில் அடிபட்ட அந்த விவரம் புரியாத பெண்ணின் வீட்டுக்கு யாரோ ஓருவர் வந்திருக்கிறார். குடிக்க தண்ணி கேட்டிருக்கிறார். இவர் உள்ளே போன சமயம், வந்தவர் எதையோ சுருட்டி இருக்கிறார். மதிப்பு பத்தாயிரமாம். இதுதான் செய்தி. இதை சொல்லித்தான் சிரித்தார்கள். கூடுதலாக இன்னொரு செய்தியும் கிடைத்தது. அந்த பெண்ணுடைய கணவனுக்கும் விவரம் பத்தாதாம். வருமானத்துக்கு `வாய்ப்பு` உள்ள வேலையில் இருந்தாலும், பணம் பார்க்க தெரியவில்லையாம்.