!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Thursday, September 10, 2026

புதிய தலைமைச் செயலகம் - இப்படி செய்யலாம்

தமிழக அரசு புதிய தலைமைச் செயலகம் கட்டப்போவதாக அறிவித்திருக்கிறது. அவசியமானதுதான்; ஆனால் ஏற்கனவே இப்படித்தான் கலைஞர் ஒன்றைக் கட்டி, பின்னர் அது அரசு மருத்துவமனையாக மாறியது. தமிழக அரசியலில் இப்படி அடிக்கடி நடக்கிறது; பரந்தூர் சமீபத்திய உதாரணம். எனவே, மீண்டும் அப்படி ஒரு தலைவலியில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க ஏதாவது செய்ய வேண்டுமே, என்ன செய்யலாம்?

தமிழ்நாட்டில் திருமணங்கள் நிச்சயம் செய்யப்பட்டால், அடுத்த ஆறு மாதங்களில் திருமணம் நடந்துவிடும். இது நம் வழக்கம். ஆனால் இங்கே குஜராத்தில் அப்படியில்லை. நிச்சயத்திற்கும் திருமணத்திற்குமான இடைவெளி ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை இருக்கிறது. அதுவரை மணப்பெண்ணும் மணமகனும் பழகுகிறார்கள். குடும்பங்களும் விசேஷ நாட்களில் சந்தித்துக்கொள்கிறார்கள். இந்தக் காலகட்டத்தில் இரு குடும்பங்களும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது.

Sunday, September 6, 2026

கச்சத்தீவு - என்ன நடந்தது ?


இப்போதெல்லாம் திடீர் திடீரென்று கச்சத் தீவு செய்திகளில் வந்துவிடுகிறது. இந்த விஷயத்தில் கலைஞரும் காங்கிரசும் தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்துவிட்டார்கள் என அரசியலாக்கப்படுகிறது. எனக்கும் கலைஞரை பிடிக்காதுதான். திமுக தோற்றதை பார்த்து ஆனந்த கண்ணீர் விட்டவன்தான் நான். இருந்தாலும் நியாயம் என்று வந்துவிட்டால் நான் கண்ணை மூடிக்கொண்டுதான் தீர்ப்பு எழுதுவேன்.


அந்த வகையில் இங்கே நான் கலைஞரையோ காங்கிரஸையோ குற்றவாளியாக பார்க்கவில்லை. அவர்கள் அன்று இருந்த சூழ்நிலையின் அடிப்படையில் எது சரியானதோ, அந்த முடிவைத்தான் எடுத்திருக்கிறார்கள். காலம் அதன் பின்னர் பல தலைவலிகளை உருவாக்கியிருக்கிறது. அதற்கு அவர்களைக் குறை சொல்வதில் அர்த்தமில்லை.

Wednesday, September 2, 2026

வா மணி வா


நீண்ட நாட்களுக்கு பிறகு கவனத்தை ஈர்த்த ஒரு பதிவு. நிசப்தம் மணிகண்டன் எழுதியிருந்தார். வார்த்தைகள் கொஞ்சம் அதிகமாகவே இருந்தன. ஒருவன் கொஞ்சம் அதிகமாகப் பேசினால், அவன் குடித்திருக்கிறான் என்று அர்த்தம். அதுவே வேறு இடங்களில் ரொம்பப் பேசினால், அவன் தான் செய்த தவறுகளை மறைக்கிறான் என்று பொருள். இந்த மணிகண்டனும் அப்படித்தான் போலிருக்கிறது.

இவர் பதிவுலகில் இருந்த ஆரம்பகாலத்தில் இவருக்கிருந்த நற்பெயர் காரணமாக, பலர் இவர் ஆரம்பித்த அறக்கட்டளைக்கு நிதி கொடுத்திருந்தார்கள். ஆரம்பத்தில் இவரும் பலருக்குக் கல்வி உதவி செய்தார்; தகவல்களைப் பதிவாகவும் போட்டார்.

Saturday, August 29, 2026

டில்லியை நோக்கி விஜய்..

Aug.5 அன்று எழுதிய 'உதயநிதியின் ‘அந்த’ பேச்சு' பதிவின் ஒரு பகுதி ...https://anindianviews.blogspot.com/2026/08/blog-post_916.html

....தமிழ்நாட்டில் ஸ்டாலினை நம்பி பல கட்சிகள் ஏமாந்து (மோசம்) போனதைப் போல், டெல்லியில் ராகுல் காந்தியை நம்பி ஏமாற யாரும் தயாராக இல்லை. எனவே, தவெக - காங்கிரஸ் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் தொடருமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. தொகுதிப் பிரச்சினை காரணமாக தவெக இவர்களைக் கழற்றிவிடலாம்; மற்ற உதிரி மற்றும் புதிய கட்சிகளுக்குக் கௌரவமான தொகுதிகள் கிடைக்கலாம்.

பிற தென் மாநிலங்களில் தவெக தனியாகவோ அல்லது அங்குள்ள பிற கட்சிகளுடனோ சேர்ந்து ஒரு மூன்றாவது அணியாக மாறலாம்...

இது அந்த பதிவின் கடைசி பகுதி.

இப்போது இதுதான் நடக்கும் என்பது உறுதியாகிறது. ஒரு இடத்தைப் பிடித்துவிட்டால், அடுத்த இலக்கை நோக்கிப் பயணிப்பதைப் போன்றதுதான் இது. ஆனால் இது உடனடியாக சாத்தியமாகுமா?

Wednesday, August 26, 2026

பறக்காத பரந்தூர் விமான நிலையம்.

இந்தியா போன்ற சுதந்திரமான ஜனநாயக நாட்டில் இவையெல்லாம் நிரந்தரத் தலைவலி. இதனால் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. அதேசமயம், இதுபோன்ற திட்டங்களில் அரசியல் கட்சிகள் மறைமுகமாக நிலங்களை வாங்கி ஊழல் செய்கின்றன என்பதும் உண்மை.

சில சீன காணொளிகளைக் கவனித்தேன். அங்கே எல்லாத் துறைகளிலும் பிரமாதமான வளர்ச்சி. ஆனால் அரசை எதிர்த்துப் போராட்டங்கள் என்பதே கிடையாது. தியான்மென் சதுக்கம் கொடுத்த அடி, இந்தத் தலைமுறையையும் பயமுறுத்தி வைத்திருக்கிறது.

அதுமட்டுமின்றி, அங்கே டிஃப்ளேஷன் (Deflation) சில ஆண்டுகளாக இருக்கிறதாம். அதாவது, விலைவாசி ஏறி வருவதைப் போல, சீனாவில் அது இறங்குமுகமாக இருக்கிறதாம். அது இன்னும் குறையவில்லை. அங்கே இருக்கும் முகேஷ் அம்பானி போன்றவர்கள் ஷேர் ஆட்டோவில் பயணித்தால் எப்படி இருக்கும்?

Sunday, August 23, 2026

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் : இங்கேயும் கிரீமி லேயர் வரும்

முதலில் ஒரு கதை. அந்தக் காலத்தில் விக்கிரமாதித்தன் என்ற மன்னர் இருந்தார். அவர் நீதி பரிபாலனம் செய்வதில் சிறந்து விளங்கினார். அவர் இறந்த பிறகு, அந்தச் சிம்மாசனம் மண்ணில் புதைந்து, ஒரு மேடாக இருந்தது. அந்த மண் மேட்டில் யார் அமர்ந்தாலும், அவர்கள் நேர்மையானவர்களாக மாறிவிடுவார்களாம்.

நிஜத்தில், இந்தக் கொடுமைதான் தற்போது அரசியலில் நடக்கிறது. தமிழக சட்டமன்றத்தில் இருந்த இருக்கைகளில் கடந்த 50 ஆண்டுகளாக திறமையற்ற மற்றும் ஊழலில் திளைத்த முதல்வர்களும் அமைச்சர்களும் அமர்ந்திருக்கிறார்கள். இப்போது அந்த இருக்கைகளுக்கும் அந்த வியாதி பிடித்துவிட்டது. யார் அந்த இருக்கையில் அமர்ந்தாலும், அவர்களையும் அது முட்டாளாக்கிவிடுகிறது.

Saturday, August 22, 2026

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார்; இது சரியா?


முதல்வர் விஜய் எடுத்த சில முடிவுகளில் எனக்கு அதிருப்தி இருந்தாலும், இது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

ஆனால், இது குறித்த விமர்சனங்களை கவனித்தபோது, பாமர மக்களிலிருந்து அறிவுஜீவி அர்னால்ட்கள் வரை எல்லோரும் இதைக் குறை சொல்கிறார்கள். கொஞ்சம் எதார்த்தமாகப் பேசும் சவுக்கு சங்கரும் இதைக் குறை சொல்லியிருந்தார். நான் எல்லாவற்றையும் கவனிப்பேன். ஆனால், மற்றவர்கள் கருத்து எப்படி இருந்தாலும், என் வழி தனி வழி.

நான் இதை ஆதரிக்கிறேன். ஏன்?

Wednesday, August 19, 2026

திருமாவளவன் - இவரும் திருந்தமாட்டார்

அரசியல் களம் எவ்வளவோ மாறிவிட்டது. கூட்டம் காட்டுவதெல்லாம் பழங்கதையாகிவிட்டது. அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி எல்லாம் நிறையவே பெரும் எண்ணிக்கையில் கூட்டங்களை வரவழைத்துக் காட்டியிருக்கின்றன.

அதேபோல் திராவிட கட்சிகளிலும் நிறையப் பேசுபவர்கள் இருக்கிறார்கள். சீமானைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்; அவர் ஒரு இரண்டாம் கோயபல்ஸ். ஆனால், இந்த பேச்சுத்திறமை மக்களிடம் எடுபட்டதா? அதிகம் பிரச்சாரம் செய்யாத, மேடைப்பேச்சே தெரியாத விஜய்தான் வெற்றி பெற்றார்.

இப்படி இன்றைய உலகமும் மக்களின் பார்வையும் மாறிவிட்ட சூழ்நிலையில், இன்னமும் அந்த உளுத்துப்போன (உளுந்தூர்பேட்டை) மாநாடு போன்றவை அரசியல் கட்சிகளுக்குத் தேவையா?

Sunday, August 16, 2026

உதயநிதிக்கு நன்றி சொல்ல வேண்டும்

ஜெயம் ரவியின் ‘அடங்க மறு’ என்று ஒரு திரைப்படம். அதில் அவர் காவலராக நடித்திருப்பார். வழக்கம்போல் பணக்கார அதிகார வர்க்க அப்பாக்களால் வளர்க்கப்பட்ட மூன்று தறுதலைகள் வில்லன்களாக இருப்பார்கள். பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்து, அதை காணொளியாகவும் எடுத்து வைத்து, அதையும் காவலரான ஜெயம் ரவியிடம் பெருமையாகக் காட்டுவார்கள். அதைப் பார்த்துக் கொதித்தெழும் ஜெயம் ரவி அவர்களை அடித்து நொறுக்குவார்; பின்னர் லாக்கப்பில் அடைப்பார்.

இது திரைப்படம். இந்த கனவு உலகத்தில் மட்டும்தான் நேர்மையான, தைரியமான காவலர்கள் இருப்பார்கள். அவர்களால் அநியாயத்தைப் பொறுக்கவே முடியாது. தங்கள் அதிகாரியையே 'ஏய்' என சவால் விட்டு ஜெயிப்பார்கள். ஆனால் நிஜத்தில் குனியச் சொன்னால் படுக்கும் காவல்துறை அதிகாரிகள்தான் இருக்கிறார்கள். இங்கேயும் நேர்மையின் சிகரங்கள் இருக்கலாம். ஆனால் அவர்கள் வேறு வகை.

Saturday, August 15, 2026

இவர்கள் (விவசாயிகள்) திருந்தவே மாட்டார்கள்!

வாரத்தில் 7 நாட்கள் தான் இருக்கின்றன; ஆனால், 8 பரபரப்புச் செய்திகள் வருகின்றன. அதிலும் இந்த யூடியூப் ஊடகங்கள் வந்து எல்லாரும் ஆளுக்கொரு கடையை திறந்த பிறகு, "இன்று எதைப் பரபரப்பாக்கலாம்?" என்று விதவிதமாக யோசித்து எதையாவது ஒன்றைக் கிளப்பிவிடுகிறார்கள்.

"சட்டப்பேரவையில் ஆங்கிலத்தில் மூச்சுவிடாமல் பேசிய பாமக கணேஷ்குமார்" என்ற தலைப்பில் ஒரு காணொளி (மாலைமுரசு) கவனித்தேன். "இப்பதானே மரிய வில்சன் சிக்கினார், அதற்குள் இவர் யார் புதிதாக வந்து சிக்கியிருக்கிறார்?" என்று பார்த்தால், “Small is beautiful” என்ற ஒற்றை வார்த்தையை மட்டுமே அவர் சட்டசபையில் பேசியிருக்கிறார்! அதற்கு இப்படி ஒரு தலைப்பு. பார்வையாளர்களை கவர எந்த எல்லைக்கும போவார்கள் போலிருக்கிறது. வேலையில்லா திண்டாட்டம், கடுமையான போட்டி என எல்லா துறையும் இப்படி திண்டாடுகிறது.

Tuesday, August 11, 2026

மரிய வில்சன் - இது ரொம்பவே ஆபத்து

மரிய வில்சன் தற்போது பிரபலமாகிவிட்டார். நல்ல விஷயத்துக்காக என்றால் பாராட்டலாம். ஆனால், இவர் அடாவடி பேர்வழியாக, ரவுடியாகப் பிரபலமாகியிருக்கிறார்.

அதேசமயம், இதை ஒரு வகையில் குறை சொல்ல முடியாது. முன்கோபக்காரர்கள் எல்லாம் அயோக்கியர்கள் என்று அர்த்தமல்ல. இவர்கள் இப்படியும் இருக்கலாம், அப்படியும் இருக்கலாம். உங்கள் பக்கம் நியாயம் இருந்தால் கோபம் வர வேண்டும், அதுதான் மனித இயல்பு.

இவருடைய தனிப்பட்ட குடும்ப உறவில் ஏற்பட்ட ஒரு பிரச்சினைக்காக இவர் அடிதடியில் இறங்கியதை நாம் பார்த்தோம். அங்கே நியாயம் யார் பக்கம் என்பது நமக்குத் தெரியாது; அதுமட்டுமின்றி, அது அவர் அரசியலுக்கு வரும் முன் நடந்த சம்பவம். எனவே, அதை ஏதோ ஒரு வகையில் மன்னித்துக் கடந்துவிடலாம்.

Saturday, August 8, 2026

கேரளம் ஒரு புது அபார்ட்மெண்ட்

சமீபத்தில் ஒரு விவாதத்தைக் கவனித்தேன். ஜீவசகாப்தன் என்ற உடன்பிறப்பு போலிருக்கிறது, அவர்தான் சொன்னார். இந்த மூன்று மாதங்களில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்கள் அதிக முதலீட்டை ஈர்த்திருக்கின்றன, தமிழ்நாடு மிகவும் பின்தங்கியிருக்கிறதாம்.

தொடர்ந்து அரசியலைக் கவனிப்பவர்களுக்கு, அதன் முக்கியமான துறையான பொருளாதாரம் குறித்த புரிதலும் இருக்க வேண்டும். ஆனால் திமுகவினரும், அதன் ஆதரவாளர்களும் அறிவை வளர்ப்பதை விட வாயை வளர்ப்பதில்தான் ஆர்வமாக இருக்கிறார்கள். அதன் விளைவுதான் இப்படி ஒரு அபத்தமான கருத்து.

Friday, August 7, 2026

வார்த்தைகளில் இருக்கும் கொழுப்பு ...

நான் ஏற்கனவே 'ஒருவேளை இப்படியும் இருக்குமோ?' என்று ஒரு பதிவில் சொல்லியிருந்தேன். அது உண்மைதான் போலிருக்கிறது; ஆதவ் அர்ஜுனின் சட்டமன்ற பேச்சு அதை உறுதிப்படுத்துகிறது. இது வெளிப்படையாகக் கொடுத்த பணமாக இருக்கலாம். கருப்பாக எவ்வளவு கொடுத்தாரோ?

உதயநிதி "எங்கப்பா யார் தெரியுமா?" என்று அதிகாரத் திமிரில் ஏதோ ஓர் இடத்தில் விஜய்யிடம் தெனாவட்டாகக் கேட்டிருக்கிறார்.

இந்த பக்கம், அப்பா—அதாவது ஸ்டாலின்—மார்ட்டினிடம் "உங்களுக்கு நான் ஏதாவது செய்கிறேன்" என்று சொல்லி 900 கோடி வாங்கி நாமம் சாத்திவிட்டார். இந்தச் செய்தி சட்டமன்றத்திலேயே பதிவாகிவிட்டது.

Wednesday, August 5, 2026

உதயநிதியின் ‘அந்த’ பேச்சு

இது ஒரு சிக்கல். ஓட்டப்பந்தயத்தில் 5 கிலோமீட்டர் ஓட வேண்டும் என்றால், சரியாக அந்த இடத்தை அடைந்தவுடன் உடனே நிற்க முடியுமா? முடியாது. ஓடிய வேகத்திற்கு இன்னும் 10 மீட்டர் தூரம் சென்றுதான் நிற்க முடியும். அதுபோன்றதுதான் மேடைப் பேச்சும். பேச்சின் வேகத்தில் நம்மை அறியாமல் சற்று எல்லை மீறிப்போய் விடுவோம். தவறை உணர்ந்த பிறகு வருத்தம் தெரிவிக்க வேண்டும்; அடுத்த முறை அந்தக் குறையைத் தவிர்க்க வேண்டும். அந்த நாகரிகம் உதயநிதியிடம் இல்லை.

இன்னொரு பக்கம் சினிமாவுக்குக் குத்துப்பாட்டு தேவைப்படுவதைப் போல், மேடைப் பேச்சிலும் சில சுவாரசியங்கள் தேவைப்படுகின்றன. இது காலங்காலமாக இருந்து வருகிறது. வால்மீகி இராமாயணம் போர் அடிக்கிறது என்று யாரோ சொன்ன பிறகு, கம்பர் அவர் எழுதிய இராமாயணத்தில் கொஞ்சம் காமத்தைக் கலந்திருக்கக்கூடும்.

கட்ட துரைக்கு (உதயநிதி) நேரம் சரியில்லை

உதயநிதியின் தஞ்சாவூர் (திரிஷா) ஆபாச பேச்சை பல விதமாகப் பிரிக்கலாம். ஏனென்றால் இவர் பல இடங்களில் ஆபாசமாகப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். எனவே எந்தப் பேச்சு என்று எதிர்காலத்தில் குழப்பம் வராமல் இருக்க, இப்படி இடத்தையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது.

என்னைக் கேட்டால் இங்கே முதல் குற்றவாளிகளே நீதிபதிகள்தான். இவர்களால்தான் இவ்வளவு அட்டூழியங்களும் நடக்கின்றன. ஆபாசமாக அருவருக்கத்தக்க முறையில் பலரும் துணிச்சலாகப் பேசுகிறார்கள் என்றால், அவர்களுக்கு நீதித்துறையின் மீது பயம் போய்விட்டதுதான் காரணம்.

ஒரு மூத்த வழக்கறிஞரை நீதிபதிக்கு முன்னே நிறுத்தினால், பணம் அல்லது அதிகாரத்தைக் காட்டினால், ஜாமீன், வாய்தா எல்லாம் நீங்கள் கேட்காமலே கிடைக்கும். "எங்கம்மா வயசுக்கு வந்துட்டாங்க, அதனால வாய்தா கொடுங்க" என்று ஒரு வழக்கறிஞர் சொன்னாலும், "லாஜிக் இடிக்குதே" என யோசிக்காமல் அதற்கும் வாய்தா கொடுப்பார்கள். இப்படிப்பட்ட நீதிபதிகள்தான் இந்தியாவில் இருக்கிறார்கள்.

Saturday, August 1, 2026

விஜய் கர்நாடகா போகிறாராம்!

விஜய் கர்நாடகா போகிறாராம்! போகட்டும். அவருக்கென்று ஒரு ஸ்டைல் இருக்கிறது. ஒருவேளை அதுவும் பலிக்கலாம்.

தண்ணீர் பிரச்சினை உலகளாவிய பிரச்சினை. நாடுகளுக்கிடையே பிரச்சினையைத் தீர்ப்பதற்காக ஒரு உலகளாவிய நடைமுறை இருக்கிறது.இந்தியா பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்குத் தண்ணீர் கொடுக்க வேண்டிய நிர்பந்தம். அதே சமயம் சீனாவில் இருந்து இந்தியாவுக்குத் தண்ணீர் வரும் பிரச்சினையும் இருக்கிறது.

இந்தியாவிலும் மாநிலங்களுக்கிடையில் நதிநீர் பகிர்வில் ஏதாவது கோளாறு வந்தால், அதே கொள்கையைத்தான் இந்தியா உள்நாட்டிலும் கடைப்பிடிக்க வேண்டும். எனவே, நியாயம் என்பது தமிழ்நாட்டுக்கு மறுக்க முடியாத ஒன்று.

ஆனால், நீதி யார் பக்கம் இருக்கிறது என்பதுதான் தலைவலியே.

Tuesday, July 28, 2026

கரூர் தீர்ப்பு — இது நல்ல விஷயம்தான்!

மதுரை உயர் நீதிமன்றம், கரூர் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை வழங்கிய உத்தரவை ரத்து செய்துவிட்டது. இந்தத் தீர்ப்பில் அவர்கள் குறிப்பிட்ட கருத்துகளும் வரவேற்கப்பட வேண்டியவை. "இவர்களுக்கு அரசு வேலை கொடுப்பது தவறு" என ஏற்கனவே ஒரு பதிவில் நானும் எழுதியிருக்கிறேன். எனவே, இது ஒரு நல்ல தீர்ப்புதான். ஆனால், 'வெளுத்ததெல்லாம் பால்' என்று நினைப்பவன் நான் இல்லை; ஒருவேளை அது 'மில்க்' ஆகவும் இருக்கலாம்!

இங்கே, ஆளுங்கட்சியின் முடிவை எதிர்த்து ஒரு தீர்ப்பு — அதுவும் மிக விரைவாக — வரக் காரணம் என்ன?

Friday, July 24, 2026

நீட்- என்ன செய்யலாம்?


இந்தத் தலைவலி நீண்ட காலமாக ஓடிக்கொண்டிருக்கிறது; முடிவு வந்தபாடில்லை. என்னதான் பிரச்சினை?

எல்லாத் துறைகளிலும் ஓர் அடிப்படைத் தேர்வு வைத்து, "இந்த மாணவன் இதில் தேறுவானா?" என்று கணித்து அவர்களுக்கு மட்டும் இடம் கொடுப்பது நல்ல விஷயம்தான்.

பல பேருக்குப் போலீஸ் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், அதற்கான உடல் தகுதியும் வலியைத் தாங்கும் மனஉறுதியும் இருக்கிறதா என்று தேர்வு வைப்பது போல், மருத்துவத் துறையிலும் வைப்பதில் தவறில்லை.

Saturday, July 18, 2026

மகாத்மா காந்தி, பெரியார், இப்போது விஜய்


இது ஒரு அதிர்ச்சிகரமான ஆராய்ச்சி. எனவே குறிப்பாக விஜய்யை வெறுப்பவர்கள் கொஞ்சம் மனதை தேற்றிக்கொள்வது நல்லது.

நான் நீண்ட காலமாக ஷேர் மார்க்கெட் குறித்த ஆராய்ச்சியில் இருக்கிறேன். 20 ஆண்டுகளாக எவ்வளவோ கணக்குகள் போட்டு, நஷ்டமாகி, நொந்து போய் ஒரு வழியாக கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர் வெற்றியில் இருக்கிறேன். அதாவது சமீபகாலமாக நஷ்டம் என்ற செய்தியே கிடையாது. இது ரொம்ப லேட்தான். இருந்தாலும், 'பெட்டர் லேட் தென் நெவர்' என்ற மனநிலை.

இப்படி ஷேர் மார்க்கெட் குறித்த ஆராய்ச்சியில் பெரும்பாலும் விலை ஏறிய ஷேர்களை மட்டும் ஆராய்வேன். அதில் சில ஒற்றுமைகள் தெரியும். அதே ஒற்றுமை வேறு ஷேர்களில் தெரிந்தால் உடனே வாங்கிவிடுவேன். அதில் 70 சதவிகிதம் எனக்கு லாபம்தான்.

Thursday, July 16, 2026

பழனி முருகனுக்கே பஞ்சாமிர்தமா?



பழனி முருகர் கோவிலுக்குச் சொந்தமான (?) நிலம் குறித்த சர்ச்சை முடிவுக்கு வந்துவிட்டது. உயர் நீதிமன்றம் அந்த பதிவை ரத்து செய்துவிட்டது. இது நல்ல விஷயம். ஆனால் அதேசமயம் இங்கே பல தேவையற்ற சர்ச்சைகளும் குழப்பங்களும் உருவாகியிருக்கிறது.

முதல் குழப்பம் அறநிலையத்துறை ரமேஷ் மீது பழி சுமத்துவது. ஒரு நபர் மீது குற்றம் சாட்டுவதற்கு ஒரு லாஜிக் வேண்டும். விஜய் ஊழலை அனுமதிக்கமாட்டார் என்பது தெரிந்த உண்மை. ஒருவேளை அவரும் தடம் மாறினாலும் அதற்கும் சில வருடங்கள் ஆகும்.

ஒருவேளை விஜய் ஊழலை (தேர்தல் செலவுக்கு) ஓரளவுக்கு அனுமதித்தாலும், ரமேஷ் போன்றவர்கள் செய்வதற்கு வாய்ப்பில்லை. அவர் முதல் முறை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர். இப்படி பொறுப்புக்கு வந்த உடனே யாரும் இப்படி வம்பை விலை கொடுத்து வாங்கமாட்டார்கள். அதுவும் 100 கோடி ஊழல் செய்யும் அளவுக்கு துணிச்சல் நிச்சயம் வராது. இங்கே யாரையும் யோக்கியன் என்று சொல்லமுடியாது. இருந்தாலும் எதார்த்தம் என்ற அடிப்படையில் பார்த்தால் இங்கே ஊழலுக்கு வாய்ப்பில்லை.